எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, December 16, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா ! 5


சோணகிரி வலம் வருதல் பிறவி எனும்
பெருங்கடற்குத் தோணி ஆகும்
ஏழ்நரகக் குழி புகுதாது அரிய முத்தி
வழிக்கு ஏற ஏணி ஆகும்
காண் அரிய தவத்தினுக்கும் அறத்தினுக்கும்
அரும்பொருட்கும் காணி ஆகும்
வாள் நுதல் மின் இடத்திருக்கும் கண்ணுதலை
மனம் உருக்கும் மகிழ்ச்சியாகும்.”

என்னும் தலப் புராணப்பாடல் ஒன்று கிரிவல மகிமையைக் கூறுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் கோயில்களையும் அஷ்டலிங்கங்களையும் பார்ப்போமா?? தேயு எனப்படும் அக்னியே இங்கே ஜ்யோதிர்லிங்க வடிவாகி ஸ்ரீசக்ர வடிவில் உள்ள இந்தப் பூவுலகின் உன்னதமான ஒப்பற்ற மேருவாக அருணாசலேஸ்வரர் என்ற பெயரில் விளங்குகிறார். இம்மலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் சிவபதம் கிடைக்கும் எனவும், திங்கள்கிழமை வலம் வந்தால் இந்திரனைப் போன்ற சிறப்பான வாழ்க்கையும், செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் பிறவிப் பிணி நீங்கிவிடும் எனவும், புதன்கிழமை வலம் வந்தால் தேவர்களாகும் தகுதி கிடைக்கும் எனவும், வியாழனன்று வலம் வந்தால் மேலான பதவி சுகம் கிடைக்குமெனவும், வெள்ளியன்று வலம் வந்தால் விஷ்ணு பதவி கிடைக்குமெனவும், சனிக்கிழமை வலம் வந்தால் நவக்ரஹ தோஷங்களும் நிவர்த்தி அடையும் எனவும் புராணங்கள் கூறுகின்றன. இனி கிழக்குத் திசையில் உள்ள ஸ்ரீ இந்திர லிங்கத்தைப் பார்ப்போமா?


கிரிவலம் வரும்போது எந்த இடத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது நம் வசதியைப் பொறுத்தது என்றாலும் இப்போது எழுதும் வசதிக்காகக் கிழக்கே இருக்கும் இந்திரலிங்கத்தில் ஆரம்பிக்கிறேன். அறியாமை நீங்கவும், இருள் நீங்கவும், ஏன் அறியாமையே இருள் தானே? ஆகவே அவற்றை ஒழிக்க வஜ்ராயுதம் தாங்கிக் காட்சி அளிக்கிறார் இங்கே ஈசன். நாம் அறவழியில் செல்ல வேண்டி நம் வாழ்க்கைக்கே த்த்துவமான அறநெறியை அள்ளித்தருகிறார். இந்திரன் ஈசனை வணங்கி வழிபட்ட லிங்கம் என்று சொல்லப் படுகிறது.

அடுத்துத் தென் கிழக்குத் திசை. நீங்கள் கிழக்கே பார்த்து நின்றால் உங்கள் வலப்பக்கம் மூலையில் வரும். இது அக்னி மூலை எனப்படும். அக்னி அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான ஒன்று. வேள்வியில் மூட்டப்படும் அக்னிதேவன் ஏழுவகைப்படுவான் எனவும் ஏழு நாக்குகள் உண்டெனவும் கூறுவார்கள். நம் சார்பில் இறைவனிடம் வேண்டுதலை வைப்பவன் அக்னி பகவான். அக்னி ஒவ்வொரு யுகங்களிலும் மாறாமல் தொடர்ந்து வந்து இணைப்புச் சங்கிலியாய் இருக்கிறது. இங்கே அக்னி வழிபட்டதாய்க் கூறப்படுகிறது.

அடுத்துத் தென் திசை. ம்ருத்யு எனப்படும் மரணத் தெய்வம் ஆன யமனின் திசை. நம் மனதைப் பரிசுத்தப் படுத்தினால் மீண்டும் பிறவி ஏற்படாது. மாயையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் பிறவியும், மறுபிறவியும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். அத்தகையதொரு துன்பத்திலிருந்து காப்பவர் யமலிங்கம். ஆன்மாவைக் கண்டருள உதவி செய்வதோடு ஈசனோடு ஆன்மா இரண்டறக் கலக்கவும் உதவுவார்.

அடுத்துத் தென்மேற்குத் திசை. நாம் செய்யும் அனைத்துக் கெட்ட செயல்களிலிருந்தும் விடுதலை பெற இவரை வழிபட வேண்டும். ஸ்ரீநிருதிலிங்கமான இவரை வழிபட்டால் நம் பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆத்மார்த்தமாக அமர்ந்து ஒரே முனைப்போடு இவரை வழிபட்டால் உள்ளத்தினுள்ளே ஜோதிமயமான தரிசனம் ஏற்படும் என ஞாநிகள் கூற்று. தென் திசையிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பும் மலைப்பாதையில் அமைந்துள்ளது ஸ்ரீநிருதி லிங்கம்.

ஸ்ரீவருணலிங்கம் இங்கே மேற்குத் திசையில் காட்சி அளிக்கிறார். நீரின்றி அமையாது உலகு என்பதற்கொப்ப இந்தப் பரந்த உலகில் மட்டுமல்லாது மூவுலகிலும் உள்ள நீருக்கெல்லாம் அதிபதியாக விளங்கும் இவர் வழிபட்ட இந்த ஸ்ரீ வருணலிங்கத்தை வழிபட்டால் நாடு செழிக்கும். நீர்நிலைகள் நிரம்பும், அனைவரையும் மகிழ்வோடு வாழ வைக்கும் ஸ்ரீவருணலிங்கத்தை வருணன் ஸ்தாபித்ததாய்க் கூறப்படுகிறது.

வடமேற்குத் திசையில் உள்ள ஸ்ரீவாயுலிங்கம் நம் ஜீவன் என்றே கூறலாம். காற்றில்லாமல் யாருக்கும் மூச்சு விடமுடியாது. காற்றுத் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவனாய் விளங்குகிறது. காற்றில்லை எனில் இவ்வுலகம் இயங்குவது எவ்வாறு? காற்று கண்ணுக்குத் தெரியவில்லை எனினும் எங்கும் வியாபித்து இருக்கிறது. நிலைத்தும் இருக்கிறது. இயக்குவதும், இயங்குவதும் இவரே. நமக்கெல்லாம் சுவாசத்தை அளிக்கும் வாயுலிங்கத்தை ஸ்தாபித்தவர் வாயு என்று கூறுகின்றனர்.

அடுத்துக் குபேரதிசையான வடகிழக்கு மூலை. இங்கே ஈசான்ய லிங்கமும் குடி கொண்டிருக்கிறார். ஈசான்ய மூலை என்றும் கூறுவார்கள். குபேரன் ஈசனுக்கு நெருக்கமானவன். குபேரன் ஸ்தாபித்த இந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வத்துக்குக் குறைவிருக்காது என்று கூறுகின்றனர். ஈசான்யலிங்கமோ எனில் உடல் முழுதும் திருநீறணிந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பூதகணங்கள் சூழ்ந்திருக்க முக்கண்ணோடும் ஜடாமுடியோடும், புலித்தோலில் அமர்ந்த வண்ணம் ஏழு ருத்ரர்களில் ஒருவராய்க் காட்சி தருகிறார் இவர். மலையே இங்கு ஈசன். ஈசனின் ஜோதி ஸ்வரூபமே மலை என்று முன்னரே பார்த்தோம். அத்தகைய மலையைச் சுற்றி அமைந்துள்ள இந்த அஷ்ட லிங்கங்களின் அமைப்பும் அந்த அந்த தேவர்கள் ஈசனை வழிபட்டதைக் குறிக்கிறது. ஸ்ரீவருண லிங்கத்தை அடுத்து உள்ள ஆதி அண்ணாமலையார் ஆலயத்தை மஹாவிஷ்ணு ஸ்தாபித்ததாய்க் கூறுகின்றனர். கார்த்திகை தீபத் திருநாளின் மூன்றாம் நாள் அருணாசலேஸ்வரர் இந்தக் கோயிலுக்கு வருவார் என்றும் மலையை அம்பிகையோடு சேர்ந்து அவரும் வலம் வருவார் என்றும் தெரிய வருகிறாது. அடுத்து நாம் காணப்போவது கார்த்திகை தீபச் சிறப்பும், ஈசனின் அர்த்த நாரீசுவரக் கோலத்தின் சிறப்பும்.

1 comment:

priya.r said...

எத்தனை தடவை படித்தாலும் ஒவ்வொரு தடவை படித்தாலும் புதிதாக படிப்பது போல் இருக்கிறது

நல்ல பதிவு ! தொடருங்கள் கீதாம்மா