எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, October 05, 2019

விஜயநகர சாம்ராஜ்யம்!

அடுத்து வரும் நிகழ்வுகளைக் காணும் முன்னர் நாம் இப்போது தென்னகத்தில் நிலவி வந்த அரசியல் சூழ்நிலையைக் கொஞ்சம் பார்த்துக் கொள்வோம். கண்ணனூர்ப் போரையும் அதில் ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டதும் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். அதன் பின்னர் அரங்கன் பரிவாரங்கள் இனி திருவரங்கம் திரும்ப முடியாது என்னும் எண்ணத்துடன் திரும்ப மேல்கோட்டையே சென்றுவிட்டனர். தமிழகம் எங்கும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை கொடுத்த கண்ணனூர்ப் போர் இம்மாதிரி முடிந்ததில் எங்கும் ஓர் பரிதவிப்பான சூழ்நிலையே இருந்து வந்தது. சரியான தலைமை இல்லாமல், தங்களை வழிநடத்திச் செல்லும் தலைவர் இல்லாமல் மக்கள் யாரிடம் போவது எனத் தெரியாமல் நம்மைக் காப்பவர்கள் யார் எனத் தெரியாமல் வாழ்ந்து வந்தனர். கோயில்களில் வழிபாடுகள் நின்று போய்த் திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவதையே மக்கள் மறந்து போயிருந்தனர். இனி இந்தச் சூழ்நிலையில் இருந்து தமிழகம் மீளுமா என அனைவரும் தங்கள் நம்பிக்கையைக் கை விட்டிருந்தனர்.

ஆனால் தமிழகத்துக்குக் கொஞ்சம் வடக்கே துங்கபத்ரா நதிக்கரையில் ஓர் சந்நியாசி தமிழகத்தையும் மற்ற நாடுகளையும்  புனர் உத்தாரணம் செய்யப் பிறந்தவர் போல ஹரிஹரன், புக்கன் என்னும் இருவரை ஓர் மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வைத்தார். தேவி உபாசகரான அவருக்கு இந்த சாம்ராஜ்யம் தான் பல கோயில்களையும் மீட்டுக் கொடுத்து சநாதன தர்மத்திற்குப் பெரும் சேவை செய்யப் போகிறது என்பதை அறிந்திருந்தார். இந்நிகழ்வு கண்ணனூர்ப் போர் நடைபெறுவதற்கு சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்தது. மெல்ல மெல்ல அந்த ராஜ்யம் விஜயநகரம் என்னும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு எழுச்சி பெற்று வந்தது. அதற்குப் பின்னர் இந்தக் கதை நடைபெறும் சமயம் சாம்ராஜ்யம் ஏற்பட்டு 25 ஆண்டுகளாகி விட்டன. துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள அந்த சாம்ராஜ்யத்தை இந்தக் கதை நடைபெறும் சமயம் புக்கராயர் என்பவர் ஆண்டு வந்தார்.


இந்த சாம்ராஜ்யத்தின் தென் திசையில் தற்போது முல்பாகல் என அழைக்கப்பட்டு வரும் முள்வாய்ப்பட்டினம் என்னும் மண்டலத்தில் ஓர் அழகிய அரசமாளிகை. அதன் அந்தப்புரத்தினுள் நாம் இப்போது நுழையப் போகிறோம். அனுமதியா? நமக்கெல்லாம் அனுமதி தேவை இல்லையே! கற்பனா தேவியின் துணை கொண்டு நாம் தற்போது அந்தப்புரத்தின் உள்ளே சென்று அதன் அழகிய உத்தியானவனத்துக்குச் செல்லப் போகிறோம். மயில்கள் நடனம் ஆட, குயில்கள் தேவ கானம் இசைக்க அங்கே ஓர் அழகிய கண்களையும், மனதையும் கவரும் வண்ணம் சோலையாகக் காட்சி அளித்த உத்தியானவனத்தில் ஓர் மரத்தின் கீழே அழகியதொரு மேடை. அதிலே அமர்ந்திருந்தாள் ஓர் மங்கை. அவள் தன் கைகளில் ஏடுகளை வைத்துக்கொண்டு எழுத்தாணியால் ஏதோ எழுதிக் கொண்டு இருந்தாள். கொஞ்சம் யோசிப்பதும் கொஞ்சம் எழுதுவதுமாக இருந்தாள். இவள் தான் பிற்காலத்தில் தன் "மதுரா விஜயம்" என்னும் நூலால் வடமொழியில் முதல் முதலாகப் பயணங்கள் குறித்த காவியம் எழுதிப் பிரபலம் ஆனவள். இப்போதும் ஏதோ எழுதிக் கொண்டு தான் இருக்கிறாள்.

இவள் பெயர் கங்காதேவி. இவள் எழுதிக்கொண்டிருக்கையில் உள்ளே அந்தப்புரத்திலிருந்து வந்த ஓர் பெண் இவளைச் சற்று நேரம் நின்று பார்த்தாள். பின்னர் புன்னகையுடன் இவளை நோக்கி நடந்து வந்தாள். இவள் வரும் சப்தம் மெல்லியதாக இருந்தாலும் கங்கா தேவிக்குக் கேட்டு விடுகிறது. நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தாள். கங்கா தேவியிடம் அவள் எழுத்துக்கும், கற்பனைக்கும் தான் குறுக்கே வந்துவிட்டோமோ என்னும் சந்தேகத்தை அவள் எழுப்ப கங்கா தேவி இல்லை என்கிறாள். அவள் அழைப்பதிலிருந்து வந்தவள் பெயர் குந்தளா எனத் தெரிகிறது.

No comments: