எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

26. மரகத மாணிக்கேஸ்வரர்

ஆகஸ்ட் 21, 2006

கருவிலிக்கு வடக்கே முட்டையாற்றைக் கடந்தால் ஒரு மைல் தூரத்தில் "பரவாக்கரை" என்னும்ஊர் வருகிறது. இதுதான் என் கணவரின் முன்னோர்களின் பூர்வீக ஊர். என் மாமனாரின் அப்பா அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றப் புல்லாங்குழல் வித்வான். கும்பகோணத்தில் தங்கி இருந்து சங்கீதம் கற்பித்துக் கொண்டிருந்திருக்கிறார். தற்சமயம் உள்ள புல்லாங்குழல் வித்வாம்சினியான "திருமதி நவநீதம்" இவருடைய சிஷ்யை. இப்போ இருக்காரா என்னனு தெரியாது. என் மாமனாரின் அப்பாவைப் பற்றிய குறிப்பு பழைய தினமணி கதிர் சங்கீத மலரிலே பார்க்கலாம். அந்தக் காலத்தில் கிராமஃபோன் ரெக்கார்டில் பதிவது குறைவாகவும், அது சரியில்லை என்றும் கருதப் பட்டதால் இவரின் பாடங்கள் பதிவில் இல்லை எனக் குறிப்பிடும் இவர், தன் குருநாதர் ஆன என் மாமனாரின் அப்பா அகில இந்திய வானொலிக்காகக் கச்சேரி செய்ய நாள் குறித்திருந்த சமயம் திடீரென இறந்துவிட்டதாகக் கூறி இருக்கிறார். என் மாமனாரின் அண்ணா சில காலம் வாசித்து விட்டுப் பின் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தில் விட்டு விட்டார். இப்போது ஊருக்குள் போவோம்.

ஊருக்குள் நுழையும் போதே முதலில் வருவது பெருமாள் கோவில். கருவேலியில் இருந்து வந்தால் வரும்.ஆனால் வடமட்டத்தில் இருந்து வந்தால் முதலில் "பொய்யாப் பிள்ளையார்" கோயில் வரும். அது தாண்டிய உடனேயே சற்றுத் தூரத்தில் வருகிறது, மரகத மாணிக்கேஸ்வரர் கோயில்.. நான் கல்யாணம் ஆகி வந்த சமயம் சிவன் கோயில் இடிபாடுகளைத் தான் பார்த்திருக்கிறேன். நாங்கள் அதிகம் கருவேலி வழி வந்து விடுவதாலும், என் மாமனார் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பெருமாள் கோவிலுக்கும், மாரி அம்மன் கோவிலுக்கும் மட்டும் போய்விட்டுப் போய் விடுவோம். சிவன் கோயிலுக்கு என்று போனது கூட இல்லை. அம்மன் விக்ரஹம் களவாடப் பட்டு மாணிக்கேஸ்வரர் மட்டும் வெட்ட வெளியில் தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பார். பார்த்திருக்கிறேன். கடைசியில் எங்கள் சொந்தக்காரரும், தாயாதியுமான திரு மத்யார்ஜுனன் (Retd. KCUB.) அவர்களின் பெரு முயற்சியாலும், அவருடைய சொந்தக்காரர் திரு செளந்திர ராஜன், (Retd. Professor, Indian Institute of Science) , முயற்சியாலும், காஞ்சிப் பெரியவர்கள் ஆசியினாலும் கோவிலை மறுபடி கட்டி, அம்பாள் சிலையும் புதிதாகப் பிரதிஷ்டை செய்து 2003, ஜூன் மாதம் கும்பாபிஷேஹம் செய்தார்கள்.

திரு செளந்திரராஜன் அவர்கள் தமிழில் ஈடுபாட்டுடன் வரலாறில் ஆராய்ச்சியும் செய்வதில் வல்லவர். அவர் தம் ஆராய்ச்சியின் மூலமும், அவருடைய தாத்தா கூறியதின் பேரிலும் இந்தக் கோயில் திருமூலரால் பாடப்பட்ட தலம் என்று தெளிவாக்கி இருக்கிறார். மரகத மாடம் என்று கூறப்படும் இந்தக் கோயில் திருமூலரால் கட்டுவிக்கப் பட்டது என்றும் கூறுகிறார். அகத்தியர் காலத்தவரான திருமூலர், நந்தி எம்பெருமானிடம் நேரிலே உபதேசம் பெற்றவர். சிவயோகம் பயின்று நந்தி எம்பெருமானால் "நாதன்" என்ற பெயரை அடைந்தவர். சைவ ஆகம சம்பிரதாயத்தில் நந்தி பெருமான் முதன்மை குரு. அவருக்கு நேர்சீடர்கள் 4 பேர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர். இது தவிர சிவயோக முனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் நால்வர். எட்டுப் பேரும் சித்தர்கள். நந்தியின் மூலம் சிவ ஆகமத் தத்துவங்களையும்,,சிவ யோகத்தையும், சிவ சித்தாந்த ஞான போதத்தையும் கற்ற திருமூலர் தில்லையை அடைந்து யோக நிஷ்டையில் சில காலம் இருந்து பின் தெற்கே வந்த போது திருவாவடுதுறையில் மூலன் என்ற இடையனின் உயிரற்ற உடலில் புகுந்து பின் பரவாக்கரை, திருவாவடுதுறை ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்திருக்கிறார். பரவாக்கரையில் நிஷ்டையில் அமர்ந்து, "ஆணிப்பொன் மன்றினில்" "செவ்வனிற்செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமாய்" அந்த "மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய்" "மாணிக்கத்துள்ளே மரகத மாடமாய்" ஆடும் திருக்கூத்தைத் தொழுது மாணிக்கேஸ்வரரையும், மரகதவல்லியையும் பாடி தொழுது இருக்கிறார். சிவபஹியான பரவாக்கரையில் நவாக்கர் சக்ர, பஞ்சாக்கர விதி மூலம் மரகதவல்லி சமேத மாணிக்கேஸ்வரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்.

இந்தக் கோயிலானது தற்சமயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேஹம் முடிந்ததும் நித்தியப்படி பூஜை முதலிய பொறுப்பை ஊர்க்காரர்கள் ஏற்றுச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.மரகதவல்லி அம்மை தெற்கு நோக்கி யோக சக்தியாக நவாக்கரி சக்கரத்தில் அருள் பாலிக்கிறாள். மாணிக்கேஸ்வரரோ செஞ்சுடர் மாணிக்க, பிந்து-நாத சக்தி சிவ லிங்கம் என்று போற்றப்பட்டு திருச்சிற்றம்பல முக்தியை அருளுகிறார். மற்றும் நவக்ரஹம், பைரவர், தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வடக்கு நோக்கி இருக்கும் துர்க்கை போன்ற சன்னதிகள் எல்லாம் இருக்கின்றன. பரவாக்கரை என்ற பெயருக்கு ஆண்டவனின் பிரகாச பிந்துவினால் முக்தி கிடைக்கும் என்று அர்த்தம் திருமந்திரம் மூலம் தெளிவாகத் தெரிவதாக திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறுகிறார். இந்த ஊர் சிவன் கோயில் பற்றி என் மாமனார், மாமியார் அதிகம் கூறியது இல்லை என்பதால் நான் திரு செளந்திர ராஜன் அவர்கள் கூறியதையே எழுதி இருக்கிறேன்.

3 comments:

D.ANBUTHAMBI said...

நவாக்கரி சக்கரம் அங்கு இருகிறதா தயவு கூர்ந்து கூறவும்

D.ANBUTHAMBI said...

நவாக்கரி சக்கரம் அங்கு இருகிறதா தயவு கூர்ந்து கூறவும்

KILLERGEE Devakottai said...

சௌந்தரராஜன் என்றதும் பின்னணி பாடகரை குறிப்பிட்டீர்களோ என்று நினைத்தேன்.