எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, April 24, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம் தொடர்கிறது!

முன் கதை
ஆர்யபடாள் வாசல் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

 யானைகளின் ஆவேசத்திற்கு இலக்கானது வாயிற்கதவுகள். அரங்க வாசிகளில் டெல்லியிலிருந்து வந்திருக்கும் இத்தனை வீரர்களையும் எதிர்க்கும் அளவுக்குக் கட்டுக்கோப்பான படையோ, படை வீரர்களோ, படைத் தலைமையோ இல்லை. கதவு பிளந்து உள்நோக்கிச் சாய, அனைவரும் ரங்கா, ரங்கா, எனக் கூக்குரல் இட்டனர். ஆர்ய படாள் வடக்கு வாயில் கதவுகள் பிளக்கப்பட்டன. டெல்லி சுல்தான் படைகள் வெற்றி முழக்கம் இட்டனர். கோபுர நிலையில் இருந்தவர் வீரரே ஆனாலும் முறையான பயிற்சி இல்லாதவர். அவரும் அவருடன் மேலும் இரு வீரர்களும் தீரத்துடன் போராடினார்கள்.  வைக்கோலில் தீமுட்டிக் கதவின் மேல் போட்டு சுல்தான் படைகளுக்கும் தங்களுக்கும் இடையில் தீயினால் ஆன சுவர் ஒன்றை எழுப்பினார்கள்.

ஆர்யபடாள் வாயில் கதவு விழுந்தாலும் உள்ளே இருந்த கல்சுவர் நின்று கொண்டு இருந்தது. கோபுர வாயிலில் தீ வானுயரக் கொழுந்து விட்டு எரிய அந்தக் கல்சுவர் மேலே இருந்த பரண் ஒன்றின் மீது ஏறி மறாஇந்த வண்ணம் தாக்குதலைத் தொடர்ந்தனர் அரங்கத்து வீரர்கள். தீயின் வெம்மையினால் கோபுரமும், அதில் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களும் கருமை அடைந்தன. வெம்மை தாங்க முடியாமல் சுல்தானின் படைகளும் கொஞ்சம் தாமதமாய் அங்கே நெருங்க நேர்ந்தது. தாமதம் கண்டு கோபம் வந்த உல்லூக்கான் தானே நேரில் அங்கே வந்தான்.  பல்லக்கில் வந்த உல்லூக்கான் அகளங்க வீதியில் இறங்கிக் கொண்டான். அவனுடன் வந்திருந்த மெய்க்காவல் படையினர் சூழ்ந்து கொள்ள போர் புரிந்து கொண்டிருந்த உப தளபதிகள் என்னவோ, ஏதோ என பயந்து கொண்டு ஓடோடி வந்தனர்.

அவர்களைப் பார்த்து உல்லூக்கான் கோபத்துடன் பிதாரையும் வாரங்கல்லையும் ப்டித்து வந்த வீராதி வீரர்களான உங்களுக்கு இந்த அற்பக் கோயிலைப் பிடிக்க முடியவில்லையா, வெட்கம், வெட்கம்! என்று கத்தினான். உப தளபதிகள் அதற்குப் போர்முறையில் மட்டும் மாறுதல் இல்லாமல் கோட்டை அமைப்பு முறையும் மாறி இருப்பதாயும் குறுகலான இடத்தில் போர் புரிய வேண்டி இருப்பதால் சிரமம் ஏற்படுவதாகவும் சொல்ல உல்லூக்கான் கோபம் அதிகம் ஆகிறது. உல்லூக்கான் அடைந்த கோபத்தால் அந்தப் பிரதேசமே நடுங்கியது.  பின்னர் உல்லூக்கான் டெல்லியின் சுல்தானிடமிருந்து தனக்குக் கடிதம் வந்திருப்பதாயும் கிளம்பி ஒரு வருஷம் ஆகியும் இன்னமுமா மாபாரைப் பிடிக்க முடியவில்லை உன்னால் என்று கேட்பதாகவும், தனக்கு அவமானமாக இருப்பதாகவும் சொல்கிறான். நடுப்பகலுக்குள் இந்த ஊரைப் பிடித்தாக வேண்டும் என்று திட்டவட்டமாகக் கட்டளை இட்டான்.

கோயில் வாசலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் கூடை கூடையாக மணலைப் போட்டு அணைத்துவிட்டு சுல்தானின் வீரர்கள் அனைவரும் உள்ளே புகுந்து விட்டனர். கல்சுவரை உக்கிரத்துடன் தாக்க அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டது.  லேசாகத் தெரிய ஆரம்பித்த இடைவெளியில்  பத்து வீரர்கள் யார் சொல்வதையும் மதிக்காமல் உள்ளே புகுந்தனர். உள்ளே புகுந்தவர்கள் அங்கே பரணில் ஒளிந்து கொண்டிருந்த வீரர்களைத் தாக்கிக் கொன்றனர். கோபுரத்தின் இடிபாடுகளுக்கும் இடிந்து விழ ஆரம்பித்திருந்த சுவரின் இடிபாடுகளுக்கும் இடையில் அவ்வீரர்களின் உயிரற்ற உடல்கள்  கிடந்தன. அதில் ஒருவர் இறக்கும்போதும், ரங்கா, ரங்கா, ரங்கா, உன்னைக் காப்பாற்ற வேண்டும். அரங்கனைக் காப்பாற்றுங்கள்! எனப் புலம்பிக் கொண்டே உயிரை விட்டார்.

Monday, April 06, 2015

(அழகிய மணவாளப் பெருமாள், அழகிய மணவாளம் ஊருக்கு வந்த கதை! ) ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!












உல்லுக்கான் படையெடுப்பின் போது ஶ்ரீரங்கத்தில் இருந்த மூலவரை கல் சுவர் ஒன்றைக் கட்டி மறைத்துவிட்டு உற்சவர் அழகிய மணவாளப் பெருமாளை உபய நாச்சியார்கள் சகிதம் ஊரை விட்டு வெளியே தென்னாட்டை நோக்கி எடுத்துச் சென்றனர். பிள்ளை லோகாரியருடன் கிளம்பிய அழகிய மணவாளர் அங்கிருந்து மதுரை ஆனைமலை யோகநரசிம்மர் கோயிலுக்கு அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடி குகையில் சில காலம் தங்கினார். பின்னர் திருமாலிருஞ்சோலையில் கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டார். அதன் பின்னர்  பழனி, பாலக்காடு, கோழிக்கோடு என்னும் திருக்கண்ணனூரில் நம்மாழ்வாரோடு சில காலம் தங்கி விட்டு அங்கிருந்தும் கிளம்பி  முந்திரிக்காடு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலைக்காடுகள் வழியாக திருமலை  திருக்கோயிலைச் சென்றடைந்தார். திருமலையிலேயே பல்லாண்டுகள் தங்கி இருந்து தம் அடியார்களில் ஒருவரால் விடாமல் வழிபாடுகள் கண்டருளிய அழகிய மணவாளரை செஞ்சியை ஆண்ட கோபண்ண ஆரியன் என்பான் செஞ்சிக்கு எடுத்துச் சென்றான்.

அப்போது விஜயநகர மன்னனான  வீர கம்பண்ண உடையாருக்குச் செய்தி தெரிய வந்து மீண்டும் அரங்கனை  திருவரங்கத்திலேயே கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு மறுபடியும் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தான் அழகிய மணவாளன். அந்த ஶ்ரீராமன் பூஜித்த விக்ரஹம் என்பதாலோ என்னவோ அவன் காடு, மேடெல்லாம் சுற்றி அலைந்தாற்போல் இக்ஷ்வாகு குலதனமான இந்த அரங்கனும் காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்தான்.  அரங்கம் வரும் வழியில் அப்போது கண்ணனூர் என அழைக்கப்ப்ட்ட சமயபுரத்தில் கடும்போர் நிகழ்ந்தது.  அப்போது அழகிய மணவாளப் பெருமாள் கோபுரப்பட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமத்தில் அங்கிருந்த ஆதிநாயகப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி இருந்தார். அதன் பின்னர் முகமதியர்களை வென்ற பின்னர் பரிதாபி வருடம் வைகாசி மாதம் 17 ஆம் நாள் ( கி.பி.1371 ஆம் வருடம்) அழகிய மணவாளம் கிராமத்திலிருந்து கிளம்பி உபய நாச்சியார்களுடன், ஶ்ரீரங்கம் திருக்கோயிலில் மூன்றாம் திருச்சுற்றில் பவித்ரோத்ஸவ மண்டபம் என்னும் சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணினார்கள்.

அழகிய மணவாளர் ஶ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பியதும் ஶ்ரீரங்கம் கோயிலில் வழிபாடுகள் நின்றுபோய்க் கருவறை திறக்கப்படாமல் சுமார் 60 ஆண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது.  ஆனால் கோயிலொழுகின்படி இது சுமார் 48 ஆண்டுகள் எனத் தெரிய வருகிறது.  இடைப்பட்ட காலத்தில் வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டதோடு அல்லாமல், புதிதாக ஒரு அரங்கனையும் செய்வித்து அவரையும் எழுந்தருளப் பண்ணி இருந்தார்கள்.  ஏற்கெனவே இருந்த அழகிய மணவாளர் ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்ததும், ஒரு சில ஶ்ரீரங்கவாசிகளால் புதிய அரங்கனை விட்டு விட்டு இந்தப் பழைய அரங்கனை ஏற்கும் மனம் வரவில்லை.  அவர்கள் எங்களுக்கு இந்தப் புதிய ரங்கன் பழகி விட்டார்.  இவரே இருக்கட்டும் என்றனர்.  ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டுப் பல உயிர்த்தியாகங்கள் செய்து கொண்டு வரப்பட்ட அரங்கனைத் திருக்கோயிலில் சேர்க்கும் எண்ணமே முதியவர்கள் பலருக்கும் இருந்தது.

ஆகவே அவர்கள் எல்லோரும் சேர்ந்து இவர் தான் பழைய அரங்கர் என்பதை வயது முதிர்ந்தவர்களாலேயே, அதுவும் இவர் எடுத்துச் செல்லப்பட்ட சமயம் இவரை அருகில் இருந்து நெருங்கிப் பார்த்தவர்களாலேயே கண்டுபிடிக்க முடியும் என முடிவு கட்டி அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள், பழைய அரங்கனைப் பார்த்தவர்கள் முன் வந்து இரண்டு அரங்கனின் யார் கோயிலில் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஶ்ரீராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதுக்கு ஒப்பாக இதை ஶ்ரீரங்க வாசிகள் பேசுகின்றனர்.

இந்தச் செய்தியை நகரெங்கும் முரசறைந்து தெரிவித்தும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் அகப்படவில்லை. கடைசியில் 90 வயது நிரம்பிய ஒரு வண்ணார் அகப்பட்டார். அவருக்கும் கண் பார்வை இல்லாமையால் அரங்கனைப் பார்க்க முடியவில்லை.  அனைவரும் திகைக்கையில் அந்த வண்ணாரே ஒரு முடிவைச் சொன்னார்.  அது தான் இரண்டு அரங்கர்களுக்கும் திருமஞ்சனம் செய்வித்து அந்த ஈர வஸ்திரத்தை அந்த வண்ணாரிடம் கொடுத்தால் அதைப் பிழிந்து கிடைக்கும் அபிஷேக நீரை உட்கொண்டால் பழைய அரங்கனின் பரிமள கஸ்தூரி வாசனையை வைத்துத் தான் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்கிறார். அப்படியே செய்யப்பட்டது. வண்ணாரும் அழகிய மணவாளத்திலிருந்து வந்த பழைய அழகிய மணவாளரையே நம்பெருமாள் என அடையாளம் காட்டுகிறார். அப்போது தொடங்கி இன்று வரை அழகிய மணவாளர் "நம்பெருமாள்" என்னும் பெயராலேயே அழைக்கப்படுகிறார்.

புதிதாகச் செய்த விக்ரஹத்தையும் ஒதுக்காமல் கருவறையிலேயே "யாக பேரர்" என்னும் பெயரில் பிரதிஷ்டை செய்தார்கள். இப்போதும் யாகங்களில் அவரையே எழுந்தருளச் செய்கின்றனர். அழகிய மணவாள கிராமத்து ஶ்ரீவைணவர்கள் பலரும் அரங்கனுக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். ஆகவே கோபுரப்பட்டி என்னும் இந்தக் கிராமம் அழகிய மணவாளம் என்னும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

தகவல் உதவி: இந்து அறநிலையத் துறை, ஶ்ரீரங்க பங்கஜம்
தொகுத்தது கீதா சாம்பசிவம்


ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

இம்முறை ஒரு மாறுதலுக்காக அரங்கன் ஊர் சுற்றிவிட்டுத் திரும்பி வந்த காலத்தில் தங்கிய ஊரைக் குறித்து நண்பர் திரு ஒரு அரிசோனன் என்பவர் எழுதியதும், அவர் எடுத்த படங்களும். இந்த ஊரைக் குறித்த மேல் அதிக விளக்கம் அடுத்த பதிவில் நான் எழுதி இருக்கிறேன்.  அதையும் சேர்த்து வெளியிடுகிறேன். படங்கள் இரண்டு பதிவுகளிலுமாக வருகின்றன. படங்கள் தெரியவில்லை எனில் சொல்லவும்.


















நான்  சில ஆண்டுகள் முன்பு திருவெள்ளறை சென்றிருந்தேன்.  அப்பொழுது சிறப்புக்கட்டணம் எதுவும் கேட்கவில்லை.  பட்டாச்சாரியார் தான் ஆண்டுமுழுவதும் மாதமாதம் அருச்சனை செய்கிறேன் என்று நன்கொடை கேட்டார்.  கொடுத்துவிட்டு வந்தேன்.  அதைச் சிறப்புக்கட்டணம் என்று சொல்லிவிட முடியாது.

திருச்சி துறையூர் அருகில் "அழகிய மணவாளம்" என்ற ஒரு சிற்றூர் உள்ளது.  அங்கு உயர்ந்து ஓங்கி எட்டடி உயர உருவமாக அழகிய மணவாளப் பெருமாள் (சுந்தரராஜன்)  திருமலைகள் நிலமகளுடன் நின்றகோலத்தில் தரிசனம் தருகிறார்.  கொள்ளை அழகு.  வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கட்டணம் எதுவே இல்லை.

கோவில் கருவறை பத்தடிக்குப் பத்தடி மட்டுமே உள்ளது.  அர்த்த மண்டபம் பத்தடிக்குப் பதினைந்தடி இருக்கலாம்.  கூட்டம் அதிகமானால் [?!] நிழல்தரும் கொட்டகை உண்டு.  என் மாமியாரின் பாட்டனார் என்பது தொண்ணூறு ஆண்டுகளுக்குமுன் எழுப்பிய கொட்டகை அது.  இன்னும் அவர் பெயர்கொண்ட கொடை அறிவிப்பு தொங்குகிறது.

கோவில் வாசலில் கைகள் உடைக்கப்பட்ட நரசிம்மர் சிலை ஒன்று இருக்கிறது.  அமைதியான் சூழ்நிலை.  அங்கிருந்து பார்த்தால் திருவரங்க ராஜகோபுரம், திருச்சி மலைக்கோட்டை தெரிகின்றன.  அருகில் ஒரு பழமையான பாழடைந்த, கருவரைமட்டு உள்ள செங்கல் கோவில் தென்படுகிறது.  அருகில் செல்ல இயலாதவாறு முட்புதர்கள் வளர்ந்து கிடக்கின்றன.

கோவில் எப்பொழுதுமே பூட்டித்தான் இருக்கும்.  கோவில் முன்பு இருக்கும் தெருவில் குடியிருக்கும் பட்டாச்சாரியாரின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினால், அவர் கோவிலைத் திறந்து தரிசனம் செய்விக்கிறார்.  வயதில் முதியவரான அவர் பாதுகாப்புக் கருதியே கோவிலைப் பூட்டி வைத்திருப்பதாகச் சொல்கிறார்.  அவர்க்கு என் மனைவியாரின் மூதாதையாரைத் தெரிந்திருக்கிறது.  என் மாமியாரின் பெயரையும் அறிந்துவைத்திருப்பது வியப்பையே அளித்தது.

மின்தமிழ் உடன்பிறப்புகள் விரும்பினால் நான் எடுத்த படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

நான்

சிரமத்தைப் பாராது சென்று அழகிய மணவாளரின் அருமையான கோலத்தை நின்று நிதானமாகக் தரிசிக்க வேண்டிய கோவில் அது.

ஒரு அரிசோனன்


படங்களும், எழுத்தும்: திரு அரிசோனன் அவர்கள்

படங்கள் அடுத்த பதிவிலும் தொடர்கின்றன.

Tuesday, February 10, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்

இவனின் காலத்தில் தான் ஶ்ரீரங்க விமானத்தின் உட்சுவர்களுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. கோயிலின் மடைப்பள்ளியும் சீரமைக்கப்பட்டு பிரசாதங்கள் செய்யவும், எடுத்து வைக்கவும் தங்கப் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.  சித்திரைத் திருவிழாவும் ஜடாவர்மன் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும், இவனால் ஒரு தங்கப் பல்லக்குப் பெருமாளுக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. சுந்தர பாண்டியனால் கோயில் விமானத்துக்கு மூன்று தங்கக் கலசங்கள் செய்து அளிக்கப்பட்டன.  இதைத் தவிரவும் அவனால் அளிக்கப்பட்ட பல பரிசுகளி, ரத்தின மாலை, கற்கள் பதிக்கப்பட்ட கிரீடங்கள், தங்கத்தினால் செய்யப்பட்ட ஆதிசேஷன், கருடன், நல் முத்துக்களால் ஆன மாலை, பல்வேறு விதமான ஆபரணங்கள், முத்து விதானம், தங்கத்தினால் செய்யப்பட்ட விதவிதமான பழங்கள், தங்க ரதம், சிம்மாதனம், ஆயுதங்கள், பாத்திரங்கள் தங்கத்தினால் ஆடைகள், தங்கக் கவசங்கள் போன்றவையும் வழங்கப்பட்டன.

இவை பாண்டியனுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் பெரு மதிப்பைப் பெற்றுத் தந்தது. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் இரு கவிதைகள் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் போர் வெற்றிகள் குறித்தும் அதன் மூலம் ஶ்ரீரங்கநாதருக்கு அவன் செய்த சேவைகள் குறித்தும் காணப்படுகின்றன. அவன் தான் அதிக அளவில் தங்கத்தைக் கோயிலுக்கு அளித்துக் கோயிலின் முக்கிய இடங்கள் தங்கத்தால் ஒளிரும்படி செய்தான் என்றும், அவன் காலத்திலேயே கோயில் தனிப் பெரும் புகழ் பெற்று விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இப்படித் திடீரென கணக்கில்லாச் சொத்துக்கள் வந்து சேர்ந்ததில் கோயிலின் நிர்வாகத்துக்கு மூச்சுத் திணறியது.

தங்கத்தினால் செய்த கோயில் விமானங்கள், கலசங்கள், சந்நிதிகள் ஆகியவற்றிற்குப் பாதுகாப்புப் போட வேண்டி இருந்தது.  கோயிலுக்கு என அளிக்கப்பட்ட ஆபரணங்களையும் கவனத்துடன் பாதுகாத்து ஒவ்வொரு திருவிழாக் காலங்களிலும் பெருமாளுக்கு அணிவித்துப் பாதுகாப்பாக எடுத்து வைக்கத் தனியாக ஒரு குழுவை நியமித்தனர்.  அதோடு இல்லாமல் மன்னன் நிர்வாகக் கமிட்டியை மாற்றியமைக்கும்படியும் கட்டளையிட்டிருந்தான்.  அது வரையிலும் கோயிலின் நிர்வாகம் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடமே இருந்து வந்தது.  இப்போது அது மற்றக் குழுவினரிடமும் பகிரும் வகையில் மாற்றியமைக்கச் சொல்லி மன்னனின் கட்டளை கிடைத்தது. இதன் மூலம் பொறுப்புகள் பகிரப் பட்டதோடு இல்லாமல் ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பதன் மூலம் பொருட்கள் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைத்தது. நிர்வாகக் கமிட்டியினரின் நடவடிக்கையும் அனைவராலும் கண்காணிக்கப்பட்டது.

ஆரியர்கள் எனப்படும் குழுவினர் மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களையும் கோயிலின் பொருட்கள் பாதுகாக்கப் படுவதில் ஈடுபடுத்த வேண்டும் என்பது மன்னன்கட்டளை.  மன்னனின் கட்டளையை அந்த சர்வேசனின் கட்டளையாகவே ஏற்கப்பட்டது.  எல்லாத் தரப்பு குழுவினரிடமிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலரைப் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்தனர். கோயிலின் நிர்வாகக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. கோவனாவர், ஶ்ரீரங்கம் அரையர், தலையிடுவார், ஆராட்டமுகி அணுக்கர், போன்றவர்களிலிருந்து இருவரும், துமரையர்கள், வாசல் ஆர்யர் ஆகியோரிலிருந்து ஒருவருமாக மொத்தம் பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை அரங்கனே அப்போது இருந்த அவனுடைய அழகிய மணவாளப் பெருமாள் என்னும் பெயரில் கட்டளை பிறப்பித்ததாகவும், அந்தக் கட்டளை பிறப்பிக்கும்போது அழகிய மணவாளப் பெருமாள் (இவரே இப்போது நம்பெருமாள் என அழைக்கப்படுபவர்) பூபாலராயன் சிம்மாதனத்தில் தன் புனிதமான பள்ளியறையில் தேவியருடன்  வீற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடவுளையே அரசனாக நினைத்து ஆணைகள் அவன் பெயராலேயே பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன எனத் தெரிய வருகிறது. இதை ஜீயர்களும், ஶ்ரீகார்யக் காரர்களும் கூட ஆமோதித்திருக்கின்றனர்.



தகவல் உதவி: திரு கலைக்கோவன் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.


Saturday, January 31, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திற்கு ஒரு பொற்காலம் எனில் அது பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யம் ஏற்பட்ட போது என்று சொல்லலாம். பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டதோடு கோயிலும் பலமுறை சீரமைக்கப்பட்டது. இங்கே காணப்படும் சுமார் 70 கல்வெட்டுக்களில் பல கி.பி. 1225க்கும் கி.பி. 1344க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கோயில் புனரமைப்பு வேலைகள் குறித்தும், பாண்டிய மன்னர்களால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட எண்ணற்ற விலை மதிக்க இயலாப் பரிசுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. சோழநாட்டு அரசனாக இருந்த மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் பாண்டியர்கள் சாம்ராஜ்யம் புத்துணர்வு பெற்று எழுந்தது. அப்போது தான் ஶ்ரீரங்கம் கோயிலிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் அடிக்கடி நடந்த மோதல்களினால் கோயில் வளாகத்துக்குள்  நடைபெற்ற மோசமான நடத்தைகளை விசாரிக்க வேண்டி ஒரு பெரிய கூட்டம் அப்போது தான் கோயிலின் வரலாற்றிலேயே முதல் முதலில் நடைபெற்றது. இவர்களில் ஜீயர்கள், ஶ்ரீகார்யக்காரர்கள், பாகவதர்கள், பல்வேறு விதமான தொண்டுகளைச் செய்து வரும் நம்பிமார்கள், வாயில் காப்போர்கள், பட்டாசாரியார்கள், ஶ்ரீரங்கம் கோயிலின் அலுவலகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள், பதினெட்டு மண்டலங்களைச் சேர்ந்த ஶ்ரீவைணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராஜமஹேந்திரன் தெருவின் மேற்குப் பகுதியில் கூடினார்கள். பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இறந்த காலத்தில் கோயிலுக்குப் பாதகம் செய்தவர்கள் நீக்கப்பட்டுப் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.  கோயிலின் நிர்வாகத்தைச் செம்மை செய்து முழு அர்ப்பணிப்பு உணர்வோடு தொண்டாற்றக் கூடியவர்கள் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் நிர்வாகச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மாறவர்மனுக்குப் பின்னர் வந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும்  திருக்கோயிலில் பொன்னால் திருப்பணி செய்ததால் "பொன்வேய்ந்த பெருமாள்" என அழைக்கப்பட்டான். இவன் காலத்தில் பொன்னாபரணங்கள் மட்டுமின்றி, பொற்கலசங்கள், விமானங்கள், மற்றும் விலைமதிக்க முடியாப் பல ரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்டது. பாண்டியனே துலாபாரம் மேற்கொண்டு தன்னுடைய எடைக்கு எடை பொன்னைக் கொடுத்ததாகவும் ஒரு கல்வெட்டு கூறுவதாகத் தெரிய வருகிறது.

பல்வேறு போர்களில் ஈடுபட்டு வென்று கிடைத்த பொருட்களை எல்லாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஶ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்ததாகக் கேள்விப் படுகிறோம். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலே தான் நரசிம்மருக்கும், விஷ்வக்சேனருக்கும் தனித்தனி சந்நிதிகள் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம். சந்நிதிகள், விமானங்கள்  தங்கத் தகடுகள் வேயப்பட்டு கோபுரம் தங்கமுலாம் பூசப்பட்டன. மஹாவிஷ்ணுவின் அர்ச்சாவதாரம் ஒன்றும் தங்கத்தில் வைக்கப்பட்டது.


தகவல் உதவி: திரு கலைக்கோவன் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.

Tuesday, January 13, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

சப்த லோகங்களையும் உள்ளடக்கியது என்னும் பொருளில் ஏழு பிரகாரங்கள் கொண்டுள்ள ஶ்ரீரங்கம் கோயிலில் மூன்று பிரகாரங்களின் இரு பக்கங்களிலும் குடியிருப்புகளும் நான்கு பிரகாரங்களில் பிரம்மாண்டமான மண்டபங்களும் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் மிகப் பெரியது ஆகும்.  பல்வேறு விதமான சேனைகளுடன் ஓர் ஊரே தங்குமளவுக்குப் பெரிதான ஆயிரங்கால் மண்டபத்தில் தற்சமயம் பாதுகாப்புக்காரணங்களுக்காக யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. ஏழு பிரகாரங்களைத் தவிர ஊரை உள்ளடக்கிய அடையவளைஞ்சான் திருச்சுற்றில் தான் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

மார்கழி மாதம் நடைபெறும் வகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வைபவம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்திலிருந்து நான்காம் பிரகாரம் செல்லும் வழியில் பெரிய சந்நிதிக்கு வடபுறம் உள்ளது.  இது கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்துக்கு அருகாமையில் உள்ளது. வருடாவருடம் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை திறக்கப்படும் பரமபத வாசல் அடுத்த ஒன்பது நாட்களும் இராப்பத்து உற்சவம் முடியும் வரை திறந்திருக்கும்.  இந்தப் பரமபத வாசல் வழியாகவே தினம் தினம் நம்பெருமாள் இராப்பத்து உற்சவம் முடியும் வரை சென்று வருவார்.  அவருடன் அடியார் திருக்கூட்டமும் செல்லும்.  இந்த வாசல் வழி சென்றால் வைகுந்த பிராப்தி நிச்சயம் என்னும் ஐதீகம் உள்ளதால் இது திறந்திருக்கும் ஒன்பது நாட்களும் பெருமளவில் பக்தர் கூட்டம் கோயிலுக்கு வருவார்கள்.

இந்த நான்காம் பிரகாரத்தின் கிழக்குப் பக்கம் மணல்வெளியாகக் காணப்படும்.  இங்கே தான் வைகுண்ட ஏகாதசியின் இராப்பத்து உற்சவத்தின் போது வேடுபறி நடக்கும். வையாளி சேவை இங்கே நடைபெறும் என்பதால் மணல் வெளியாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு கூற்று இருந்தாலும் பாதங்களுக்கு நல்ல பயிற்சி என்பதாலும் இங்கே மணலாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுவார்கள்.  இந்த மணல் வருடா வருடம் மாற்றப்படும்.  இந்த நான்காம் பிரகாரத்தில் காணப்படும் சந்திர புஷ்கரணிக்கரையில் கோதண்டராமர் சந்நிதியைக் காணலாம்.  ஶ்ரீரங்கத்தில் பிரகாரங்களில் மேலப் பட்டாபிராமர் சந்நிதி, கீழப் பட்டாபி ராமர் சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி ஆகியவை மிகவும் பிரபலம்.

கோதண்டராமர் சந்நிதியிலிருந்து சற்று உள்ளே பரமபதநாதர் சந்நிதியில் ஶ்ரீபரமபதநாதர் ஶ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேதராக அருள் பாலிக்கிறார்.  நித்யசூரிகள் புடைசூழ ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஒருசேரக் காட்சி அளிக்கக் காட்சி தரும் பரமபத நாதர் சந்நிதியில்  தான் கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியும் இருக்கிறது. இந்தப் பரமபத நாதர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் இங்கே குடிவரும் முன்னரே இருந்தவர் என்றும், சந்திர புஷ்கரணியும் அப்போது இருந்ததாகவும், இவற்றைப் பார்த்துவிட்டே விபீஷனண் ஶ்ரீரங்க விமானத்தோடு இங்கே இறங்கியதாகவும் சொல்கின்றனர்.  இப்போது நடைபெறும் திருவத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து, இராப்பத்து உற்சவம் ஆதிகாலங்களில் திருமங்கையாழ்வார் இருந்தபோது  இந்த சந்நிதியில் தான் நடத்தப் பட்டிருக்கிறது.  பின்னர் நாதமுனிகள் காலத்தில் 20 நாள் விழாவாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.





கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியில் மார்கழி அலங்காரம்;

படம் கூகிளார் வாயிலாக தினமலருக்கு நன்றி.

Sunday, January 11, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திலிருந்து உற்சவர் அழகிய மணவாளர் (இவர் தான் பின்னால் நம்பெருமாள் எனப் பெயர் மாற்றம் பெற்றவர்) ஊர் ஊராக அலைய ஆரம்பித்ததும், சில வருடங்கள் அவர் இருக்குமிடம் தெரியாமலேயே இருந்து வந்தது.  அப்போது உள்ளூர்க்காரர்கள் புதியதொரு விக்ரஹத்தைச் செய்து உற்சவர் இடத்தில் அமர்த்தினார்கள்.  பின்னால் திருமலையில் நம்பெருமாள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவரும் ஶ்ரீரங்கம் திரும்பி வந்ததும், அனைவருக்கும் இத்தனை நாட்களாக அவர் இடத்தில் இருந்தவரை என்ன செய்வது எனத் தோன்றியது!


இவரும் திருவரங்கத்தைச் சேர்ந்தவர் தானே என்னும் எண்ணம் தோன்றிய கோவில் ஊழியர்கள் அவரை நம்பெருமாள் அருகிலேயே வைத்தனர்.  திருவரங்க மாளிகையார் என்னும் புதுப் பெயரைச் சூட்டினார்கள்.  யாகசாலை நாட்களில் இவரே அங்கு எழுந்தருளுவார் எனவும் அப்போது ,"யாகபேரர்" என அழைக்கப்படுவார் என்றும் தெரிய வருகிறது.  ஆனால் இப்போது அவர் நம்பெருமாளுடன் கருவறையில் காணப்படவில்லை.  எங்கே இருக்கிறார் என விசாரிக்க வேண்டும்.  இங்கிருக்கும் சிலரை விசாரித்ததில் அவர்களில் பலருக்கு இந்த விஷயமே தெரியவில்லை.  தெரிந்தவர்களைக் கேட்டுச் சொல்கிறேன்.

இந்தக் கோயிலின் மொத்த சந்நிதிகள் 54 ஆகும்.  ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனியான நிவேதனங்களும் உண்டு.  இவை அனைத்தும் இங்குள்ள திருக்கொட்டாரம் எனப்படும் இடத்தில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு சந்நிதியையும் சேர்ந்த அர்ச்சகர் அல்லது மடைப்பள்ளி ஊழியர் அங்கு வந்து அன்றைய நிவேதனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். உபயதாரர்கள் அளிக்கும் காணிக்கைப் பொருட்களில் இருந்து அனைத்தும் இங்கேயே சேமிக்கப்படுகின்றன.

இந்த நிவேதனங்கள் பெரும்பாலும் பாலிலும், நெய்யிலுமே செய்யப்படுகின்றன.  விளக்குகள் கூடச் சுத்தமானப் பசு நெய்யிலேயே எரிக்கப்படுகின்றன. ஆதிசேஷனுக்கு மிகவும் பிடித்தது பால் தான் என்பதால் தினமும் இரவு நேரம் அரவணை வழிபாட்டின் போது ஆதிசேஷனுக்குப் பால் அமுது செய்விக்கப்படும்.  பெருமாளுக்கு அரவணை நிவேதனம் செய்யப்படும். இவற்றைப் பிரசாதமாக வழங்குவார்கள்.  இதைத் தவிர மாலையிலும் க்ஷீரான்ன வழிபாட்டின் போது பாலமுது தான் ஶ்ரீரங்கநாதருக்கு நிவேதனம் செய்யப்படும்.



படத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக தினகரன் தினசரியில் வந்தது. 


"ரங்கனே தெய்வம், பொங்கலே பிரசாதம், கம்பமே காவிரி" என்பது இங்குள்ள பிரபலமான சொல்வழக்கு.  ஶ்ரீரங்கம் கோயிலில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் எனப்படும் அரவணை, புளியோதரை, அப்பம், அதிரசம், தேன்குழல், திருமால்வடை, தோசை போன்றவற்றோடு தினம் காலை வழிபாட்டில் கோதுமை ரொட்டியும், வெண்ணெயும் நிவேதனம் செய்யப்படுகிறது.  தாயாருக்கு மாலை வேளைகளில் புட்டு அமுது செய்யப்படும்.  வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு நிவேதனமாக சம்பார தோசை, செல்வரப்பம்,ஆகியவையும் கடைசி நாளான நம்மாழ்வார் மோக்ஷத்தன்று "கேலிச் சீடை"யும் நிவேதனம் செய்யப்படும்.