எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, October 02, 2019

அரங்கன் எங்கே இருக்கிறான்?

அப்போது வல்லபன் அந்தப் பெரியவரிடம், போருக்குப் பின்னால் சத்தியமங்கலத்திலிருந்து மேல்கோட்டைக்குப் போன அரங்கன் அங்கேயே இல்லாமல் பின்னர் எங்கே போனான்? அவனுக்கு அங்கே என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகச் சொன்னான். அதற்கு அந்தப் பெரியவர்க் கண்ணனூர்ப் போரில் பெற்ற வெற்றிக்கும் பின்னர் மதுரை சுல்தானியர்கள் தமிழ் பேசும் நாடுகள் எங்கும் புகுந்து வழிபாட்டுத் தலங்களைச் சூறையாடியதாகவும் அவர்கள் மேல்கோட்டை வரை வந்து விட்டால் பின்னர் அரங்கனுக்கு ஆபத்து என எண்ணிக் கொண்டு அரங்கனின் பரிவாரத்தாரில் சிலருக்கு அவரைத் திருப்பதிக்குக் கொண்டு செல்லும் எண்ணம் வந்ததாகவும் ஆனால் அவர்கள் கொண்டு போனார்களா இல்லையா என்பது தனக்குச் சரியாகத் தெரியாது என்றார். அரங்கன் அங்கே தான் போனானோ அல்லது வேறே எங்கே போனானோ தனக்குத் தெரியாது என்றும் கண்ணனூர்ப் போர் முடிந்து பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டதால் அரங்கன் இருப்பிடம் தனக்குத் தெரியாது என்றவர் அவர்களை நோக்கி அரங்கனைத் தேடி வந்திருக்கிறீர்களா என விசாரிக்கவும் செய்தார்.

வல்லபன் அதற்குத் தாங்கள் அரங்கனைத் தேடிக் கண்டு பிடித்துத் திரும்பவும் திருவரங்கத்தில் சேர்ப்பிக்கும் எண்ணத்துடன் தாங்கள் வருவதாகவும், மேல்கோட்டையிலிருந்து அவர் திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தாங்கள் அறிவோம் எனவும் சொன்னான். ஆனால் தற்சமயம் அவர் திருப்பதியிலேயே இருக்கிறாரா அல்லது அங்கிருந்து வேறெங்கும் கொண்டு செல்லப்பட்டாரா என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்றான். அவர் திருப்பதி மலைக்குப் போய்ச் சேர்ந்ததாக உத்திரவாதமான தகவல் ஏதும் இல்லை என்பதால் இடையில் அவருக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோ எனத் தாங்கள் அஞ்சுவதாகவும் அவரை எங்கே எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்னும் கவலையில் தாங்கள் இருவரும் ஆழ்ந்திருப்பதாகவும் கூறினான்.

பெரியவர் முகமலர்ச்சியுடன் இருவரையும் ஆசீர்வதித்தார். அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் இந்தக் காரியம் வெற்றி பெறவேண்டும் என்றவர் தான் அசக்தனாகப் போய் விட்டபடியால் அவர்களுக்கு உதவ முடியாத நிலையில் இருப்பதற்கு வருந்தினார். தகப்பனார் இறந்ததுமே அந்தக் காலத்திலேயே தான் இந்தச் சிற்றூருக்கு வந்துவிட்டதாகவும் தான் மட்டும் உடல்நிலையில் வலுவானவனாக இருந்திருந்தால் அரங்கனை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் கூறினார். அவ்வளவில் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டனர் இளைஞர்கள் இருவரும். அடுத்தடுத்து நான்கு நாட்களுக்கு அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று அரங்கன் இருக்குமிடம் பற்றி விசாரித்த வண்ணம் இருந்தார்கள். எங்கும் அரங்கனைப் பற்றி எவ்விதச் செய்தியும் கிட்டவில்லை. பலருக்கும் இந்தத் தகவல் புதியதாகவே இருந்தது. அப்படி இருக்கையில் இந்தப் பெரியவர் இத்தனை தகவல்களை அளித்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்றிரவை அவர்கள் அந்தக் கிராமத்துச் சத்திரத்திலேயே கழிக்க நினைத்தனர். சத்திரத்தில் உணவருந்திவிட்டுப் படுத்த இருவருக்கும் படுக்க இடம் கொடுத்து விரிப்புக்களையும் கொடுத்தார் சத்திரத்துப் பரிசாரகர். ஆனால் தத்தன் படுத்ததுமே தூங்கிவிட வல்லபனுக்கு மட்டும் தூக்கமே வரவில்லை.

அவன் மனதில் வழியில் பார்த்த அந்த இளம்பெண்ணின் நினைவே மாறி மாறி வந்து கொண்டிருந்தது. அடிக்கடி அவள் கண்களை நினைத்தவனுக்கு அது மீனைப் போல் இருப்பதாகத் தெரிந்தது. அந்த மீன் சிறிது நேரத்தில் ஓர் மகர கண்டிகையாக மாறிப் பின்னர் அந்த இளம்பெண்ணாக மாறி அவன் முன்னே வந்து நிற்பது போலவும், "சத்திரத்தில் பார்த்த இளைஞரே!" என அவனை அழைப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. அந்தப் பெண்ணின் இனிமையான குரல் காதுகளில் கேட்பது போல் இருந்தது. அவன் மனமும் முகமும் அதை நினைத்து மலர்ந்து விகசித்தது.

2 comments:

நெல்லைத்தமிழன் said...

விடாது அரங்கனை நிறைய இடங்களுக்குக் கொண்டுச்சென்றிருக்கின்றனர், அந்தக் காலத்தில், பத்திரமாக... ரொம்ப ஆச்சர்யம்தான்.

Geetha Sambasivam said...

போகப் போகத் தெரியும்.