எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 27, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! திர்புராந்தகர்!


அனைவரும் ஈசனிடம் சென்று சிறந்த சிவபக்தர்கள் ஆன தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகியோர் தாங்கள் வாங்கிய வரங்களால் அனைவரையும் பயமுறுத்துவதையும், கொடுமைகள் செய்வதையும் எடுத்துரைத்தனர். அவர்களின் சிவபக்தியே அவர்களைக் காத்தும் வருவதாயும், ஈசனால் மட்டுமே இதற்கு ஒரு வழி காணமுடியும் என்றும் வேண்டிக் கேட்டனர். புன்னகை புரிந்த ஈசன் அவர்களுக்குத் தேர் ஒன்று விசித்திரமான முறையில் தயாரிக்கக் கட்டளையிட்டார். மேலும் தேவர்களின் சக்தியில் சரிபாதியைத் தனக்குத் தருமாறும் கேட்டார். அவ்விதமே விசித்திரமான தேர் தயாராயிற்று. பூமியானது தேரின் தட்டாகவும், பாதாளலோகங்கள் ஏழு, கீழேயும், வானுலகங்கள் ஏழு மேலேயும் அமைந்தன. விந்தியமலையானது தேரின் குடையாக வந்து நின்றது. தேருக்குச் சக்கரங்கள் தேவையே? சூரிய, சந்திரர் முன் வந்தனர். இருவரும் சக்கரங்கள் ஆக, தேரின் அச்சாக உதயமலையும், அஸ்தமன மலையும் அமைந்தன. நான்கு வேதங்களும் தேரின் நான்கு குதிரைகளாக மாற, தேரின் கால்களாக நான்கு பருவங்கள் அமைந்தன. பிரமன் தானே சாரதிப் பொறுப்பை ஏற்றார். பிரணவமே சாட்டையாக அமைந்தது. சப்த நதிகளும் சாமரம் வீசினர். எட்டு வகை நாகங்களும் தேரைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து கொண்டன. திருக்கைலையில் இந்த்த் தேர் நிறுத்தப் பட்டது. தேவர்கள் அனைவரும் தங்கள் சக்தியில் சரிபாதியை ஈசனுக்கு அளித்தனர்.

எல்லாம் ஆயிற்று! ஆயுதம்?? ஈசன் என்ன சொல்லப் போகிறாரோ என அனைவரும் காத்திருக்க, மேருமலை வில்லாக வளைக்கப் பட்டது. பாம்பரசன் வாசுகியை அதில் நாணாகப்பிணைத்தார். திருமால் அம்பின் தண்டாக மாறச் சம்மதிக்க, அம்பின் கூர் நுனியில் அக்னி குடி கொண்டான். அம்பின் வால்பக்கம் சிறகாக வாயு அமர, (அப்போத் தானே அம்பு வேகமாய்ப் பறக்கும்?) ஆயுதமும் தயார் செய்யப் பட்டது. உமையொருபாகன் உமையையும் கூட அழைத்துக்கொண்டே அந்தத் தேரில் அமர்ந்தார். தேரும் கிளம்பிற்று. முப்புரங்களும் கூடும் காலத்தை எதிர்நோக்கிச் சென்றது தேர். சிவனடியார்களும், சித்தர்களும், ரிஷி முனிவர்களும் வாழ்த்திப் பாட , அனைவரும் வில்லில் இருந்து அம்பு கிளம்பி முப்புரத்தையும் தாக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் நல்ல மழைக்காலத்தில் அபிஜித் முஹூர்த்தம் என்று சொல்லப் படும் நேரத்தில் முப்புரங்களும் கூடி நிற்க, ஈசன் அந்த முப்புரங்களையும் பார்த்துத் தனது “அட்டஹாசம்” என்னும் சிரிப்பொன்றை உதிர்த்தார். முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. அனைவரும் திகைத்தனர். என்றாலும் அசுரர்கள் இறக்கவில்லையே எனக் கவலையுற ஈசன் வில்லில் இருந்து அம்பை எய்தார். அது திரிபுரத்தை ஒட்ட அழித்ததோடு மட்டுமின்றி அசுரர் மூவரையும் அழித்தது.

படம் அனுப்பி வைத்த நடராஜ தீக்ஷிதருக்கு நன்றி.

No comments: