எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, April 26, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம்!

இங்கே வடக்கு வாயிலில் இறந்தவர்களில் அவர்களை வழி நடத்திய பஞ்சு கொண்டான் என்பவரைப் பாராட்டும் விதமாகப் பின்னாட்களில் கோயில் திறந்து வழிபாடுகள் நடைமுறைக்கு வந்ததும், பஞ்சுகொண்டான் என்பவரின் பெயரை அருளிப்பாடி மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. அது நாளடைவில் மறைந்ததாய்த் தெரிய வருகிறது. வடக்கு வாயில் விழுந்து சுல்தானின் வீரர்கள் கோயிலுக்குள்ளே எளிதாக நுழையவும் விரைவில் அரங்க நகர்க் கோட்டை விழுந்தது. பிராகாரங்கள் அல்லோலகல்லோலப் பட, பரிசனங்கள் அங்குமிங்கும் செய்வதறியாது ஓட, கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள் சுல்தானின் வீரர்கள். பிரகாரங்கள் அனைத்தும் உடல்களால் மூடப்பட்டுக் கிடந்ததைப் பார்க்கையில் அரங்கனைக் காக்கும் பணியில் எத்தனை எத்தனை இன்னுயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது புரிந்திருக்கும்.  இந்தக் குழுவில் தான் ஶ்ரீமத் வேதாந்த தேசிகப் பெருமானும் இருந்தார். அவரும் சுல்தான்களின் வீரர்களிடமிருந்து தப்பிக்க அங்குமிங்கும் ஓடினார்.

வேதாந்த தேசிகர் க்கான பட முடிவு


படத்துக்கு நன்றி தினமலர் கூகிள் வாயிலாக

கொத்துக் கொத்தாக உடல்களையும், தலைகளையும் பார்த்த தேசிகர் செய்வதறியாது மயங்கினார். அப்போது அங்கே சுதர்சன ஆசிரியர் என்பார் மார்பில் காயத்துடன் விழுந்து கிடந்தார். இவர் நடாதூர் அம்மாள் என்பவரின் சீடர். இந்த நடாதூர் அம்மாள் அரங்கனுக்கு வேண்டியவற்றை எல்லாம் ஒரு தாயின் பரிவோடு செய்வாராம். அரங்கனுக்கு நிவேதனமாக வேண்டிய பாலில் கூட சூடு அதிகம் இல்லாமல் விரல் பொறுக்கும் சூடு இருக்கும்படி பார்த்துக் கொண்டு வாயால் ஊதி ஊதிக் கொடுப்பாராம்.  ஆகையால் அவருக்கு நடாதூர் அம்மாள் என்னும் பெயர் ஏற்பட்டது. அத்தகையவரின் சீடரான சுதர்சன ஆசிரியர் தான் அப்போது இறக்கும் தருவாயில் இருந்தார். தன்னிரு மகன்களையும் சுல்தானின் வீரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டி அங்கிருந்த ஒரு தூணுக்கு அப்பால் உள்ள படிக்கட்டில் கல்லோடு கல்லாகப் படுக்க வைத்திருந்தார்.

இப்போது வேதாந்த தேசிகரைக் கண்டதும் கண்களில் ஒளி பெற்றவராகத் தன் மகன்கள் இருவரையும் அழைத்தார். தம் மகன்கள் கைகளைப் பிடித்து தேசிகர் கைகளில் ஒப்படைத்தார். கூடவே தனக்கு அடியில் ஒளித்து வைத்துக் கொண்டிருந்த ஒரு ஓலைச்சுவடிக்கட்டை எடுத்துத் தம் இரு கரங்களாலும் அதை தேசிகரிடம் கொடுத்து, "ஐயா, உம்மைக் கண்டது அரங்கனையே கண்டது போல் இருக்கிறது. நான் பெற்ற செல்வங்கள் மூன்று. மூன்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இதோ என் மகன்கள் இருவர் மற்றும் நடாதூர் அம்மாள் பக்கத்திலே இருந்து உபந்நியாசம் கேட்டுக் கேட்டு மனதில் தரித்துக் கொண்டு எழுத்தில் வடித்த சுருதப் பிரகாசிகை என்னும் நூல். இதனைப் பின் வரும் சந்ததிகள் படித்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு இருக்கிறது. ஆகவே இதையும் தாங்கள் காப்பாற்றி வைத்துப் பின் வரும் சந்ததிகளுக்குக் கொடுக்க வேண்டும்." என்று சொல்லிச் சுவடிக்கட்டையும் தேசிகர் கரங்களில் ஒப்படைத்தார்.  தன் இரு குமாரர்களையும் தேசிகர் சொல்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வளவில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அங்கே முகலாய வீரர்களின் ஆவேச முழக்கம் கேட்கவே தேசிகர் செய்வதறியாது திகைத்தார்.

பி.கு. இந்த சுருதப் பிரகாசிகை, ஶ்ரீமத் ராமானுஜர் அருளிச் செய்த ஶ்ரீ பாஷ்யத்தின் விளக்கவுரை எனவும் இன்றளவும் அது கிடைத்து வருவதாகவும் தெரிய வருகிறது.  மேற்படி சுருதப் பிரகாசிகை அந்நியர் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதே இன்றளவும் அது கிடைப்பதன் காரணம் ஆகும். ஶ்ரீபாஷ்யம் என்பது பிரம்ம சூத்திரத்துக்கு ஶ்ரீமத் ராமானுஜர் எழுதிய  வடமொழி விளக்கவுரை. இந்த ஶ்ரீ பாஷ்யத்துக்கே விளக்கவுரையாக அமைந்தது தான் சுருதப் பிரகாசிகை(கேட்டபடியே எழுதப்பட்டது என்கிறார்கள் இதை.)

3 comments:

வல்லிசிம்ஹன் said...

எப்பாடு பட்டு பாஷயங்களைப்பாது காத்து வதிருக்கிறாரகளம்மா. வீட்டில இருக்கும உரைகள மிகப்பழதாகி விட்டதால பாட்டி மடத்துக்கு அனுப்பி விட்டார்ர.நன்றி கீதா

மெளலி (மதுரையம்பதி) said...

Ullanamma

Geetha Sambasivam said...

யாரு இது? மௌலி, மதுரையம்பதின்னு எல்லாம்? புதுசா? :P :P :P :P