எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 26, 2006

9. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் - 2

மே 29, 2006

துங்கா நதியில் நாங்கள் போன சமயம் அதிகம் தண்ணீர் இல்லை. மீன்கள் மிகப் பெரியவை. மேற்கில் இருந்து கிழக்கே பாயும் துங்கா நதி சரியாகத் தமிழ் நாட்டை வந்து அடைந்திருக்க வேண்டும். அந்த அளவு அதிர்ஷ்டம் நமக்கு ஏது? ஆனால் சற்று தூரம் கிழக்கே போய்ப் பின் வடக்கே போகும் துங்கா ஷிமோகாவிற்குப் பின் பத்ராவைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. ஆகவே சிருங்கேரியில் துங்கா மட்டும் தான். படிக்கட்டுகளில் இறங்கிக் கீழே போனோம். குளிர்ந்த காற்று வீசியது. படித்துறையில் கடவுளை ஆராதிப்போர் மற்றும் மீன்களுக்கு உணவு அளிப்போர் கூட்டம் நிரம்பி இருந்தது. சற்று நேரம் அங்கே செலவிட்டு விட்டுப் பின் மேலே ஏறி "நரசிம்மவனம்" என்னும் ஸ்ரீமஹாஸ்வாமிகள் இருக்கும் இடம் நோக்கிப் போனோம். மிகவும் அதி அற்புதமான இயற்கைச் சூழ்நிலை. அமைதி கோலோச்சி இருந்தது.வேதம் படிக்கும் பையன்கள் மடத்து நந்தவனத்தில் அவர் அவர்களுக்கு இஷ்டமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பாடம் கேட்டுக் கொண்டும் விவாதம் செய்து கொண்டும் இருந்தார்கள். உள்ளே மடத்தின் கூடத்தில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். நாங்களும் போனோம்.

ஸ்ரீமஹாஸ்வாமிகள் வருபவர் எல்லாரையும் அவர் தம் பேர், ஊர் முதலியன கேட்டுக் கொள்கிறார். யாரையும் விடுவது இல்லை. பக்தர்கள் கூறும் விண்ணப்பங்களையும் செவி மடுக்கிறார். தரிசனம் முடிந்து அறைக்குத் திரும்புகிறோம். மறுநாள் காலை சிருங்கேரியைச் சுற்றி ஆதி சங்கரர் ஸ்தாபித்து இருக்கிற 4 திசைக்கும் காவல் ஆக உள்ள தெய்வங்களை தரிசிக்கக் கிளம்புகிறோம். முதலில் புராதனமான ஒரு சிவன் கோயில். மஞ்சுநாத ஸ்வாமி தான் இங்கேயும். கோயில் மிக உயரத்தில் இருக்கிறது. கூட்டம் குறைவு என்றாலும் பராமரிப்புப் பிரமாதம். அங்கிருந்து காலபைரவர் கோயில்,(ஆதி சங்கரர் நியமித்தது,)கெர்ரெ ஆஞ்சனேயர் கோயில், காளி கோயில், துர்கா பரமேஸ்வரி கோயில் (இங்கு துர்கையின் வலது பக்கம் லிங்க ரூபத்தில் ஈசன் அருள் பாலிக்கிறார். எல்லாக் கோயில்களும் மடத்து நிர்வாகம். அவர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவு எல்லாம் மடத்தைச் சேர்ந்தது. யாருமே வெளியில் போய் வேலை பார்க்கப் பிரியப் படவில்லை. மடத்தின் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

எல்&டியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரால் மடம் நிர்வகிக்கப் படுகிறது. ஆதி ஆச்சாரியரின் வழிமுறைகளை மாற்றுவது இல்லை. எல்லாரும் முழுமனத்துடன், செய்வதால் ஒரு புனிதம் நிரம்பி இருப்பது உணரப்படுகிறது.பிறகு அங்கிருந்து "கிக்கா" எனும் மலைப் பிராந்தியத்தில் உள்ள ரிஷ்யசிருங்கரின் ஆலயத்திற்குப் போகிறோம்.காசியபரின் மகன் ஆன விபாண்டகரின் மகன் தான் ரிஷ்யசிருங்கர். இவர் பிறந்ததில் இருந்து பெண்வாடையே படாமல் வளர்ந்தவர். அவர் இருக்கும் இடத்தில் நல்ல மழை பெய்யும் என்பதை அறிந்த "ரோமபாத மன்னன்" தன் நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரைப் பெண்களைக் காட்டி, அப்பெண்களை அவருக்குப் பணிவிடை செய்ய வைத்துத் தன் நாட்டிற்கு வரவழைக்கிறான். ரிஷ்ய சிருங்கர் வந்ததும் நல்ல மழை பெய்கிறது. பின் தன் மகளான "சாந்தை"யை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறான். சாந்தையுடன் காட்டுக்கு மீண்டும் வரும் முனிவர் பின் தசரதனுக்காக "புத்திர காமேஷ்டி யாகம்" செய்ய அயோத்தி செல்கிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய விவரங்கள் தெரிய வில்லை. ஆனால் அவர் ஈசனுடன் ஐக்கியம் ஆனதாகச் சொல்லப் படுகிறது.மேற்குறிப்பிட்ட கோவிலில் லிங்க வடிவில் இருக்கும் ஈசனின் லிங்க பாகத்தில் மான் கொம்புகள் காணப் படுகிறது. அதுதான் ரிஷ்யசிருங்கர் என்றும் அவர் தன் மனைவியையும் மடியில் வைத்துக் கொண்டுள்ளார் என்றும் (ஒரு பெண் உருவம் தெரிகிறது) சொன்னார்கள். ரிஷ்ய சிருங்கருக்கு மான் கொம்புகள் உண்டு. அவர் மனைவி சாந்தைக்குத் தனியாக சன்னிதி இருக்கிறது.

நாங்கள் போகும்போது ஈசனுக்கு 11 மணி அளவில் தினம் செய்யும் அபிஷேஹ வேளை என்பதால் சாந்தை சன்னிதியில் மிக நன்றாக அர்ச்சனை செய்து கொடுத்தார் அந்தக் கோயிலின் குருக்களான விஸ்வநாத பட் என்பவர். கோயில் கர்நாடக அரசின் அறநிலையத் துறையின் கீழ் வருகிறது. என்றாலும் அதன் புனிதம் கெடாமல் பாது காக்கப் பட்டு வருகிறது. விஸ்வநாத பட்டும் இன்னோர் குருக்களும் முறை போட்டுக் கொண்டு கோயிலின் பூஜைகள் செய்து வருகிறார்கள். திரு விஸ்வநாத பட் சொன்ன கதை இது."சாந்தை" தசரதன் மகள் என்றும், தசரதன் தான் ரிஷ்யசிருங்கருக்கு சாந்தையைத் திருமணம் செய்து வைத்ததாகவும் கூறுகிறார். ஆனால் சாந்தையின் தாய் கெளசல்யா தேவி இல்லை என்றும் சொன்னார். அவர் என்னிடம் கேட்ட கேள்வி இது தான்'சாந்தையின் தாய் யார்? எனக்குத் தெரியவில்லை. குமரனோ, சிவமுருகனோ, இன்று புதிதாகக் "கடி மன்னன்" பட்டம் வாங்கி உள்ள செல்வனோ தான் வர வேண்டும். ஆராய்ச்சி செய்து சொல்ல. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். இன்றும் சிருங்கேரியில் மழை பூரணமாகப் பெய்து விடும் என்கிறார்கள். தமிழ் நாட்டில் இருந்து மழை வேண்டி நிறையப் பிரார்த்தனைகள் ரிஷ்ய சிருங்கர் கோயிலுக்கு வருகிறதாம். கோயிலில் சொல்கிறார்கள்.

2 comments:

கோமதி அரசு said...

நன்றாக இருக்கிறது விவரங்கள்.

Geetha Sambasivam said...

நன்றி கோமதி!