எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, September 04, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

இனி மேலே நடந்தால் தான் விழுந்துவிடுவோம் என்பதால் தேசிகர் அங்கேயே நின்று விட்டார்.  இரவு முழுவதும் அங்கேயே காத்திருந்தார்.  மறுநாள் காலை எழுந்து பார்த்ததும் தான் இரண்டே அடி தூரத்தில் இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்து விட்டு தேசிகர் தாம் தெய்வாதீனமாகத் தப்பித்ததை நினைத்து வியந்தார். பின்னர் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு தம் சீடரைக் கூப்பிட்ட வண்ணம் பள்ளத்தாக்கின் கரையோரமாகவே நடந்து சென்றார். சற்று நேரத்தில் அவர் குரலுக்குப் பதில் குரல் வந்தது. தூரத்தில் அக்கரையிலிருந்து வந்த குரலைக் கேட்ட வண்ணம் மேலும் நடந்தார். அதே போல் எதிர்க்கரையிலிருந்த பிரமதந்திரரும் குரல் கொடுத்துக் கொண்டே வர இருவரும் ஒரு நாழிகை நடந்து பள்ளத்தாக்கு முடிவடையும் இடத்தில் மேற்குக் கரை ஓரமாக ஒன்று சேர்ந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவிக் கொண்டு தங்கள் விருத்தாந்தஙகளையும் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் பிரமதந்திரர்  டில்லித் துலுக்க வீரர்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தேடிச் சென்று கொண்டிருப்பதாயும் ஆகவே தாங்கள் இருவரும் அந்த ஊர்வலத்தைத் தொடர்ந்தால் அவர்களிடம் மாட்டிக்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார். பின்னர் இருவரும் ஆலோசித்து மேற்குத் திசை நோக்கிப் பயணப்பட்டனர். இப்படி அரங்கனைத் தேடிச் சென்றவர்களும், அரங்கனோடு சென்றவர்களும் விதி வசத்தாலும், பிராண பயத்தாலும் பிரிந்து ஒவ்வொரு திசை நோக்கிப் பயணப்பட்டனர். கள்வர் பற்றில் விட்டுப் பிரிந்த அரங்கனைத் தேடிப் போவோமா?

முதலாவது கள்வர் பற்றை விட்டுச் சென்ற திருவரங்கன் ஊர்வலத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை எவ்விதத் தொந்திரவும் எங்கிருந்தும் வரவில்லை. பிள்ளை உலகாரியரும் பெருமாளின் பல்லக்கிற்குச் சிறிது தூரம் முன்னாலேயே தமது சீடர்களோடு சென்றார். அப்போது மூன்றாம் நாள் மாலையில் அனைவரின் தலைக்கு மேலும், 'கீ, கீ" எனக் கிளி கத்தும் சப்தம் கேட்கவும் அனைவரும் மேலே அண்ணாந்து பார்த்தனர். அப்போது கூரக் குலோத்தமதாச நாயனார் என்பவர் உலகாரியரைப் பார்த்து, :சுவாமி இது அரங்கனுடனேயே வரும் ராஜகிளியைப் போல் தெரிகிறது. நம்மை இனங்கண்டு அழைக்கிறது போலும்!" என்றார். மீண்டும் கிளி என்ன செய்கிறது என்று பார்த்தால், கிளி, "கீ, கீ" என்று கத்தியவண்ணம் பின்னோக்கிப் பறந்தது. அதைப் பார்த்த பிள்ளை உலகாரியர் அரங்கனுக்கு ஏதோ நிகழ்ந்திருப்பதால் கிளி தங்களை அழைக்கிறது எனப் புரிந்து கொண்டார். ஆகவே அவரும் திரும்பி விரைந்து பின்னோக்கிச் சென்றார்.

அரங்கன் பல்லக்கோடு வரும் ஊர்வலத்தை அடைந்த பிள்ளை உலகாரியர் திகைத்து நின்றார். மாபெரும் கள்வர் கூட்டம் அரங்கனையும், அரங்கனோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டிருந்தது. பரிசனங்களில் மூவர் கள்வரால் அடிபட்டுக் கீழே விழுந்து கிடந்தனர். கள்வர் தலைவன் கைகளில் ஆயுதபாணியாய் நின்றிருந்தான். வலக்கையில் வேலாயுதம் தூக்கிய வண்ணம் இருக்க தன் ஆட்களைப் பெட்டகங்களைத் தூக்கி எடுக்கச் சொல்லி ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவர்களும் பெட்டகங்களைத் தூக்க முயன்று கொண்டிருந்தனர். உலகாரியர் அவனைப் பார்த்து இது அரங்கனின் சொத்துக்கள் என்றும் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வது மகா பாபம் என்றும் கூறக் கள்வர் தலைவனும் பாபம் தான் என்றாலும் அதைப் பார்த்தால் நாங்கள் பிழைக்க வழி என்ன என்றும் கேட்டான்.

மேலும் இது தன் எல்லைக்குள் வந்த சொத்துக்கள் என்றும் இவற்றை அபகரிப்பது தன் உரிமை என்றும் சொன்னான். கள்வர்களான அவர்கள் இந்தக் காட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஆட்சி செய்வதாகவும், இது அவன் எல்லைக்குள் வந்த சொத்தென்பதால் அவற்றைப் பறித்துக் கொள்வதாயும் திட்டவட்டமாய்க் கூறினான். உலகாரியரும் தம்மால் இயன்ற அளவு நியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்லிப் பார்த்தார். கள்வர் தலைவன் கேட்பதாக இல்லை. மனம் வேதனை அடைந்து பொறுமை இழந்த உலகாரியர் தம்மிடம் இருந்த ஒன்றிரண்டு ஆபரணங்களான காதுக்கடுக்கன்கள், கைத் தோடாக்கள், மோதிரங்கள் ஆகியவற்றையும் கழற்றி வீசினார். சற்றும் கவலை கொள்ளாமல் அவற்றையும் எடுத்துக் கொண்டான் கள்வர் தலைவன். அனைத்தையும் பறித்துக் கொண்ட பின்னரும் அவ்விடம் விட்டுப் போகாமல் பல்லக்கின் திரையை விலக்கி அரங்கனைப் பார்த்தான் கள்வர் தலைவன்.

உலகாரியர் மன வருத்தத்துடன் அதான் எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொண்டு விட்டாயே! இன்னும் என்ன என்று கோபமாய்க் கேட்க அரங்கன் மேல் சாத்தி இருந்த நகைகளையும் கேட்டான் அவன். அவற்றையும் கழற்றிக் கொடுக்கச் சொல்லி உலகாரியர் சொல்ல பட்டாசாரியர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டே கழற்றிக் கொடுத்தனர். பின்னரும் போகாமல் நின்றுகொண்டிருந்த கள்வர் தலைவனைப் பார்த்து,இன்னும் என்ன வேண்டும் எனக் கோபமாய்க் கேட்க, நாச்சிமார்களின் தாலிகளும், பெருமாளின் தங்கப்பூணூலும் இருக்கின்றனவே. ஒன்றுவிடாமல் கொடுத்துவிடுங்கள் என்று கள்வர் தலைவன் நெஞ்சில் ஈரமே இன்றிக் கூறினான். அழுது கொண்டே அனைத்தையும் கழற்றிக் கொடுத்தனர். கள்வர்களில் சிலருக்கு உலகாரியர் மேல் தனி மரியாதை இருந்தது. அவர்கள் மட்டும் ஒன்றுகூடி இவர் ஒரு மகான் இவருக்குத் தக்க மரியாதை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டு ஒரு தட்டில் தங்கக் காசுகள், கனி வர்க்கங்கள் என்று குவித்து எடுத்து வந்து அவருக்குக் காணிக்கை செலுத்த உலகாரியர் வெறுப்புடன் அவற்றை மறுத்துவிட்டு மேலே நடந்தார்.  அனைத்தையும் கள்வர்களிடம் இழந்த அரங்கனும் தன் மக்களைத் தொடர்ந்தான்.

2 comments:

ஸ்ரீராம். said...

எல்லாம் காரணமாகத்தானா?

வல்லிசிம்ஹன் said...

அரங்கனுக்கு அணிகள் பூட்டி அழகு பார்த்த கைகள் அவைகளைக் களையும் நாளும் வந்ததே.

அடியார்களின் உள்ளம் எப்படித் துடித்திருக்கும்.
அற்புதமாச் செல்லுகிறது அரங்கனின் பயணம். அவனுக்கு ஒன்றும் அணி வேண்டாம் என்றாலும் ,பொறுப்பு எடுத்துக் கொண்ட அன்பர்களின் துயரம் மனதைக் கனக்க வைக்கிறது.