எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, November 25, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகாவுக்கு நேர்ந்தது!

ஹேமலேகா தொடர்ந்தாள். அவன் சென்றதும் நடந்தவற்றை விவரித்தாள். அவள் கூறியதாவது:-

"ஸ்வாமி! திருவண்ணாமலையில் கிருஷ்ணாயியின் அந்தப்புரத்தில் ராணி வாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்த எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகவே கழிந்து கொண்டிருந்தது. இங்கிருந்து எப்படியேனும் வெளியேறினால் போதும் என்று இருந்தேன். இந்த நாட்டை விட்டுத் தெற்கே எங்கே சென்றாலும் துருக்கர்கள் தொந்திரவு இல்லாமல் இல்லை. ஆகையால் என் பிறந்த ஊரான ஜம்புகேஸ்வரத்துக்குச் செல்ல நினைத்தேன். ஆனால் அங்கே போனால் ஊரே பாழாகி விட்டிருந்தது. அதன் பின்னரே இந்த அழகிய மணவாளம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். அநாதையும் இளம்பெண்ணுமான நான் எவ்வாறு தனித்துக் குடி இருப்பேன்? அதுவும் கண்ணனூரில் தங்கி இருந்த தில்லித் தளபதி திருமணம் ஆகாத கன்னிப் பெண்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துத் தன் ஆசைக்கு உட்படுத்திக் கொள்கிறான் என்பதையும் நன்கு அறிந்திருந்தேன். அப்போது சிங்கப்பிரானுக்கும் மற்றப் பெரியோர்களுக்கும் நான் வந்திருப்பது தெரிந்தது. உடனே என்னிடம் வந்து யாரையானும் மணந்து கொண்டால் நீ தப்பிக்கலாம். இல்லை எனில் சுல்தானின் தளபதி உன்னைக் கவர்ந்து வரச் சொல்லிவிடுவான் என எச்சரித்தனர்."

"என் மனதிலோ ஆயிரம் ஆயிரம் கனவுகள்! யாரேனும் என் வயதுக்கேற்ற இளைஞனை மணந்தால் அத்தகைய கனவுகளுக்குப் பாதகம் உண்டாகிவிடுமோ எனக் கவலைப் பட்டேன். அதே சமயம் என் கனவுகளை எல்லாம் கலைத்துக் கொண்டு ஓர் இளைஞனுக்கு வாழ்க்கைப்பட்டு என்னை நானே ஒப்புக் கொடுக்கவும் மனம் வரவில்லை. ஆகவே வயதான ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என நினைத்த போது இவரைப் பற்றி அறிய வந்தது. அதுவும் இரு கண்களும் குருடு என்பதும் எனக்கு வசதியாக இருந்தது. இல்லை எனில் என் அழகைப் பார்த்துவிட்டு இவரும் தடுமாறினார் எனில்! என்ன செய்வது ஸ்வாமி! கடவுள் எனக்கு அளித்திருக்கும் மனமாகிய வரப் பிரசாதத்தில் தோன்றிய, தோன்றிக்கொண்டிருக்கும் என் கனவுகளை நான் எப்படி அழிப்பது? அவற்றின் மூலம் நான் மாளிகை கூடக் கட்டுகிறேன். கோயில்கள், பிருந்தாவனங்கள் கட்டுகிறேன். அவற்றில் ஆனந்தமாக ஆடிப்பாடி உலாத்துகிறேன். யார் தடை சொல்ல இயலும்! ஆனால் இவை எதையும் இன்று வரை நான் வெளியே சொன்னதில்லை ஸ்வாமி! வெளிப்பார்வைக்கு நான் ஓர் எழுபது வயதுக் கிழவரின் மனைவி! ஆனால் என் மனதுக்குள்ளே நான் அதற்குரிய கனவுகளோடும் ஆசைகளோடும் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணங்களோடு வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இத்தகைய இரட்டை வாழ்க்கையை எவரும் இன்று வரை அறிந்ததில்லை ஸ்வாமி! இன்று தான் முதல் முறையாக உங்களிடம் கூறுகிறேன்."

குலசேகரன் மனம் உருகியது. அவளுக்காக அவன் மனம் நெகிழ்ந்து கொடுத்தது. ஆனால் சுதந்திரமாக இருந்து இவள் எதையும் சாதிக்கவில்லையே! நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டு எவரையோ திருமணம் அல்லவா செய்து கொள்ள நேர்ந்திருக்கிறது! அதை விட இவள் ராணி வாசத்திலேயே இருந்திருக்கலாமோ!  இந்த எண்ணங்கள் குலசேகரன் மனதில் விரைவாக ஓடி மறைந்தன. ஆனால் அவன் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஹேமலேகாவை சமாதானம் செய்தான். அவளும் அவனை சமாதானம் செய்தாள். பின்னர் ஹேமலேகா அவனிடம் விடை பெற்றுக் கொண்டு அழகிய மணவாளம் கிராமத்துக்கு அடிக்கடி வந்து தன்னைப் பார்க்குமாறு குலசேகரனிடம் கேட்டுவிட்டு எழுந்து குடத்தில் நீர் எடுத்துக் கொண்டு கரையின் மேல் ஏறிச் சென்றாள்.

அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த குலசேகரன் சிறிது நேரத்தில் தன்னைச் சமாளித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து சிங்கப்பிரானின் வீட்டை நோக்கி நடந்தான்.  சிங்கப்பிரான் அவனைப் பார்த்து மகிழ்ந்தார். தான் அறிந்தவரை சுல்தானிய ராஜ்யத்தின் நிலை பற்றியும் கண்ணனூர்க் கோட்டையில் இருக்கும் தளபதி பற்றியும் விபரங்களைச் சொன்னார்.  ஹொய்சள மன்னர் சொன்னபடி மதுரையிலிருந்து  கண்ணனூருக்கோ கண்ணனூரில் இருந்து மதுரைக்கோ செய்திகள் போகாமல் தடுத்து விட்டால் பின்னர் வெற்றி நிச்சயம் என்று உறுதிபடக் கூறினார். அவருடைய ஆசிகளுடன் அங்கிருந்து கிளம்பிய குலசேகரன் தன்னுடன் வந்த 20 ஹொய்சள வீரர்களையும் அழைத்துக் கொண்டு தெற்கு நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

No comments: