எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, April 11, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ப்ரணய கலஹம், நம்பெருமாள்-நாச்சியார் மட்டையடி!


ப்ரணய கலஹத்தில் ரங்கநாயகி, நம்பெருமாள் இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது.  ரங்கநாயகியும், அரங்கனும் வாக்குவாதம் பண்ணிக் கொள்வதைப் புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள் அந்தப் புத்தகத்தை  அளிப்பது கே.பி.எஸ்.நாராயணன் செட்டியார், சேர்மன், போர்ட் ஆஃப் ட்ரஸ்டீஸ், ஸ்ரீரங்கநாத ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீரங்கம். மேலும் உறுப்பினர், டி.ஆர்.யு.சி.சி. திருச்சி, 55, சின்ன செட்டி தெரு, திருச்சி.  இந்தப் புத்தகத்தை  ஸ்கான் செய்து அனுப்பியது பதிவர் மாதங்கி மாலி, அவர் தந்தை திரு மாலி.  இருவருக்கும் என் நன்றி.

முதல்லே பங்குனி மாதம் நடக்கும் இந்த பிரம்மோத்ஸவம் ஆதி பிரம்மோத்ஸவம் எனப்படும். இந்த ஆதி பிரம்மோத்ஸவம் விபீஷணனால் ஏற்படுத்தப் பட்டது.  பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தன்று கமலவல்லியைத் திருமணம் செய்து கொண்டு உறையூரிலிருந்து திரும்பி வந்த அரங்கன், ரங்கநாயகியைத் தரிசிக்க மிகுந்த பிரேமையுடன் சென்றபோது கோபத்துடன் கதவை அடைத்தாள் ரங்கநாயகி.  எல்லாம் தெரிந்த ஸ்ரீதேவிக்கே கோபமா? எனில் ஆம், கோபம் தான்.  நாம் இதைச் சாதாரணமான மானிடக் கண்களோடும், மானுட மனதோடும் பார்த்தால் தவறாகவே தெரியும். ஆனால் இவ்வுலகில் பரமபுருஷன் ஆன எம்பெருமான் ஒருவனே ஆண்மகன்.  மிகுதி உள்ள அனைவரும் ஸ்வரூபத்தால் எப்படித் தோன்றினாலும் அவர்களும் பெண்மக்களே.  இதைத் தான் மீராபாய் உணர்ந்து கூறினாள்.  கண்ணன் ஒருவனே ஆண்மகன்;  அவனுக்கு முன்னர் அனைவரும் பெண்களே என்று.  ஆகவே இதைப் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் ஏற்படும் ஒரு விவாதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வுலகிலுள்ள நம்மைப் போன்ற சாமானிய தம்பதிகளின் சண்டையைப் போல நினைக்க வேண்டாம்.  ஸ்ரீரங்கத்தைப் போலப் பல திவ்ய தேசங்களிலும் ப்ரணய கலஹம் என்னும் நிகழ்ச்ச்சி நடத்தப் படுகிறதெனினும் ஸ்ரீரங்கத்திலே தான் மிகவும் பிரசித்தமானது.

பெருமாளுக்கும், ரங்கநாயகிக்கும் ஏற்படும் இந்தப் ப்ரணய கலஹமானது கடைசியில் நம்மாழ்வாரால் தீர்த்து வைக்கப் படுவதாக ஐதீகம்.  பரமாத்மாவோடு ஜீவாத்மா சேர ஆசாரியனின் உதவி தேவை என்பதை இது சுட்டிக் காட்டுவதாய்ச் சொல்லுவார்கள்.  இனி ப்ரணய கலஹம் என்னும் மட்டையடி ஆரம்பம்.  பெருமாளுக்காக அரையர்களும் நாச்சியாருக்காக நாச்சியார் பண்டாரிகளும் வாதிடுவார்கள்.  அப்போது பூமாலைகள், பழங்கள், பூப்பந்துகள் போன்றவை நாச்சியாரால் பெருமாள் மீது தூக்கி எறியப் படும்.  பெருமாளோ மிகப் பயந்தவர் போலக் காட்டிக் கொண்டு பின்னே, பின்னே ஓட்டமாக ஓடுவார்.  அவர் பின்னே சென்றுவிட்டார் எனத் தெரிந்ததும் மீண்டும் கதவு திறக்கப் பெருமாள் உள்ளே நுழைய முயற்சிக்க மீண்டும் வாக்குவாதம் நடக்க, மட்டையடி நடக்கப் பெருமாள் மீண்டும் பின்னடைவார். இப்போது சம்வாதத்தைச் சற்றுப் பார்ப்போமா?

 அரங்கன் சொல்கிறார்:  "அடியே ரங்கநாயகி, நான் தான் போகும்போதே சொல்லிவிட்டுச் சென்றேன் அல்லவோ?  உற்சவங்கள் முடிந்து தானே நான் வர முடியும்?  நீயோ இந்தப் படியை விட்டுத் தாண்டமாட்டேன் என சபதம் போட்டிருக்கிறாய்!  உற்சவத்தில் எத்தனை கோலாஹலம், எத்தனை கொண்டாட்டம்  என்கிறாய்!  அடி அம்மா, பிராமணர்களெல்லாம் சூழ்ந்து கொண்டு ஸ்தோத்திரம் பண்ணுகின்றனர்.  புஷ்பங்களால் மக்கள் அனைவரும் வர்ஷிக்கின்றனர்.  அலங்காரப் பிரியனான எனக்கு உற்சாகத்துக்குக் கேட்க வேண்டுமா?  இப்படி எல்லாம் சந்தோஷத்தோடு உன்னைக் கண்டு சொல்ல வேண்டி ஓடோடியும் வந்தேனே!"

"நீயோ எப்போதும் என்னை எதிர்கொண்டு அழைப்பவள் இன்று வரவே இல்லை;  அதோடு விட்டதா!  கைலாகு கொடுத்து என்னை உள்ளே அழைத்துக் கொள்வாய்.  அருமையான சிம்மாசனத்தில் அமர்த்துவாய். என் திருவடியை விளக்குவாய்.  திருவொத்துவாடை சாற்றுவாய்,  திருவாலவட்டம் பரிமாறுவாய்; மங்கள ஆலத்தி எடுப்பாய்.  சுருளமுது திருத்தி சமர்ப்பிப்பாய்.  இத்தனை உபசாரங்களும் செய்வாயே, என் கண்ணே!  இன்றைக்கு என்ன திருக்காப்புச் சேர்த்துக் கொண்டாயோ?  என்னைக் கண்டதுமே உன் திருமுகமண்டலம் திரும்பியது திரும்பியபடி இருக்கிறதே,  உன் திருச்சேவடிமார்களாலே பந்துகள், பழங்களைக் கொண்டு என்னை அடிக்கிறாயே.  இப்படி எல்லாம் இன்று ஏன் என்னை அவமானம் செய்கிறாய் என் ரங்கநாயகியே!  இதற்கான காரணம் என்ன சொல்வாய்?"

இது நான் எழுதியவை ஆனால் புத்தகத்தில் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம் எப்படி எனில்,


"நாம் உத்ஸ்வார்த்தமாகப் புறப்பட்டருளித் திருவீதிகளெல்லாம் வலம் வந்து தேவதைகள் புஷ்பம் வர்ஷிக்க, ப்ராம்மணர்களெல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண, இப்படி பெரிய மனோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால், தாங்கள் எப்போதும் எதிரே விடை கொண்டு, திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய ஸிம்ஹாசனத்தில் ஏறியருளப் பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி, திருவாலவட்டம் பரிமாரி, மங்காளலத்தி கண்டருளப்பண்ணி, சுருளமுது திருத்தி சமர்ப்பித்து--இப்படி அநேக உபசாரங்களெல்லாம் நடக்குமே. இன்றைக்கு நாமெழுந்தருளினவிடத்திலே திருக்காப்புச் சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத்திருப்பிக் கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளாலே பந்துகளாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இன்றைக்குப் பண்ண வந்த காரியம் ஏதென்று கேட்டுவரச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்

தொடரும்

Wednesday, April 10, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கநாயகியின் ஊடல்! அடுத்து மட்டையால் அடிதான்!


உறையூர் வந்துவிட்டார் அழகிய மணவாளன் என்னும் நம்பெருமாள்.  இது 108 திவ்ய தேசங்களில் இரண்டாமிடத்தைப் பெற்ற சிறப்பான க்ஷேத்திரம்.  பின்னே?  ஸ்ரீரங்கம் உற்சவரே இங்கும் உற்சவர் ஆயிற்றே.  இங்கு கமலவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டி வந்திருக்கிறார்.  வந்தாச்சு;  வந்த வேலை முடிந்தது.  கமலவல்லியுடன் திருமணம் முடித்துக் கொண்டு சேர்த்தி சேவையும் முடிந்தது.  இனி திரும்பணுமே ஸ்ரீரங்கத்துக்கு. கமலவல்லியோ கண்ணும் கண்ணீருமாக நிற்கிறாள்.  அவளை சமாதானம் செய்த நம்பெருமாள் அவளுக்குப் பரிசாகத் தன் கணையாழியையே கொடுக்கிறார்.  ஆஹா, அதைக் கொடுக்கும் முன்னர் அது யாருடையது என்பது தெரியாதா அரங்கனாரே?  வம்பு வளர்க்கத் தானே கொடுக்கிறீர்கள்?  கொடுங்கள், கொடுங்கள்.  அதை வாங்கிக் கொண்டு கமலவல்லியும் அமைதி அடைகிறாள்.  பின்னர் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் கிளம்புகிறார்.  கிளம்பியவர் நேரே ரங்கநாயகியைப் பார்க்கப்போகவேண்டாமோ?

ஏதோ வேலை நெட்டி முறிக்கிறாப்போல் அறுவடை ஆகி வந்திருக்கும் நெல் அளவையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.  அதுக்கப்புறமாத் தான் தாயார் சந்நிதிக்கே போகிறார்.  அங்கே போனதும் இவ்வளவு நாழி வேலை செய்துவிட்டுக் களைத்துச் சோர்ந்து போன வந்த நம்பெருமாளுக்குத் திருமஞ்சனம் என்னும் அபிஷேஹம் நடைபெறுகிறது.  ரங்கநாயகி சந்தோஷமாய்ப் பார்க்கிறாள்.  அவள் கண்களிலே பட்டது அந்த விபரீதம்.

"எங்கே? கையைக் காட்டுங்கள்!"

"என்ன கையிலே ஒன்றுமில்லையே?"

"அதான் கேட்கிறேன்.  நான் உங்களுக்குக் கொடுத்த அந்த மோதிரம் எங்கே?"

"ம்ம்ம்ம்??? என்ன மோதிரம், எங்கே மோதிரம்?"

"சரிதான்!"

"ஓ அதுவா?  வரும்போது காவிரியைக் கடந்து நீரில் இறங்கி வந்தேனா?  ஆற்றில் விழுந்துவிட்டது போலிருக்கே!  இப்போ என்ன செய்வது?"

"ரங்கநாயகி, இரு, நீ இங்கேயே இரு.  நான் போய் ஆற்றில் நன்றாய்த் தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன்."

ரங்கநாயகிக்கு நம்பிக்கையே இல்லை.  என்றாலும் என்ன செய்யலாம்?  இந்த மனுஷன் தேடிவிட்டு வரட்டும். அதுக்கப்புறம் என்னனு விசாரிக்கலாம்.




கொள்ளிட ஆற்றங்கரைக்குத் தங்கக் குதிரையில் எழுந்தருளுவார் நம்பெருமாள்.  ஆற்றில் அங்கும் இங்கும் கணையாழியைத் தேடுவார்.  கீழே, மேலே, மணலில், ஆற்றங்கரையின் நட்டநடுத் தீவுகளிலே, மரங்களிலே, இண்டு இடுக்கு விடாமல் தேடுகிறாராம்.  பின்னர் சத்தம் போடாமல் திரும்புகிறார்.  சித்திரை வீதியில் வையாளி சேவை நடக்கும்.  வையாளி சேவைன்னா அது சேவை.  குதிரை நிஜமாகவே ஓடும். ஓடி ஓடித் தேடுகிறாராம்.  இங்கே இருந்தால் தானே கிடைக்க! எங்கே கொடுத்தோம்னு அவருக்கு நன்றாகவே தெரியும். இப்போ  வெறுங்கையோடு தான் திரும்பியாகணும்.  வேறே வழியே இல்லை.  ரங்கநாயகிக்கு ஏதோ விஷமம் என்று புரிந்து விட்டது.  கோபம் கொண்டாள்.  முகத்தைத் திருப்பிக் கொண்டதோடு கதவையும் அடைத்தாள்.  ஆயிற்று. ப்ரணய கலஹம் ஆரம்பமாயிற்று.  மேள, தாள அமர்க்களத்தோடு வருகிறாரா?  வரட்டும், வரட்டும்.  யார் உள்ளே விடப் போறாங்க?  கதவு படீரென்று சார்த்தப் பட்டது.

படம் உதவி: கூகிளார்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கநாயகி பட்ட பாடு! மட்டையடித் திருவிழா!





ரங்க நாயகியின் சந்நிதி.  உள்ளே அவளுக்குள் ஒரே கவலை.  அரங்கனை இரண்டு நாட்களாய்க் காணோமே?  அவள்  படிதாண்டாப்பத்தினி தான். வில்வமரத்தடியில் குடி கொண்டிருக்கும் அந்த சந்நிதியைத் தாண்டி அவள் வரவே மாட்டாள்.  அதுக்காக அரங்கனைப் பத்தித் தெரியாமல் இருக்குமா?  அவள் மனம் அலை பாய்ந்தது.  பழைய நினைவுகள் அனைத்தும் குமுறிக் கொண்டு வந்தன.  ம்ம்ம்ம்ம்ம்

"எங்கேயோ ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள்னு ஒருத்தி வந்தாள்.  என்னவெல்லாமோ பாடல்களைப் பாடி அரங்கனை மயக்கிக் கடைசியில் திருமணமும் செய்து கொண்டாள்.  அப்புறமாத் துலுக்க நாச்சியாராம்.  யாரோ ஓர் சுல்தானுக்குப் பெண்ணாம்.  இளவரசியாம்.  அவளை இங்கே வரவைத்து அவளையும் தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொண்டதோடு அல்லாமல், அவங்க தேசத்து ராஜாக்கள் கொடுத்தாங்கனு தினம் தினம் லுங்கி கட்டல், சப்பாத்தி சாப்பிடல்னு ஆயிண்டிருக்கு.  இது போதாதா இந்த மனுஷனுக்கு! பெயரும் வைச்சாங்க பார்!  அழகிய மணவாளனாம்!  யாருக்கு?  எனக்குத் தான் மணவாளன்.  எவளோ ஒரு கிழவி கண்களுக்கு இவர் அழகிய மணவாளனாத் தெரிஞ்சிருக்கார்.  உடனே எல்லாருக்குமா அழகிய மணவாளர்?? "

"போறாததுக்கு இந்தப் பரதக் கண்டம் முழுசும் சுத்தினேன்னு பெருமை வேறே.  அங்கேருந்து இவர் திரும்பி வர வரைக்கும் என் பக்தன் வேதாந்த தேசிகன் புதைத்து வைத்திருந்த வில்வ மரத்தடியிலிருந்து நான் வெளியே தலையைக் காட்டி இருப்பேனா?  அரங்கனையே நினைத்துக்கொண்டு இப்போது எங்கே இருக்கிறாரோ, எப்போது இங்கே வருவாரோ அன்னிக்குத் தான் வெளியே தலையைக் காட்டணும், நாம் இருக்கும் இடத்தைக் காட்டித் தரணும் என அப்படி ஒரு ஒருமித்த சிந்தனையோடு அரங்கன் வந்தால் தான் வெளியே வரது;  நாம இருக்குமிடத்தைச் சொல்லுவது என்றிருந்தேன்.  இந்த மனிதனும் பலருடைய பிரயத்தனங்களின் பேரில் தான் ஒளிஞ்சிருந்த இடத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.  அப்போவே எனக்குப் புரிஞ்சு போச்சு இவர் தான் அழகிய மணவாளர்;  என் அருமை மணவாளர்னு.  ஆனால் அறுபது வருடத்துக்கும் மேலே ஆனபடியாலே இந்த ஜனங்களுக்குப் புரியலை.  இவரோட இடத்திலே இருக்கிறவர் புது ஆள்னு சொல்லியும் தெரியலை.  அதுக்கப்புறமா இவரோட பரிமள கஸ்தூரி வாசனையைத் தெரிஞ்சவங்க இருக்காங்களானு கேட்டு, கடைசியிலே அரங்கனின் அபிஷேஹத் துணிகளைத் துவைத்து வந்த பரம்பரையில் இப்போது உயிரோடு இருக்கும் வயதான  ஒரே ஒரு “ஈரம் கொல்லி”யைக் கண்டு பிடிச்சு, அவனும் வந்து இவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி, புதுசா ஊர்க்காரங்க பிரதிஷ்டை பண்ணி வைச்சாங்களே அரங்கன்னு அவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி அந்த ஆடையைத் தன்னிடம் கொடுத்தால் கண்டுபிடித்துச் சொல்வதாய்ச் சொன்னான்.  அப்படியே செய்து இரண்டு ஈர ஆடைகளையும் அந்த ஈரம் கொல்லியிடம் கொடுத்தாங்க.

அந்த ஈரம் கொல்லியும் இரண்டு ஆடையையும் வாங்கிக் கொண்டு   முதலில் புது ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம்.  பிழிந்து குடித்துப் பார்த்து முகத்தைச் சுளிச்சான்.  அடுத்துத் தான் நம்ம ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம்.  அதை எடுத்துப்  பிழிஞ்சு குடிச்சான்.  குதிக்க ஆரம்பிச்சுட்டான்.  இவர் தான் நம் பெருமாள்;  நம்பெருமாள்னு சொல்லிக் கூத்தாடி ஆடிப் பாடினான்.  அன்னைக்கு வைச்ச பெயர் இவருக்கு நம்பெருமாள்னு. அந்தப் பெயர் நிலைச்சது.  சரி இனியாவது நம்மளோடயே இருப்பார்னு நினைச்சேன்.  ஆனால் ஒவ்வொரு உற்சவத்திலும் இந்த மனுஷன் ஆண்டாளை வெளியே சந்நிதி வைச்சுக் குடியேற்றி அங்கே மாலை மாற்றிக்கொண்டு வந்துடறார்.  சரி போனாப் போறதுனு அனுமதிச்சா இப்போ இரண்டு நாட்களா ஆளையே காணோமே!  எங்கேனு விசாரிச்சதிலே உறையூருக்குப் போயிருக்காராம்.  வரட்டும்;  வரட்டும் ஒரு கை பார்த்துடறேன்.  யாரோ கமலவல்லியாம்;  ராஜாவின் பெண்ணாம்.  அவள் என்னோட அம்சமாமே?  இருக்கட்டுமே!  அதுக்கு அவளைக் கல்யாணம் செய்துக்கறதா?  ம்ஹூம், இதை நான் அநுமதிக்க மாட்டேன்.  அந்த மநுஷன் வரட்டும்.  உள்ளேயே விடப்போறதில்லை.

திருட்டுத்தனமாக் கல்யாணம் செய்துட்டு அதை என்னிடமிருந்து மறைக்கப் பார்ப்பார்.  எப்படியாவது கண்டு பிடிச்சுடணும்.


படம் உதவி கூகிளார்.

Tuesday, April 09, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், மட்டையடித் திருவிழா!




ஸ்ரீரங்கத்து அரங்கன் நம்பெருமாளாயிற்றே.  ஆனால் இவன் அழகிய மணவாளன் என்றே அழைக்கப் பட்டிருக்கிறான்.  நம்பெருமாள் என அழைக்கப்படும் காரணத்தை வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.  இப்போ இந்த அழகிய மணவாளன் செய்த ஒரு காரியத்தைச் சொல்லியே ஆகணும்.  இவனோ ஊர்சுத்தி.  ஆங்காங்கே இருக்கும் பெண்கள், ஆண்கள் அனைவரும் தன் பரிமள கஸ்தூரி வாசனையினாலேயே வசீகரிப்பவன்.  இப்படி இருந்த அரங்கன் ஒரு நாள் உலாப் போகையில் இளவரசி ஒருத்தி அவனைக் கண்டாள்.  கண்டது முதல் அவன் நினைவாகவே இருந்தாள்.  மணந்தால் அரங்கன்;  இல்லையேல் திருமணமே வேண்டாம் என்றிருந்தாள்.  அரங்கனுக்குத் தான் வியவஸ்தையே இல்லையே!  அவன் பாட்டுக்குத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.  என்ன இது?  ஏற்கெனவே ரங்கநாயகி நாச்சியார் இருக்கையில் இன்னொரு திருமணமா?  ஆஹா!  ஆம், ஆம், இன்னொரு திருமணம் தான்,  அதுவும் ரங்கநாயகிக்குத் தெரியாமல்.  இது என்ன புதுக்கதை?

சோழர்களுக்கு உறையூர் தலைநகரமாக இருந்த காலம் அது.  நந்த சோழன் என்னும் மன்னன் நாட்டை ஆண்டு வந்தான்.  அவனுக்கு மக்கட்பேறே இல்லாமல் இருக்க ஸ்ரீரங்கத்து அரங்கனை வேண்டினான்.  அரங்கனோ இப்பிறவியில் அவனுக்கு மக்கட்பேறுக்கு வாய்ப்பில்லை;  எனினும் நம் பக்தன் அவன், ஆகையால் அவனுக்கு அருள் செய்ய வேண்டும் என எண்ணினான்.  திருமகளைக் கடைக்கண்ணால் நோக்க அவளும் புரிந்து கொண்டாள்.  தன் அம்சத்தை அவனுக்கு மகவாய்த் தரத் திருவுளம் கொண்டாள்.  ஓர் நாள் உத்தியானவனத்தில் சுற்றி வந்த மன்னன் கண்களில் தாமரை ஓடையில் ஒரு பெரிய அதிசயத் தாமரைப் பூவும், அதில் இருந்த ஒரு குழந்தையும் கண்களில் பட்டது.  மன்னனுக்கு ஆச்சரியம்.  குழந்தையைத் தன்னிரு கைகளிலும் தூக்கி எடுத்து மார்போடு சேர்த்து அணைத்தான்.  குழந்தை, “களுக்”எனச் சிரித்தது.  கமலப் பூவில் கண்டெடுத்த குழந்தைக்குக் கமலவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.  மன்னன் மனம் மகிழ்ந்தது.

விரைவில் மணப்பருவம் எய்திய கமலவல்லி தான் அரங்கனின் உலாவைக் கண்டாள்;  அவன் பால் அவள் மனம் சென்றது இயற்கை தானே!  திருமகளின் அம்சமான அவள் சேர வேண்டிய இடத்திற்கு அவள் மனம் சென்றது அதிசயம் அல்லவே.  ஆனால் இது எதுவும் அறியா மன்னன் மகளின் வருத்தம் கண்டு தானும் வருந்திக் காரணம் கேட்டறிந்தான்.  இது நடக்கக் கூடியதா என எண்ணி வியந்தான்.  கவலையில் ஆழ்ந்த மன்னன் கனவில் அரங்கன் தோன்றி, “உன் மகள் வேறு யாருமல்ல.  திருமகளே உனக்கு மகளாய் அவதரித்துள்ளாள்.  அவளை மணப்பெண்ணாக அலங்கரித்து ஸ்ரீரங்கம் அழைத்து வருவாய்.  நான் அவளை ஏற்றுக்கொள்வேன்.” என்றான்.  அரங்கன் சொல்படியே மன்னன் தன் மகளை அழகிய மணமகளாய் அலங்கரித்து திருவரங்கம் அழைத்து வர, அரங்கன் சந்நிதிக்கருகே மணமகள் மறைந்தாள்.  இதைத் தன் கண்களால் கண்ட மன்னன் வியந்தான்.  திருமகளையே தன் மகளாகத்  தான் வளர்த்து வந்ததையும், அரங்கனே தனக்கு மருமகனாக வாய்த்த பேறையும் எண்ணி மனம் சிலிர்த்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பற்பல திருப்பணிகள் செய்தான்.  என்றாலும் அவன் மனம் அமைதியுறவில்லை.

பாசத்துடன் தான் வளர்த்த தன் மகளுக்கென ஒரு அழகிய கோயிலை உறையூரில் எடுப்பித்தான்.  பெருமாளை வேண்டிக்கொள்ள அவரும் அழகிய மணவாளராக அங்கே எழுந்தருளியதாகக் கோயில் வரலாறு.  இதன் பின்னர் உறையூர் மண்மாரியால் மூடிய பின்னர் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப் பட்டபோது எழுப்பிய கோயிலே இப்போது நாச்சியார் கோயில் என்னும் பெயரில் உறையூரில் வழங்குவதாய்ச் சொல்கின்றனர்.  அரங்கன் அங்கே அழகிய மணவாளனாக எழுந்தருளி இருக்கின்றான்.  இந்த நாச்சியாரின் திருநக்ஷத்திரமான ஆயில்யத்தன்று பங்குனி மாதம் இவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி ஸ்ரீரங்கத்திலிருந்து நம்பெருமாள் என்னும் அழகிய மணவாளர் ஒவ்வொரு வருடமும் உறையூருக்குச் செல்கிறார்.  பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்திரத்தன்று அங்கே கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை நடைபெறும்.  இதை முடித்துக் கொண்டு அரங்கன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.  இதெல்லாம் ரங்கநாயகிக்குத் தெரியாது.  தெரிஞ்சதுனா அவ்வளவு தான். இனிமேத் தான் இருக்கு அவருக்கு!

படம் உதவி: கூகிளார்.

Tuesday, March 26, 2013

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசி முடிவு!


இராப்பத்தின் முடிவு நாளன்று நம்மாழ்வார் மோட்சம் தான்.  பத்து நாட்களாக பரமபதமாகிய வைகுந்த வாசலுக்கு ஒவ்வொரு படியாக வந்து கொண்டிருந்த நம்மாழ்வாருக்கு அன்று இறைவன் பரமபதத்தை அருளுகின்றான்.

“கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்” 

நம்மாழ்வார் ஆழ்ந்து அநுபவித்துத் தம் திருவாய்மொழியில், “கேசவன்” என்னும் பெயரைச் சொன்னாலே போதும்;  துன்பங்கள் அனைத்தும் கெட்டு ஓடிவிடும்;  நமக்கு இந்த ஞானம் பிறக்கும் முன்னர் நாம் செய்த பாவங்களும், பிறந்த பின்னர் மறந்து போய்ச் செய்யும் அனைத்துப் பாவங்களும்,  அனைத்தும் அழிந்து போகும்.  நாள்தோறும் எவருடைய உயிரையேனும் எடுக்க வேண்டி கொடிய செயலைச் செய்து கொண்டிருக்கும் யமனும் நெருங்க மாட்டான்.” என்கிறார்.  இதைத் தான் ஆண்டாள்,”தீயினில் தூசாகும்!” என்றாள்.

தினம் போலவே இன்றும் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளுவார்.   இராஜ நடை, சிம்ம நடை போன்ற நடைகளில் நடந்து ஆஸ்தானம் எனப்படும் மணிமண்டபத்துக்கு வந்து சேருவார்.  சாற்றுமுறை துவங்குகிறது. 

“தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே”  

என்னும் பாசுரத்துடன் தொடங்கும் சாற்றுமுறை எட்டாம் திருவாய்மொழியுடன் நிறுத்தப்படுகிறது.  நம்மாழ்வாருக்கு மோட்சத்தை அளிக்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் பரமபத வாசல்கள் திறக்கப்படுகின்றன.  பட்டர்கள் மிக மிக அருமையாக ஒரு குழந்தையைக் கையாளுவதைப் போல திருக்கைத்தல சேவையின் மூலம் நம்மாழ்வாரை எம்பெருமான் திருவடியில் சரணாகதி செய்விக்கின்றனர்.  அப்போது அவர்கள்


சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
பூரணபொற்குடம் பூரித்தது 
உயர் விண்ணில் கீதங்கள் பாடினர் 
கின்னரர்கெருடர்கள் கணங்கள்
வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும்வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில்பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

என்ற பாசுரங்களைப் பாடுகின்றனர்.  பின்னர் பத்தாம் திருவாய்மொழி துவங்குகிறது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
தனியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே!”


என்றெல்லாம் பாடி நம்மாழ்வார் எம்பெருமானை என்னை எங்கேயும் அனுப்பிவிடாதே!  உன் பக்கமிருந்து உன் திருவடி சேவை தவிர வேறெதுவும் வேண்டாம் என வேண்டுகிறார்.   நம்மாழ்வார் எம்பெருமானின் திருவடி தொழுதல் என்னும் இந்நிகழ்வுக்காக பட்டர்கள் நம்மாழ்வாரைத் தங்கள் கரங்களில் தாங்கிய வண்ணம் எம்பெருமானை மூன்றுமுறை சுற்றி வந்து நம்மாழ்வாரைப் பெருமாளின் திருவடிகளில் தொழ வைக்கின்றனர்.  நம்மாழ்வாரை நம்பெருமாளின் திருவடிகளில் சேர்ப்பித்ததும், துளசியால் அபிஷேஹம் செய்து அவரை மூடுகின்றனர்.  பின்னர் சாம்பிராணிப் புகை போடவும் சிறிது நேரம் அந்தப் புகையில் நம்மாழ்வாரும், நம்பெருமாளும் தனித்துப் பேசிப்பாங்க போல!



எம்பெருமானிடம் சரணாகதி செய்து வைணவப் பரிபாஷையில் திருநாட்டுக்கு எழுந்தருளிய நம்மாழ்வாரை, பட்டர்கள் இவ்வுலகத்து மாந்தர்கள் உய்ய வேண்டி திரும்பத் தரும்படி வேண்டுகின்றனர்.  நம்பெருமாளும் அதை ஏற்று,  “தாம், தோம், தீம், தந்தோம், தந்தோம், தந்தோம்!” எனத் திரும்பத் தருகின்றார்.  நம்மாழ்வாரின் மேலுள்ள துளசிதளங்கள் அகற்றப்பட்டு நம்மாழ்வார் திரும்ப  ஆஸ்தானம் எழுந்தருளுகிறார்.  பின்னர் அனைவருக்கும் தீபாராதனை காட்டிய பின்னர் நம்மாழ்வார் மோட்சம் நிறைவு பெறுகிறது.

இந்த மோட்சத்தன்று நேரில் பார்க்கும் பக்தர்களில் கண்ணீர் விடாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

Sunday, March 24, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! இராப்பத்து எட்டாம் நாள்


அவ்வளவு நேரமாகத் தான் தன் குதிரையில் இந்த மணமகனைத் துரத்தியதும், நகைகளைக் கழட்டச் சொன்னதும், அவன் பயந்து ஓடியதும் நினைவில் வர மீண்டும் நிமிர்ந்து அந்த மணமகனைப் பார்த்தான் பரகாலன் என்னும் நீலன்.  அப்போது, “நீ கலியன்!” எனச் சொல்லிச் சிரித்தான் அந்த மணமகன்.  என்ன? என ஓங்கி அதட்டிவிட்டு மீண்டும் அந்த மெட்டியைக் கழற்ற முயன்ற காதுகளில்  மீண்டும் ஒலித்தது “ஓம் நமோ நாராயணாய!”  நிமிர்ந்து நோக்கினான் கலியன் என அழைக்கப்பட்ட நீலன்.  அங்கே அவன் கண்டது என்ன?



சங்கு சக்ரதாரியாக, மார்பில் வைஜயந்தி மாலையும், ஸ்ரீவத்ஸமும் துலங்க, ஸ்ரீயானவள் மார்பில் துலங்க அபய ஹஸ்தம் காட்டிக் கொண்டு, வாயில் குமிண் சிரிப்புடனும், கமல நயனங்களுடனும், பரிமள கந்த கஸ்தூரித் திலகத்துடனும், காட்சி கொடுப்பது யார்?  தான் காண்பது கனவா? தன்னைத் தானே உலுக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான் கலியன்.  அங்கே அவன் கண்டது கனவில்லை;  நனவே தான்.  சாக்ஷாத் பரந்தாமனைப் பார்த்தான் அங்கே.  அப்போது தான் தனக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரத்தின் முழுப்பொருளும் புரியவர, தன்னையும் அறியாமல் எம்பெருமானைத் துதிக்க ஆரம்பித்தான் கலியன் என அழைக்கப்பட்ட நீலன் என்னும் பரகாலன்.




வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்பெருந்துயரிடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்”


என்று ஆரம்பித்து பாசுரங்கள் பாட ஆரம்பித்தவர் பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்ய நூல்களை அருளிச் செய்து திருமங்கையாழ்வார் என்னும் பெயரைப் பெற்றார்.  இவர் பெயரில் ஸ்ரீரங்கம் கோயிலில் திருப்பணி செய்த குறிப்புகளும் கிடைக்கின்றன.  இவர் வேண்டிக் கொண்டதால் ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி அன்றும் முன்னர் ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வார் புறப்பட்டு வந்து பரமபத சேவையையும் மோட்சத்தையும் பெற்று வந்தார் என அறிகிறோம்.  தற்சமயம் ஸ்ரீரங்கம் கோயிலிலேயே நம்மாழ்வார் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதால் இங்கேயே நம்மாழ்வார் எழுந்தருளி இருக்கிறார்.  அடுத்து நாம் பார்க்கப் போவது நம்மாழ்வார் மோட்சம் தான்.


Wednesday, March 20, 2013

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், இராப்பத்து உற்சவம்!



பல  மாதங்கள் கழித்து இந்தப் பக்கத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இராப்பத்து உற்சவம் தொடங்குவதில் நிறுத்தி இருந்தேன்.  அதன் பின்னர் அடுத்தடுத்து விருந்தினர் வருகை, உடல் நலக்கேடு எனக் கணினி கிட்டே அவசியத்துக்கு மட்டும் வரும்படி ஆகி விட்டது.  ஆகவே இந்தப் பதிவை இப்போது தான் எழுதவே ஆரம்பிக்கிறேன்.  எழுதிவிட்டு உடனே போட எண்ணம்.  இராப்பத்தின் ஒவ்வொரு நாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆஸ்தானமிருந்துவிட்டு மூலஸ்தானம் திரும்பும் பெருமாள் வீணாகானத்தை ஏகாந்த சேவையில் கேட்ட வண்ணம் திரும்புவார்.  இராப்பத்தின் ஏழாம் நாள் தான் பிரபலமான திருக்கைத்தல சேவை.  அன்று பட்டாசாரியார்கள் தங்கள் கரங்களிலேயே பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு நம்மாழ்வாருக்கு எதிரே சேவை சாதிப்பார்கள்.  நம்மாழ்வார் நாச்சியார் திருக்கோலத்தில் அன்று காணப்படுவார்.  இவரைத் தான் பராங்குச நாயகி என்பார்கள்.  அவர் பாடிய பிரபந்தப் பாடல் ஒன்று கீழே காணலாம்.

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே?

இவர் தம்மை நாயகியாகவும், பெருமாளை நாயகனாகவும்  பாவித்துக் கொண்டு பாடியவை இவை.  இறைவனை மனக்கண்ணில் கண்ணாரக் கண்டு அவனோடு தாம் பெற்ற இன்பத்தை அப்படியே சொல்லுகிறார்.  நெஞ்சம் திருமாலைத் தவிர வேறொருவரை நினைக்கக் கூடாது;  நாவும் அவன் திருநாமத்தை வாழ்த்திப் பாட வேண்டும்.  இவ்வுலகைப் படைத்துக் காத்து ரக்ஷிக்கும் திருமாலை வாழ்த்திப் பாடுவது அல்லாமல் இப்பிறவி எடுத்ததன் பயன் என்ன என்று கேட்கிறார் நம்மாழ்வார்.   இந்த இராப்பத்துத் திருநாட்களில் நம்மாழ்வாருக்கே முக்கியத்துவம்.  இவ்விதம் ஸ்ரீரங்கநாதனிடம் வேண்டிப் பெற்றவர் பரகால நாயகி என அழைக்கப்பட்ட திருமங்கை ஆழ்வார்.  நம்மாழ்வார் பராங்குச நாயகியாகத் தம்முள்ளே தனது ஆழ்ந்த பக்தியில் கொண்ட விரகதாபத்தினால் பராங்குச நாயகியானார் எனில் பரகால நாயகியான திருமங்கை ஆழ்வாரோ பெருமாளையே கொள்ளை அடித்தவர்.  இந்த இராப்பத்துத் திருநாளின் ஏழாம் நாள் திருக்கைத்தல சேவைக்குப் பின்னர் எட்டாம் நாளன்று தான் இந்தத் திருநாட்கள் ஏற்படவே காரணகர்த்தாவான திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி உற்சவம் நடைபெறும். 

பெருமாளுக்குச் சேவை செய்வதற்காகப் பணம் இல்லை என வழிப்பறிக் கொள்ளை செய்தவர் திருமங்கை ஆழ்வார்.  இவர் பெருமாளிடம் கொண்ட பக்தி எப்படிப் பட்டது தெரியுமா?

“வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
  வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
  எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
  புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”

வில்லால் இலங்கையையே ஒரு கை பார்த்த ஸ்ரீராமனின் பின்னே சென்றுவிட்டதாம் அவர் மனம்.  யார் என்ன சொன்னாலும் ஏன் அந்தப் பெருமானே பொய் சொல்லி இருந்தாலும் அதைக் கேட்டுக் கொண்டு நம்பி அவரையே வணங்கி வழிபட்டு இருப்பேன்.” அப்படினு சொல்கிறார்.  இவர் தான் ஒரு சமயம் வழிப்பறியின் போது ஒரு திருமண கோஷ்டி வருவதாய்க் கேள்விப் பட்டுப் போய்க் காத்திருந்தார்.  வந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.  சாக்ஷாத் ஸ்ரீமந்நாராயணனும், ஸ்ரீதேவியுமே மணமகனும், மணமகளுமாய் வந்தனர்.  தேவாதி தேவர்கள் உறவினர் கோலத்தில் கூட வந்தனர்.  பார்த்தார் கலியன்.  (கலியன் யாருனு கேட்கிறவங்களுக்கு, திருமங்கை ஆழ்வாரின் பெயர் கலியன் ஆகும்.) ஆஹா, நல்லதொரு வேட்டை தான் இன்னிக்கு. அப்படினு நினைச்சார்.  திருமண கோஷ்டி எதிர்பாராவண்ணம் அவர்களைத் தாக்கினார்.  ஆஹா, ஆனால் இந்த கோஷ்டியோ இதுக்குத் தானே காத்திருந்தது!  அவர்கள் தப்பி ஓடுவது போல் ஓட, கலியன் துரத்த, அங்கே ஒரு நாடகமே நடத்தப் பட்டது. கலியனுக்கு அது புரியவில்லை. காரியத்திலேயே கண்ணாக இருந்தார்.  உறவினர்கள், கல்யாண கோஷ்டியினர் அனைவர் பொருட்களும் கவரப் பட்டன.  இனி மிச்சம் இருப்பது, பெண்ணும், மாப்பிள்ளையும் தான்.  அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம்னு சுற்றி உள்ளவர்கள் கேட்கக் கேட்க கலியன் விடவில்லை. பெண்ணை நகைகளை எல்லாம் கழட்டித் தரச் சொல்ல ஸ்ரீதேவியும் அவ்வாறே செய்தாள்.  அடுத்து மணமகன்.  மணமகனின் அனைத்து ஆபரணங்களும் கழட்டப்பட்டன.  மணமகன் பயந்த வண்ணம் ஓடுவது போல் பாவனை செய்ய, கலியனோ விடவில்லை.  இரு கைகளாலும் மணமகன் கைகளைப் பற்றி எல்லா நகைகளையும் கொடுத்தாச்சா என சோதனை செய்தார்.

ஆஹா, காலில் மெட்டி காணப்படுகிறதே.  ஆம், அந்த நாட்களில் பெண்ணிக்குத் திருமங்கலநாண் பூட்டப் படுவது போல் ஆணுக்குக் காலில் மெட்டி அணிவிக்கப் படும்.  இது இந்த ஆண்மகன் திருமணம் ஆனவன் என்பதற்கான அடையாளம்.  அந்த மெட்டியையும் விடாமல் கலியன் கழட்டச் சொல்ல, பெருமாள் கழட்டுவது போல் நடிக்கிறார்.  அது வரவே இல்லை.  எப்படி வரும்! வரவிடாமல் தடுப்பது அவன் தானே.  கலியனுக்குக் கோபம் முற்றுகிறது.  மணமகனைப் பயமுறுத்துகிறான்.  பயந்தது போல் நடித்த மணமகன் கலியனையே கழட்டி எடுக்கச் சொல்கிறான்.  குனிந்து மணமகன் கால்களைப் பற்றுகிறான் கலியன்.  ஆஹா, என்ன பாக்கியம், என்ன பாக்கியம்.  ஆனாலும் புரியாமல் மெட்டியைக் கழட்டுவதிலேயே ஈடுபடுகிறான்.  அதுவா வராமல் சண்டித்தனம் செய்யத் தன் வாயை பகவானின் திருப்பாதங்களில் வைத்துப் பற்களால் கழட்ட முயல, கலியன் காதுகளில் மெல்லக் கேட்டது ஒரு உபதேசம்.

“ஓம் நமோ நாராயணாய!”