எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, November 09, 2011

பச்சைக்காளியும், பவளக்காளியும்

அடுத்துப் பார்க்கப் போவது பச்சைக்காளி, பவளக்காளி பற்றி. அநேகமாய் எல்லாப் பெண் தெய்வங்களுமே அம்பிகையின் அம்சம் என்றாலும் காளி அம்பிகையின் முக்கியமானதொரு அம்சம் ஆவாள். இங்கேயும் அசுரன் வருகிறான். காளி அழிக்கிறாள். ஆனால் ஒரே காளியே வெவ்வேறு உருவில் வருகிறாள். தஞ்சை நகருக்கு அப்போது அழகாபுரி எனப் பெயர் என்கின்றனர். அந்த அழகாபுரியில் ஆண்டு வந்தவன் தஞ்சன் என்பவன். இந்தத் தஞ்சன் நல்லரசனாக இல்லாமல் மக்களைத் துன்புறுத்திக் கொடுமை செய்யும் கொடுங்கோலனாக இருந்தான். ஆனாலும் சிவபக்தனாக இருந்தமையால் அவனை அழிக்க எவராலும் இயலவில்லை. ஆகவே ஈசனையே தஞ்சம் அடைந்தனர் அனைவரும். அவரும் தன்னில் ஒரு பாகமான அம்பிகையிடம் பொறுப்பை ஒப்படைக்க ஆனந்தவல்லியான அவளும் தஞ்சனை அழிக்க வேண்டி பச்சைக்காளியாக மாறினாள். அவள் எவ்வளவு முயன்றும் மீண்டும் மீண்டும் தஞ்சன் தோன்றிக்கொண்டிருந்தான். கோபம் கொண்ட பச்சைக்காளியின் முகம் சிவந்து போய்க் காணப்பட்டது. பவளத்தைப் போன்ற சிவந்த அந்த நிறத்தைக்கண்டு அனைவரும் அன்னையைப் பவளக்காளி என்றழைத்தனர்.

பவளக்காளியாக விஸ்வரூபமெடுத்து அன்னை தஞ்சனைக் கொன்றாள். அவன் ரத்தம் ஆறாக ஓட அந்த ரத்தச் சிவப்பில் அன்னையின் நிறமே சிவந்து காணப்பட, பவளக்காளி என்ற பெயரும் நிலைத்தது அவளுக்கு. தஞ்சன் கோடி முறை அவதாரம் எடுத்தமையால் அவனைக் கொன்ற அன்னைக்கு கோடியம்மன் என்ற பெயரும் ஏற்பட்டது. ஈசனின் பிரதிநிதியாக வந்து இங்கே அசுரனை அழித்ததால் அன்னை தன் தலையில் ஈசனையே சூடி இருப்பதாய் ஐதீகம். ஆகவே அம்மனுக்குப் பச்சைக்காளி, பவளக்காளியாக இருக்கையில் நந்தியே வாகனம் என்கின்றனர். தஞ்சையில் கோடியம்மன் கோயில் என்ற பெயரிலேயே கோயில் உள்ளது. மூலவர் கோடியம்மன் ஆவாள். உற்சவர் பச்சைக்காளி, பவளக்காளி இருவருமே.

மாசி அல்லது பங்குனி மாதம் பச்சைக்காளி, பவளக்காளி உற்சவம் நடக்கையில் பச்சைக்காளி, பவளக்காளியின் உருவச் சிலைகளைச் செய்து வீடு வீடாக எடுத்துச் செல்வார்கள். காளியாட்டமும் நடக்கும், சிலர் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் ஆடுவதாய் நேர்த்திக்கடனும் செய்து கொள்கின்றனர். அப்படி நேர்ந்து கொள்பவர்கள் விரதம் இருத்தல் வேண்டும். காளியின் முகம் மட்டும் செய்யப் பட்டு அவர்கள் முகத்தின் மேலே பொருத்தப்படும். அப்படிப் பொருத்தப்பட்ட அறுவரைக் கும்பகோணத்தில் பார்த்தோம். ஆறுபேரும் பெண்கள். ஆனால் படம் எடுக்க அநுமதிக்கவில்லை. ஆறுபேரும் உணர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தனர். ஆகவே படம் எடுத்தால் விபரீதமாய் முடியும் என எச்சரிக்கப் பட்டோம். அநேகமாய் ஆண்களே காளியாட்டம் ஆடுவார்கள் எனவும் , இங்கே இந்தப்பெண்கள் நேர்த்திக்கடனுக்காகக் காளியாட்டம் மேற்கொண்டிருப்பதாயும் கூறினார்கள்.


சிலருக்குக் காளிக்குக் கோரைப்பற்கள் இருப்பது போன்ற பற்கள் தானாகவே தோன்றும் என்றும் சொல்கின்றனர். இது குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை.
ஆனால் கோயிலின் பூசாரியோ அல்லது பரம்பரையாகக் காளிவேடம் புனைந்து காளியாட்டம் ஆடுபவரோதான் காளியாக வேஷம் தரிக்கின்றனர் என்றாலும் நேர்த்திக்கடனுக்காக வேஷம் தரிப்பவர்களும் இருக்கின்றனர். காளியாட்டம் ஆடும் முன்னர் திருவிழாவுக்காகக் காப்புக் கட்டியதுமே காளியின் முகம் தயாராகி அதை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் செல்லுகின்றனர். காளியே நேரில் வந்திருப்பதாக மக்கள் ஐதீகம். எனவே அனைத்து மரியாதைகளூம் செய்யப் படுகின்றன. அதன் பின்னரே திருவிழா முடிந்து காளியாட்டம் நடக்கிறது. இதிலே பச்சைக்காளிக்கும், பவளக்காளிக்கும் போட்டியும் உண்டு என்கின்றனர். இது குறித்துச் சரியான தகவல் யாருக்கும் சொல்லத் தெரியலை. மேற்கொண்டு விசாரிக்கவேண்டும்.

2 comments:

விச்சு said...

பதிவு அருமை.நிறைய தகவல்கள்.த.ம 1

Geetha Sambasivam said...

vichu, thanks for adding to tamil manam and rating it. sorry for the english.