எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, July 04, 2022

சம்புவரையர்களின் ஆட்சியின் நிலைமை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இளைஞர்கள் மூவரும் பேசியதைக் கண்டு மகிழ்வடைந்த சிங்கழகர் பதினெட்டு ஆண்டுகளாகத் தாம் இத்தகைய தைரியம், வீரம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்டதே இல்லை எனவும். காரியம் நடக்கிறதோ இல்லையோ இளைஞர்களின் தைரியமான பேச்சினால் மனம் நிறைவடைந்தது என்றும் கூறினார். அதன் பேரில் வல்லபனும் தத்தனும் அன்றிரவு அங்கேயே உறங்கிவிட்டுப் பின்னர் காலையில் தாங்கள் தங்கி இருந்த சத்திரத்துக்குத் திரும்பிச் சென்றனர். சத்திரத்தை விட்டு வெளியே வராமல் யார் கண்களிலும் படாமல் மதியம் வரை இருந்துவிட்டு மதியத்திற்கு மேல் மறுபடி சிங்கழகரின் குடிலுக்குச் சென்றனர். அப்போது இரு ராஜசேவகர்கள் மிகவும் கோபமாக சிங்கழகரிடம் பேசிக் கொண்டிருந்தனர். 

இளைஞர்கள் கொஞ்சம் கவலையுடன் ராஜசேவகர்கள் எதிரில் போய் நிற்காமல் ஒதுங்கியே நின்றனர். சற்று நேரத்தில் சேவகர்கள் சென்றதும் இருவரும் உள்ளே சென்று சிங்கழகரைப் பார்க்க அவர் அவர்கள் இருவரையுமே தாம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அப்போது வல்லபனும், தத்தனும் அவருக்கெதிரே அமர்ந்த வண்ணம் வந்த ராஜசேவகர்கள் யார் எனவும் எதற்காக வந்தார்கள் என்பதையும் கேட்டார்கள். சிங்கழகர் அதற்கு அந்தச் சேவகர்கள் சம்புவரையரின் வீரர்கள் எனவும் வரி(இறை) வாங்க வந்திருந்ததாகவும் சொன்னார். ஊரிலே எதை எடுத்தாலும் எதற்கென்றாலும் இறை விதித்துக் கடுமையாக வசூலிப்பதாகச் சொன்னார். ராஜரிகம் இப்போதைய நாட்களில் முன்னைப் போல் இல்லை எனவும் மோசமாக இருப்பதாகவும் சொன்னார். தாங்கள் அது குறித்து எதுவும் அறிய மாட்டோம் என்றனர் இளைஞர்கள்.

அப்போது சிங்கழகர் கூறலுற்றார்: இந்தச் சம்புவரையரின் ராஜ்யம் புதிதெல்லாம் இல்லை. காலம் காலமாய் இருந்து வருவது தான். தர்மத்தின் பால் நின்று நிலைத்திருந்தது. ஆனால் இப்போதோ? ராஜ்யத்திலே அநீதிகள் பெரிதாக ஆரம்பித்துவிட்டன. அரசரோ இதை எல்லாம் தெரிந்து கொண்டும் தெரியாதது போல் இருக்கிறார். அரசரின் புத்தி இப்படியும் மாறுமா என நினைத்துக் குடிமக்கள் அதிசயமும் ஆத்திரமும் கொண்டு இருக்கின்றனர்.  அரசர் ஏனோ இப்படி இருக்கிறார்." என்றார் சிங்கழகர். அதற்கு வல்லபன் இந்தச் சம்புவரையரின் நாடும் சுல்தானுக்குக் கீழே தானே வருகிறது என்று கேட்டான். ஆமாம் என ஆமோதித்த சிங்கழகர் சுல்தானுக்குச் சம்புவரையர் கப்பம் கட்டி வருவதாகவும் இல்லை எனில் இந்த ராஜ்யத்தையே அவர் இழந்திருக்க வேண்டியது தான் எனவும் கூறினார். சோழ, பாண்டியர்கள் அப்படி அடங்கி நடக்கவில்லை என்பதால் அவர்களுக்கு ஏற்பட்ட கதி இவருக்கும் ஏற்பட்டிருக்கும் எனவும் சிங்கழகர் கூறினார். 

மேலும் தொடர்ந்து கூறினார் சிங்கழகர். "சம்புவரையர்கள் தந்திரசாலிகள். சுல்தான்கள் உள்ளே நுழைந்ததுமே அவர்களுக்கு அடி பணிந்து விட்டார்கள்.சிற்றரசர்களாகவே இருந்து கப்பம் கட்டி வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டார்கள். ஆகவே அவர்கள் ராஜ்யம்பிழைத்ததோடு அல்லாமல் ஆட்சியும் பிழைத்துவிட்டது. "என்றார். அப்போது தத்தன் குறுக்கிட்டுச் சம்புவரையர்கள் வேதாந்த சமயங்களைச் சார்ந்தவர்கள் ஆதலால் தங்கள் சமயத்துக்கு மாற்றாக இருக்கும் சுல்தான்களை ஏன் எதிர்த்துப் போரிட்டு நாடுகளைக் காப்பாற்றவில்லை. இப்போது அடிமைகளாக இருப்பவர்களை ஏன் மீட்கவில்லை!" என்றெல்லாம் கேட்டான். 

சிங்கழகர் அதற்கு இந்தச் சுல்தான்களை எதிர்க்கும் அளவுக்கு வீரம் செறிந்தவர்கள் அல்ல இந்தச் சம்புவரையர்கள் என்றதோடு போதிய படை பலமும் இல்லை. ஏதோ இருக்கும் வீரர்களை வைத்துக் கொண்டு ஒப்பேற்றி வருகிறார்கள். சுல்தானியருக்குப் பயந்து பயந்து தான் இவர்கள் ஆட்சி நடக்கிறது. " என்றார். தத்தன் தனக்கு அது தெரியாது எனவும் காஞ்சிக்குள் நுழைந்ததில் இருந்து மக்கள் நிச்சிந்தையாகப் போய் வருவதையும் கோயில்களுக்குத் திருமஞ்சனக்குடங்கள் போய் வருவதையும் பார்த்துவிட்டு இங்கே சுதந்திர ஆட்சி எனத் தான் நினைத்ததாகச் சொன்னான். பூரண சுதந்திரத்துடன் சம்புவரையர்கள் ஆட்சி நடத்துகிறார்கள் எனத் தான் நினைத்ததாகவும் வல்லபனும் அதுவே நினைத்ததாகவும் சொன்னான். 

ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட சிங்கழகர் இவை எல்லாம் வெளிப்பூச்சுக்களே! சும்மாவானும் பார்ப்பதற்கு அப்படித் தோன்றும்படி நடந்து கொள்வதாகவும் சுல்தானியர்கள் நினைத்தால் இங்கே ஆட்சியாளர்களிடம் வந்து பணம் கேட்டுத் தொந்திரவு செய்வதாகவும் அதனால் தான் இவர்களும் அதிகமாக இறை வசூலித்து மக்களைத் துன்புறுத்துவதாகவும் சொன்னார்.  மக்கள் மனம் நைந்து போய்விட்டார்கள். கோயிலில் வழிபாடுகள் என்பதெல்லாம் வெளிப்பூச்சு. காலை ஒரு நாழிகையும் மாலை ஒரு நாழிகையும் மட்டுமே பூஜைகள் நடைபெறுகின்றன. மற்ற நேரங்களில் கோயில்கள் அடைக்கப்பட்டுவிடும். பூஜைகள் நடப்பது கூட சுல்தானியர்கள் இருந்தால் நடப்பதில்லை. அவர்களுக்குத் தெரியாமல் நடந்து வருகிறது. தெரிந்தால் விபரீதங்கள் ஏற்படும்.இவர்களால் என்றைக்கும் மதுரை சுல்தான்களை எதிர்த்து நடந்து கொள்வது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. என்ன ஒரே ஒரு நன்மை என்றால் என்னைப் போன்ற திக்கற்றவர்களுக்கு இது "அஞ்சினான் புகலிடம்" ஆக இருந்து வருகிறது." என்று கூறி நிறுத்தினார் சிங்கழகர்.

No comments: