எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, August 09, 2019

தேடி வந்த வம்பு!

தத்தன் பயத்தைக் கண்டு வல்லபனும் திகைத்து நிற்கக் குதிரையில் ஏறியவண்ணம் வேகமாக அங்கே வந்து கொண்டிருந்தது சத்திரத்துக்கு வந்த புது விருந்தாளியான யாத்திரிகன்.  இளைஞர்கள் இருவருக்கும் கவலையும், பயமுமாக இருக்கத் தங்கள் வாட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டனர். யாத்திரிகன் வந்த வேகத்தில் தங்களை வெட்டி விடுவானோ என்னும் எண்ணத்தில் தத்தனும், வல்லபனும் இடைவெளி விட்டு நிற்க அந்த யாத்திரிகனோ அந்த இடைவெளியில் புகுந்து வேகமாகக் குதிரையை ஓட்டிக் கொண்டு சென்றான். செல்லும்போதே தன் வாளால் ஓர் வீசு வீசி இளைஞர்களின் வாட்களைக் கீழே கொஞ்ச தூரத்தில் போய் விழும்படி செய்து விட்டான்.  இருவரின் திகைப்பு மேலும் அதிகம் ஆனது. ஓடிப் போய்த் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டனர். அந்தச் சொற்ப நேரத்திற்குள்ளாக அந்த யாத்திரிகன் மீண்டும் திரும்பி அவர்களை நோக்கிக் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்தான். அவர்கள் அருகில் வந்ததும் வேகமாக அவர்களை நோக்கிப் பாய்ந்தான். இருவரும் அவனைத் தடுக்க முயன்று தோல்வி அடைந்து தங்கள் வாட்களால் அவனைத் தடுக்க முயன்று முடியாமல் திணறினார்கள். ஆனால் வந்தவனோ வேகமாகத் தன் வாளைச் சுழற்ற இப்போது தத்தன் வாள் அவன் கைகளிலிருந்து நழுவி தூரமாகப் போய் விழுந்தது.

அதைக் கண்ட வல்லபன் தன் வாளைச் சுழற்றிப் போரிட ஆரம்பிக்கச் சுற்றிச் சுற்றி வந்து அவனுடனும் போரிட்டான் வந்தவன். வல்லபன் வளைந்து நெளிந்து புதுப் புதுக்கோணங்களில் போரிட வந்தவனும் அதற்கு ஈடு கொடுத்துத் தானும் அங்கே இங்கே எனத் துள்ளிக் குதித்து வல்லபனை எதிர்த்துப் போரிட்டான். தன்னை வல்லபன் வாளால் சாய்க்க முடியாதபடி தடுத்தும் வந்தான். அப்போது வந்தவன் வீசிய வாள் வீச்சை எதிர்கொள்ள முடியாத வல்லபன் தடார் எனக் கீழே விழுந்துவிட்டான். வந்தவனும் தன் வாளை ஓங்கிக்கொண்டு வல்லபன் மார்பின் மீது ஒரு காலை வைத்து மிதித்துக் கொண்டு நின்றான்.தன் வாளை எடுக்கப் போயிருந்த தத்தன் அங்கிருந்தே இந்தக் காட்சியைப் பார்த்து நெஞ்சம் பதறி நின்றான். வல்லபனோ அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என மனம் பதைக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அப்படியே வாளை ஓங்கிய நிலையில் வல்லபன் மார்பில் ஒரு காலை வைத்தபடி நின்றவன் பின்னர் தன் வாளைத் தூர எறிந்தான். இளைஞர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தான். கடகடவெனச் சிரித்த அவனால் இளைஞர்கள் இருவரின் பயமும் தெளிந்து அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையில் மாற்றமும் ஏற்பட்டது. தத்தன் ஏதும் புரியாமல் வாளை எடுத்துக் கொண்டு அங்கே வந்தான். வல்லபன் எழுந்து நின்று கொண்டான்.

அப்போது அவர்களைப் பார்த்த புதியவன், "ஏன், தம்பிகளா? இருவருக்கும் வாள் வித்தையில் இத்தனை தேர்ச்சி இருக்கிறதே? அப்புறமும் ஏன் சத்திரத்தில் அந்த வீரர் தலைவனை எதிர்க்காமல் சும்மா இருந்தீர்கள்?" என்று கேட்டான். பின்னர் வல்லபனைப் பார்த்து, "தம்பி! எத்தனை திறமையாக வாள் வீசுகிறாய்? ஆனால் இதை எல்லாம் காட்ட வேண்டிய சமயத்தில் சத்திரத்தில் காட்டாமல் இங்கே என்னிடம் அல்லவோ காட்டினாய்! போகட்டும்! இனியும் அப்படி எல்லாம் இருக்காதே! உன்னைப் பார்த்து உறுமினால் வாளை உருவி, அதட்டினால் ரத்தக்காயம் வரும்படி வாளால் அடித்துவிடு!" என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.  ஆனால் அவன் பேச்சு இருவருக்கும் பிடிக்கவில்லை. தங்கள் இருவரையும் அவன் ஒருவன் இத்தனை எளிதாக வென்றுவிட்டானே என்னும் அவமானம் இருவர் நெஞ்சிலும் இருந்தது. அவனைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. வந்தவனுடைய சண்டை முறையில் உள்ள சில நுணுக்கங்களை நாமும் கற்க வேண்டும்; அவற்றை எல்லாம் கற்கவே இல்லை! அதனால் தான் தோல்வி அடைந்துவிட்டோம்! என இருவரும் நினைத்துக் கொண்டனர்.

வந்தவன் ஆசையுடனும் உரிமையுடனும் தத்தன் முதுகில் ஓர் தட்டு தட்டிக் கொடுத்தான். ஆனால் தத்தனுக்கு அது பிடிக்கவில்லை. ஒதுங்கிக் கொண்டான். கூசியது அவனுக்கு. அந்த யாத்திரிகனுக்கு இதைப் பார்த்து மேலும் சிரிப்பு வந்தது! தத்தனைப் பார்த்து, "தம்பி! ஏன் இவ்வளவு வெறுப்பும் கோபமும்?  நீங்கள் இருவரும் சுத்த வீரர்களா இல்லையா எனச் சோதிக்கவே நான் இங்கே வந்தேன்! நீங்கள் வீரர்கள் தான்!" என்றான். அதற்கு தத்தன் இம்மாதிரி திடீரெனப் போரிட்டதால் இருவரின் உடைகளும் அழுக்காகிக் கிழிந்தும் போய்விட்டதாகக் குற்றம் சாட்டினான். வந்தவனோ தத்தனிடம் இப்படி எல்லாம் சகஜமாக நடக்கும். எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். இதை எல்லாம் பொருட்படுத்திக் கொண்டு இருக்கக் கூடாது என்று அவனுக்கு புத்திமதி சொன்னான். தத்தன் மீண்டும் போய்த் தன் தாழங்குடையை எடுத்துக் கொண்டு வந்தான். வந்தவனைப் பார்த்து," எங்களை எதற்காகச் சோதித்தீர்? என்ன அவசியம் நேரிட்டது சோதிக்க?" என்று கோபமாக வினவினான். வல்லபனும் அதை ஆமோதிக்க அதற்கு வந்தவன், "தம்பிகளா! அந்தப் பெண்ணிற்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தோன்றியது! அதனால் தான் அதை உறுதிப்படுத்திக் கொள்ள நான் திரும்பி வந்தேன்!" என்றான். அதற்கு வல்லபன் கேலியாக தங்கள் இருவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகப் புதியவன் நினைத்துக் கொண்டது அவனுடைய அதீத புத்திசாலித்தனத்தால் தான் என்று கிண்டலாகச் சொன்னான். வந்தவனோ தான் அதி புத்திசாலி இல்லை எனவும் நுட்பமான விஷயங்களெல்லாம் அவனுக்குப் புரியாது எனவும் சொல்லிவிட்டு அந்தப் பெண் இவர்கள் இருவருக்கும் ஓர் "முறி" எழுதி இருந்ததால் அதைப் பார்த்துவிட்டுத் தான் சந்தேகப்பட்டதாகச் சொன்னான்.

No comments: