எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, April 28, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணீந்தோம்!

உள்ளே நுழைந்தது ஒரு சேடிப்பெண். அவள் புன்னகையோடு வந்தவள் குல சேகரனை நேருக்கு நேர் பார்த்ததால் நாணம் அடைந்தாள். வெட்கத்துடன் தலை குனிந்த வண்ணம் ஒரு பேழையை எடுத்து அவனிடம் நீட்டினாள். அது என்ன எனக் கேட்ட குலசேகரனிடம் உள்ளே லேகியம் இருப்பதாகவும் அதை வேளா வேளைக்கு விழுங்குமாறூ கொடுத்தனுப்பியதாகவும் சொன்னாள். யார் கொடுத்தது எனக் கேட்ட குலசேகரனிடம் வித்வாம்சினி ஹேமலேகா தான் கொடுத்து அனுப்பியதாகவும் சொன்னாள்.  அந்தப் பெண்ணீற்குப் பதினைந்து வயதுக்குள் தான் இருக்கும். கூச்சம் நிரம்பியவளாக இருந்தாள்.  அவளீடம் தன் நன்றீயைத் தெரிவித்துக் கொண்ட குலசேகரனைப் பார்த்து அவள் உடம்பு எப்படி இருக்கிறது என வித்வாம்சினி விசாரித்து வரச் சொன்னதாகக் கூறீனாள்.

குலசேகரன் தான் இப்போது உடல் நலத்தோடு இருப்பதாய்ச் சொன்னான். அவளூக்கும் ஹேமலேகாவுக்கும் தன் நன்றீயையும் தெரிவித்துக் கொண்டான். அவள் திரும்பத் தயாரானபோது குலசேகரன் அவளாஇ மீண்டும் அழைத்துத் தான் ஹேமலேகாவுக்கு ஒரு செய்தி கொடுப்பதாகவும் அதை அவளீடம் தெரிவிக்க வேண்டும் என்றூம் கேட்டுக் கொண்டான். செய்தியைக் கேட்ட அவளீடம் அவன், "படிதும் மே தேஹி கஞ்சித் காவ்ய க்ரந்தம்" எனச் சொல்லும்படி கூறீனான். அவள் திகைப்புடன் மீண்டும் கேட்டாள். அதை அவள் தெலுங்கு என நினைத்தாள். ஆனால் குலசேகரன் அது தெலுங்கு இல்லை வடமொழி எனச் சொன்னான். அவள் உச்சரிப்பு வேறுபட்டிருக்கக் குலசேகரன் அதைத் திருத்தி ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லச் சொல்லி மறூபடி திருத்தினான்.

இரண்டு மூன்றூ முறாஇ அதைச் சொல்லிப் பார்த்த அந்தப் பணீப்பெண் அவனிடம் இதன் பொருள் என்ன எனக் கேட்டாள். குலசேகரன் அதற்கு ஹேமலேகா அதனைப் புரிந்து கொள்வாள் எனச் சொன்னான். அவள் பெயரைக் கேட்டுத்தெரிந்து கொண்டான் குலசேகரன். அபிலாஷிணீ எனத் தன் பெயரைச் சொல்லிவிட்டு ஓட்டமாகச் சென்றாள் அந்தப் பெண்.   அன்றீரவு குலசேகரன் பிரதிமா என்னும் நாடகத்தை ஓலைச்சுவடிகள் வழியாகப் படிக்கையில் கட்டியம் கூறூம் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தான். ராணீ கிருஷ்ணாயி வந்து கொண்டிருந்தாள். குலசேகரன் அவளாஇ உபசரித்து அமரச் செய்தான். அவன் உடல் நலம் குறீத்துக் கேட்டறீந்தாள் கிருஷ்ணாயி!

பிறகு அவன் படிப்பதை அறீந்து கொண்டவள் வாள் பிடித்துப் போர் செய்ய வேண்டியவன் இப்போது நூல் பிடிக்கிறான் எனக் கேலியும் கோபமும் கலந்து சொல்ல, குலசேகரன் தான் ஆரம்பத்தில் படித்துக் கொண்டு இருந்ததையும் ஶ்ரீரங்கத்தின் நிலைமையாலேயே வாள் பிடிக்க வேண்டி வந்ததையும் சொன்னான். ஆனால் தனக்குப் போரை விட இம்மாதிரிப் புத்தகங்கள் படித்து மன அமைதியுடனே இருக்கவே பெரும் விருப்பம் என்றூம் சொன்னான்.  ஆனால் கிருஷ்ணாயியோ காவியங்கள், புராணங்கள் படிக்க ஏற்ற சூழ்நிலை நாட்டில் இப்போது இல்லையே என்றாள்.  குலசேகரன் போன்ற வீரர்கள் அத்தகைய சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்றாள். மேலும் தொடர்ந்து இப்போதைய சூழ்நிலையில் இதை எல்லாம் படிப்பதற்குத் தடை போடவேண்டும் என்றூ சொன்னபடியே குலசேகரன் கையிலிருந்த ஓலைச்சுவடிகளை அவன் எதிர்பாரா வண்ணம் பிடுங்கி அங்கிருந்த விளக்கில் காட்டி எரிக்க ஆரம்பித்தாள்.

பதட்டத்துடன் குலசேகரன் அதைத் தடுக்க முயன்றான். ஆனால் அது முழுதும் எரிந்து முடிந்து விட்டது. குலசேகரன் கண்கள் கண்ணீரால் நிறாஇந்தது. மஹாராணீயோ அவனைப் பார்த்து ஹாஹாஹா எனச் சிரித்தாள். இந்த ஓலைச் சுவடியின் மீது இவ்வளவு வாஞ்சையா உனக்கு எனவும் கேட்டாள். குலசேகரன் அதற்கு அந்த ஓலைச் சுவடிகள் இன்னொருவர் சொத்து எனச் சோகமாகச் சொன்னான். அப்போது கிருஷ்ணாயி அந்த ஓலைச் சுவடிகள் யார் சொத்து எனச் சொல்லட்டுமா என்றூ கேட்டு விட்டு "படிதும் மே தேஹி......" என ஆரம்பித்தாள்.

குலசேகரனுக்கு அவளீடம் ஆத்திரமும் வெறூப்பும் ஏற்பட்டாலும் வெளீக்காட்டிக் கொள்ளவில்லை. தான் சேடியிடம் சொன்னது இவளூக்கு எப்படித் தெரியும்? ஒரு கால் இவள் வேலை தானா அது என்றேல்லாம் யோசித்தான். ராணீயோ குலசேகரனிடம் , " நீ வந்த வேலை என்ன என்பது தெரியுமல்லவா உனக்கு? எங்கள் பாதுகாப்புக்காகவே நீ வந்திருக்கிறாய்! அதை மறந்து வேறே வேலையில் ஈடுபடாதே!" என எச்சரித்தாள்.

Tuesday, April 24, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

வாசந்திகா கண்ணீருடன் மேலே நடந்தாள். உயிரை அவள் விட இருந்த அந்தத் தருணத்தில் அரங்கன் கூவி அழைத்தது போல் குரல் அவள் காதில் கேட்க, கொடவர்களின் "ரங்கா! ரங்கா" என்னும் கூக்குரலாலோ என்னமோ அவள் மனம் மாறித் திரும்பினாள். அதனால் அரங்கனை இன்னும் நன்றாக ஒளித்தும் வைக்க முடிந்தது. நான் மட்டும் உயிரை விட்டிருந்தால் இத்தகைய பாக்கியம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவள் எண்ணிக் கொண்டாள். இந்த வாழ்க்கையை இத்தனை சிரமங்களுக்கிடையேயும் நான் வாழ்ந்தாக வேண்டும் என்பது அரங்கன் கட்டளை போலும்! ஏனெனில் யாருக்காவது எப்போதாவது என் உதவி தேவைப்படும். என்னால் அவர்களுக்குப் பயன் ஏற்படும்! அரங்கா! இனி என் வாழ்வில் பிறர்க்கு உதவி செய்வதையே லக்ஷியமாகக் கொள்வேன்! என்று நினைத்துக் கொண்டே வாசந்திகா நடந்தாள்.  அவள் மனம் அத்தனை நாள் அனுபவித்த வேதனைகளையும் கசப்பான நிகழ்வுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயன்றது.

**************

அங்கே! ஹொய்சள ராணியுடன் ராமேஸ்வரத் தீர்த்த யாத்திரைக்குச் சென்ற அனைவரும் அடுத்த இரு தினங்களில் ராமேஸ்வரம் சென்று தீர்த்தங்களில் நீராடினார்கள். பின்னர் திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தார்கள். திரும்பும் வழியில் ஒரு நாள் மாலை ஓர் பெரிய ஊருணிக்கரையில் இறங்கி இரவு தங்க ஏற்பாடு செய்தார்கள். அடுத்தடுத்த அலைச்சல்களாலும் தூக்கமின்மையாலும் உடல்நலம் கெட்டுப் போய்க் காய்ச்சல் வந்து குலசேகரன் படுத்திருந்தான். குளிரினால் உடல் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தது. பணியாட்கள் கஞ்சி கொண்டு வந்து கொடுத்திருந்தனர். அதைக் குடித்துவிட்டுத் தூங்கலாம் என நினைத்தால் அவனை எழுப்பினாள் ராணி கிருஷ்ணாயி. "வீரனே!" என்னும் அவள் குரல் கேட்டுக் கண் விழித்த குலசேகரன் எழுந்திருக்க முனைந்தான். கிருஷ்ணாயி வேண்டாம் எனத் தடுத்தாள். பின்னர் அவன் பக்கம் அமர்ந்து கொண்டு, கடுமையான வேலைகளில் ஈடுபட்டதால் உனக்கு உடல்நலம் கெட்டு விட்டது அல்லவா? இது என்னால் தானே? என்று கேட்டாள்.

குலசேகரன் மறுத்தான். அப்போது கிருஷ்ணாயி, குதிரையில் ஏறிப் பிரயாணம் செய்ததுக்கே உனக்குக் காய்ச்சல் வந்து படுத்துவிட்டாயே எனக் கிண்டலாகப் பேசினாள். குலசேகரனுக்கு உள்ளுக்குள் கோபம் வந்தாலும் வெளிக்காட்டாமல், "ராணி, தாங்கள் இந்த எளியவனை எவ்வளவு வேண்டுமானாலும் எள்ளி நகையாடுங்கள்! ஆனால் ஒன்று! நான் இந்த ஒரு யாத்திரையில் கலந்து கொண்டதால் மட்டும் உடல்நலம் கெட்டுப் போய்ப் படுக்க வில்லை. கடந்த மூன்று மாதங்களாக நான் அலைந்த அலைச்சலையும், சந்தித்த போர்களையும், சென்ற யாத்திரைகளையும் தாங்கள் அறிய மாட்டீர்கள். கொஞ்ச நேரம் ஓய்வு கூட எடுக்காமல் தொடர்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். என் உடலும் மனித உடல் தானே மஹாராணி! அதனால் தான் உடல் நலம் கெட்டுவிட்டது!" என்று கோபமாகக் கூறிவிட்டுத் தன் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு படுத்தான்.

ஆனால் கிருஷ்ணாயி போர்வையை விலக்கி அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அதீதமான ஜூரம் அடிப்பதைத் தெரிந்து கொண்டு அவனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு உடனடியாக மருத்துவரை அனுப்புவதாகக் கூறிவிட்டுச் சென்றாள். அதன் பிறகு வைத்தியர் வந்து குலசேகரனைச் சோதித்துப் பார்த்து மருந்து கொடுத்தார். மறுநாள் காய்ச்சல் கொஞ்சம் குறைந்தது. குறளன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டுத் தன் வேலையான முன் காவலுக்குச் சென்றான். காய்ச்சல் விட்டதால் உடல் வியர்த்துவிடப் போர்வையை விலக்கிவிட்டுக் கண்களை மூடித் தூங்க யத்தனிக்க திடீரெனக் குளிர்காற்று அவன் மேல் வீசக் கண்களைத் திறந்து பார்த்தான். கிருஷ்ணாயி ஓர் மயில் தோகையால் ஆனவிசிறியை வைத்துக் கொண்டு அவனுக்கு விசிறிக் கொண்டிருந்தாள்.

அவளைக்குலசேகரன் தடுக்க முயல அவளோ தடுக்காதே! என்று சொன்னாள். மேலும் வீரர்களுக்குப் பணிவிடை செய்வது அரசகுல மாண்பு என்றும் சொன்னாள். போரில் அடிபட்டு வீழ்ந்த பல வீரர்களுக்கு அவள் தந்தை பணிவிடை செய்திருப்பதாகவும் இறந்தவர்களுக்கு அவள் தாத்தா, தந்தை போன்றோர் சடங்குகள் செய்திருப்பதாகவும் சொன்னாள். தான் ஓர் தார்மிக அரச பரம்பரையில் உதித்தவள் என்றும் கூறினாள். இத்தகைய பணிவிடைகளினால் அவள் மகிழ்ச்சி அடைவதாகவும் சொன்னாள். குலசேகரனால் அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் அவளிடம் நேற்று என்னைக் கோழை என்று சொல்லிவிட்டு இன்று வீரன் என்று சொல்வதின் காரணம் என்ன என்று கேட்டான். அதற்குக் கிருஷ்ணாயி தான் அவனைச் சும்மாச் சீண்டி விளையாடியதாகச் சொன்னாள். இதெல்லாமா ஒரு வேடிக்கை என எண்ணினான் குலசேகரன்.

கிருஷ்ணாயி அவன் மனதைப் புரிந்து கொண்டவள் போல, அவனைச் சீண்டி விளையாடுவதில் அவள் மனம் மகிழ்ச்சி அடைவதாகச் சொன்னாள். கோபத்தில் குலசேகரன் முகம் சிவப்பதைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருப்பதாகவும் சொன்னாள். திருவண்ணாமலை வீதியில் கோபத்தில் அவன் துள்ளிக் குதித்ததைச் சொன்னாள்.  அவன் சண்டை இட்டதைப் பல்லக்கில் இருந்து எட்டிப் பார்த்ததும் தான் தான் என்று கூறினாள். அதன் பிறகே ஹொய்சள வீரர்களை அனுப்பிக் குலசேகரனைத் தடுத்ததாகவும் சொன்னாள். கோட்டைக் கிடங்கில் அவனைத் தள்ளியதும் அவள் தான் என்றாள். குலசேகரன் அவளிடம் அவள் ஏன் இத்தகைய கொடுமைகளை அவனுக்குச் செய்ய வேண்டும் என்றும் அதன் காரணம் என்ன என்றும் கேட்டான்.

கிருஷ்ணாயி சிரித்தாள். விளையாட்டுக்கு அவனைக் கிடங்கில் தள்ளி ஒரு மணி நேரம் கழிந்த பின்னர் விடுவிக்கலாம் என நினைத்த போதும் மன்னர் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் ஒரு வாரம் கடத்திவிட்டார் என்றாள். குலசேகரன் அதற்கு அவன் கிடங்கில் இருந்த சமயம் அவனுக்கு நல்லுபதேசங்கள் செய்த பெண்மணி யார் என்று கேட்டான்.  கிருஷ்ணாயி அதற்கு அவனிடம், "நீ தான் அவள் கண்களைப் பார்த்திருப்பாயே! அதிலிருந்து கண்டுபிடி!" என்றாள். குலசேகரன் தான் அதில் தேர்ச்சி பெற்றவன் இல்லை என்றும் எல்லாப் பெண்களின் கண்களும் தனக்கு ஒரே மாதிரி இருப்பதாகவும் சொன்னான். கிருஷ்ணாயி சிரித்தாள். ஆனாலும் உடனே அவனிடம், "வீரனே, நான் உன்னிடம் கொஞ்சம் நெருங்கிப் பேசவும் நீ என்னிடம் உரிமை கொண்டாடலாம் என நினைக்கிறாய் போலும்! எச்சரிக்கையோடு இரு!" என்று கூறிவிட்டு வெளியேறினாள். திகைத்தான் குலசேகரன். அப்போது கூடாரத்தின் திரையை வேறொரு பெண்ணின் வாளிப்பான கை மெல்ல மெல்ல விலக்கியது.  குலசேகரன் மேலும் திகைப்படைந்து அந்தப்பக்கம் பார்த்தான். 

Monday, April 23, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள்! மெல்ல மெல்ல ஓய்வு அதிகம் எடுத்துக் கொண்டு இணையத்தைக் குறைத்துக் கொண்டு இருக்கிறேன். என்றாலும் எடுத்த காரியத்தை முடிக்கணும்; பாதியில் நிற்கிறதே என்னும் மன உறுத்தல் இருக்கத் தான் செய்கிறது. முக்கியமான பதிவுப் பக்கத்திலேயே தொடர்ந்து ஏதும் போட முடியாமல் இருக்கிறச்சே, இங்கே எல்லாம் யோசிச்சு எழுத வேண்டிய இடம்! கிட்டத்தட்ட மறுபடி 2 மாசம் போல் ஏதும் எழுதாமல் இருந்துட்டு இன்னிக்கு வந்திருக்கேன்.

சென்ற பதிவில் அழகர்கோயிலில் அரங்கனைப் பாதுகாத்து வந்த கொடவர்களை அரண்மனையில் சேவகம் செய்யும் அலிகள் வந்து பிடித்துக் கொண்டதைப் பார்த்தோம். அலிகள் பிடித்துக் கொண்டதும், "ரங்கா! ரங்கா!" என்று கொடவர்கள் அலற அலிகளோ கேலியாகச் சிரித்தனர். அந்த அலிகளின் பாதுகாப்பில் வந்த அரண்மனைப் பெண்களில் ஒருத்தி அந்த மலையின் விளிம்பு ஒன்றை நோக்கி மெல்ல நடந்தாள். அந்தப் பெண்கள் அனைவருமே உல்லாசமாய்க் கூடி இருந்து பொழுது போக்குவதற்காகவே அங்கே வந்திருந்தபடியால் கண்காணிப்பு இல்லை. ஆகவே அந்தப் பெண்ணிற்கு இது வசதியாக இருந்தது. முகத்திரையிட்டுத் தன்னை மூடிக் கொண்டிருந்த அந்தப் பெண் வேறு யாரும் இல்லை. வாசந்திகா தான்! அவள் இங்கே மதுரைக்குக் கொண்டுவரப் பட்டிருந்தாள். அங்கே வந்ததில் இருந்து தனக்கு நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளால் உடலும், மனமும் தளர்ந்து போயிருந்தாள் வாசந்திகா. முகம் இளைத்து உடல் கருத்துப் பொலிவின்றிக் காணப்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

பழையனவற்றை எல்லாம் நினைத்த அவள் மனது சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த அவலங்களையும் சேர்த்து அசை போட்டது. அங்கே பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டவர்களில் அவளைப் போன்ற அழகான தேவதாசிகள் மட்டுமில்லை; ஒரு சில இளவரசிகள், சிற்றரசர்களின் மனைவிகள், பெண்கள் எனப் பலரும் பலவந்தமாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தார்கள். அடிமைகளாக ஆக்கப்பட்டிருந்தார்கள். ஒரு சிலர் தங்களுக்கு நிகழ்ந்ததை விதியின் பலன் என நினைத்து ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக்கப் பலரும் செய்வதறியாது புலம்பித் தவித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் அங்கே நிகழ்ந்த கொடூரங்களுக்குத் தங்களை ஒப்புக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கு மறைமுகமாகப் போதையில் ஆழ்த்தித் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள் அந்த தில்லி வீரர்கள். நினைவுகளை மழுங்க அடித்தனர். வாசந்திகாவுக்கும் அது நிகழ்ந்தது.

அவள் நினைவுகளும் மழுங்கடிக்கப்பட்டு அவள் போதையிலே இருந்த தருணம் அவள் சூறையாடப் பட்டாள். வெகு நாட்கள் வரை தனக்கு நிகழ்ந்ததை அறியாமல் இருந்தாள் வாசந்திகா. ஆனால் போதையிலிருந்து விடுபட்டுச் சுயநினைவுக்கு வரும்போதெல்லாம் தன் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அவளைச் சிந்திக்க வைத்தது. பின்னர் அவளுக்குத் தான் சீரழிக்கப்பட்டது புரிய வந்தது. நெருப்பில் விழுந்து விட்டது போல் தவித்தாள். அவள் சீரழிக்கப் பட்ட விஷயம் தெரிந்ததும் முதலில் நினைவு வந்தது குலசேகரன் தான். அவனுக்காகவென்று வாழ்ந்து வந்த தனக்கு நேர்ந்த இந்த அவலம் அவனுக்கு மட்டும் தெரியவந்தால்! தன் பெண்மையை முற்றிலும் இழந்த பின்னர் அவனை நினைப்பதோ, அவனை அடைய முற்படுவதோ எங்கனம் சாத்தியம்? இனி அவள் வாழ்வதற்கும் என்ன பொருள்? இருந்தாலும் ஒன்று! இறந்தாலும் ஒன்றே!

ஆகவே இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்னும் முடிவுக்கு வந்திருந்தாள் வாசந்திகா! அவள் வெகுநாட்கள் ஆவலோடு காத்திருந்தது இந்த நாளுக்காகத் தான். அன்றைய தினம் காலையிலேயே தளபதி மாலிக் தனது அந்தப்புரப் பரிவாரங்களுடன் அழகர்மலைக்கு உல்லாசச் சுற்றுப் பயணம் செய்வதாக முடிவு செய்திருந்தான்.  ஆகவே அனைவரும் பயணமாக வந்திருந்தனர். பரிவாரங்களிடமிருந்து விலகித் தனியேயும் வந்துவிட்டாள்.  மலை முகட்டில் நின்றவண்ணம் அரங்கனை நினைத்துப் பிரார்த்தித்தாள்.அரங்கனுக்கு அடிமையாக இருந்து அவனுக்கே சேவை செய்ய வேண்டிய தான் இங்கே ஓர் இழிவான இடத்தில் மாட்டிக் கொண்டு மீள வழி தெரியாமல் தவிப்பதை நினைவு கூர்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும், அடுத்த பிறவியிலாவது அரங்கனின் சேவைக்காகப் பிறந்து குலசேகரனையே மணாளனாக அடையப் பிரார்த்திப்பதாகவும் கூறிவிட்டுக் குதிக்க ஆயத்தமானாள்.

அடுத்த கணம் திடீரென "ரங்கா!ரங்கா!" என்று ஒரு குரல் கேட்கத் திடுக்கிட்டாள். மீண்டும் மீண்டும் அந்தக் குரல் கேட்டது. அரங்கன் முகம் அவள் முன் தோன்றிப் புன்முறுவல் செய்வது போல் தெரிந்தது. உடனே ஏதோ ஒரு முக்கியக் காரணத்தால் தான் தன்னை அரங்கன் இறக்கவிடாமல் தடுக்கிறான் என்பதைப் புரிந்தவளாக அங்கிருந்து நகர்ந்தாள். திரும்பப் பரிவாரங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டிச் சென்றாள். செல்லும் வழியில் கொடவர்களை அலிகள் துன்புறுத்துவதைக் காண நேர்ந்தது. அலிகளிடம் போய் விசாரிக்க, அவர்கள் அரங்கனைப் பற்றியும் அவன் பொக்கிஷமும் இருக்குமிடம் இவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும் என்பதால் இவர்களைப் பிடித்து விசாரிப்பதாகக் கூறினார்கள்.

அவர்களை விடச் சொல்லித் துருக்க மொழியில் ஆணையிட்ட வாசந்திகா சுற்றும் முற்றும் பார்த்தாள். அதற்குள் கொடவர்கள் தப்பி ஓடினார்கள். வாசந்திகாவை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த வாசந்திகாவிற்கு அங்கே இருந்த பெரும் தழைகளோடு கூடிய புதரில் ஓர் வெளிச்சம் தெரியவே உற்றுப் பார்த்தாள். ஆஹா! அது ஐம்பொன்னால் ஆன ஒரு விக்ரஹத்தின் கை! அபய ஹஸ்தம்! அப்படியானால்! ஆஹா! இது அரங்கனின் அபய ஹஸ்தம் தான்! அரங்கன் தான் ஒளிந்திருக்கிறான். இல்லை! அந்தக் கொடவர்கள் ஒளித்து வைத்திருக்கின்றனர். உடனே நாட்டிய பாவனையில் ஆடிக்கொண்டு அந்தப் புதருக்கு அருகே சென்று தழைகளை விலக்கி அரங்கனைப் பார்த்தவள் தன் கழுத்து நகையைக் கழட்டி அரங்கனுக்கு அருகே போட்டு விட்டு அரங்கனைச் சரியாக மூடினாள். பின்னர் மீண்டும் அலிகளிடம் வந்து அவர்களோடு பரிவாரங்களுடன் கலந்து கொண்டு பேசிக் கொண்டே அப்பால் நகர்ந்தாள்.

Monday, February 19, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரன் மிகவும் முயன்று குதிரையை ஒவ்வொரு பல்லக்கின் அருகேயும் கொண்டு போனான். அவற்றில் ஒன்றில் ஹேமலேகாவின் முகமும் அவனுக்குத் தெரிந்தது. ஹேமலேகா அவனிடம் பல்லக்கை ஒட்டிக் கொண்டு வரவேண்டாம் என எச்சரித்தாள். ராணி தவறாக நினைக்கக் கூடும் என பயந்தாள். ஆனால் குலசேகரன் அவளிடம் தான் கூற வந்ததைக் கூறினான்: "அம்மா! உங்கள் கதை கூறும் ஆற்றல் வியக்கத் தக்கது! நான் மிகவும் விரும்பிக் கேட்கிறேன். இது போன்ற ஆன்மிகக் கதைகளைக் கேட்டு என் நிலையை உயர்த்திக் கொள்ளாமல் வாழ்நாளைப் போர்ப்பயிற்சியில் வீணடித்து விட்டேனே என நினைத்தால் வேதனையாக இருக்கிறது.கல்வி கற்றால் எவ்வளவு மேன்மை என்பதை உங்களால் உணர்ந்து கொண்டேன்!" என்றெல்லாம் அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே திடீரென யாத்திரை நிறுத்தப்பட்டது. அனைவரும் அவரவர் நின்ற இடத்திலேயே நின்றனர்.

திகைத்துப் போய்ப் பார்த்த குலசேகரன் தூரத்தில் எதிரே ஒரு குதிரைப்படை புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்ததைப் பார்த்தான். அதைக் கண்ட ராணி உடனே குலசேகரனை அழைத்து அவனிடம் முத்திரை மோதிரம் ஒன்றைக் கொடுத்தாள். அது ஹொய்சள முத்திரை மோதிரம். அதைக் காட்டும்படி ராணி உத்தரவிடக் குலசேகரன் அதை எடுத்துக் கொண்டு சென்றான். வந்தவர்கள் தில்லி வீரர்கள் தான். நாட்டைச் சுற்றிச் சுற்றி வந்து ஆங்காங்கே வேவு பார்த்துக் கொண்டு வந்தனர். குலசேகரன் காட்டிய முத்திரை மோதிரத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் ஒரு சில கேள்விகளை மட்டிலும் கேட்டுக் கொண்டு ஊர்வலத்தை மேலே செல்ல அனுமதித்தனர்.  பின்னர் குலசேகரன் திரும்ப ராணியிடம் சென்று முத்திரை மோதிரத்தைத் திரும்பக் கொடுக்க ராணியோ அவனையே அதை வைத்திருக்கச் சொன்னாள். இன்னும் வேறு யாரேனும் வந்தால் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் கூறினான்.

பின்னர் அவனைப் பார்த்து, அவன் பெயரைக் கேட்டறிந்தாள். திருவரங்கத்துக்காரன் என்று தெரிந்ததும் போர்த்தொழிலை எங்கே எவ்வாறு கற்றான் என்றும் கேட்டாள். காஞ்சியில் ஹொய்சள வீரன் ஒருவனிடம் கற்றதாகச் சொன்ன குலசேகரனைப் பார்த்து அவனைப் போன்றதொரு வீரனுக்குக் கலை, இலக்கியம், கவிதை போன்றவை தேவை இல்லை என்றும் சொன்னாள். வீரத்தை வளர்த்துக் கொண்டு ஓர் குறுநில மன்னனாக ஆகும்படியும் அறிவுரை கூறினாள். ஆனால் குலசேகரனோ தனக்கு அவற்றில் எல்லாம் விருப்பம் இல்லை என்றும் தன் வாழ்க்கை லட்சியம் திருவரங்க நாதனைத் திரும்பத் திருவரங்கத்தில் சேர்ப்பிப்பது ஒன்றே என்றும் கூறினான். ராணியோ இதெல்லாம் ஒரு லட்சியமா எனக் கேலி செய்து நகைத்தாள். குலசேகரன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

ராணி அந்தப் பல்லக்கில் பஞ்சணையில் படுத்த வண்ணம் இருந்தாள். அவள் அழகைக் கண்டு வியந்தான் குலசேகரன்.  தன் பார்வையை அவன் மேல் படரவிட்ட ராணி, "இதெல்லாம் ஒரு லட்சியமா! ஓர் உலோக விக்ரஹம்! அதைப் பாதுகாப்பதாம்! திருவரங்கத்தில் கொண்டு சேர்ப்பதாம்!" என்று சொல்லி மீண்டும் கேலி செய்து சிரித்தாள். குலசேகரன் கோபத்துடன் தனக்கு அது லட்சியம் தான் என்றும் தன்னைப் பொறுத்தவரை அது வெறும் உலோக விக்ரஹம் மட்டுமில்லை என்றும் கூறினான். அரங்கன் அவர்களைப் பொறுத்த வரை உயிர் என்றும் அவனே அவர்களது நம்பிக்கை என்றும் அவனை இழந்தால் வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை என்றும் கூறினான். அரங்கனை இழக்க ஒருக்காலும் சம்மதியோம் என்ற குலசேகரன் அரங்கனைக் காப்பாற்றும் வியாஜ்யத்தில் எத்தனை பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பதையும் எடுத்துச் சொன்னான்.  அரசிக்குச் சிரிப்புத் தான் வந்தது. என்றாலும் போலியான பயத்துடன் குலசேகரனைப் பார்த்து நிறுத்திக் கொள்ளச் சொன்னாள்.

திருவண்ணாமலைக் கடைவீதியில் சண்டை போட்டது போல் சண்டை போட்டுவிடப் போகிறாய் என்று கேலியும் செய்தாள். பின்னர் அவனைப் பார்த்து யாத்திரை சரியாகச் செல்கிறதா என்று கண்காணிக்கும்படி சொல்லிவிட்டுப் பல்லக்கின் திரையை விட்டுக் கொண்டு திரும்பிப் படுத்தாள்.

****************

அங்கே!

அழகர் கோயிலில் ஒரு தோப்பு! அரங்கன் மறைந்து வாழ்ந்து வந்தான். பசுந்தழைகளால் ஆன விதானங்களை எழுப்பி அரங்கனுக்கு ஆலயம் போல் எழுப்பி தினசரி உபசரணைகளைச் செய்து வந்தார்கள் அரங்கனைப் பொறுப்பில் எடுத்துக் கொண்ட கொடவர்கள். அவர்கள் மூவரும் ஊர்வலத்தோடு சேர்ந்தே வந்த உறவினர்கள் ஆவார்கள்.  அரங்கனை வெறும் தெய்வமாக மட்டும் எண்ணாமல் ஓர் உலோக விக்ரஹமாக எண்ணாமல் தங்களுடன் வாழும் ஓரு மாமனிதன் என்றே நினைத்து அவனுக்கு வேண்டியதைச் செய்தார்கள். அவர்கள் வெப்பத்தை உணர்ந்தால் அரங்கனுக்கு விசிறி போட்டார்கள். அவர்கள் சாப்பிடும் முன் அரங்கனுக்கு உணவு படைத்தார்கள்.

அப்போது ஓர் நாள் வெகு தூரம் சென்று மண் குடங்களில் நீர் எடுத்து வருகையில் ஓர் அரசப் பரிவாரம் ஆரவாரங்களோடு அங்குள்ள தோப்புக்களில் புகுந்தது. மூவரும் பயந்து போய்விட்டார்கள். அரங்கனின் இருப்பிடம் நோக்கி விரைந்தார்கள். அவசரம் அவசரமாக அரங்கனைக் கண்டதும் அவர்களுக்குத் தெரிந்து விடப் போகிறதே என நினைத்து அவர்கள் செய்த குழப்படிகளால் அரங்கன் விக்ரஹம் அங்கிருந்த கூளங்களுக்குள் மறைந்து போனது. அப்போது பார்த்து அரசப் பரிவாரங்களில் கூட வந்த பெண்கள் அங்கே வந்து விட்டனர். அவர்கள் தில்லித் துருக்கப் பெண்கள் என்பது அவர்களின் உடையிலிருந்து தெரிந்தது. கொடவர்கள் செய்வதறியாது திகைக்கையிலேயே அரண்மனையில் ஊழியத்துக்கு அமர்த்தப்பட்டிருந்த அலிகள் ஓடி வந்து மூவரையும் பிடித்துக் கொண்டனர். 

Friday, February 16, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ராணி கிருஷ்ணாயிக்கு இவர்களின் மௌன பாஷை கோபத்தை மூட்டியது. அவசரம் அவசரமாக சபையைக் கலைத்தாள். குலசேகரனிடம் வந்து, "வீரனே, நீ செய்வது சரியல்ல!" என்றாள் கோபத்துடன்.  குலசேகரன் தான் தவறு ஏதும் செய்யவில்லை என்று பணிவுடன் கூறினான். ஆனால் ராணியோ அவன் காவலை விடுத்துக் கதை கேட்டதால் கள்வர்கள் உள்ளே புகுந்ததைக் குறித்துச் சொல்லிவிட்டு அவனுக்கு தண்டனை கொடுக்க நினைத்ததாகவும் கள்வர்கள் பிடிபட்டதால் கொடுக்கவில்லை எனவும் கூறினாள். குலசேகரன் அவமானத்தால் கவிழ்ந்த தலையோடு வெளியே வந்தான். ராணியின் கோபம் கலந்த சுபாவம் அவனுக்குள் கலக்கத்தை மூட்டியது. கடுமையாகத் தன்னை நடத்தும் இந்த ராணியிடம் போய் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்றெல்லாம் கவலைப் பட்டான். இரவில் உணவு அருந்திவிட்டுப் படுத்தும் கூட அவன் சிந்தனைகள் அவனைத் தூங்க விடாமல் குழப்பி எடுத்தன.

அப்போது திடீரெனப் பஞ்சு கொண்டான் குரலில் குலசேகரனை அழைத்தமாதிரி இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான் குலசேகரன். மர நிழலில் பஞ்சு கொண்டான் நின்றுகொண்டு அவனை அழைத்துக் கொண்டிருந்தார். கூடவே அரங்கன் ஊர்வலத்தைப் பின்பற்றச் சொன்னால் இங்கே அணங்குகளின் ஊர்வலத்தைப் பின்பற்றுகிறாயே என்றும் கேட்டார். இது தான் நீ அரங்கனுக்குச் செய்யும் சேவையா என்றெல்லாம் அவர் கேட்டார். குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. எழுந்து அமர்ந்து கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு எதிரே பார்த்தான். யாரும் இல்லை. அவன் லட்சியத்திலிருந்து அவன் புரண்டு விட்டதால் இத்தகைய எச்சரிக்கை தோன்றியதோ என நினைத்தான். கண் முன்னே அரங்கன் உருவமும் அவன் ஊர்வலமும் தோன்றியது.  அரங்கன் விக்ரஹம் அவனைப் பார்த்துச் சிரித்து என்னை மறந்தாயோ என்று கேட்பது போலும் தோன்றியது.

"ரங்கா! ரங்கா!" என்று அரற்றினான் குலசேகரன். ராஜாதிராஜனாகிய அரங்கன் இன்று நம் உதவியையா எதிர்பார்க்கிறான்? நாயினும் கடையேனாகிய என்னை அரங்கன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறானா? ரங்கா, ரங்கா, என்னால் இயன்றதைச் செய்து உன்னை எப்படியேனும் காப்பாற்றித் திரும்பவும் திருவரங்கம் கொண்டு சேர்ப்பது என் கடமை! ஐயகோ! அழகர் மலையில் அவருக்கு தினமும் மூன்று வேளை அமுது படைத்து வருகிறார்களா என்று தெரியவில்லை. பூஜைகள் சரிவரச் செய்து வருகிறார்களா என்றும் புரியவில்லை. குலசேகரனுக்குள் தவிப்பு மேலிட்டது. என்ன செய்வது எனப் புரியாமல் அப்போது முறை காவலில் இருந்த குறளனை அணுகினான். அவனிடம் தனக்கு அரங்கன் நினைவு அதிகம் வருவதால் அழகர் கோயில் சென்று விடலாமா என்று கேட்டான்.

அதற்குக் குறளன் அழகர் கோயிலில் கொடவர்கள் அரங்கனை நன்கு கவனித்துக் கொள்வதை எடுத்துச் சொன்னான். "கோடைக்காலம் நாம் காற்றில்லாமல் தவிக்கையில் கூட இந்தக் கொடவர்கள் முறை போட்டுக் கொண்டு அரங்கனுக்கு விசிறியால் விசிறினார்களே! மறந்து விட்டீர்களா!" என்று கேட்டான்.  ஆனாலும் குலசேகரன் மனம் சமாதானம் அடையவில்லை. என்ன இருந்தாலும் கொடவர்கள் வீரர்கள் இல்லையே என்று கவலை அடைந்தான்.  "அரங்கனுடைய விக்ரஹம் மறைந்து இருக்கும்வரை கவலை இல்லை. அவர்களும் அதைப்பாதுகாப்பார்கள். எல்லாவிதமான உபசரணைகளும் செய்வார்கள். ஆனால் எதிரிகளால் விக்ரஹத்துக்கு ஆபத்து நேரிட்டால்? அவர்களால் என்ன செய்ய முடியும்? இங்கே நாம் ஹொய்சள மன்னர் உதவி செய்வார் என நம்பி வந்தால் இங்கே நடப்பதே வேறு விதமாய் இருக்கிறது. அரங்கனையே பறிகொடுத்து விடுவோமோ எனக் கவலையாக இருக்கிறது. காலையிலிருந்து இந்த எண்ணம் தோன்றி என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். "என்றான் குலசேகரன்.

குறளன் அதற்கு இந்த தீர்த்த யாத்திரையைச் சரியாகவும் சீக்கிரமாகவும் முடித்துக் கொண்டு திருவண்ணாமலை திரும்பினால் ஹொய்சள மன்னரிடமிருந்து உதவி கிடைக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தான். குலசேகரன் ஏதும் பேசவில்லை. மறுநாள் அங்கிருந்து யாத்ரிகர்கள் கிளம்பினார்கள். யாத்ரிகர்களின் முன்னால் குலசேகரனும், குறளனும் காவலாகச் சென்றார்கள். கிருஷ்ணாயி மூடு பல்லக்கில் பயணம் செய்தாள்.  மற்றவர்கள் வந்த பல்லக்குகளின் வரிசைகளோடு முன்னும் பின்னுமாக வீரர்கள் காவல் காத்த வண்ணம் சென்றனர். குலசேகரனுக்கு ஹேமலேகா அந்தப் பல்லக்குகளில் எதிலேனும் இருப்பாளா என்னும் சந்தேகம் தோன்றியது. அவள் கதையைக் கேட்கக் கூடாது என்று ராணி தடை விதித்தது அவன் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது. அவளைப் பார்க்கவானும் முடியுமா என்று யோசித்தான்.

Sunday, February 04, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரனை முறை காவலில் போட்டிருந்தார்கள். அவன் இரவில் நின்றிருக்கையில் மீண்டும் மீண்டும் ஹேமலேகாவின் கதை தொடங்குவது அவனுக்குக் கேட்கும். அவள் குரலோடு யாழும் இணைந்து பாடத் தொடங்க அவனுக்கு உடனே அங்கே சென்று கதையைக் கேட்கும் ஆவல் தோன்றும். இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டுப் பொறுத்திருந்தவனால் மூன்றாம் நாள் பொறுத்திருக்க முடியவில்லை. மெல்ல நடந்து சென்று கூட்டத்தின் ஓரமாக நின்று கொண்டு கதையைக் கேட்கத் தொடங்கினான். அப்போது அங்கே ஏற்பட்ட சலசலப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தால்! அங்கே ராணி கிருஷ்ணாயி தாயி நின்று கொண்டிருந்தாள். அவள் குலசேகரனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இரு சேடிகள் அவளுக்குக் காவலாக நின்றனர். குலசேகரனையே பார்த்தவள் கோபத்துடன், "ஓஹோ! இது தான் நீங்கள் காவல் காக்கும் லட்சணமா? இதற்குத் தானா மன்னர் உங்களை எங்களுடன் அனுப்பி வைத்தார்?" என்று கோபமாகக் கேட்கக் குலசேகரனால் பதில் சொல்லவே முடியவில்லை.

தலைகுனிந்து பிரமிப்புடன் நின்றிருந்தவனைப் பார்த்து அவள், "இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காதது!" என்று கூறி விட்டு வெடுக்கென்று திரும்பிக் கொண்டு மேலே போய்விட்டாள். அவமானத்துடன் திரும்பிய குலசேகரன் மனம் வருந்தினான். நாலாம் நாள் இரவில் இரு பெரிய சத்திரங்களில் அனைவரும் தங்கினார்கள். அன்று கதை கேட்கப் போனபோது ஹேமலேகாவைப் பார்த்தது தான். அதன் பின்னர் குலசேகரனால் அவளைப் பார்க்கவே முடியவில்லை. சத்திரத்துக்கு வெளியே திறந்த வெளியில் காவல் காத்துக் கொண்டிருந்த குலசேகரனுக்கு  ஹேமலேகாவும் அவளுடைய குளுமையான பார்வையும் அந்தப் பார்வையைக் கொண்ட பிரகாசமான கண்களும் மனதில் தோன்றின. அவள் கவர்ச்சியும் அழகும் ஆட்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்காது. மனதில் அமைதியையும் மரியாதையையும் தோற்றுவிக்கும் கவர்ச்சி. இப்படி எல்லாம் தன்னால் நினைக்க முடியுமா என எண்ணும்போதே குலசேகரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்கெனத் தனி வாழ்க்கை இனி ஏது என்னும் நினைப்பில் இருந்தவனுக்குள் இத்தகைய எண்ணங்கள் வாக்கையில் ஓர் பிடிப்பை ஏற்படுத்தின. பஞ்சு கொண்டானைப் போல் தானும் ஓர் நகரத்து அரையராக வாழ்க்கையில் கீர்த்தி பெற்று வாழ வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

ஹேமலேகாவின் மேல் தனக்குக் காதலா? ம்ஹூம், இல்லை, இல்லை! அப்படி எல்லாம் இல்லை! தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் குலசேகரன். ஆம், ஆம், காதல் தான் என்றது இன்னொரு மனது! தான் அத்தகைய சின்னச் சின்ன இன்பங்களுக்கெல்லாம் எளிதில் ஆளாக மாட்டோம் என நம்பிக் கொண்டே தன் தலையை உலுக்கித் தான் ஹேமலேகாவைக் காதலிக்கவில்லை என்பதைத் தனக்குள்ளே உறுதிப் படுத்திக் கொண்டான் குலசேகரன். எங்கிருந்தோ யாழின் ஓசை கேட்டது. மெல்ல மெல்ல யாழிசை அந்தப் பிராந்தியத்தையே நிறைத்தது. கூடவே ஹேமலேகாவின் குரலும் கேட்டது. சத்திரத்துக்குள்ளே இருந்து கேட்டதால் தன்னையும் அறியாமல் குலசேகரன் அந்தக் குரலைத் தொடர்ந்து சென்று சத்திரத்தின் வெளிப்புறத்தில் நின்ற வண்ணம் இசையை ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது சத்திரத்தின் பின் புறம் வழியாகச் சில கள்வர்கள் சத்திரத்தினுள் புகுந்தார்கள். இதைக் குலசேகரன் அறியவில்லை. உள்ளே புகுந்த கள்வர்கள் யாத்திரைக் குழுவினரின் பொருட்களை எல்லாம் உக்கிராண அறைக்குள்ளிருந்து அள்ளிக் கொண்டு பின்புறமாகவே ஓடினார்கள். அப்போது ஓர் பெட்டகம் தடால் எனக் கீழே விழுந்து சப்தத்தை ஏற்படுத்த யாத்திரிகர்கள், "திருடன், திருடன்!" எனக் கூவினார்கள்.  ஹேமலேகாவின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த அரசிக்குக் கோபம் வந்தது. இந்தக் காவலாளிகள் என்ன செய்கிறார்கள்? தூங்கி விட்டார்களா?  என்று நினைத்த வண்ணம் சத்திரத்தின் வெளியே வந்தாள். வீரர்களை அழைத்துக்கள்வரைத் தொடரும்படி ஆணையிட்டாள். அப்போது அங்கே ஆயுதங்கள் ஏதும் தரிக்காமல் நின்று கொண்டிருந்த குலசேகரன் அவள் கண்களில் படவே அவள் கோபம் எல்லை மீறியது!

"இரண்டாம் முறையாக உன்னைக் காவலில் இல்லாமல் பார்க்கிறேன்! இது தான் நீ முறை காவல் காக்கும் லட்சணமா?" என்று கோபத்துடன் கத்தினாள். அப்போது தான் ஏதோ நடந்திருக்கிறது என்பதையே குலசேகரன் உணர்ந்தான். தன் தவறை உணர்ந்தவனாக, "ராணி, இதோ, இதோ, வருகிறேன்!" என்றுகூறி விட்டுத் தன் கூடாரம் நோக்கி விரைந்தான். கவசம் அணியாத வெற்றுடம்புடன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டு வந்த குலசேகரன், வீரர்களைத் தன்னைப் பின் தொடரும்படி கூறி விட்டுக் குதிரையில் ஏறி விரைவாகச் செலுத்தினான். பின்னர் சிறிது நேரத்துக்குள்ளாக ஆறு கள்வர்களையும் அவர்கள் திருடிய பொருட்களையும் ராணியின் முன்னே சமர்ப்பித்தான் குலசேகரன். கூடவே அவனுடைய வீரர்களும் இருந்தனர். கள்வர்களையும் குலசேகரனையும் கண்டு கடுமையாக விழித்த ராணி எல்லோரையும் விலங்கிட்டு வைக்குமாறு ஆணை இட்டாள்.

மறுநாள் சத்திரத்தின் முற்றத்தில் சபை கூடியது. ராணி தன் விசாரணையை ஆரம்பித்தாள். குறளனுக்கும் குலசேகரனுக்கும் உள்ளூற அச்சம். அரசி கள்வர்களை விசாரித்ததைக் கண்டு குலசேகரனுக்குள் கொஞ்சம் தைரியம் வந்தது. சபையைச் சுற்றிக் கண்களை ஓட விட்டவன் ஓர் ஓரமாக ஹேமலேகா நிற்பதைக் கண்டு விட்டான். அவன் கண்கள் அவளை விட்டு நகர மறுத்தன. அவள் பார்வையோ அவனிடம் இல்லை. அவள் தன்னைப் பார்க்க மாட்டாளா என ஏங்கினான் குலசேகரன். அவளோ திரும்பாமல் நின்றாள். ராணி விசாரணையை முடித்துவிட்டாள் என்பது அவள் தீர்ப்புக் கூறியதிலிருந்து தெரிந்தது. கள்வர்களின் கையையும் மூக்குகளையும் வெட்டிவிடும்படி கட்டளை இட்டாள். பின்னர் தன் மன ஆறுதலுக்காகச் சேடிகளை அழைத்து நாட்டியம் ஆடும்படி சைகை செய்தாள். குலசேகரன் என்ன செய்கிறான் என்பதையும் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள்.

அவன் ராணி இருக்கும் பக்கம் கூடத் திரும்பவில்லை. நாட்டியத்தை ரசித்தான். ஹேமலேகாவைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் அவன் பார்வை அவள் பக்கமே சென்றது. ஒரு நிமிடம் அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. ஏனெனில் ஹேமலேகா அவள் கண்களை முழுதும் திறந்து அவனையே பார்த்த வண்ணம் இருந்தாள். அவள் விழிகளைக் கண்ட குலசேகரனின் பார்வை அந்த விழிகளின் வழியிலிருந்து மீள முடியாமல் தவித்தது. அதை ராணி கிருஷ்ணாயியும் கவனிக்காதவள் போலக் காட்டிக் கொண்டு நன்கு கவனித்துக்  கொண்டாள்.

Tuesday, January 30, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

கிளம்பி விட்டது ஹொய்சள ராணியின் ராமேஸ்வர யாத்திரை! எட்டு மூடு பல்லக்குகள். ஆண், பெண் பயணிகள், சேடிகள், பணிப்பெண்கள், சமையல் செய்பவர்கள், மற்ற வேலைகள் செய்வோர் என ஒரு பெரிய பரிவாரமே ராணியுடன் கிளம்பியது! குதிரை ஓட்டத் தெரிந்தோர் குதிரைகளிலும், மற்றவர் மாட்டு வண்டிகளிலும், சிலர் நடந்தும் தங்கள் பயணத்தைத் துவக்கினர். பொதி வண்டிகள் பிரயாணத்துக்குத் தேவையான பொருட்களைச் சுமந்து கொண்டு வந்தன. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டும் கவனித்துக்கொண்டும் குலசேகரனும் குறளனும் பரிவாரங்களுடன் சென்றார்கள். முதல் நாள் மாலையில் ஒரு மணற்பாங்கான சமவெளியில் பரிவாரங்களுடன் தண்டு இறங்கினார்கள். எல்லோரும் உற்சாகமான மனோநிலையில் இருந்ததால் ஆடல், பாடல், விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். குலசேகரனையும் குறளனையும் கூட அழைத்தனர். எல்லோருமாகச் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினார்கள். குலசேகரன் கண்களையும் கட்டினார்கள். அவன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு தேடிச் சென்றவன் அவ்வழியாக வந்த ராணியின் கைகளை இறுக்கமாகப் பிடித்து விட்டான்.

குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது! இதென்ன பெண் பிள்ளை போல் இருக்கிறதே என நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்த கட்டுக்களை அவிழ்த்தான். எதிரே ஹொய்சள ராணி! அவள் துளுவ நாட்டு இளவரசியாம். ஹொய்சள மன்னர் துளுவ நாட்டையும் தன் நாட்டோடு இணைக்க வேண்டி அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். அவள் பெயர் கிருஷ்ணாயி தாயி என்பதாகும். திருமணம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவள் இப்போது ராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டிருந்தாள்.  இதெல்லாம் குலசேகரன் நினைவில் வந்தன. ஆனால் அந்த ராணியோ அவன் எதிரே கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள்.  குலசேகரனைப் பார்த்து எதிரே யார் வருவார்களோ என்னும் எண்ணத்தோடு விளையாட வேண்டாமா எனக் கடுமையாகக் கேட்டாள். பின்னர் அவன் பதிலை எதிர்பார்க்காமல் வெடுக்கென்று திரும்பிச் சென்று விட்டாள். குலசேகரன் மனம் வேதனையில் ஆழ்ந்தது. துயரத்தில் ஆழ்ந்த அவனைக் குறளன் சமாதானம் செய்தான்.

ஆனால் குலசேகரன் மனதுக்குள்ளாக ஒரு சந்தேகம். திருவண்ணாமலையில் சாலையில் பார்த்த பெண்ணின் விழிகளும், தான் கோட்டைக் கிடங்கில் பார்த்த பெண்ணின் விழிகளும் ஒன்றாக இருந்தன. அந்தப் பெண்ணோ குலசேகரனுக்கு நல் உபதேசம் தானே செய்தாள்! அப்போது அந்தப் பெண் இவள் இல்லையா? அவள் வேறு இவள் வேறா? குழப்பம் அடைந்தான் குலசேகரன். இரவு உணவருந்திவிட்டு உட்கார்ந்திருக்கையில் எங்கிருந்தோ யாழின் இன்னிசையுடன் கூடிய கதா காலட்சேபம் கேட்டது. ஒலி வந்த திக்கில் நடந்தவனுக்கு அங்கே ஹேமலேகாவைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது. அவள் அங்கே கூடி இருந்த மக்களுக்கு பாரதக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளும் இந்தப் பரிவாரங்களுடன் வந்திருப்பதைக் குலசேகரன் அறிய மாட்டான். என்றாலும் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண் இங்கே இருப்பதை அறிந்து உவகை கொண்ட குலசேகரன் அங்கேயே அமர்ந்து அவள் கதை சொல்லுவதைக் கேட்டுக் கொண்டான்.

சற்று நேரத்தில் கதை முடிந்தது. அனைவரும் கலைந்து சென்றார்கள்.  ஹேமலேகாவும் கிளம்பும் முன்னர் குலசேகரன் அவசரம் அவசரமாகச் சென்று அவள் முன்னால் நின்றான். அவனை அடையாளம் தெரிந்து கொண்ட ஹேமலேகா, "உங்களைக் காவிரிக்கரையில் அல்லவோ பார்த்தேன்!" என்று கேட்டாள். அவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவள் முகமும் மலர்ந்தது. குலசேகரனும் அவள் சொன்னதை ஆமோதித்துத் தன் தாயாருக்கு அவள் ஈமச்சடங்குகள் செய்வித்து வைத்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தான்.  அவள் சிரிக்கையில் கண்களின் பிரகாசத்தையும் ஒளியையும் கண்ட குலசேகரன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அவள் அழகில் அவன் உள்ளம் தோய்ந்தது.  பின்னர் குலசேகரன் தான் அவளைப் பல்லக்கில் தன்னந்தனியாக அனுப்ப நேர்ந்தது குறித்து இன்றும் வருந்துவதாகச் சொன்னான். அவளுக்கு என்னவாகி இருக்குமோ என்றெல்லாம் யோசித்துக் கலங்கினதாகவும் கூறினான்.

அப்போது ஹேமலேகா தான் அடைந்த அனுபவங்களை விவரித்தாள். "ஜம்புகேஸ்வரத்துக்குத் தான் திரும்புகையில் ஊரே சூனியமாகக் காட்சி அளித்ததாகவும் ஒரு கிழவர் சொன்னதன் பேரில் அரங்கன் ஊர்வலத்தைத் தேடிச் சென்ற வழியில் தான் குலசேகரன் அறிமுகம் கிடைத்ததாயும் சொன்னாள்.  பின்னர் தான் திருச்சிக்குச் சென்றதாகவும் அங்கே தான் கலவரங்கள் பற்றிய முழு விபரங்களைத் தெரிந்து கொண்டதாகவும் கூறினாள். பின்னர் தெற்கு நோக்கிப் பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை அறிந்து கொண்டதால் வடக்கு நோக்கிச் சென்றதாகவும் கூறினாள். அப்போது இந்தத் திருவண்ணாமலைக்கு வந்ததாகவும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததால் வந்ததாகவும் சொன்னாள்.

அவளும் யாத்திரையில் வருவது குறித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான் குலசேகரன். ஹேமலேகா அதற்குத் தான் மன்னரின் கட்டளையின் பேரிலேயே வந்ததாகவும், மஹாராணிக்குப் புராணக் கதைகள் நிறையக் கூற வேண்டும் என்று கட்டளை இருப்பதாகவும் இப்போது மஹாராணி காத்திருப்பார்கள் என்பதால் தான் செல்வதாகவும் கூறினாள். குலசேகரனுக்கு ஹேமலேகாவைச் சந்தித்ததும், அவளுடன் பேசியதுமே கனவு போல் தோன்றியது!