![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLu7KcBs-a0zkOXlYkZ-4fw9xEwwmg2oNyI1p4bNiy0HClg-DmfISaCnHcLqpieQmg1v6jcvFqJb3F8an8Z0vHFP2ouNH3uzElnFAJUXc3KYHs9zoR_Mn_s-00Et3mqrUh1ECEHg/s320/images%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF.jpg)
சத்குரு ஞாநாநந்தகிரியின் பூர்வீகத்தை ஆராய்ந்ததில் அவர் கர்நாடகத்தை சேர்ந்த மங்களகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் எனவும், அவர் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதும் தெரிய வருகிறது. பள்ளிச் சிறுவனாக இருந்த போதில் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர் ஊரை விட்டுக் கிளம்பிக் கால்நடையாகவே பண்டரிபுரம் வந்து சேர்ந்து சந்திரபாகா நதியில் நீராடி விட்டலனைத் தரிசித்துக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் தூங்கும்போது முன்பின் தெரியாத அந்தணர் ஒருவர் அவரை எழுப்பி, குருநாதர் தேடுவதாய்ச் சொல்லி மறைய திகைத்த சிறுவனான ஞானாநந்தர் சந்திரபாகா நதிக்குச் சென்று நீராடிவிட்டு விட்டலனையே சரணடைய, அப்போது தான் அவ்வூருக்கு ஜ்யோதிர்மடத்தில் இருந்து வந்திருக்கும் பீடாதிபதிகள் ஆன ஸ்ரீஸ்ரீ சிவரத்னகிரி ஸ்வாமிகள் அவ்வூரில் எழுந்தருளி இருப்பதை நினைவு கூர்ந்தார்.
அவரே தான் தேடும் குரு என உள்ளுணர்வு உறுத்த, உடனே சென்று அவரைச் சந்திக்க, ஞான ஆநந்த கிரி என்ற தீக்ஷை நாமத்தோடு அவருக்குத் துறவு அளித்தார் சிவரத்னகிரி ஸ்வாமிகள். அதன் பின்னரே குரு சேவையுடன் கூடவே புண்ய தல யாத்திரையும், ஜ்யோதிர்மடத்தில் வேதாந்த விசாரங்களும் மேற்கொண்டார் ஞான ஆநந்த கிரிஸ்வாமிகள். பின்னர் குருவின் மறைவுக்குப் பின்னர் இமயமலைப்பகுதியில் யோக தவங்கள் செய்வதிலும் அங்குள்ள சித்தர்கள், மகாபுருஷர்களைத் தரிசித்து வணங்குவதிலும் நாட்களைக் கழித்தவர் அங்கிருந்து தான் கதிர்காம ஸ்வாமிகளோடு ஸ்ரீலங்கா சென்றிருக்கவேண்டும்.
திரும்பி சீர்காழிக்கு வந்த இருவரில் கதிர்காம ஸ்வாமிகள் அங்கேயே தங்க, ஞான ஆநந்தரை ஈர்த்தது சித்தலிங்க பீடம். அங்கே உள்ள வ்யாக்ரபாதேஸ்வரர் என்னும் திருநாமம் பூண்ட ஈசனை இங்கே வணங்க முடியும். வ்யாக்ரபாதர் தவமிருந்தது இந்த சித்தலிங்க பீடத்தில் தான் என்று சொல்கின்றனர். இங்கே இவர் நடத்திய அருளாட்சியும், இவரின் சீடரான ஹரிதாஸ்கிரியால் நாம சங்கீர்த்தன மகிமை பரவியதையும் நன்கறிவோம். இனி தென்னாங்கூர்.
காஞ்சீபுரத்திலிருந்து நேரே முதலில் தென்னாங்கூர் தான் சென்றோம். காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தென்னாங்கூர் இருக்கிறது. ஞானாநந்தரின் சீடரான ஹரிதாஸ்கிரி அவர்கள் பண்டரிபுரத்தில் தமக்களிக்கப் பட்ட சிலைகளைப் பிரதிஷ்டை செய்யத் தேர்ந்தெடுத்த இடம் இது. கோயிலுக்குள் நுழையும்போது பார்க்கும் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியில் காணப்படுகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2TH0cEv8bwQ2F4brm1rNRYo5-cqlZuCVkIdj8_ursBbxRQouuS6ZjQMuVmbAym0EF3nQtU9oYd6ArJiPDrmc1-3Np8-_E5UImYmZ7xtyPZ4nAgt41hgEbBkw9EVAy7eYb5D3eBQ/s320/index%25E0%25AE%25A4%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg)
தென்னாங்கூர் ஷடாரண்யம் என அழைக்கப்பட்ட ஆற்காடு க்ஷேத்திரங்களுள் முக்கியமான ஒன்று எனச் சொல்கின்றனர். அதிலும் பாண்டிய அரசனோடு சம்பந்தம் கொண்ட முக்கிய வரலாறு. ஆம், மதுரையை ஆண்ட மலயத்வஜ பாண்டியன் தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று யாகம் செய்தபோது தேர்ந்தெடுத்த இடம் இந்தத் தென்னாங்கூர் தான்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiNIk8Ma561FZdQ_bfGuXwcUW2t8NalGK93QX7YuhS5yq1e-FNHomWzNZxciIijXU7Z2qUdvPvPYn8eseWAnq4FIoI_851Tyr3SmwHJIUHZXuva9LFuterMw-lHa3-KYxPv-h0ww/s320/%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25B7%25E0%25AE%25BF.jpg)
1 comment:
மிகுந்த நன்றிகள் மாமி, பகிர்விற்கு
Post a Comment