எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, January 29, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அந்த உருவம் முழுவதுமாகத் தன்னை மறைத்துக் கொண்டிருந்தது விழிகளைத் தவிர்த்து! விழிகள் போதுமே குலசேகரன் கண்டு பிடிக்க! விழிகள் மூலம் அவை சாலையில் அந்த மூடு பல்லக்கில் வந்த பெண்ணின் விழிகள் தான் என்பதை எளிதாகப் புரிந்து கொண்டான் குலசேகரன். குலசேகரன் தன்னைப் பார்ப்பது அறிந்ததும், "ராஜவீதியில் ஏன் கலகம் செய்தாய்?" என அந்தக் குரல் கம்பீரமாய்க் கேட்டது. அதற்குக் குலசேகரன் தான் கலகம் எதுவும் செய்யவில்லை என்றும் தங்கள் மன்னரை நான் ஏளனம் செய்ததாக தளவாய் சொல்லிக் கொண்டு தன்னிடம் வம்பிழுத்ததாகவும் கூறினான். அதற்கு அந்தப் பெண் இத்தனை ஆற்றல் மிகுந்த குலசேகரன் ஆத்திரக்காரனாக இருப்பது சரியல்ல என்றாள்.

மேலும் அவள், "நாளை விசாரணை நடக்கும்போது பொறுமையாக நடந்து கொள்! விடுதலை கிடைக்கும்!" என்று சொன்னவள் மேலும் மன்னனிடம் மிகப் பொறுமையாக நடந்து கொள்ளவும் சொன்னாள். மீண்டும் குலசேகரனை ஆழமாகவும், அர்த்தம் பொதிந்தவாறும் பார்த்த அந்த உருவம் மேலே சென்று விட்டது!  மறுநாள் அரசவைக்குக் குறளனையும், குலசேகரனையும் அரச ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். வீர வல்லாளனின் சபையில் அவருக்கு முன்னே இருவரும் நிறுத்தப்பட்டார்கள். வீர வல்லாளருக்கு அப்போதே 62 வயது ஆகி இருந்தது! எனினும் பார்க்க 40 வயது போலக் காட்சி அளித்தார் அவர்! அவர்கள் இருவரையும் கடுமையுடன் உற்று நோக்கிய வீர வல்லாளர், "ஓஹோ! இந்தப் பயல்களா? இவர்கள் தான் கலகம் விளைவித்தவர்களா?" என்றும் வினவினார். யாரும் எதுவும் பேசவில்லை.

கோபம் அதிகம் ஆன வீர வல்லாளர் குறளனையும் குலசேகரனையும் பார்த்து, "ஏன் வாய் திறக்காமல் மௌனியாக இருக்கிறீர்கள்? எங்கிருந்து வந்தீர்கள்? எந்த நாடு உங்களுக்கு? இங்கே ஏன் குழப்பம் விளைவித்தீர்கள்? யார் அனுப்பி இங்கே வந்தீர்கள்? ஒற்றர்களா? வேவு பார்க்க வந்தீர்களா?" என்றெல்லாம் கேட்டார். குலசேகரன் தாங்கள் திருவரங்கத்திலிருந்து வருவதாய்க் கூறி விட்டு அங்கே நடந்தனவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விபரமாய்க் கூறினான். அவன் கூறியதைக் கேட்ட வல்லாளர் முகத்தில் புன்னகை மெல்ல அரும்பிப் பின்னர் அது பெரு நகையாக வெடித்தது.

"ஆம், ஆம்! நாங்கள் தில்லி சுல்தானுக்கு அடி பணியத் தான் செய்தோம். இல்லை எனில் என்ன செய்திருக்க முடியும்? உங்கள் பாண்டியரைப் போல் நாட்டை விட்டு ஓடவா முடியும்? அப்புறம் நாடு என்னாவது? மக்கள் என்னாவார்கள்? தில்லிப்படையை எதிர்க்க முடியாது  எனத் தெரிந்தும் எதிர்த்திருக்க வேண்டுமா? அடி பணிந்ததால் மக்களுக்குத் தானே நன்மை கிட்டியது! மக்கள் யுத்த பயம் இன்றி சௌகரியமாக இருக்கின்றனர் அல்லவா?ஆனால் திருவரங்கத்தில்! திருவரங்கமே நாசம் அடைந்து விட்டது! ஊரைக் கொள்ளை அடித்து மக்களையும் ஓட ஓட விரட்டி விட்டார்கள். மக்கள் எங்கே செல்வது எனத் தெரியாமல் ஊர் ஊராகச் செல்கின்றனர்! உங்கள் ரங்கநாதர் கதி என்ன? கருவறையை மூடி விட்டார்கள்! அழகிய மணவாளரோ இருக்குமிடம் தெரியாமல் மறைந்து வாழ்கிறார். எது நல்லது என்பதை நீயே யோசித்துக் கொள்!" என்றார்.

பின்னர் அவர் அவர்கள் இங்கே வந்ததன் காரணம் என்ன என்று கேட்டார். அரங்கமா நகரிலிருந்து தில்லிப் படைகளை விரட்ட வீர வல்லாளரின் துணையும் உதவியும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான் குலசேகரன். அதற்கும் வாய் விட்டுச் சிரித்தார் வீர வல்லாளர். பின்னர் கூறினார். "தில்லிப்படைகள் மதுரையை விட்டு நகரப்போவதில்லை. அதற்கு உதவி செய்யத் திருவரங்கத்தில் ஓர் படை கட்டாயமாய் இருக்கத் தான் செய்யும். அந்தப் படையை அகற்ற மாட்டார்கள். கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான மணங்குப் பொன்னும் நகைகளும் அரங்கன் மறைந்தாற்போல் அவனுடன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தில்லிப் படைகள் மட்டுமல்ல தில்லி சுல்தானும் நம்புகிறான். ஆகவே அவர்களுக்கு அவை கிடைக்கும் வரை திருவரங்கத்திலிருந்து நகரப் போவதில்லை!" என்றார்.

அதற்குக் குலசேகரன் அரங்கனின் சொத்தெல்லாம் கள்வரிடம் போய்விட்டதைக் கூறினான். "ம்ம்ம்ம் மன்னனில்லா நாடு! பாண்டிய மன்னன் மக்களைப் பரிதவிக்க விட்டு விட்டு ஓடி ஒளிந்து கொண்டான். இந்த தில்லிக் கொள்ளையர் போதாது என்று இப்போது களவர் வேறு கொள்ளையை ஆரம்பித்துவிட்டார்கள்!" என்று மனக் கசப்புடன் கூறிய வல்லாளர் சற்று நேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். பின்னர் கண்ணீர் ததும்பக் கூறியதாவது! "நானும் வைணவன் தான்! அரங்கமாநகருக்கும், அரங்கனுக்கும் நேர்ந்ததை நினைத்துக் கண்ணீர் விடுகிறேன். என்னால் வேறேன்ன முடியும்! இந்தத் தென்னாடு பல சிறு சிறு நாடுகளாகப் பிரிந்ததால் வந்த வினைதான் இவை எல்லாம். எல்லா மன்னர்களும் ஒன்று சேர்ந்து தில்லி சுல்தானை எதிர்த்திருக்கலாம் அல்லவா?"

"எங்கே! அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொள்ளவே அவர்களுக்கு நேரம் போதவில்லையே!நானும் எவ்வளவோ முயன்றேன். எல்லோரையும் ஒருங்கிணைக்க! முடியவில்லை. ஆனாலும் அரங்கமாநகரையோ அரங்கனையோ விட்டு விட என் மனம் ஒப்பவில்லை. ஏதேனும் செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். பார்க்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன். யோசிக்க அவகாசம் தேவை! அதற்கு முன்னால் ஒரு விஷயம் சொல்ல வேண்டுமே! குலசேகரா! உன்னைப் பார்த்தால் பெரு வீரனாகத் தெரிகிறது! என் அரசி ராமேஸ்வரம் செல்லவேண்டி ஏற்பாடுகள் செய்து வருகிறாள். நீ அவளுடன் துணையாகப் போய் வா!" என்றார்.

குலசேகரன் அரை மனதுடன், "தங்கள் சித்தம் பிரபோ! ஆனால் ராமேஸ்வரம் பக்கம் சென்றால் தில்லி வீரர்கள் விட்டு வைப்பார்களா?" என்று கேட்டான். அதற்கு வீர வல்லாளர் தான் அவர்களுடன் செய்துகொண்டிருக்கும் உடன்படிக்கை இருக்கும் வரை அவர்கள் தங்களுக்கு நண்பர்களே என்றார். மேலும் அவர்கள் உங்களைப் பிடிக்காமலும், உங்களை எதிர்க்காமலும் இருப்பதற்காக ஹொய்சள அரச இலச்சினையைத் தருவதாகவும் சொன்னார். 

No comments: