எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, April 20, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! நாயகனைப் பிரிந்த ரங்க நாயகி!

ரொம்ப நாட்கள்/மாதங்கள் ஆகின்றன இங்கே வந்து! அரங்கனைப் பட்டினி போட்டுவிட்டு நிறுத்தியது தான் அதுக்கப்புறமா எழுத முடியாமல் பிரயாணங்கள். அவ்வப்போது சில பதிவுகளை எண்ணங்கள் பக்கத்தில் எழுதி வந்தாலும், இங்கே எழுதும்போது கூடுதல் கவனம் இருக்கணும் இல்லையா? நான் பாட்டுக்கு எழுதிடக் கூடாது. ஆகவே தகவல்களைச் சரி பார்க்கணும், சரி பார்க்கணும்னே போயிட்டு இருந்தது! சோம்பேறித்தனமாக இருக்கேனேனு உறுத்தலும் இருந்தாலும் வேறு வழியில்லை. :( அரங்கன் சாப்பிட்டானா என்னனு இப்போப் பார்ப்போம்.

அரங்கனுக்கு உண்ணக் கூட வழியில்லை என்பதைத் தெரிந்து கொண்ட பக்தர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் அமர்ந்திருக்க அந்தக் கூட்டத்தில் இருந்த நர்த்தகிகளில் ஒருத்தி தன் நகைகளைக் கழட்டிக் கொடுத்துப் பக்கத்துக் கிராமத்துக்குச் சென்று தன் நகைகளை  விற்று வரும் பணத்தில் அரங்கனுக்கும், உடன் வரும் பரிஜனங்களுக்கும் தேவையான உணவைச் சம்பாதித்துக் கொண்டு வரும்படி இருவரை அனுப்பினாள். அந்தக் காலத்தில் பண்டமாற்றுக்கு உதவிய யவன நாட்டுச் செம்பொன் நாணயங்களையும் தாராளமாக எடுத்துக் கொடுத்து உதவினாள். அவற்றை எடுத்துக்கொண்டு அடியார் கூட்டத்தில் இருவர் பக்கத்துக் கிராமத்தை நோக்கி நடந்தனர். அதற்குள்ளாக ரங்கநாயகித் தாயாரும் வேறுதிசையில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தவளுக்கு என்ன நேர்ந்தது என்று பார்ப்போம்.
ரங்கநாயகித் தாயார் க்கான பட முடிவு
திருவரங்கக் கோயிலில் தனி சந்நிதி,அரங்கனுக்கு நிகராகத் தனி மரியாதைகள், வழிபாடுகள் என்று செங்கோலோச்சிக் கொண்டிருந்த ரங்கநாயகித் தாயார் இப்போது தன்னந்தனியாகத் தன் நாயகன் ஒரு திசையிலும் தான் மற்றொரு திசையிலுமாகப் பயணித்துக் கொண்டிருந்தாள். படையெடுப்பு நடந்த சமயம் பெரிய பெருமாளான ரங்கநாதரின் சந்நிதியைக் கல்சுவர் எடுத்து மூடிய அடியார்கள் ரங்க நாயகியைப் பெயர்த்து எடுத்து சந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்தில் வில்வமரத்தினடியில் புதைத்து வைத்தனர். அந்த வில்வ மரம் இப்போதும் இருக்கும் வில்வமரம் தான் என்கின்றனர்.  உற்சவரான அர்ச்சாமூர்த்தியை ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணினார்கள். தாயாரின் நகை, நட்டு மற்றச் செல்வங்களையெல்லாம் பெட்டகங்களில் அடுக்கினார்கள். ஒரு சில பரிசனங்கள் துணை வர இந்த ஊர்வலம் மேற்கு நோக்கிச் செல்வதாக முடிவாகி இருந்தது. இந்த ஊர்வலத்தில் பின்னால் அழகிய நம்பி என்பாரும் அவருடைய ஆட்களும் சேர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி ரங்கநாயகித் தாயார் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அழகிய நம்பி என்பானும் அவனுடைய ஆட்களும் இரண்டு நாட்கள் இடைவிடாமல் பயணம் செய்து நாச்சியார் போய்க் கொண்டிருக்கும் திசையில் நாச்சியாரையும் கண்டு பிடித்தனர். பின்னர் அங்கிருந்த அனைவருடனும் கலந்து ஆலோசித்து ஊர்வலத்தைத் திருப்பதி/திருமலைப்பக்கமாய்க் கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆகவே அழகிய நம்பி ஊர்வலத்தைச் சாலை மார்க்கத்தில் செலுத்தாமல் காட்டு மார்க்கமாகவே செலுத்தினான். வழியில் தென்பட்ட கள்ளர் கூட்டத்தினரிடம் எப்படியோ தப்பி மூன்று தினங்கள் பயணம் செய்த பின்னர் நான்காம் நாள் காட்டு வழியில் சென்றபோது வழியில் தென்பட்ட அசாதாரணமான இயக்கங்களினால் அழகிய நம்பிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. கள்ளர் கூட்டம் தான் தொடர்ந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு தப்பி ஓட நினைத்து அதைக் குறித்துப் பேசுவதற்குள்ளாகக் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டது.

உடனே கள்வர்கள் தான் தொடர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கு காய்ந்து கொண்டிருந்த புற்களின் மேல் நெருப்பை வைத்துப் புகை உண்டாக்கி அந்தப் புகையில் அனைவரும் ஆளுக்கொரு திக்காய்த் தப்பி ஓடினார்கள். அழகிய நம்பி மூன்று ஆபரணப் பெட்டிகளுக்குப் பொறுப்பேற்றுப் பின்னாலேயே சென்றவன் சற்று தூரத்தில் ஒரு கணவாய் தென்படவே அங்கே சென்று கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தான். பெட்டிகளைத் தூக்கி வந்த ஆறுபேரும், அவர்களுக்கு உதவ வந்த மற்ற மூன்று பேரும் அன்றிரவை அங்கேயே கழிக்க எண்ணவே அழகிய நம்பியும் சம்மதித்து அங்கேயே தங்கினான். ஆனால் இரவில் கிசுகிசுவென்று சிலர் சேர்ந்து பேசும் குரல் கேட்கவே விழித்த நம்பி என்னவென்று பார்க்க பெட்டகங்களைத் தூக்கி வந்த ஆறு ஊழியர்களும் தாயாரின் ஆபரணங்களைத் தாங்களே பங்கிட்டுக் கொண்டு விடலாம் என்று பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டான். என்ன செய்யலாம் என நம்பி சிந்திப்பதற்குள்ளாக அவனைக் கொல்வதற்கு ஆறு பேரும் பாய, நம்பி மற்ற மூவரையும் எழுப்பி இவர்கள் ஆறுபேரையும் எதிர்கொள்ள ஆயத்தமானான்.

நம்பியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத அவர்கள் உடலில் காயங்கள் ஏற்பட்டு ஓடிவிட்டனர். நம்பியும் மற்ற மூவரும் விடியும்வரை விழித்திருந்து பெட்டகங்களை அங்கேயே ஓர் இடத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அடையாளத்திற்காகச் சில கற்களையும் வைத்து மூடினார்கள். பின்னர் கிழக்கே நோக்கிப் பயணம் செய்தனர். 

அதற்குள்ளாக இங்கே திருவரங்கத்தில் துலுக்கர்களின் அராஜகம் அதிகமாக இருந்தது. அரங்கனின் சொத்துக்காகவே படை எடுத்த அவர்கள் ஒன்றும் கிட்டவில்லை என்பதறிந்து கோபம் கொண்டனர். ஆகவே அரங்கன் எங்கே போயிருக்கிறான் என்பதைக் கண்டறியவும் அவனுடைய சொத்துக்களும் அவனுடனே செல்கின்றனவா என்பதை அறியவும் ஒற்றர் படைகளை ஏவி விட்டால் சுல்தானின் தளபதி. மேலும் கோயிலிலும் பல இடங்களையும் தோண்டியும் இடித்தும் செல்வங்கள் கிடைக்கின்றனவா என்று தேடினான். பல சிற்பங்கள் உடைக்கப்பட்டன. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கற்றூண்கள் இடிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கேள்விப் பட்ட அரங்கன் முன் ஆடும் நர்த்தகிகளில் ஒருத்தியான அம்சகலா என்பாள் துடிதுடித்தாள். தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே எனத் தவித்தாள்; உருகினாள்! வேதனையில் ஆழ்ந்தாள். அவளும் திருவரங்கத்தில் வாழ்ந்தவள் தான். இப்போது தப்பிக் காவிரியின் எதிர்க்கரையில் அழகிய மணவாளபுரம் என்னும் கிராமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தாள். 

2 comments:

வல்லிசிம்ஹன் said...

அரங்கனுக்காகப் பக்தர்கள் படும் பாடு மனம் உருகச் செய்கிறது.
நன்றி மிக நன்றி. அரங்கன் மேல் இன்னும் பக்தி மிகுகிறது.

ஸ்ரீராம். said...

படித்தேன்.