எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, July 11, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பிட்சாடனர்!

பிட்சாடனர் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையிலும், உத்தமர் கோயிலிலும் விசேஷமாகச் சிறப்பு தரிசனம் தருகிறார். திருப்பராய்த் துறையைத் தான் தாருகாவனமாக இருந்த்தாகச் சொல்கின்றனர். அங்கே பிட்சாடனரை உற்சவராக வழிபடுகின்றனர் என்று தெரிய வருகிறது. மேலும் கோயிலின் முன் மண்டபத்து மேல் விதானத்தில் உள்ள ராசிச் சக்கரத்தையும், பிட்சாடனரையும், மூலவர் பராய்த்துறை நாதரையும் ஒரே நேரத்தில் வழிபடுதல் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. கோயிலின் பெயரே தாருகவனேஸ்வர்ர் கோயில் என்றும் சொல்கின்றனர். சம்பந்தர் பதிகத்திலிருந்து இரு பாடல்கள்:


நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.
1.135.1 1449
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.
அருணகிரிநாதரின் திருப்பராய்த் துறைத் திருப்புகழின் கடைசிச் செய்யுட்களில் இருந்து,
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
லாசனன் வந்துல காக்கி வைத்திடு
வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக

மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய
ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.
நாவுக்கரசரின் தேவாரத்தில் இருந்து இந்தப் பழமையான பதியைப் பற்றி அறிய முடிகிறது.

கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.

அடுத்து உத்தமர் கோயிலையும் பிச்சாண்டார் கோயில், பிட்சாண்டார் கோயில் என்று சொல்வது உண்டு.இதுவும் திருச்சிக்கு அருகே உள்ளது. ஆனால் இந்தக் கோயிலில் மும்மூர்த்திகளையும் அவரவர் பத்தினிமாரோடு தரிசனம் செய்யலாம் என்று சொல்கின்றனர். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட கோயில் என்றும், இங்கே உள்ள மஹாலக்ஷ்மியிடம் வாங்கிய பிட்சைக்குப் பின்னரே பிரம்மனின் கபாலம் ஈசன் கையிலிருந்து அகன்றது என்றும் சொல்கின்றனர். வடநாட்டில் வேறு விதமாய்ச் சொல்லுவார்கள். தாருகாவனத்து ரிஷிகள் வேதங்களையும், அது சம்பந்தமான சாஸ்திர, சம்பிரதாயங்களை மட்டுமே கடைப்பிடித்துக் கடவுளையும், அவர் இருப்பையும் அலட்சியம் செய்ததோடு, தங்கள் யாகங்களாலும், தவங்களாலும் செருக்குடனும் இருந்துவந்தனர். ஆகவே அவர்களுக்குப் புத்தி புகட்டவே ஈசன் பிக்ஷாடனர் கோலத்தில் வந்தார். இதுவே நாம் தெரிந்து கொண்டது.

ஆனால் வடநாட்டில் சிலர் பிரம்மனின் தலையைக் கிள்ளியதும், அவர் கபாலமும், பிரம்மஹத்தி தோஷமும் ஈசனைப் பீடிக்கிறது. பிரம்மனும் ஈசன் என்று கூடப் பாராமல் நீ பிக்ஷை எடுத்து உண்டு வாழவேண்டும். எவ்வளவு போட்டாலும் இந்தக் கபாலம் அத்தனை பிக்ஷையையும் சாப்பிட்டு விடும். என்று இந்தக் கபாலம் நிறைகிறதோ அன்றே உங்கள் கையிலிருந்து இது அகன்று போகும்.” என்று சாபம் கொடுத்த்தாயும், அதிலிருந்து பிக்ஷாடனராக பிக்ஷை எடுத்து வந்த ஈசன், காசி மாநகருக்கு வந்து அங்கே அன்னபூரணியாக உணவு சமைத்து அனைவருக்கும் அளித்துத் தவம் செய்து கொண்டிருந்த அன்னையிடம் பிக்ஷை வாங்கியதாகவும், அன்னை ஒரு கரண்டி அன்னம் இட்டதுமே கபாலம் நிறைந்ததாயும் கூறுகின்றனர். அதன் பின்னர் பிரம்ம கபாலம் ஈசன் கையை விட்டு நீங்கியதாயும் கூறுகின்றனர். அந்த பிரம்ம கபாலத்தை மஹாவிஷ்ணு பத்ரிநாத்தில் இட்ட்தாயும் கூறுகின்றனர். பத்ரிநாத் செல்லும் அன்பர்கள் தப்த குண்டத்தில் குளித்துவிட்டு பிரம்மகபாலத்தில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

Friday, July 09, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பிட்சாடனர்!


அடுத்து நாம் காணப் போவது இந்த உலகையே தன் ஆட்டத்தால் ஆட்டி வைக்கும் ஈசனின் பிச்சை எடுக்கும் கோலம்.


பரந்துல கேழும் படைத்த பிரானை
`இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.

பிச்சையதேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியாதறஞ் செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே”//

என்று திருமூலர் தம் திருமந்திரத்தின் ஏழாம் தந்திரத்தில் இறைவனின் பிட்சாடனத் திருக்கோலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.

தாருகாவனத்து முனிவர்கள் தத்தம் மனைவியரோடு கூடி கடுந்தவம் செய்து வந்தனர். தவங்களால் பல சித்திகளையும் பெற்றனர். அளப்பரிய ஆற்றலையும் பெற்றனர். தாம் தவங்கள் செய்து பெற்ற ஆற்றலால் ஆணவம் அதிகம் ஆகியது முனிவர்களுக்கு. ஈசன் அருளாலேயே இவை கிடைத்தன என்பதையும் மறந்து, ஈசனையும் மறந்து, தம் தவமே சிறந்தது, தம் ஆற்றலே சிறந்தது, தாமே அனைத்திலும் வல்லவர்கள் என்னும் எண்ணம் மேலோங்கியது. செருக்கு அடைந்த அவர்களுக்குப் புத்தி புகட்ட ஈசன் நினைத்தார். உடனே போடப் பட்டது ஒரு கலந்து உரையாடல் கைலையில். கலந்து உரையாடியது ஈசனும், சாட்சாத் மகாவிஷ்ணுவும்தான். என்ன உரையாடினார்கள்?? தாருகாவனத்து முனிவர்களின் கொட்டத்தை எப்படி அடக்கவேண்டும் என்பது பற்றியேக் கலந்து பேசிக் கொண்டனர். அந்தப் படிக்கு ஈசன் ஒரு அழகான இளம் வாலிபனாக மாறினார். அரையிலே பாவம், அந்தப் பித்தனான பிச்சைக்காரனுக்கு ஆடை இல்லை. நிர்வாணக் கோலம். பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் வந்த கபாலம் கையில் திருவோடாக மாறிக் காட்சி அளிக்கின்றது. பக்கத்தில்?? உமை அம்மை எங்கே?? இந்தப் பிச்சைக்காரக் கோலத்தைக் கண்டு பயந்து ஓடிவிட்டாளா என்ன?? இல்லை, இல்லை எங்கேயும் போகவில்லை, தன் பதியும், சோதரனும் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றாள். தொப்புழ் வரையில் நீண்டிருந்த இடக்கையில் பிச்சைப் பாத்திரமாய்க் கபாலமும், வலக்கரத்தில் புல்லும் ஏந்திக் கொண்டு பிச்சை எடுக்கக் கிளம்புகின்றார், அனைவருக்கும் படியளக்கும் அண்ணல். இடக்காலை ஊன்றிக் கொண்டு, இது என்ன ஆச்சரியம்?? வலக்காலை வளைத்து, வளைத்து அசல் பிச்சைக்காரன் தோற்றான்! அப்படியே பிச்சைக் காரனைப் போல் நடந்து தாருகாவனத்தினுள் நுழைகின்றார் இந்தப் பிச்சைக்காரர். முனிவர்களின் பத்தினிகள் இருக்குமிடம் நோக்கிச் செல்லுகின்றார் பிச்சை எடுக்க.

பர்த்தாக்களுக்கு ஏற்ற பத்தினிமாராகச் செருக்குடன் தான் இருந்தனர் முனிவர்களின் பத்தினியரும். இந்த அழகர் அங்கே போய்ப் பிச்சைக்கு நின்றாரோ இல்லையோ, இவர் யார்? எங்கிருந்து வந்தார்?? பிச்சை ஏன் எடுக்கின்றார் என்பதெல்லாம் மறந்துவிட்டது ரிஷிபத்தினிகளுக்கு. வந்தவர் அழகில் அனைவரும் மயங்கினர். தங்கள் வீட்டு வேலைகளை மறந்தனர். தாம் யார் என்பதையும் மறந்தனர். அனைத்தும் மறந்து அந்தப் பிச்சைக்காரரைச் சென்று அருகில் பார்த்து மயங்கி நின்றனர். இது தான் சமயம் என வந்த பிச்சைக்காரன் அங்கிருந்து நகர முற்பட, ரிஷிபத்தினிகளும் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு தம் ஆடைகள் குலைவதையும் நினையாமல் அவர் பின்னே செல்கின்றனர். அதே சமயம் முனிவர்கள் தவம் செய்யும் இடத்தில் அவர்கள் கண் முன்னே தோன்றினாள் அதிரூப சுந்தரியான பெண்ணொருத்தி. காண்போர் கவரும் வண்ணம் அழகுப் பெட்டகமாய் விளங்கிய அவள் தன் இனிமையான குரலினால் அந்த முனிவர்களைக் கவர்ந்திழுத்தாள். மேனியோ மென்மை, குரலோ இனிமை, அழகோ சொல்ல முடியவில்லை. யார் இந்தப் பெண்ணரசி?? எங்கே இருந்து வந்தாள்? ஒன்றும் புரியவில்லை ரிஷிகளுக்கு. தங்கள் தவத்தை மறந்தனர். தங்கள் நிலையை மறந்தனர். தங்கள் செருக்கையும் மறந்தனர். அந்தப் பெண்ணைக் கண்டு மயங்கி நின்றனர்.

திடீரென அந்தப் பெண் அங்கிருந்து செல்ல ஆரம்பிக்க ரிஷிகளும் பின் தொடர, அவர்களுக்கு முன்னால் ரிஷிபத்தினிகள் ஓடுவதையும், ரிஷி பத்தினிகளுக்கு முன்னால் ஒரு பிச்சைக்காரன் அதிரூப லாவண்யத்துடன் செல்லுவதையும் கண்டதுமே அவர்களுக்குத் தங்கள் தவறு புரிந்தது. உடனேயே தங்கள் தவற்றை உணர்ந்த அவர்கள் அந்தப் பிச்சைக்காரனை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆபிசார வேள்வி ஒன்றைத் துவங்குகின்றனர். அந்த வேள்வியில் இருந்து சிங்கம், புலி, யானை, பாம்பு, முயலகன் என்னும் அசுரன் போன்றவர்கள் வர ஒவ்வொருவராய் பிட்சாடனர் மேல் ஏவினார்கள் தாருகாவனத்து ரிஷிகள். பாம்புகளை அணிகலனாய் அணிந்து கொண்டார் எம்பெருமான். விலங்குகளைக் கொன்று அவற்றின் தோலை ஆடையாக அணிந்து கொள்கின்றார். இனி மிச்சம் இருப்பது முயலகன் ஒருவனே. அவனையும் தம் திருவடியின் கீழ் போட்டு மிதிக்கின்றார். அவன் ஆணவம் அழிய, ரிஷிகளின் ஆணவமும் அழிந்து உண்மையை உணர்ந்து வந்தவர் சர்வேசன் என்பதை அறிந்து கொள்ளுகின்றனர்.

இந்தப் பிட்சாடனத் திருக்கோலம் காலம் செல்லச் செல்லக் கொஞ்சம், கொஞ்சம் மாறுபட்ட நிலைகளில் காண முடிகின்றது. வலக்காலை முன்னே எடுத்து வைத்து நடக்கும் கோலத்தில், இடக்கையில் உள்ள பிச்சைப் பாத்திரத்துடனும், காட்சி அளிக்கும் இவரின் வலக்கையில் உள்ள புல்லை ஒரு மான் தின்னும் கோலத்திலும் பார்க்கலாம். இடக்கரங்களில் திரிசூலம், உடுக்கை , பாம்பு ஏந்தியும் ஆடையாகப் பாம்பையே அரையில் அணிந்த வண்ணமும் தலையில் ஜடாமுடியுடனும், வலக்காலில் வீரக் கழல்களுடனும் காட்சி அளிக்கின்றார். வேதங்களைப் பாதுகையாக அணிந்த வண்ணமும், பாதச் சிலம்புகள் ஆகமங்களாகவும், பாம்புகள் யோகசாதனையின் குறியீடுகளாகவும் உள்ளன. இந்த பிட்சாடனரின் மற்றொரு கோலம் கஜசம்ஹார மூர்த்தியாகக் காண முடியும்.

Tuesday, July 06, 2010

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! சந்திரசேகரர்!

ஆடும் கூத்தனின் ஆட்டமும், அவனோடு போட்டியிட்ட உக்ரகாளியின் ஆட்டமும் பிரபலமானவை. காளிக்கும், ஈசனுக்கும் யார் பெரியவர்கள் என்பதில் போட்டி! அந்தப் போட்டியை நாட்டியம் ஆடி அதில் தோற்றவர் தாம் சிறியவர் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். காளியோ அம்பிகையின் அம்சமே ஆவாள். அவள் ஆடுவதற்குக் கேட்கவா வேண்டும்? அதிலும் கோபம் வேறே அவளுக்கு! இன்னும் ஆவேசமாக ஆட ஆரம்பித்தாள்! ஆனால் ஈசனோ இவளை வெல்லவேண்டும் என்ற குறிக்கோளுடனே இருந்ததால் ஆட்டம் சாந்தமாகவே இருந்தது. பார்க்க ஆநந்தமாயும் இருந்தது. ஆநந்த நடனம் ஆடி அதிலே லலாட திலகா என்னும் அம்சத்தைக் கொண்டு வந்தார். தன் காதுக்குழையைக் கீழே தவறவிட்டுத் தன் கால்களாலேயே அதை எடுத்துத் தன் காலை மேலே உயர்த்திக் காதில் மாட்டிக்கொள்கிறார். காளியால் அவ்வாறு காலை மேலே தூக்கமுடியுமா? நாணிப் போய்விடுகிறாள். தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறாள்.
காளியை சாந்தப் படுத்த ஈசன் ஆடிய ஆட்டமே சாந்திக்கூத்து எனப்படுவதாய்த் தெரிய வருகிறது. மனதைச் சாந்தப் படுத்தும் கூத்துக்கு சாந்திக்கூத்து என்று பெயர். இப்படி நம் கலைகளை நம் கடவுளர் மூலமே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. சிதம்பரம் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் 108 கரணங்களையும் ஆடும் கோலத்தைக் காணமுடியும். இது வரையில் நடராஜரின் தாண்டவங்களையும் அவற்றின் விதங்களையும் பார்த்தோம். அடுத்து நாம் காண இருப்பவர் சந்திரசேகரர்.

சந்திரன் தக்ஷ குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்ததும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்ததும், அதனால் தக்ஷன் அவனை அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்த கதையும் தெரிந்திருக்கும். அப்போது தன் சாபம் நீங்க ஈசனை வழிபட்டான் சந்திரன். அவனின் கலை முழுதும் தேய ஆரம்பித்து இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்ற நிலைமை. அப்போது ஈசன் வந்து அவனைக் காப்பாற்றுகிறார். மூன்றாம் பிறையன்று தேய்ந்திருந்த சந்திரனைச் சேகரம் செய்து தன் முடியில் சூடியதால், சந்திரசேகரர் என்ற பெயர் பெற்றார் ஈசன். சேகரன் என்பதற்குக் காப்பவன் என்ற பொருளும் வருகின்றது. முழுதுமாய்த் தேய்ந்துவிடாமல் சந்திரனைக் காத்து அருளியதாலும் இந்தப் பெயர் எனக்கொள்ளலாம். சந்திரசேகரத் திருமேனி மூன்று வகை என்று கேள்விப் படுகின்றோம். கேவல சந்திரசேகரர், உமா சந்திரசேகரர், ஆலிங்கன சந்திரசேகரர் ஆகியவை அவை ஆகும். கேவல என்ற சொல்லுக்கு இங்கே அது மட்டும், அல்லது தனித்த என்ற பொருள் தான் வரும். நாம் பொருள் கொள்ளும் கேவலம்=மட்டம் என்ற பொருளில் வரும். அது இல்லை. கேவல என்பது வடமொழிச் சொல். வடமொழியை எடுத்துக் கொண்டே இந்த இடத்தில் அர்த்தத்தைப் பார்க்க வேண்டும். அடுத்து சந்திரசேகரரின் திருமேனி வகைகளைக் காண்போம்.

தன்னந்தனியாக அம்பிகை இல்லாமல் ஈசன் மட்டும் பிறை சூடியவனாய்க் காட்சி அளிக்கும் கோலத்திற்கே “கேவல சந்திரசேகரர்” என்ற பொருள் வரும். “பித்தா, பிறைசூடி, பெருமானே! அருளாளா!” என்று பக்தர்கள் அனைவரும் போற்றித் துதித்து மெய்ம்மறந்து போகும் இந்தச் சந்திரசேகர மூர்த்தம், கையில் மான், மழுவுடனும், அபய ஹஸ்தங்களுடனும், ஊரு ஹஸ்த முத்திரைகளுடனும் காணப் படுவார். ஊரு என்ற வடமொழிச் சொல்லுக்குத் தொடை என்ற பொருள் வரும். கையைத் தொடையில் பதிந்த வண்ணம் காட்சி தருவார் இந்தச் சந்திரசேகரர். மிகச் சிலக் கோயில்களிலேயே இந்த மூர்த்தம் காணப் படுவதாயும், மாமல்லபுரம் திருமூர்த்தி குகையிலும், பட்டீஸ்வரம் கோயிலிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. இரண்டு இடங்களுமே பார்த்திருந்தாலும் பல வருடங்கள் ஆனபடியால் நினைவில் இல்லை.

அடுத்து உமா சந்திரசேகரர். அன்னை உமையுடன் காட்சி தருவார் இவர். அநேகமாய் எல்லாச் சிவாலயங்களிலும் உற்சவ மூர்த்தியாய்ப் பஞ்சலோகத்தில் வடிவமைக்கப் பட்ட இந்தத் திருமேனி பக்கத்தில் அன்னை உமை, கையில் மலர் ஏந்தும் பாவனையுடனும், இடக்கரத்தைத் தொங்கப் போட்ட வண்ணமும் காண முடியும். சந்திரசேகரர் பின்னிரு கைகளில் மான், மழுவும் முன்னிரு கரங்களில் அபய முத்திரையோடும் காணப் படுவார். முக்கியமாய்ப் பிரதோஷத்தன்று உலா வரும் மூர்த்தம் இது தான் என்றும் சொல்லப் படுகின்றது. சில கோயில்களில் கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்னால் இவ்வடிவம் அமைந்திருப்பதாயும் அவற்றில் திருவீழிமிழலை கோயிலும் ஒன்று எனவும் தெரியவருகின்றது. வட நாட்டுச் சிவத் திருத்தலங்கள் பலவற்றிலும் கருவறையில் உள்ள மூலவரான லிங்க ரூபத் திருமேனிக்குப் பின்னால் உள்ள சுவரில் இந்தச் சந்திரசேகர மூர்த்தம் உமை அம்மையோடு காணப்படும். தென்னாட்டிலும் சில கோயில்களில் மிக மிக அரிதாய்க் காண முடிகிறது. முக்கியமாய்க் கர்நாடகாவின் சில கோயில்களில் காணமுடியும்.

அடுத்து ஆலிங்கன சந்திரசேகரர்: பக்கத்தில் உள்ள உமை அம்மையை அணைத்த வண்ணம் காணப் படுவார் இவர். அதிலும் சென்னைக்கு அருகே மண்ணிவாக்கம் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீமிருத்யுஞ்சேஸ்வரர் ஆலயத்தில் அன்னை, ஈசனையும், ஈசன் அன்னையையும் அணைத்த கோலத்தில் பரஸ்பர ஆலிங்கன மூர்த்தமாய்க் காண முடியும் எனத் தெரிய வருகின்றது. (இன்னும் போகலை, எங்கே இருக்குனு கேட்டுட்டுப் போய்ப் பார்த்துட்டு வரணும்.) இந்த எல்லா வடிவங்களிலும் ஈசன் பிறை சூடிய எம்பெருமானாய்க் காட்சி அளிப்பார். கொடியேற்றத்தோடு நடக்கும் விழாக்கள் தவிர, மற்ற நாட்கள் ஆன பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி, போன்ற தினங்களில் வரும் வீதி உலாவுக்குப் பெரும்பாலும் சந்திரசேகர மூர்த்தமே வீதி உலாவில் வருவார். திருமங்கலக்குடி என்னும் ஊரில் அம்மை ஈசனை அணைத்தவண்ணம் காணப்படுகிறாள். ஆனால் ஈசன் லிங்க ரூபத்தில் இருப்பதாய் நினைவு. பல வருஷங்கள் ஆகிவிட்டதால் சரியாய் நினைவில் இல்லை.

Thursday, June 24, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்! ஆட்டத்தின் வகைகள்!

மற்ற விடங்கர்களைப் பற்றி அறியும் முன்னர் தஞ்சைக் கோயிலின் விடங்கர் பற்றி ஒரு சிறு அறிமுகம். எனக்கும் இது இப்போத் தான் தெரிய வந்தது. ராஜராஜ சோழனின் சிவபக்தி ஈடு இணையற்றது. தன் தலையில் சூடிக்கொண்டிருந்த சோழநாட்டு மணிமகுடத்தை விடவும் அவன் பெரியதாய் மதித்தது ஈசன் திருவடி நீழலையே. எவருக்கும் வணங்கா அவன் சிரம் ஈசன் திருவடியில் தோய்ந்து பதிந்து காணப்படுவதில் பெரு மகிழ்ச்சியும், உவகையும் கொண்டான் அவன். குறிப்பாய்ச் சிதம்பரம் நடராஜாவிடம் பெரும் பக்தி பூண்டவன். தில்லை அந்தணர்களே பரம்பரை, பரம்பரையாகச் சோழ அரசர்களின் தலையில் மகுடம் சூட்டும் உரிமையைப் பெற்றிருந்தது மட்டும் இதன் காரணம் அல்ல. ஆடவல்லான் என அப்பர் ஸ்வாமிகள் அன்புடன் அழைத்த தில்லை நடராஜனின் ஆநந்தக் கூத்தில் மெய்மறந்தான் ராஜராஜன். வடநாட்டிலிருந்து வெற்றி கண்டு வந்த ராஜராஜன் தன் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்க விருப்பமின்றி, அனைத்துப் பெருமையையும், வெற்றியையும் ஈசனுக்கே அர்ப்பணித்துத் தஞ்சைப் பெருங்கோயிலை உருவாக்கினான்.

அங்கே எல்லாமே பெரிது பெரிதாக சிற்பங்கள். பெரிய நந்திகேஸ்வரர், பெரிய ஆவுடையார், பெரிய லிங்க பாணம், பெரிய கருவறைக் கோபுரம் சுற்றுப் பிராஹாரங்களிலும் ஈசனின் பல்வேறு வடிவங்களில் பெரிய சிற்பங்கள் அமைத்தான். அதோடு விமானத்தை இருநூறு அடிக்கு மேல் உயரமாய்க்கட்டி தக்ஷிணமேரு என்றும் பெயர் வைத்திருக்கிறான். உள்ளேயும் தக்ஷிண விடங்கர் என்ற பெயரில் ஒரு மூர்த்தம் உண்டு. சோமாஸ்கந்தர் தான் அவர். மூலஸ்தான மூர்த்தியான அருவுருவான லிங்கத்தின் பிரதிநிதியாக அனைத்துச் சிவன் கோயில்களிலும் காணப்படும் சோமாஸ்கந்த மூர்த்திக்கு இந்தத் தஞ்சைப் பெருங்கோயிலில் தக்ஷிண விடங்கர் என்ற பெயர். என்ன?? குழப்பமா இருக்கா? விடங்கர் என்றால் உளியால் செதுக்காத மூர்த்தத்தைத் தானே சொல்வார்கள்? தஞ்சைக் கோயிலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உளியால் தானே செதுக்கி இருக்க முடியும்னு தோணுதா? ஆம், உண்மைதான், இங்கே விடங்கர் உளியால் தான் செதுக்கப்பட்டிருக்கிறார். எனினும் விடங்கர் என்ற பெயரையே ராஜராஜன் இந்த மூர்த்தத்துக்கும் வைத்துள்ளான். பொதுவாய் விடங்கர் என்றாலே வீதி விடங்கரும், திருவாரூரும் தான் நினைவில் வரும். சப்த விடங்க ஸ்தலம் இருந்தாலும் பெருமையும், பெயரும் பெற்ற தலம் திருவாரூரே ஆகும். ஒரு காலத்தில் சோழநாட்டுத் தலைநகராமாகவும் இருந்து வந்தது. ஆகவே பழைய தலைநகரான திருவாரூரை நினைவு கூர மட்டுமின்றி, தன் குலத்து முன்னோர்களான மனுநீதிச் சோழனிலிருந்து திருவாரூரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்த அனைத்துச் சோழ மன்னர்களின் நினைவாகவும் இங்கே உள்ள மூர்த்தத்துக்கும் விடங்கர் என்ற பெயரை ராஜ ராஜ சோழன் சூட்டியதாயத் தெரியவருகிறது. தியாகராஜாவை இப்படிப் பெருமைப் படுத்திய ராஜராஜன், நடராஜாவையும் பெருமைப் படுத்தி உள்ளான். இங்கே உள்ள நடராஜ மூர்த்தத்துக்கு “ஆடல்வல்லான்” என்றே பெயராகும். இந்தக் கோயிலின் ஆடவல்லானுக்காக வழிபாட்டில் ஏற்படுத்தப் பட்ட பல வகை உபசாரங்களில் ஆட்டமும், பாட்டமும் முக்கியமாக இருந்து வந்திருக்கிறது. அதிலே சாந்திக் கூத்து என்ற ஒன்றும் இருந்திருக்கிறது. அது என்ன என்று ஆராயப் போனால், உக்ரகாளியை அடக்கிய ஆடவல்லான், அவளைத் தோற்கடித்து, அவளுடைய உக்ரத்தை சாந்தப் படுத்தியதே சாந்திக்கூத்து என்ற பெயரில் வழங்கி வந்ததாய்த் தெரியவருகிறது. அது பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?

இந்த சாந்திக் கூத்தே தற்கால மலையாள நாட்டிய நாடக வகையான கதகளி ஆட்டத்தின் மூலம் என பரமாசாரியாள் அவர்கள் தெரிவிக்கிறார். இவை நாட்டியம் கலந்த நாடக வகையைச் சார்ந்தது என்றும் சொல்கிறார். நாட்டிய, நாடக வகைகள் சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என இருவகைப் பட்ட்து என்றும், விநோதக் கூத்தில் கொஞ்சம் ஹாஸ்யம், விநோதம், கலந்து பொம்மலாட்டம், கழைக்கூத்து, குடக்கூத்து(கரகாட்டம் போன்ற ஒரு வகை) இவை எல்லாமும் கொஞ்சம் வேடிக்கை, விளையாட்டு கலந்து ஆடப் பட்டதாயும், சாந்திக் கூத்து இவற்றிலிருந்து வித்தியாசப் பட்டதாயும் கூறுகின்றார். சாந்தி கூத்து நாலு வகைகள் என்று தெரிய வருகிறது. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா?

சொக்கம்: சுத்த நிருத்தம் என்று சொல்லப் படும் இதில் பாட்டுக்கு அபிநயமாக இல்லாமல் தில்லானா, ஜதிஸ்வரம் போன்ற அடவுகளைப் பிடித்து மனசை உயர்த்தும் வண்ணம் நளினமாய் உடலை வளைத்துக் கொண்டே அதற்கேற்றவாறு கை, கால்களையும் வளைத்துக் காட்டவேண்டும். இவற்றில் 108 கரணங்கள் உண்டெனத் தெரிய வருகிறது. அந்தக் கரணங்களை ஈசன் ஆடும் கோலத்தில் தஞ்சைப் பெருங்கோயிலின் கர்ப்பகிருஹத்தைப் பிரதக்ஷிணம் செய்யும் போது விமானத்தில் இரண்டாம் தளத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. கூர்ந்து கவனிக்கவேண்டும், நாட்டிய சாஸ்திரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் 108 கரணங்களும் சொல்லப் பட்டிருக்கிறதாயும் தெரிய வருகிறது.

அடுத்து மெய்க்கூத்து: இதில் நாயகன், நாயகி பாவத்தில் இறைவனை வழிபடுவது பற்றியே சொல்லப் படும். ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஐக்கியமாகும் பாவத்தில் பாடல்கள் அமைந்துள்ள தேவார, திருவாசகப் பாடல்களைக் கொண்டு அமைக்கப் படும்.

மூன்றாவது அவிநயம்: கவனிக்கவும் அவிநயம். விநயம் என்றால் என்ன அர்த்தமோ அதற்கு மாற்று என இங்கே அர்த்தம் கொள்ளக் கூடாது. அபிநயமே, அவிநயமாக இங்கே ஓரெழுத்து மாற்றிச் சொல்லப் படுகிறது. நவரசங்களையும் அபிநயம் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவதும் இதன் கீழே வரும். பல்வேறு விதமான அபிநயங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.

கடைசியாகச் சொல்லப் படுவது நாடகம்: ஒரு பெரிய கதையை எடுத்துக்கொண்டு அதை ஆடல், பாடல்கள், அபிநயங்கள் மூலம் நடித்துக் காட்டுவது. இவற்றில் சில உட்பிரிவுகள் உண்டு. சம்ஸ்கிருதத்தில் உள்ள பாடல்களுக்கு அபிநயித்துக்கொண்டு ஆடிப் பாடுவது ஆரியக் கூத்து எனவும், தமிழில் உள்ள பாடல்களுக்கு ஏற்ற கதையைத் தேர்ந்தெடுத்து ஆடுவது தமிழ்க்கூத்து எனவும் சொல்லப் பட்டது. இதிலே சாந்திக் கூத்து எங்கே இருந்து வந்தது? ஈசனும், காளியும் எங்கே வந்தார்கள்? கொஞ்சம் பொறுக்கவும்.

Friday, June 18, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

முசுகுந்தன் கதை அனைவருக்கும் தெரியும். ஏற்கெனவே என்னோட திருவாரூர்ப் பதிவிலே எழுதி இருக்கேன். சிறந்த சிவபக்தன் ஆன "முசுகுந்தச் சக்கரவர்த்தி" தேவேந்திரனுக்குத் தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தான். அதன் பலனாக அவனுக்குக் கிடைத்தவையே ஏழு விதமான நடராஜத் திருக்கோலங்கள். இவையே வேறுவிதமாயும் சொல்லப் படுகிறது. முசுகுந்தன் பூஜித்து வந்த நடராஜ மூர்த்தத்தைத் தேவேந்திரன் கவர்ந்து கொண்டு செல்ல, முசுகுந்தன் தேவேந்திரனுடன் போரிட்டு வென்றான். அவனின் நடராஜ மூர்த்தம் போலவே மற்றும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்து, முசுகுந்தனிடம் காட்டுகிறான் தேவேந்திரன். உன்னுடையது இவற்றில் எதுவோ நீயே பார்த்து எடுத்துச் செல் எனக் கூறுகிறான். இறை அருளால் சரியான மூர்த்தத்தைக் கண்டறிகிறான் முசுகுந்தன். அதுவே திருவாரூர் தியாகராஜா எனவும், மற்ற மூர்த்தங்களையும் முசுகுந்தனுக்கே தேவேந்திரன் அளித்தான் எனவும் அவை முறையே திருவாரூரைச் சுற்றி ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டதாயும் சொல்லப் படுகிறது.

முதலில் இந்தத் தியாகராஜா பற்றிய ஒரு விளக்கம். மஹாவிஷ்ணு பிள்ளை வரம் வேண்டி ஈசனைப் பிரார்த்திக்கிறார். அப்போது அவர் அம்மையையும் சேர்த்து நினையாமல் ஈசனை மட்டுமே வேண்டியதாகச் சொல்வார்கள். அம்மை அதற்காக மஹாவிஷ்ணுவைக் கோபித்ததாகவும், பின்னர் அம்மையோடு சேர்த்துத் தம் மருமகன் ஆன கார்த்திகேயனையும் சேர்த்து சோ+உமா+ஸ்கந்தனாக மனதுக்குள்ளாகவே ஆவிர்ப்பவித்து ஜபித்ததாகவும் ஐதீகம். அப்போது அவர் மூச்சுக்காற்று வெளியே போகும்போதும், உள்ளே வரும்போதும் ஈசன் ஆடிய அந்தத் தாண்டவமே அஜபா நடனம் எனப்படுகிறது. அந்தச் சமயம் அவர் தம் மனதிற்குள்ளாக ஈசனை இதயத்தில் நிறுத்தி மனதிற்குள்ளாகவே ஜப மந்திரங்களைச் சொல்லி வழிபட்டார். இப்படி வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளாகச் சொன்னதே அஜபா எனப்படும்.

திருவாரூர் - வீதி விடங்கர் - அஜபா நடனம்

வேதாரண்யம் - புவனி விடங்கர் -ஹம்சபாதா நடனம்

நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர் - விசி நடனம்

திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்

திருக்காரயல் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்

திருக்குவளை - அவனி விடங்கர் - ப்ருங்க நடனம்

திருவாய்மூர் - நிலா விடங்கர் - கமலா நடனம்

என்று சொல்லப் படுகிறது. பொதுவாக ஈசனின் திருநடனம் 9 வகை எனவும் சொல்லப் படுகிறது. அவை ஆனந்தத் தாண்டவம், காளி தாண்டவம் அல்லது காளி நிருத்தம், கெளரி தாண்டவம், முனி நிருத்தம், சந்த்யா தாண்டவம்,. சம்ஹார தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம் மற்றும் பிட்சாடனம். இதைத் தவிரத் தஞ்சை மாவட்டத்தின்
திருவெண்காட்டிலும், திருச்செங்காட்டாங்குடியிலும் ஈசனின் நாட்டியக் கோலங்களைப் பார்க்கலாம். திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் ஈசனின் இந்தக் கூத்தை ஐந்து
வகைகளாய்ப் பிரித்துள்ளார். அவை சிவானந்தக் கூத்து, அறிவையும், சுந்தரக் கூத்து, ஆற்றலையும், பொற்பதிக் கூத்து, அன்பையும், பொற்றில்லைக் கூத்து, ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து, அறிவு கூடுதலையும் குறிப்பதாய்ச் சொல்லுகிறார்.

சிவானந்தக் கூத்து: திருமந்திரப் பாடல்

"தானந்தமில்லாச் சதானந்த சத்தி மேல்
தேனுந்தும் ஆனந்தமாநடங்கண்டீர்:
ஞானங்கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கானது."

சுந்தரக் கூத்து:

"அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டங்கரியான் கருணை திருவுருக்
கொண்டங்கு உமை காணக் கூத்து தந்தானன்றே!"

பொற்பதிக் கூத்து:

தெற்கு வடக்கு கிழக்கு மேற்குச்சியில்
அற்புதமானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடஞ்செய்யுமே!"

பொற்றில்லைக் கூத்து:

"அண்டங்கள் ஓரேழும் அப்பொற்பதியாகப்
பண்டையாகாசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டனிற் சத்தி திரு அம்பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்து கந்தானன்றே!"

அற்புதக் கூத்து:

"இருவருங்காண எழில் அம்பலத்தே
உருவோடருவோடு அருபர ரூபமாய்த்
திருவருள் சத்திக்குள் சித்தனாந்தன்
அருளுருவாக நின்றாடலுற்றானே!"


அஜபா நடனம் ஒரு விளக்கம்: மஹாவிஷ்ணு ஈசனோடு, அம்மையையும், கந்தனையும் சேர்த்து நினைத்து வழிபட்டது பற்றி அந்த மூர்த்தம் சோமாஸ்கந்தராக இருப்பின், ஈசனோடு கூடே, அன்னையும், குமரனும் கூட பெருமாளின் மனத்தரங்கில் அஜபா நடனம் ஆடியதாக அல்லவா வரும்? என்று கேட்கின்றனர். பல தாண்டவ வடிவச் சிற்பங்களிலும், ஈசன் ஆடும்போது அன்னை அருகிருந்து ரசிக்கும்படியான சிற்பங்களைப் பார்த்திருக்கிறோம். அப்படியே இப்போதும் தெரிந்து கொள்ளவேண்டும். மஹாவிஷ்ணுவின் மூச்சுக்காற்றிலே மேலேயும், கீழேயும் ஈசன் எழுந்தாடியதை அருகே இருந்தவண்ணம் உமையும், கந்தனும் பார்த்துக்கொண்டிருந்தனர். இது நம் மனக்கண்ணால் மட்டுமே பார்த்துக் கேட்டு ரசிக்கவேண்டியது. அப்படியே உருவங்களோடு வந்துட்டாங்கனு நினைச்சால் அவ்வளவு தான்!

Wednesday, June 16, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

கெளரி தாண்டவம்: தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார். ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப் படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்துச் சொல்லப் படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கெளரியான அம்பிகையும் காணப் படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்துக் கைகள் ஒன்றில் பாம்பு காணப் படுகிறது.

ஆண்மயில் வடிவில் இறைவன் உறைந்த இடம் மயிலாடுதுறை. இறைவனை அடைய பெண்மயில் உருவில் ஸ்ரீதேவி, சரஸ்வதி துணை புரிய அம்பிகை தவம் செய்த இடம் மயிலாடுதுறை. இறைவியின் தவத்தை மெச்சி அவளை அடைந்த இறைவன், அவளை மகிழ்விக்க ஆடிய ஆட்டமே "கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது என்றும் கூறுகிறார்கள். இந்தக் கோயிலின் இந்தச் சபையை "ஆதி சபை" என அழைக்கிறார்கள். அப்பர் தேவாரத்தின் மயிலாடுதுறை பற்றிய பதிகத்தில் இருந்து இரு பாடல்கள் கீழே காணலாம்.

கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.
5.39.1
388

சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே

இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்துத் திரு உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர்
திரு உருவம் எங்கும் காணக் கிடைக்காத ஒன்று. இந்த மரகதநடராஜரைச் சுய உருவில் காணவேண்டுமானால், மார்கழித் திருவாதிரை அன்று மட்டுமே காண முடியும். மற்ற நாட்களில் அவர் மேல் சந்தனக் காப்பு சாத்தப் பட்டே காண முடியும். இவரை அன்னையின்
வேண்டுகோளுக்கிணங்கி அறைக்குள் அன்னை மட்டுமே காணுமாறு ஆடியதாய்க் கூறுகின்றனர். "அறைக்குள்" ஆடியது திரு உத்தரகோசமங்கையிலும், "அம்பலத்தில்" சிதம்பரத்திலும் ஆடியதாய்க் கூறப்படுகிறது. மாணிக்க வாசகர் இங்கே பாடியருளிய நீத்தல் விண்ணப்பம் முதலிரு பாடல்கள் கீழே காணலாம்.

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105

கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106





இவற்றைத் தவிர எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ மூர்த்தம் இருந்து வந்தாலும், இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியினால் பெறப்பட்ட 7 விதமான நாட்டிய பாவங்களைக் காட்டும் "விடங்க மூர்த்தி"களும் உள்ளனர். நாளை பார்ப்போமா?

Thursday, June 10, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! நடராஜர்!

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே


திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் தனித் தன்மை பெற்று விளங்குகிறது. மற்ற ஊர்த்துவ தாண்டவங்களில் நடராஜரின் வலக்கால் உடம்போடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி நின்றாடுவார். திருவாலங்காட்டிலோ, இடக்கால் பாதத்தைச் செங்குத்தாகத் தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக வரும்படியான அமைப்பில் உள்ளது. காளியின் செருக்கை அடக்க ஆடப்பட்ட ஆட்டமே ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப் படும். தில்லையிலும் பொன்னம்பலத்தின் எதிரே உள்ள நிருத்த சபையில் ஊர்த்துவ தாண்டவ சிற்பம் தனி சந்நிதியாக உள்ளதைக் காண முடியும். நெற்றிக்கு நேராகத் திலகம் வைக்கும் பாவனையில் காணப்படும். இதை "லலாட திலகா" என்று சொல்வதுண்டு. இன்னும் சிலர் காதில் அணிந்திருந்த குழையைக் கீழே இருந்து இடக்காலால் எடுத்து, காலாலேயே அணிந்ததாகவும் அதைக் கண்ட காளி தன்னால் அப்படிச் செய்ய முடியாது என வெட்கித் தலை குனிந்ததாகவும் சொல்வார்கள்.

காளியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை என்ன தான் பெண்ணாக இருந்தாலும் காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்து ஆட முடியாது அல்லவா? மேலும் இதில் ஆணாதிக்கம் என்பதெல்லாம் கிடையாது. இறைவன் அவளை ஆட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. உன்னால் முடியுமா என்பது தான் கேள்வி! முடியும் என்றாலும் பெண்களுக்கு என ஒரு எல்லைக் கோடு உண்டு என்பதை அன்னை தானாகவே வகுத்துக் கொண்டாள். பண்பு என்பது எல்லைக் கோட்டைத் தாண்டாது என்பதையும் உணர்த்தினாள். இதில் வெற்றி, தோல்வி என்பதை விட பெண்ணின் பெருமையும், அவள் தன்னிலையை ஒருக்காலும் மறக்கக் கூடாது என்பதுமே உணர்த்தப் படுகிறது. சக்தியானவள் ஆக்கும் சக்தியாக வெளிப்படுவதே அன்றி, தன்னையும் தன்னிலையையும் மறந்து அழிக்கும் சக்தியாக மாறக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துவதாய் என் கருத்து.

அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.


சம்ஹார தாண்டவம்: எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப் படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப் படும் இது இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை அடக்கும் வேளையில் ஆடப் படும் கூத்தாகச் சொல்லப் படுகிறது. அபஸ்மார புருஷனை அடக்கும் இடக்காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகள் அபய ஹஸ்தத்துடனும், மேலும் சூலம், உடுக்கை,போன்றவற்றுடனும், இடக்கைகளில் மண்டை ஓடு, அக்கினியுடனும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப் படுகிறது. வலப்பக்கம் நந்தியும், இடப்பக்கம் கெளரியும் காணப் படுகின்றனர். பிரளய காலத்தில் ஏற்படும் இந்த ஊழிக் கூத்தில் இறைவன் தன்னில் தானே அமிழ்ந்து போய், சகலமும் தானே என்பதை உணர்த்தும் வண்ணம் ஆடுவதாயும், இதுவும் ஒரு வகையான ஆனந்தத் தாண்டவம் தான் என்றும் சொல்லப் படுகிறது.

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.



ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் ஒரு நாமம் இந்தப்பிரளயகால நடேசனின் கூடவே சாக்ஷியாக நிற்பவள் என்ற அர்த்தத்தில் வரும். "மஹேச்வர, மஹாகல்ப, மஹா தாண்டவ சாக்ஷிணி" என்பதற்கு இதுதான் அர்த்தம்னு நினைக்கிறேன். (மெளலி, உதவிக்கு வரவும்.)