எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, April 21, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வெள்ளைக் கோபுரத்தின் கதை!

ஏற்கெனவே இந்த நர்த்தகியின் தோழியின் தாய் ஶ்ரீரங்கத்துக்கு ஏற்பட்டிருந்த அவலங்களையும், நம்பெருமாள் ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் இன்னொரு பக்கமும் தனித்தனியாகப் பிரிந்து சென்றதையும் கேள்விப் பட்டு மனம் கொதித்துப் போயிருந்தாள். போதாதற்கு அவள் இன்னொரு தோழி ஒருத்தியும் உலுக்கானின் வாளால் காயம் ஏற்பட்டது புரையோடியதில் இறந்து விட்டாள். எல்லாமும் சேர்ந்து அவள் கொதிநிலையில் இருந்தாள். ஆகவே இந்தத் துலுக்கர்களைப் பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். ஆகவே ஒரு நாள் அதிகாலையிலேயே எழுந்து சீவிச் சிங்காரித்துக் கொண்டு அரங்கன் கோயிலருகே வந்து மூன்றாவது வாயிலின் அருகே ஒய்யாரமாக நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் அவள் கண்கள் அந்த வழியாக வருபவர்கள் போகிறவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. அப்போது துலுக்கப்படையின் உபதளபதி மற்ற வீரர்கள், ஊழியர்கள் ஆகியோரின் வேலையை மேற்பார்வை செய்வதற்காக அங்கே தன் குதிரை மீது ஏறி வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட அம்சகலா தான் மிகவும் நாணம் அடைந்தவள் போலப் போக்குக் காட்டிக் கொண்டு ஓரமாக ஒய்யார நடை நடந்தாள். தன் எழிலை எல்லாம் காட்டி அந்தத் துலுக்கத் தளபதியை மயக்கும் எண்ணத்துடன் கடைக்கண் பார்வையை அவன் மேல் வீசினாள். சாதாரணமாகவே பெண் பித்தனான உபதளபதி இப்படி வலிய ஒரு பெண் அவன் மேல் காதல் வலை வீசினால் சும்மாவா விடுவான்! அவனும் உடனேயே குதிரையை விட்டுக் கீழே இறங்கி அவளருகே சென்றான். அவள் கோயிலினுள்ளே செல்ல அவனும் அவள் பின்னேயே சென்றான்.

இருவரும் செல்கையில் மறைவான ஓர் இடம் வந்ததும் உபதளபதி அவள் கையைப் பிடித்து இழுத்து அணைக்க முற்பட்டான். அவள் தன் சாகசங்கள் அனைத்தையும் காட்டி அவனை மயக்கி ஒரு கோபுர நிலைக்கருகே அழைத்துச் சென்றாள். அதன் படிகளில் விறுவிறுவென அவள் ஏறப் பின்னாலேயே அவனும் ஏறினான். கோபுரத்தின் மூன்று நிலைகளிலும் அவள் ஜாடையால் அங்கே கோயிலின் சொத்துக்கள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு சொல்லவே அதை நம்பி அவனும் பின் சென்றான். தந்திரமாக அவள் ஓர் இடத்தில் கோபுர நிலைவாயிலின் துவாரத்தருகே சென்று கையை நீட்டி வெளியே காட்ட, அவள் அழகில் முற்றிலும் மயங்கிக் கிடந்த உபதளபதியும் வெளியே எட்டிப் பார்த்தான். அவள் வஞ்சகமான புன்னகையுடன் அவன் கால்களைப்பற்றிக் கொண்டு தூக்கி அவனைக் கீழே தள்ளி விட்டாள். கீழே கல்தரையில் மண்டை பிளக்கப் படீர் என விழுந்தான் உபதளபதி!

தளபதி விழுந்த சப்தம் கேட்டு அங்கே கீழே கூட்டம் கூடுவதற்குள்ளாக அம்சகலா என்பாள் கோபுர துவாரத்தின் எதிர்பக்கம் சென்று அங்கே பொன்மயமான திருவரங்க விமானத்தைப் பார்த்தாள். "ரங்கா! ரங்கா!" என்று கூவினாள். விமானத்தின் பரவாசுதேவரின் உருவம் அவளைப் பார்த்துச் சிரித்து ஆசி கூறுவது போல் உணர்ந்தாள். மீண்டும், "ரங்கா! நான் பழிவாங்கிவிட்டேன்!" என்றாள். "ரங்கா, உன் அடியவர்கள் துன்புற்று இறந்தவர் எத்தனை பேர்! உன் செல்வமெல்லாம் பாழாய்ப் போய் விட்டதே! திருவரங்கத்தை இருள் சூழ்ந்ததே! நீ ஒரு பக்கமும், ரங்க நாச்சியார் ஒரு பக்கமுமாகப் பிரிந்து வாழ்கின்றீர்களே! இது அடுக்குமா? எப்போதும் ரங்கா ரங்கா என்ற ஆனந்தக் கூச்சல்களே கேட்டுக் கொண்டிருந்த திருவரங்கத்திலே இன்று ஒப்பாரி ஒலிக்கின்றதே! அரங்கா இதுவும் உன் திருவுளமோ? ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை! ரங்கா! ஆகவே என்னால் இயன்றவரை பழி தீர்த்துக் கொண்டேன்!" என்றாள்.

பின்னர் தன் கைகளைக் கூப்பித் தலைக்கு மேல் வைத்த வண்ணம் இமைகளை மூடிக்கொண்டு "ரங்கா! ரங்கா!" என்று கூவிய வண்ணம், "என்னை ஏற்றுக்கொள்!" என்ற வண்ணம் அவளும் கோபுர வாசலின் வழியாக வெளியே பாய்ந்தாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

பக்தத் தீவிரவாதி!