எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 08, 2016

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! சுரதானியின் பக்தி!

அம்சகலா விரும்பிய வண்ணம் நிறைவேற்ற சிங்கப்பிரான் மிகவும் கஷ்டப்பட்டார். திருமடப்பள்ளிக்குச் சென்று அங்கு அடுப்பினருகே சிந்திக்கிடந்த அரிசிகளைத் திரட்டி அம்சகலாவுக்கு வாய்க்கரிசி போட பத்திரப்படுத்தினார்.  அந்த அடுப்பிலிருந்தே இரண்டு எரியும் கட்டைகளையும் எடுத்துக் கொண்டார். அரங்கனின் துணிகளைத் துவைக்கும் ஈரங்கொல்லிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களிடம் பெருமாளின் பரிவட்டம் இருக்கிறதா எனத் தேடிப்பார்த்துக் கிடைத்த பழைய பரிவட்டத்தை எடுத்துக் கொண்டார். இனி மாலை ஒன்று தான் தேவை. அதற்கும் ஓர் வழி கண்டு பிடித்த சிங்கப்பிரான் அருகிலுள்ள சோழங்கநல்லூரில் குடி கொண்டிருந்த ஆநிரை மேய்த்த பெருமானுக்குச் சூட்டப்பட்டிருந்த மாலைகளில் ஒன்றை வேண்டிப் பெற்றார். பின்னர் எல்லாவற்றையும் பயன்படுத்தி அம்சகலாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்.  அதன் பின்னர் இந்த உயிர்த் தியாகம் குறித்துத் திருவரங்கம் கோயிலின் அதிகாரிகள் திருவரங்கம் மீண்டும் உன்னதம் அடைந்த பின்னர் அம்சகலாவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைத்ததாகவும், அதன் பின்னர் கோயிலைச் சார்ந்த எந்த தேவதாசி இறந்தாலும் இத்தகைய மரியாதைகளை அளித்து வந்ததாகவும் தெரிகிறது. இது பல வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இப்போது இல்லை.

இங்கே அரங்கனோடு சென்றவர்கள் ஊர்ப்பக்கம் சென்று அரங்கனின் நிவேதனத்துக்கும் மற்றும் பரிஜனங்களுக்கும் மற்றவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வாங்கி வந்தனர்.  அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது தில்லி சுல்தானின் ஆள் ஒருவன் அவர்களைத் தொடருவதாக நினைத்துக் கொண்டு அவனைத் தனிமையில் சென்று ஓரிருவர் சந்தித்தார்கள்.  தில்லி சுல்தானின் ஆளை மரத்திலிருந்து பறித்த மிளாறுகளால் அடித்து வீழ்த்தினார்கள்.  ஆனால் அவனுக்குத் திருவரங்கன் மேல் இருந்த அளவு கடந்த அன்பைப் பார்த்து அவனைக் குறித்துக் கேட்டார்கள். அவன் தான் 27 வருடஙக்ளுக்கு முன்னர் மாலிக்காபூர் தலைமையில் நடந்த யுத்தத்தின் போது அவனால் சிறைப்பிடிக்கப்பட்டு தில்லி சென்று மதம் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தான். அப்போது தான் முதல் முதல் அரங்கனைக் குறித்து அறிந்ததாகவும் தெரிவித்தான்.

மாலிக்காபூர் தென்னாட்டை முற்றுகையிட்டுத் திரும்பும்போது கணக்கற்ற செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்றான். பொன் மட்டுமே 9000 மணங்கு என்று கணக்குச் சொல்கின்றனர்.  அவற்றை அவன் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். அப்போது தான் இவை தவிர திருவரங்கக் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரங்கநாதனின் அழகிய மணவாளன் என்னும் பெயர் கொண்ட அர்ச்சாவதார விக்ரஹமும் ஒன்று இருந்தது. அந்த விக்ரஹம் அப்துல்லா உசேன் என்னும் பாதுஷாவிடம் கிடைத்தது. அவன் மகளான சுரதானி தந்தைக்குக் கிடைத்த பரிசில்களை எல்லாம் பார்த்தவளுக்கு இந்த அரங்கநாதனின் விக்ரஹத்தின் அழகு கண்ணையும், மனதையும் கவர அந்தத் திருவரங்கன் விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமென்று கெட்டுப் பெற்றுக் கொண்டாள். அந்த விக்ரஹத்தின் பேரில் அசாத்திய பிரேமையும் கொண்ட அவள் ஒரு தெய்விகமான மனோநிலைக்கு ஆட்பட்டாள்.

அதற்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து அதன் முன்பாக தன்னை மறந்த நிலையில் பலமணிநேரம் அமர்ந்திருப்பது அவளுக்கு வாடிக்கை. அதை ஒரு கணமேனும் பிரியாமல் பாதுகாத்து வந்தாள். இங்கே திருவரங்கத்திலோ அடியார்களுக்கு அழகிய மணவாளப் பெருமான் இல்லாமல் அவரைப் பார்க்காமல் ஒரு நாள் கழிவதே பெரிய விஷயமாக இருந்து வந்தது. அதிலும் திருக்கரம்பனூரில் இருந்த அடியாள் ஒருத்தி எம்பெருமானைப் பார்க்காமல் உணவே அருந்த மாட்டாள். அவள் விக்ரஹம் கொள்ளை அடிக்கப்பட்டதும் தில்லிக்குப் போய்விட்டதையும் அறிந்து கொண்டு அது போன வழியே தானும் பிரயாணப்பட்டாள். பல மதங்கள் பயணம் செய்து அவள் தில்லியை அடைந்தாள். விக்ரஹம் சுரதானியிடம் இருப்பதை அறிந்து கொண்டாள்.

No comments: