எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, June 08, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அச்வாரூடர்!

2825. யாவரும் புனத்து இயங்கு குறு நரி எலாம் ஈட்டித்  
தாவரும் பரி ஆக்கி அத் தாம் பரி நடாத்தும்  
சேவகம் செய்வோர் ஆகி முன் செல்லும் முன் யாமும்  
பாவகம் பட வருதும் அப்படியே எனப் பணித்தான். 
 
2826. ஏக நாயகன் ஆணை பூண்டு எழு கணத்தவரும்  
நாக நாடரும் வியப்பு உற நரி எலாம் திரட்டி  
வேக வாம் பரி ஆக்கி அவ் வெம் பரி நடாத்தும்  
பாகர் ஆயினார் அவர் வரும் பரிசு அது பகர்வாம்.  

வந்தவன் வெகு அலக்ஷியமாகப் பரிசுப்பொருட்களைக் குதிரை ஓட்டும் கோலால் வாங்க, மன்னனுக்குக் கோபம் மூண்டது.  வாதவூரர் அவர்கள் ஊர் வழக்கமாய் இருக்கலாம் என சமாதானம் செய்தார். குதிரை வல்லுநர்களைக் கொண்டு குதிரைகள் நன்கு சோதிக்கப்பட்டன. குதிரைகளின் கம்பீரமும், நடையழகும் பார்த்து வியந்த வல்லுநர்கல் குதிரைகள் பலமடங்கு விலை பெற்ற குதிரைகளே என உறுதி மொழி கொடுக்க மன்னனும் குதிரைகளை லாயத்துக்குக் கொண்டு சேர்க்கக் கட்டளையிட்டான். குதிரைச் சேவகன் விடைபெற்றுச் சென்றான். சென்றான் எங்கே சென்றான்.  சிறிது தூரம் போவது போல் போக்குக் காட்டி மறைந்தார் ஈசன். அன்றிரவு, லாயத்தில் கட்டப்பட்டிருந்த புதுக்குதிரைகள் அனைத்தும் குதிரையாக இல்லாமல் நரியாக மாறின.  ஊளையிட்டன.  அங்கிருந்த பழைய குதிரைகளைக் கடித்தன. சில தப்பி ஓடின.  அவற்றைப் பார்த்த மற்ற நரிகளும் தொடர்ந்து ஓட அனைத்தும் காட்டுக்குள் சென்று மறைந்தன.
 
2940. நாடிக் காவலன் தமர் உளார் நகர் உளார் கண்டால்  
சாடிக் காய்வரே புலரும் முன் சங்கிலித் தொடர் நீத்து  
ஓடிப் போவதே சூழ்ச்சி என்று ஊக்கம் உற்று ஒருங்கே  
கூடிப் பேசின ஊளை வாய்க் குறு நரிக் குழாங்கள்.  
 
2941. வெறுத்த காணமும் கடலையும் விரும்பின கோழ் ஊன்  
துறுத்த நாகு நம் தலைவனைச் சங்கிலித் தொடரை  
முறித்த கால்களில் கட்டிய கயிற்றொடு முளையைப்  
பறித்த ஊளை இட்டு எழுந்தன போம் வழி பார்ப்ப. 

நரிகள் ஊளையிட்ட வண்ணம் சென்றது அந்த நடு இரவில் மொத்த மதுரை மக்களையும் எழுப்பி விட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.  பகலில் குதிரைகள், இரவில் நரிகளா என வியந்தனர்! என்னவோ மாயம் செய்து இந்தத் திருவாதவூரர் நரிகளைப் பரிகளாக்கி இருக்கிறார் என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.  மன்னனையே ஏமாற்றி விட்டாரே என ஆச்சரியம் அடைந்தனர்.  சினம் கொண்ட மன்னன் வாதவூராரை அந்த நள்ளிரவிலேயே கைது செய்து சிறையில் அடைத்துச் சித்ரவதை செய்தான்.  கண்ணீர் பொங்க ஈசனையே நினைந்த வண்ணம் சிறையில் இருந்தார் வாதவூரார்.  அவரின் வேதனையை உணர்ந்த ஈசன், மன்னனுக்கும் பாடம் புகட்ட வேண்டும்; அதே சமயம் வாதவூராரின் பெருமையும் உலகறிய வேண்டும் என எண்ணிக் கொண்டு மதுரை நகரில் ஓடிய வைகையில் வெள்ளம் பெருகச் செய்தார். வெள்ளமோ வெள்ளம்.  கட்டுக்கடங்காத வெள்ளம். கரை புரண்டு ஓடியதோடு அல்லாமல் மெல்ல மெல்ல ஊருக்குள் புகுந்த வெள்ளம் நேரம் ஆக ஆக வேகமாய் ஊருக்குள் புகுந்து விட்டது.

மன்னன் இது வாதவூராரைச் சிறையில் அடைத்ததன் விளைவோ என எண்ணிக் கொண்டு அவரைச் சிறையிலிருந்தும் விடுவிக்கச் செய்ய, வாதவூரார் இறைவனை வேண்டிப் பிரார்த்திக்க வெள்ளம் கொஞ்சம் வேகம் குறைந்தது.  எனினும் முற்றிலும் மறையவில்லை.  வெள்ளத்தினால் ஏற்பட்ட கரை உடைப்பை அடைக்க முயன்றால் அது பெரிதாகிக் கொண்டே வந்தது.  மன்னனும் வீட்டுக்கு ஒரு ஆண்பிள்ளை வந்து வெள்ளத்தை அடைக்க வேண்டும் எனக் கட்டளையிட்டான். மதுரையில் பிட்டு செய்து விற்றுப் பிழைக்கும் வந்தி என்னும் கிழவிக்கு வீட்டில் ஆண்பிள்ளைகள் எவரும் இல்லை.  என்ன செய்வது எனக் கலங்கினாள். அந்தச் சொக்கேசன் தான் அருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டாள். தன் திருவிளையாடலை நீட்ட வேண்டும் என விருப்பம் கொண்ட ஈசன் ஒரு கூலியாளாக மாறினார்.   
3007. அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து  
                                   விழுத்தொண்டர்  
குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை  
                                   கவிழ்த்து  
எழுக் கடாந்து திசை கடந்திட்டு இணை கடந்த  
                                 திருத்தோள் மேல்  
மழுக்கடைந்து விளங்கிய வாய் மண் தொடு திண் படை  
                                   ஏந்தி.   

தலையில் சும்மாடு கட்டிக் கொண்டு கூலியாட்கள் வைத்திருக்கும் கூடையையும், அதோடு மண்வெட்டி ஒன்றையும் சுமந்து கொண்டு தெருவில் கூவிக் கொண்டு வந்தார்.  கூலி வேண்டுமா கூலி? எனக் கூவ, வந்தி அந்தக் கூலியாளை அழைத்தாள்.  வந்தியும் விஷயத்தைக் கூற அவளுக்காகத் தான் சென்று கரை உடைப்பை அடைப்பதாக ஒத்துக்கொண்டார் ஈசன்.  தன்னிடம் கூலி கொடுக்க எதுவுமே இல்லையே என ஏங்கிய வந்தியிடம் பிட்டையே கூலியாகக் கொடுக்கும்படி கூறினார் ஈசன்.

3012. பிட்டு இடுவேன் உனக்கு என்றான் அதற்கு இசைந்து  
                                   பெரும் பசியால்  
சுட்டிட நான் மிக மெலிந்தேன் சுவைப் பிட்டில் உதிர்ந்த  
                                   எலாம்  
இட்டிடுவாய் அது முந்தத் தின்று நான் இளைப்பாறிக்  
கட்டிடு வேன் நின்னுடைய கரை என்றார் கரை இல்லார். 

No comments: