எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, May 02, 2015

ஶ்ரீரங்கரஙகநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கமாநகருள்!

அங்கிருந்த அனைவரும் அதிசயித்து நிற்க அந்தப் பெண் மேலே பேசினாள். ஶ்ரீரங்கத்து மனிதர்களிடம் கருணை வைக்குமாறு உல்லூக்கானை வேண்டினாள். ஆனால் உல்லூக்கானோ இங்கிருப்பவர்களைத் தான் கொல்லாமல் விட வேண்டுமானால் ஶ்ரீரங்கத்துச் செல்வம் அனைத்தும் தன் காலடியில் வந்து விழ வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண் அனைத்தையும் பாண்டிய நாட்டு வீரர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாய்க் கூறினாள். மிச்சம், மீதி இல்லை என்னும் அவளைப் பார்த்து இத்தனையையும் பார்த்துக் கொண்டு உன் தெய்வங்கள் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தனவா? அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே! தெய்வங்கள் அவற்றைக் கேட்கவில்லையே! ஆகவே அவர்களுக்கு இந்த அணிமணிகள் இருந்தாலும் ஒன்று தான்; இல்லை என்றாலும் ஒன்று தான் என்று சொன்னாள்.

ஆனாலும் அரங்கத்து ஆட்கள் இன்னமும் ஏன் தன்னோடு போரிடத் தயாராக இருக்க வேண்டும்? மிச்சம், மீதி இருப்பதைப் பாதுகாக்கவே அவர்கள் போரிடுகின்றனர் என்றூ உல்லூக்கான் சந்தேகத்துடன் அவளிடம் சொன்னான். உள்ளே வேறேதும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தங்களைக் காத்துக் கொள்ளவே தயாராக இருக்கிறார்கள் எனவும், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் அந்தப் பெண் வேண்ட, உல்லூக்கான் தான் உள்ளே போய்ப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்தப் பெண்ணும் அந்த ஆட்களை ஏதும் செய்யக் கூடாது; இனி யாரையும் கொல்லக் கூடாது என்றெல்லாம் உல்லூக்கானிடம் வாக்குக் கேட்கிறாள்.  அப்படியே அங்கே காவலுக்கு இருந்த வீரர்களை எல்லாம் அப்பால் போகச் சொல்லி உல்லூக்கான் கட்டளையிட இத்தனை நேரம் வீரர்களுக்காகப் பேசிய அந்தப் பெண் மயங்கி விழ அவளை மருத்துவரிடம் தூக்கிச் சென்றனர். பிழைப்பாளோ அல்லது அரங்கனுக்காக அவள் உயிரையும் கொடுக்க நேருமோ தெரியாது!

காவலிருந்து வீரர்கள் அமைதியாக வெளியேற டில்லி படைகள் உள்ளே சென்று ஒவ்வொரு தூணையும், சிற்பத்தையும் கல்சுவரையும், மண்டபத்தையும் உடைத்துத் தோண்டிப் பார்க்கின்றனர். எதுவும் கிடைக்கவில்லை. உல்லூக்கானுக்குத் தக்வல் போகிறது. அவனுக்கு அப்படியும் சந்தேகம். இங்கிருக்கும் பொருட்கள் அவ்வளவு எளிதில் வெளியே சென்றிருக்க முடியாது. எப்படிக் கண்டு பிடிக்கலாம் என யோசிக்கிறான்  பின்னர் அரங்க நகரிலே சிறு படை ஒன்றை நிறுத்திவிட்டு மற்ற வீரர்களை அழைத்துக் கொண்டு காவிரியைக் கடந்து மதுரை போகக் கிளம்புகிறான். அலங்கோலமாய்க் கிடந்தது அரங்கமாநகரம். ஆங்காங்கே உயிரற்ற உடல்கள் கிடக்க, வீடுகள் சிதிலமடைந்து விழுந்து கிடக்க, கோயிலின் மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள்  உடைந்து கிடக்கப் பெரும் சூறாவளி அடித்து ஓய்ந்த்து போல் காணப்பட்டது அரங்கமாநகரம்.


No comments: