எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, June 25, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அர்த்தநாரீசுவரர்


இறைவன் படைத்த அனைத்து உயிர்களிலும் இருமைத் தத்துவம் நீக்கமற நிறைந்துள்ளது. எல்லா உயிர்களிலும் ஆண், பெண் என இரு பாலினமும் உண்டு. இவை தனித்தனியே பிரிந்திருந்தால் உலகு வளர்ச்சியுறாது என்பதாலேயே இரண்டு ஒன்றுபட்டு வாழ்கின்றன. பஞ்ச பூதங்களிலும் இந்த இருமை உண்டு. இருள்-ஒளி, தோற்றம்-அழிவு, ஆண்-பெண் எனப் படைப்பின் மொத்த வடிவாய்த் திகழ்வதுவே அர்த்தநாரீசுவர வடிவம். இவ்வுலகின் அனைத்துப் பொருட்களையும் இயக்கும் சக்தியே அன்னை என்றால் அதன் அமைதியான வடிவே சிவம் ஆகும். சிவம் அமைதி, சும்மா இருத்தல் என்று கொண்டால், சக்தி ஆற்றலையும் இயக்கத்தையும் குறிக்கும். அந்த சக்தி தனியே எவ்வாறு இயங்கும்? சிவத்தோடு சேர்ந்தால் அல்லவோ இயக்கம் வரும்? ஆகவே அர்த்தநாரீசுவரராக இணைந்து சிவமும், சக்தியும் ஒன்றாகக் காண்பதையே சிவசக்தி ஐக்கியம் என்கிறோம்.

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்

சங்க இலக்கியமான புறநானூற்றில் மேற்கண்டவாறு ஈசனின் அர்த்தநாரீசுவர வடிவைச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. ஐங்குறு நூற்றிலும் கூறப்பட்டிருப்பதாய்த் தெரிய வருகிறது. இளங்கோவடிகளும் அர்த்தநாரீசுவர வடிவைப் பற்றிக் கூறியுள்ளார். முற்காலச் சோழர்களால் கட்டப் பட்ட சிவன் கோயில்களின் கருவறையின் மேற்குக் கோஷ்டத்தில் அர்த்தநாரீசுவர வடிவே இருந்து வந்ததாயும் இதுவே பின்னர் மாறி விட்டதாயும் தெரிய வருகிறது. இந்த அர்த்தநாரீசுவர வடிவை உற்சவக் கோலத்தில் திருவண்ணாமலையில் கர்ப்பகிரஹத்தை ஒட்டிய பிரஹாரத்தில் தனி சந்நிதியில் தரிசிக்க முடியும். இவரே திருக்கார்த்திகைத் தீபத்திருநாளன்று பக்தர்களுக்கு ஆடிக்கொண்டே வந்து தரிசனம் கொடுப்பார்.

பல்வேறு சிற்பசாஸ்திர நூல்களிலே குறிப்பிடப் படும் இந்த அர்த்தநாரீசுவர வடிவின் வலப்பக்கம் ஈசனும், இடப்பக்கம் அன்னையும் காணப்படுவாள். அதற்கேற்ப ஆடை அலங்காரமும் காண முடியும். வலப்பக்கம் ஜடாமுடி, மகுடம் மற்றும் பிறைச்சந்திரனும், இடப்பக்கம் அம்பிகையின் தலையில் முடிந்த அழகிய கூந்தல் அல்லது மகுடம் காணப்படும். ஈசனாய்த் தோற்றமளிக்கும் வடிவின் வலக்காதில் மகர குண்டலம், அல்லது சர்ப்ப குண்டலம், வலது நெற்றியில் ஈசனின் நெற்றிக்கண்ணின் பாதியும் காண முடியும். இடப்பக்கம் அம்பிகையின் காதில் குண்டலமும், மை எழுதிய நீண்ட கண்களும், நெற்றியில் குங்குமப் பொட்டின் பாதி பாகமும் காண முடியும். வலப்பக்கம் புலித்தோல் ஆடையணிந்து வலக்கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டிய வண்ணமும் மற்றொன்று மழுவை ஏந்தியும் காணப்படும். சில கோலங்களில் வரத ஹஸ்தமும் சூலமும் ஏந்தியும் காணலாம். இடக்கரத்தில் அம்பிகையானவள் நீலோத்பல மலரை ஏந்தியோ அல்லது கிளியை ஏந்தியோ காணப்படுவாள். இடப்பக்கம் மாலைகள், நவரத்ன அணிகலன்கள் எனப் பெண்களுக்கே உரித்தான ஆபரணங்களுடன் காட்சி அளிக்க, வலப்பக்கமோ சர்ப்பத்தை இடையில் அணிந்து காணப்படுவார்.

ஒன்றான இறைவனே இரு வேறுபட்ட தன்மைகளோடு காட்சி அளிக்கிறான். ஏனெனில் உலக உயிர்கள் அனைத்தும் தம்முள் கூடிக் களித்து மகிழ்ந்து நல்வாழ்வு வாழவேண்டுமானால் சிவமும், சக்தியும் இணைய வேண்டும். தன்னந்தனியே இருந்தால் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை; நிறைவும் கிடைக்காது. ஒன்றுபட்டாலே நிறைவும் ஏற்படும்; வாழ்வின் அர்த்தமும் இருக்கும். ஆனால் இருவரில் எவர் உயர்வு? எவர் தாழ்வு? அந்தப் பேதங்கள் இருக்கலாகாது என்பதன் பொருளே இந்த அர்த்தநாரீசுவரக் கோலம். இருவருமே ஒருவருக்கொருவர் சரிசமமாகவும், துணையாகவும், தங்களுக்குள் உள்ள பாலின பேதத்தையும் மற்ற பேதங்களையும் மறந்து இயங்கச் செய்ய வைப்பதே அர்த்தநாரீசுவரக் கோலத்தின் உண்மையான தத்துவம். கணவன், மனைவிக்குள் ஏற்படும் பேதங்களைப் போக்க அர்த்தநாரீசுவர வழிபாடு சிறந்தது என ஆன்றோர் கருத்து.

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரரை அர்ச்சிக்கையில் ஒரு நாமம் அம்பிகையின் நாமமாகவும், மற்றொரு நாமம் ஈசனின் திருநாமமாகவும் அர்ச்சிக்கப் படுவதாய்க் கேள்விப் படுகிறோம்.அங்கு மூலவரான அர்த்தநாரீசுவரர் சிற்பம் கற்சிலையோ, சுயம்புவாய்த் தோன்றியதோ அல்ல என்றும், சித்தர்களால் வெண்பாஷாணம் என்னும் மருந்துகளைக் கூட்டிச் செய்யப் பட்டது என்றும் தெரியவருகிறது. இந்தத் திருமேனியின் அபிஷேஹ நீர்ப் பிரசாதம் தோல் வியாதிகளுக்குச் சிறந்ததொன்று எனவும் கூறப் படுகிறது. ஈசனின் பாதத்தில் இருந்தும் சுனைநீர் தீர்த்தமாகக் கொடுக்கப் படுவதாயும் அறிகின்றோம்.

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்,
தான் பாதி உமை பாதி என்றானவன்.
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்.

இனி அடுத்துக் காணப் போவது கிராத மூர்த்தி.

No comments: