அம்பத்தூரை விட்டுக் கிளம்பியதும், காஞ்சீபுரத்தில் காலை உணவு சாப்பிட்டு விட்டு நாங்கள் முதலில் சென்றது தென்னாங்கூர் தான். வழியிலே பல சமணக் கோயில்கள் கண்களில் பட்டன. ஆனால் இறங்கிப் பார்க்கும்படியாகத் தனியாகச் செல்லவில்லை. சுற்றுலாக் குழுவோடு சென்றோம். திருவண்ணாமலை குறித்து இன்னமும் நிறையவே எழுத இருக்கிறது. ஆனாலும் நாங்கள் உண்ணாமுலை அம்மனைத் தரிசித்த போதே மாலை ஆறே முக்கால் ஆகிவிட்டபடியால் எங்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சாப்பிட்டுவிட்டு ஏழரை மணிக்குள்ளாகக் கிளம்பினால் தான் அம்பத்தூருக்கு இரவு பனிரண்டு மணிக்குப் போய்ச் சேருவோம் என்று கூறிவிட்டார். ஆகவே பார்த்த வரையிலும் போதும் என்று கிளம்பவேண்டியவர்களாகிவிட்டோம். அந்தப் பயணத்தில்தான் மேற்கண்ட படி நாங்கள் தென்னாங்கூருக்கு முதலில் போனோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பாண்டுரங்கன் கோயில் உள்ளது என்றும் விட்டலாபுரம் என்ற பெயரிலேயே இருப்பதாயும் கேள்விப் பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. ஆனால் இந்தக் கோயில் சமீப காலங்களில் எழுப்ப பட்டுள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் உள்ளது.
ஞாநாநந்தரின் பிரதம சீடரான ஸ்ரீஹரிதாஸ்கிரி அவர்களால் கட்டப் பட்டது இந்தக் கோயில். நுழைவாயில் நம் தென்னிந்தியக் கட்டடக் கலையைப் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் சின்ன கோபுரம் தான். விட்டலன் இருக்கும் மூலஸ்தானத்தின் மேல் எழுப்பப் பட்டிருக்கும் கருவறை விமானமோ நல்ல உயரமாய்க் காட்சி அளிக்கிறது. அசைப்பில் பூரி ஜெகந்நாதர் கோயில் கோபுரம் போன்ற அமைப்பு. பூரியை இன்னும் பார்க்கவில்லை. என்றாலும் கோபுரத்தைப் படங்களில் கண்டது. ஸ்ரீஞானாநந்தர்ஜ்யோதிர்மடத்தில் இருந்து காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்ததாயும் பண்டரிபுரம் வந்த சமயம் ஞான சித்தி கிடைத்தது எனவும் கேள்விப் படுகிறோம். அவருடன் கதிர்காம ஸ்வாமிகளும் சென்றதாயும் இலங்கை கதிர்காமத்துக்கே இருவரும் சென்று தரிசித்து சீர்காழியில் கதிர்காம ஸ்வாமிகளும், திருக்கோயிலூரில் ஞானாநந்தரும் ஆசிரமம் அமைத்துக்கொண்டதாயும் கூறுகின்றன. ஞானாநந்தருடைய முக்கிய சீடர் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள். ஞானாநந்தரிடம் தீக்ஷை பெற்றுக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று நாம சங்கீர்த்தனத்தின் பெருமையைப் பரப்பிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சமயம் அவர் மஹாராஷ்டிரத்தில் பயணம் செய்தபோது மங்கள்வாடி என்னும் கிராமத்தில் இரவு தங்கி இருக்கையில் கனவில் குரு ஞானாநந்தர் தோன்றிப் பண்டரிபுரம் செல்லப் பணிக்கிறார். அப்படியே பண்டரிபுரம் சென்ற ஹரிதாஸ்கிரியிடம் அங்கிருந்த அர்ச்சகர், முதல்நாள் கனவில் பாண்டுரங்கன் தோன்றி, இந்தச் சின்னப் பாண்டுரங்க விக்ரஹத்தை ஒப்படைக்கும்படி கூறியதாய்ச் சொல்லி ஹரிதாஸ்கிரியிடம் ஒரு பாண்டுரங்க விக்ரஹத்தைக் கொடுக்கிறார்.
அந்த விக்ரஹம் பண்டரிநாதனிடம் குழந்தைப்பேறு வேண்டி நிறைவேறிய ஒரு தம்பதிகள் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்திருந்தார்கள். தினமும் அந்த விக்ரஹத்திற்கும் வழிபாடுகள் செய்யப் பட்டு வந்தது. அந்த விக்ரஹத்தை ஹரிதாஸ்கிரியிடம் ஒப்படைத்த அர்ச்சகர் தம் கனவையும் இறைவன் கட்டளையையும் அவருக்குத் தெரிவிக்க அதை எடுத்துக்கொண்டு வந்த ஹரிதாஸ்கிரி விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்யவும், கோயில் கட்டவும் தேர்ந்தெடுத்த இடமே தென்னாங்கூர்.
தென்னாங்கூர்க் கோயிலை நாளை சுற்றிப் பார்க்கலாம்.

