எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, November 10, 2020

கோபண்ணாவின் வருத்தம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

கம்பணன் இல்லை என்றதும் யோசனையில் ஆழ்ந்தார் பண்டிதர்.  திருநாராயணபுரத்துக்கு ஆட்களை அனுப்பிக் கம்பணனை வரவழைக்கலாமா என்னும் ராணியரின் யோசனைக்கு மறுப்புத் தெரிவித்த கிரியாசக்திப் பண்டிதர் கம்பணனின் மந்திரியான சோமப்பரோ அல்லது மற்ற மந்திரிப் பிரதானிகளான சாளுவ மங்கு, மாராய நாயகர், ராமய்யா போன்றவர்களில் எவரேனும் இருக்கிறார்களா எனக் கேட்டார். ஒருவருமே இல்லை; ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினால் ஊரை விட்டுச் சென்று விட்டார்கள் என்று கங்காதேவியும் குந்தளாவும் சொன்னார்கள். ராணிகளின் பொறுப்பில் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு மன்னன் போய்விட்டானா எனக் கேட்டார் பண்டிதர். அதற்கு ராணியர் இருவரும் சைனியங்களின் தளபதியான கோபண்ணா ஊரில் தான் இருப்பதாகச் சொன்னார்கள். கோபண்ணாவும் திறமை வாய்ந்த மனிதர்தான் என்பதால் கிரியாசக்திப் பண்டிதர் தாமே சென்று அவரைப் பார்ப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார்.

கோபண்ணாவின் மாளிகையை அடைந்த பண்டிதர் அவரைத் தேடுகையில் கோபண்ணாவே வந்து பண்டிதரை வரவேற்று கீழே விழுந்து வணங்கி அவருக்கு அமர ஆசனமும் கொடுத்து உபசரித்தார். கோபண்ணா ராஜரிக விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறாரோ என்னும் எண்ணம் தோன்றவே கிரியா சக்திப் பண்டிதர் கோபண்ணாவின் உடல்நலம் பற்றி விசாரித்தார். கோபண்ணாவும் உடல் நலத்துக்குக் கேடெல்லாம் இல்லை எனவும் மனம் தான் சரியில்லை எனவும் கூறினார். கிரியாசக்திப் பண்டிதர் சந்தேகப்பட்டபடியே கோபண்ணா தாம் ராஜரீகக் காரியங்களிலிருந்து விலகப் போவதாகவும் அறிவித்தார். திடுக்கிட்டுப் போனார் பண்டிதர். கோபண்ணா பதில் சொல்லத் தயங்கினார். பின்னர் மெதுவாகப் பேச ஆரம்பித்தவர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தென் பகுதிகளில் தாம் சுற்றுப் பயணம் வந்தபோது கண்ட காட்சிகளைப் பண்டிதரிடம் கூறினார்.

"கொள்ளேகாலம்" என அழைக்கப்படும் ஊர் அந்நாட்களில் :கொள்ளைக்களம்" என அழைக்கப்பட்டு வந்தது. அந்த ஊர் அருகே உள்ள இடங்களுக்கு கோபண்ணா பயணம் செய்து வந்தார். அங்குள்ள எல்லாக் கிராமங்களும் "அஞ்சினான் புகலிடம்" என அழைக்கப்பட்ட அகதிகள் முகாமாகவே காணப்பட்டதாய்ச் சொன்னார் கோபண்ணா. மேலும் அந்த மக்கள் அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தமிழ் பேசும் நாடுகளிலிருந்து இங்கே அடைக்கலம் தேடி வந்திருப்பதாயும் சொன்னார்கள். அவர்களில் சிலர் சுமார் இருபது முப்பது ஆண்டுகள் முன்னரே வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். சிலர் சமீப காலங்களில் வந்திருப்பவர்கள். இவர்களில் அதிகம் பேர் மலையாள தேசப்பக்கம் போய்க் குடியேறி விட்டார்கள். இதை எல்லாம் சொன்ன கோபண்ணா அவர்களைப் பார்த்ததும் தம் நெஞ்சம் பதறிற்று எனவும் அவர்கள் வடித்த கண்ணீரிலிருந்து அவர்கள் எப்படிப் பட்ட துன்பத்தை அனுபவித்து வந்திருக்கிறார்கள் எனவும் புரியவந்ததாகச் சொன்னார். தங்கள் ஊர்களில் தங்கள் சொத்துக்களை எல்லாம் அப்படியே விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும்; தங்கள் பாரம்பரியத்தைப் பின்பற்றத் தடை இல்லாமல் இருந்தால் போதும் என்னும் ஒரே எண்ணத்தோடு ஓடி வந்ததாகச் சொன்னார்கள். இதை எல்லாம் சொன்ன கோபண்ணா மேலும் கிரியா சக்திப் பண்டிதரைப் பார்த்து, "ஐயா! இதை எல்லாம் சொன்னதோடு அவர்கள் நிற்கவில்லை. அவர்கள் மீண்டும் தங்கள் நாடு திரும்ப வேண்டும் என நினைக்கிறார்கள்.. அதற்கு நம் உதவியையும் எதிர்பார்க்கிறார்கள். இது உங்களால் தான் ஆகும். நீங்கள் தான் செய்ய முடியும் என்றெல்லாம் சொல்கின்றனர். பலர் என் கால்களில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்." என்றார் கோபண்ணா.

அதைக் கேட்ட கிரியா சக்திப் பண்டிதர் முகம் துக்கத்திலும் வருத்தத்திலும் ஆழ்ந்து போனது. கோபண்ணாவிடம், "கோபண்ணா! ருத்ரோத்காரி வருஷம் மதுரையில் பாண்டியர்களை விரட்டி அடித்துவிட்டு சுல்தானிய ஆட்சி வேரூன்றியது. இப்போது 37 வருடங்கள் ஆகியும் ஒன்றும் மாற்றம் இல்லை. அவர்களை எதிர்த்துப் போரிட்ட ஹொய்சள மன்னரும் வஞ்சனையாகக் கொல்லப்பட்டார். பழைய சோழ ராஜாக்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. பாண்டியர்களோ ஒருவருக்கொருவர் தாயாதிச் சண்டை போட்டுக் கொண்டு தென்காசியிலும், மலையாள தேசத்திலும் ஒளிந்து வாழ்கின்றனர். அவர்களால் ஒரு வலுவான படை திரட்டக் கூட முடியவில்லை. பராக்கிரமசாலிகள் யாருமே இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமையே இல்லையே! இதற்காக நாம் வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்? நீங்கள் தான் ராஜரீக வாழ்க்கையைத் துறந்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றார் பண்டிதர்.

அதற்கு கோபண்ணா, ராஜரிக வாழ்க்கை போன்ற லௌகிக வாழ்க்கையைத் துறந்து தாம் முற்றிலும் ஆன்மிக வாழ்க்கையை வாழலாமோ என எண்ணுவதாய்ச் சொன்னார்.  நிலையான ஒன்றை விட்டுப் பற்று அதிகம் கொண்டு நிலையற்ற ஒன்றைப் பற்றிக் கொண்டிருப்பதாய்த் தாம் வருந்துவதையும் தெரிவித்தார் கோபண்ணா. அதற்குக் கிரியாசக்திப் பண்டிதர் கோபண்ணா இவ்விதம் மனம் வருந்திப் பேசுவதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று ஊகித்தார். அதை கோபண்ணாவிடம் கேட்கவும் செய்தார். 

1 comment:

நெல்லைத் தமிழன் said...

தொடர்கிறேன்... வருத்தமான சம்பவங்களைக் கடந்துசெல்லத்தான் வேண்டும். கொள்ளேகால் பெயர் சுவாரசியம்