எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, April 28, 2019

சுல்தானியர்கள் சமாதானத்துக்கு வருகிறார்களா?

குலசேகரன் அந்தக் கோட்டையில் தான் வாசந்திகா இருக்க வேண்டும் என நினைத்தான். உயிருடன் இருப்பாளா? அல்லது பட்டினிச்சாவில் இறந்துவிட்டாளா?தெரியவில்லை! அவள் உடலும் தூக்கி எறியப் பட்டிருந்தால்? இந்த எண்ணமே அவனை வேதனை செய்தது. அவள் மட்டும் உயிருடன் இருந்தால் ஹொய்சளர்கள் முற்றுகை குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்திருப்பாளே! நானும் இங்கே வந்து போரில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்திருப்பாளே! ஆகவே அவளுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டு நம்பிக்கையும் வந்திருக்க வேண்டும். கவலைப்படாமல் அடுத்து ஆகவேண்டியதைப் பார்ப்போம் எனநினைத்தான் குலசேகரன். மறு தினத்தில் இருந்து மறுபடி சடலங்கள் வந்து விழ ஆரம்பித்தன. 

அங்கே கோட்டைக்குள்ளே! பதினான்கு நாட்களுக்கான உணவு மட்டுமே இருக்க சுல்தானியர்கள் மக்களைக் கொன்று எறிந்து கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். இதைக் கண்ட ஹொய்சளர்கள் பரபரப்புடன் பீதியும் அடைந்தனர். குலசேகரனுக்குக் கோட்டையைத் தாக்குவதில் ஆவல் அதிகம் ஆயிற்று. மறுபடி போய் மன்னனைக் கெஞ்சினான். ஆனாலும் மன்னர் அவசரப்படக் கூடாது, இன்னும் இரு நாட்கள் போகட்டும், பொறுத்திருப்போம் என்றே சொன்னார். அதன்படி இரண்டு நாட்கள் சென்று மூன்றாம் நாள் காலை ஹொய்சளப்படை மாபெரும் புயல் போல் கிளம்பியது.  போர் முரசுகள், "தம், தம், தம், " என்று போட்ட சப்தம், எங்கும் நிரம்பி, "யுத்தம், யுத்தம், யுத்தம்" என்று எதிரொலித்தது. ஹொய்சளப்படை கண்ணனூர்க் கோட்டையை நோக்கி முன்னேறியது.

ஹொய்சள வீரர்கள் உணவு கிடைத்தமையால் பூரண ஆரோக்கியத்துடன் இருந்தனர் என்பதோடு அதிகச் சேதமும் கடந்த இரண்டு தாக்குதல்களில் நிகழவில்லை. ஆகவே இன்னமும் லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். அவர்கள் எழுப்பிய ஜெய கோஷங்களால் பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. கோட்டை வாயிலை நோக்கிப் படைகள் வேகம் வேகமாகச் சென்றன. அதுவும் இல்லாமல் இத்தனை கால முற்றுகையில் கோட்டைக்குச்  சுற்றிலும் செல்லும் அகழிகளைத் தூர்த்திருந்தனர் ஹொய்சள வீரர்கள். ஆகவே கோட்டைக்கு அருகே போவதற்கு அதிகம் கஷ்டப்படவில்லை.  சுல்தானிய வீரர்கள் வெளியே வருவதற்கு முன்னரே ஹொய்சள வீரர்கள் போரை ஆரம்பித்து விட்டனர். அம்புகளை மழையாகக் கோட்டைச் சுவர் மேல் பொழிந்தார்கள். ஹொய்சள வீரர்களின் அடுத்தடுத்த இடைவெளி காணாத அம்புச் சரங்களால் கோட்டை மறைக்கப்பட்டது. அம்புகள் அனைத்தும் கூடு போல் சென்று மறைத்துக் கொண்டன.  கோட்டை முகடுகள் மீதெல்லாம் அம்புச் சரங்கள்.

ஒரு சிலரின் அம்புகள் கோட்டைக்கு உள்ளேயே போய்ப் பாய்ந்தன. வெளியே வந்த சுல்தானிய வீரர்கள் அரை நாழிகையில் எதிர்த்து நிற்க முடியாமல் கோட்டைக்கு உள்ளே மறைந்து விட்டனர். உடனே ஹொய்சள வீரர்கள் கயிற்றால் ஏணிகள் கட்டி அவற்றின் உதவியோடு கோட்டைச் சுவர் மேல் ஏறி உள்ளே குதிக்க ஆரம்பித்தனர். கோட்டைச் சுவரில் ஆப்புகளைச் சிலர் அறைந்தனர். கோட்டை வாசலை யானைப்படைகள் வந்து வெகு வேகமாகவும் வலிவாகவும் தாக்கியது. யானைகள் கோட்டைக் கதவுகளை மடேர் மடேர் என முட்டின. அன்று பகலுக்குள்ளாகக் கோட்டை ஹொய்சளர் வசம் வந்துவிடுமோ என்று இருந்தது. அனைவரும் உற்சாகத்துடன் போரிட்டார்கள்.  வீர வல்லாளருக்குப் பெருமிதம் தாங்க வில்லை. ஆங்காங்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டும், தானும் எதிரிட்டு வருபவனை வீழ்த்திக் கொண்டும் இருந்தார். அந்த வயதிலும் அவர் உற்சாகம் வீரர்களுக்கு வியப்பையும் அதே சமயம் மேலும் உற்சாகத்தையும் ஊட்டியது. அப்போது பார்த்துக் கோட்டைக்குள்ளிருந்து, "நிறுத்துங்கள், நிறுத்துங்கள்!" என்னும் கூக்குரல் வருவது தெரிந்தது.

வீர வல்லாளர் கூக்குரல் வந்த இடத்தைப் பார்த்தார். கோட்டைச்சுவர் எங்கும் வெள்ளைக் கொடிகள் முளைத்திருந்தன சுல்தானியர் சமாதானம் வேண்டிக் கொள்கிறார்கள் என்பதை மன்னர் புரிந்து கொண்டார். ஹொய்சள வீரர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தளபதிகளும், தண்டநாயகர்களும் வீர வல்லாளரைச் சூழ்ந்து கொண்டார்கள். சமாதானத்துக்கு அவர்கள் மசியவில்லை. போரைத் தொடர வேண்டும். சுல்தானியரை வீழ்த்த வேண்டும் என்று ஆவேசத்துடன் கூவினார்கள். மன்னர் யோசித்தார். குலசேகரனைப் பார்த்தார். குலசேகரனும் போர் புரியவே விரும்பினான். ஆனால் மன்னரோ சரண் அடைந்தால் என்ன செய்வது என யோசித்தார். சரண் அடைவதாகத் தெரிவிக்கட்டும், ஏற்போம். இல்லை எனில் போர்தான் என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு அப்படியே கோட்டைக்குள் செய்தியும் அனுப்பப் பட்டது. அனைவரும் சரண் அடைய வேண்டும். இல்லையேல் போர் தான் என்பதே அந்தச் செய்தி.

1 comment:

Hello Madurai said...

வணக்கம்... எனது பெயர் மு.ரமேஷ். ஹலோ மதுரை எனும் மாத இதழில் ஆசிரியராக உள்¼ன். உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். தங்களது எண் கிடைக்குமா ?