எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 26, 2016

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! --உபதளபதி இறந்தான்!

அம்சகலாவால் தள்ளப்பட்ட உபதளபதி கீழே விழுந்து இறந்தது தற்செயலான ஒன்றாகவே தில்லிப் படைகளால் கருதப்பட்டது. எவருக்கும் அவன் எப்படி இறந்தான் என்னும் மர்மம் புரியவில்லை.  கோபுரத்தின் மேலேறிப் பார்த்தும் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. தவறி விழுந்ததாகவே எண்ணிக் கொண்டு அவன் உடலை அடக்கம் செய்தார்கள். இங்கே அழகிய மணவாளபுரத்தில் சிங்கப்பிரான் என்பார் சகல மரியாதைகளுடனும், மேள, தாள வாத்தியங்களுடனும், பரிவாரங்களுடனும் ஶ்ரீரங்கம் நோக்கிக் கிளம்பினார். அவருக்கு அம்சகலா அங்கே போனதும் நடந்த விபரங்களும் தெரியாது. தில்லிப் படைகளின் நடமாட்டங்களையும் முன்னேற்றங்களையும் கணிக்க வேண்டுமானால் அவர்களுடன் நட்புப் பாராட்டுவது போல் இருந்து தான் பார்க்க முடியும். ஆகவே அவர் கிளம்பி இருந்தார். திருவரங்கத்தின் சில சொத்துக்கள் அழகிய மணவாளபுரத்தில் இருந்தன. அவற்றைக் கண்காணித்துக் கொண்டு இருந்தார் அவர்.

தில்லிப் படைகள் முகாம் போட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றவர் உபதளபதி ஒருவன் கோபுரத்திலிருந்து விழுந்து இறந்த செய்தியைக் கேட்டுக் கொண்டார். பின்னர் மற்றொரு உபதளபதியைக் காணவேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளே சென்றார். உபதளபதியிடம் தில்லி சுல்தானின் ஆட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துக் கொண்டார். தாம் கொண்டுபோயிருந்த பரிசுகளையும் உபதளபதிக்கு அளித்தார். முத்துக்கள், பவளங்கள், நீலங்கள், வைரக்கற்கள், தங்கக்காசுகள், தங்கக்கட்டிகள், ஆபரணங்கள், வெள்ளியினால் ஆன பொருட்கள், பட்டுப் பட்டாடைகள், அந்த நாட்களில் பண்டமாற்றுக்கெனப் பயன்பாட்டில் இருந்து வந்த யவனப் பொற்காசுகள், யானைகள், குதிரைகள், உணவுப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் என அனைத்தும் இருந்தன. அதைப் பார்த்த உபதளபதியின் கண்களில் பேராசை மின்னியது. மிகவும் மகிழ்ந்து போனான்.

இதைத் தவிர பாடகர்கள் பலர் சுருதி போட்டவண்ணம் உள்ளே வந்து நமஸ்கரித்தனர். இன்னும் சிலர் இடுப்பளவு உயரமுள்ள பெரிய பெரிய குடங்களில் திராக்ஷை மதுவை நிரப்பிக் கொண்டு வந்தனர். மதுவைப் பார்த்த உபதளபதி அதன் வாசனையிலேயே கிறங்கிப் போனான். பின்னர் சந்தேகத்துடனேயே சிங்கப்பிரானைப் பார்த்து, "நீ யார்? ஏன் இவற்றை எல்லாம் எனக்குப் பரிசளிக்கிறாய்? காரணம் என்ன?" என்று சந்தேகத்தோடு கேட்டான். அதை ஹொய்சள வீரன் ஒருவன் மொழிபெயர்த்துச் சொல்ல சிங்கப்பிரான் நாங்கள் உங்கள் பிரஜைகள். உங்களுக்குப் பரிசாகக் கொண்டு வந்துள்ளோம், என்றெல்லாம் எடுத்துச் சொல்லியும் நம்பாத உபதளபதி அந்த மதுவை சிங்கப்பிரானையே எடுத்து அருந்தச் சொன்னான். மதுவைத் தான் பருகுவதில்லை என்று அவர் எத்தனை சொல்லியும் கேட்காமல் அவரை வற்புறுத்தவே அவர் ஓர் கிண்ணத்தில் சிறிதளவு ஊற்றிக் குடித்துக் காட்டினார். பின்னரே தயக்கமின்றி அந்த மதுவை ஏற்றுக் கொண்டான் உபதளபதி.

பின்னர் அந்த அறைக்கு ஒரு அழகான மங்கையும் வந்து சேர்ந்தாள். அவள் அழகைப் பார்த்து வியந்தான் உபதளபதி. அவள் தன் பெயர் எம்பெருமானடியாள் என்று கூறினாள். அவளை அழகிய மணவாளபுரத்தின் ராணி என அறிமுகம் செய்தார் சிங்கப்பிரான்.  அவளை அருகே அழைத்து உபதளபதியை வணங்கச் செய்தார். அவள் சிங்கப்பிரானிடம் தான் உபதளபதியின் பாதுகாப்பில் இருக்க விரும்புவதாகச் சொல்ல அதை அப்படியே மொழி பெயர்க்கச் சொன்னார் சிங்கப்பிரான். அதைக் கேட்ட உபதளபதிக்கு மகிழ்ச்சி மீதூறியது. அவள் மேலும் திருவரங்கத்திற்கு உரிய நிலங்களையும் மற்றச் சொத்துக்களையும் சிங்கப்பிரான் நிர்வாகம் செய்யும்படி கேட்டுக் கொள்வதாகக் கூற அதையும் உபதளபதி ஒப்புக் கொண்டான். உரிய கப்பம் செலுத்திவிடுவதாக சிங்கப்பிரானும் கூறினார்.

இப்படியாக உபதளபதியைச் சமாதானம் செய்துவிட்டு சிங்கப்பிரான் கோயிலை நோக்கி நடந்தார். கிழக்கு வாயிலருகே செல்கையில் யாரோ தீனக்குரலில் முனகும் சப்தம் கேட்டது. யாரென்று பார்த்தால் துளசிச் செடிகளுக்கு இடையில் அம்சகலா கிடந்தாள். குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த அவள் உடலில் இருந்து ரத்தம் ஏராளமாக சேதம் ஆகி இருந்தது என்பது அங்கே தெரிந்த ரத்தச் சேற்றிலிருந்து தெரிந்தது. அவள் எப்படி இங்கே வந்தாள், என்ன ஆயிற்று என்றெல்லாம் புரியாத சிங்கப்பிரான் அவளைக் கீழே குனிந்து சோதித்துப் பார்த்தார். உயிர் கொஞ்சம் போல் இருப்பதைத் தெரிந்து கொண்டு அவளை அழைத்தார். மிகப் பிரயாசையுடன் கண்களைத் திறந்த அம்சகலா மிகுந்த சிரமத்துடன் அவரை யாரெனப் புரிந்து கொண்டாள்.

பேச வாயெடுத்த அவளால் பேச முடியவில்லை. என்றாலும் மெல்ல மெல்லத் தான் இங்கே வந்து தில்லித் தளபதியைப் பழி வாங்கிய கதையைச் சொன்னாள். திருவரங்கத்துக்காகவும் அரங்கனுக்காகவும் இப்படி எல்லாம் தியாகம் செய்த அம்சகலாவை நினைத்து நினைத்து வருந்திய சிங்கப்பிரான் அவள் தியாகம் எவ்வளவு பெரிது என்று உணர்ந்து கொண்டார். அவள் மனதில் ஏதேனும் ஆசை இருந்தால் நிறைவேற்றி வைப்பதாகச் சொல்ல அவளும் திருமடைப்பள்ளியிலிருந்து தனக்கு வாய்க்கரிசியும், பரிவட்டமும், கோயில் மாலையும் கொண்டு வந்து போட்டு மடைப்பள்ளியில் இருந்து கொள்ளி எடுத்து வந்து தன்னை எரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

No comments: