எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, August 12, 2019

குதிரை பறந்தது!

அந்த யாத்ரிகன் அதற்கு மீண்டும் மீண்டும் சிரித்தான். வல்லபன் அவனை, "நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?" எனக் கேட்டதற்கும் சிரித்தான். பின்னர் வல்லபனைப் பார்த்து, "அதோ உன் நண்பன்! அவனிடம் நான் ஏற்கெனவே சொல்லி  விட்டேன். அவன் உனக்குச் சொல்லவில்லையா? நான் ஓர் கற்பூர வியாபாரி!" என்றான் அழுத்தம் திருத்தமாக! அவனைப் பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை வல்லபனுக்கு. மீண்டும் சந்தேகத்துடன் அவனைப் பார்க்க அவனோ தான் ஒரு வியாபாரி தான் என வலியுறுத்திப் பேசினான். மேலும் தான் வியாபாரப் பயணத்தில் தான் தன் ஆட்களுடன் செல்லுவதாகவும் சொன்னான். மேலும் கற்பூரம் தவிர்த்துத் தான் மிளகு, கிராம்பு, இலவங்கம், இலவங்கப்பட்டை, சீனாவிலிருந்து வரும் பட்டு,  ஜாதி பத்திரி தவிர்த்து அரசர்களும் பெருங்குடி மக்களும் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள் என விற்பதாகவும் கூறினான். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெருங்குடி மக்கள், தனவந்தர்கள், அங்குள்ள படைத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் எனத் தேடித் தேடிப் பார்த்துத் தன் வியாபாரத்தை நடத்திக் கொண்டு வருவதாகவும் சொன்னான். பின்னர் வல்லபனைப் பார்த்து, "தம்பி, நான் வந்த அன்று அதாவது முந்தாநாள் நான் தான் உன் உயிரைக் காப்பாற்றினேன். அதை மறந்துவிடாதே!" என்றும் சொன்னான்.

ஆனாலும் வல்லபனுக்குச் சந்தேகம் தீரவில்லை. தான் அந்த வியாபாரியான யாத்ரிகனுக்குக் கடமைப்பட்டிருப்பதையும் நன்றியுடன் இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டான். ஆனால் இந்த ஓலை நறுக்கும் மகரகண்டிகையும் தன் சந்தேகத்தை மீண்டும் மீண்டும் கிளறி விடுவதாகவும் சொன்னான்.  அதற்கு அந்த வியாபாரி, "தம்பி!இதைக் கூடவா நீ நம்பவில்லை? நான் ஏதோ சூழ்ச்சியும் தந்திரமும் செய்து உன்னை ஏமாற்றுவதாக நினைக்கிறாய் போலும்!  இந்த மகர கண்டிகை பத்தரை மாற்றுத் தங்கம் தம்பி! நன்கு கவனித்துப் பார். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு ஆபரணத்தை முன்பின் தெரியாத உன்னிடம் நான் ஏன் கொடுக்க வேண்டும் தம்பி? அதனால் எனக்கு என்ன லாபம்? எனக்கு என்ன இதன் மதிப்புத் தெரியாமல் உன்னிடம் கொடுத்ததாக நினைக்கிறாயோ? அவ்வளவு மதிகெட்டவனா நான்?"

"இதோ பார் தம்பி! உண்மையாகவே அந்தப் பெண் தங்கி இருந்த அறையில் தான் இதைக் கண்டு எடுத்தேன்.  அதில் நுனியில் கட்டியிருந்த ஓலை நறுக்கையும் கண்டேன். அதனால் தான் உங்களிடம் எடுத்து வந்தேன். எனக்கென்ன தம்பி!  நான் சொல்வதை நீ நம்பினால் நம்பு! நம்பாவிட்டால் அது உன்னிஷ்டம்! சரி, எனக்கும் நேரம் ஆகிவிட்டது தம்பி! நான் சென்று வருகிறேன். என் ஆட்களைக் கண்டு பிடித்துப் பயணத்தைத் தொடர வேண்டும்." என்று சொல்லிய வண்ணம் குதிரை மேல் ஏறிப் பயணத்தைத் தொடர ஆயத்தமானான். அவனால் குதிரை மேல் சர்வ சகஜமாக ஏற முடியவில்லை என்பதை வல்லபன் கண்டான். தத்தனைப் பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என நினைத்துக் கொண்டார்கள். என்ன நடக்கிறது என்பதும் அதன் முழு தாத்பரியமும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நல்ல நாள், நல்ல சகுனம் பார்த்தே ஊரில் இருந்து கிளம்பி இருந்தோம். அப்படியும் இப்படி எல்லாமும் நடக்கிறதே எனக் கவலையில் ஆழ்ந்தார்கள். யாத்ரிகன் போகிற போக்கில் கீழே வீசி விட்டுப் போயிருந்த மகர கண்டிகை வெளிச்சத்தில் பளபளத்தது.

அதைக் கைகளில் எடுத்து உற்று நோக்கினான் வல்லபன். நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகம் காணப்பட்ட அந்த ஆபரணத்தில் கொடிகள், மலர்களோடு, தெய்வ உருவங்களும் மீன் வடிவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.  இது உண்மையாகவே அந்தப் பெண்ணின் ஆபரணமாய் இருக்குமா? நாம் உண்மையில் ஏமாந்து விட்டொமோ? என்ன செய்யலாம்?" எனக் குழப்பத்துடன் வல்லபன் அதைப் பார்த்த வண்ணமே நின்றான். அந்த ஆபரணத்தைக் கைகளில் ஏந்தியவன் அதை முகர்ந்து பார்த்தான். ஆஹா! அந்தப் பெண்ணிடமிருந்து வந்த மகிழம்பூ வாசனை! இந்த ஆபரணத்திலும் வருகிறதே! வல்லபன் முகம் மலர்ந்தது! சந்தேகமே இல்லை. இது அந்தப் பெண்ணின் ஆபரணம் தான்! வல்லபன் முகம் பளிச்சிட்டது. தத்தனிடம் அதைக் காட்டினான். அவனையும் முகர்ந்து பார்க்கச் சொன்னான். இது அந்தப் பெண் அணிந்திருந்ததால் அதுவும் நீண்ட நாட்கள் அணிந்திருந்ததால் மட்டுமே ஏற்பட்டிருக்கும் வாசனை. ஆகவே அது அந்தப் பெண்ணுடையது தான் என வல்லபன் தத்தனிடம் தீர்மானமாகச் சொன்னான். உடனே திரும்பி அந்த வணிகனை அவசரமாக அழைத்தான். ஆனால் அவனோ சிறிது தூரம் குதிரையில் சென்று விட்டான்.

வல்லபன் விடாமல் மீண்டும் அவனை அழைத்தான். வணிகன் திரும்பிப் பார்த்தான். ஆனால் வல்லபனிடம் வரவில்லை. அங்கிருந்த வண்ணமே தான் கிழக்கே தான்போய்க் கொண்டிருப்பதாகவும் வல்லபனுக்கும் தத்தனுக்கும் விருப்பம் இருந்தால் தன்னுடன் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துவிட்டுக் குதிரையை மீண்டும் விரட்ட அதுவும் வேகம் எடுத்தது. சிறிது நேரத்தில் காடுகளைத் தாண்டிச் சமவெளிக்கு வந்ததும் குதிரை பறக்கவே ஆரம்பித்தது.

இங்கே தத்தனுக்கும் வல்லபனுக்கும் என்ன பேசுவது என்றே புரியவில்லை.  வல்லபன் கைகளில் ஓலை நறுக்கையும் மகர கண்டிகையையும் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க தத்தன் தன் தாழங்குடையைச் சுழற்றிக் கொண்டிருந்தான். இருவரும் அவரவர் யோசனையில் சிறிது நேரம் ஆழ்ந்திருந்தார்கள். பின்னர் தத்தன் வல்லபனிடம் மீண்டும் சிற்றாற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வரலாம் என அழைக்க இருவரும் சிற்றாற்றங்கரையை நோக்கிச் சென்றனர். வல்லபன் நடந்து கொண்டிருந்தானே தவிர அவன் மனதில் அந்தப் பெண்ணின் முகமே தோன்றிக் கொண்டிருந்தது. அதிலும் கண்டிகையில் நீளமானமீன் வடிவில் அந்தப் பெண்ணின் நீண்ட நெடுங்கண் அவன் எதிரே தோன்றி இம்சை செய்தது. ஓலையில் முடிக்காத அந்த வாசகங்களை நினைத்தவன் அதிலே "இளைஞர்களுக்கு" எனச் சொல்லி இருப்பது எனக்கும் சேர்த்துத் தானே என நினைத்துக் கொண்டான்.

No comments: