எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, November 16, 2020

கோபண்ணா சொன்ன கதை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 அதற்கு கோபண்ணா பின்னிரவில் அவரை ஓர் விஷ ஜந்து தீண்டிவிட்டதாகச் சொன்னார். அது என்ன எனப் பார்த்தபோது பெரியதான ராஜ தேள் என்றும் சொன்னார். கொடுமையான, கடுமையான வலியில் தாம் துடித்ததாகவும் ஆட்களை எழுப்பி அந்த அர்த்த ஜாமத்திலும் வைத்தியரைக் கூட்டி வரச் சொன்னதாகவும் சொன்னார். "புது ஊர், புது இடம் என்பதால் என் ஆட்களுக்கு அக்கம்பக்கம் விசாரித்துத் தெரிந்து கொண்டு வைத்தியரைக் கண்டு பிடிக்க நேரம் ஆகிவிட்டது. வைத்தியர் வந்து சூரணத்தைக் குழைத்துப் போட்டும் குணமாகவில்லை என்றதும் பச்சிலையை அரைத்துச் சாறு பிழிய வேண்டுமெனச் சொல்ல வைத்தியரிடம் அடையாளங்களைக் கேட்டுக் கொண்டு பச்சிலையைத் தேடிச் சென்றனர் என் பரிவாரங்கள். அக்கம்பக்கம் எங்கேயும் கிடைக்காமல் அருகிலுள்ள கிராமத்தின் மலைச் சாரலிலே கிடைக்கும் எனச் சொல்லவே தீவர்த்திகளை ஏற்றிக் கொண்டு அங்கே சென்றனர். கடும் பிரயத்தனங்களுக்கு நடுவே ஒரு வழியாக அதைக் கண்டு பிடித்துப் பறித்து வந்து வைத்தியரிடம் கொடுக்க அவரும் பச்சிலையைச் சாறு பிழிந்து தேள் கொட்டிய இடத்தில்  பரப்பவே ஒரு நாழிகையில் வலியிலிருந்து விடுதலை பெற்றேன்." கோபண்ணா நிறுத்தியதும், கிரியாசக்திப் பண்டிதர், "இதை ஏன் இப்போது சொன்னீர்கள்?" என வினவினார்..

கோபண்ணா எல்லாம் முடிந்து மறுநாள் ஊருக்குக் கிளம்பும் நேரம் அந்த வயதான முதிய வைணவர் மறுபடியும் கோபண்ணாவைத் தேடிக் கொண்டு வந்ததாய்ச் சொன்னார். ராத்திரி என்னைத் தேள் கொட்டியதைப் பற்றி வினவியர் நான் அது பற்றிய விபரங்களைக் கூறியதும் மௌனமாகக் கேட்டுக் கொண்டார். பின்னர் என்னைப் பார்த்து, "தளபதி அவர்களே! உங்களை இப்போதுக் கொடிய தேள் கொட்டி இருப்பது போல் தான் நாட்டையும் கொடுமையானதொரு விஷ ஜந்து தீண்டி விட்டது என்பதை உணருங்கள். நேற்று இரவோடு இரவாக மூலிகையைத் தேடி உங்கள் ஆட்கள் அலைந்தனரே! அதே போல் அரங்கனைத் தேடியும் நீங்கள் அலைந்து திரிந்து பாருங்கள். அவன் எங்கிருக்கிறான் என்பதை முதலில் கண்டு பிடியுங்கள்!" என்று சொல்லிவிட்டு மறுமொழியைக் கூட எதிர்பார்க்காமல் உடனே கிளம்பி விட்டார்." என்றார் கோபண்ணா.

அவர் வார்த்தைகள் தன்னைக்கட்டிப் போட்டதைப் போல் உணர்ந்ததாகச் சொன்னார் கோபண்ணா. தேள் கொட்டிய வலியை விட மிக அதிகமான வலியைத் தாம் உணர்ந்ததாகவும் சொன்னார். ஆம், தமிழகத்தை விஷ ஜந்து தான் தீண்டி இருக்கிறது. தாம் இதைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே எனத் தாம் மனதில் நினைத்துக் கொண்டதாய்ச் சொன்னார்.  அஞ்சினான் புகலிடத்து மக்களின் கண்ணீர் அந்த விஷ ஜந்துவின் கொட்டலினால் ஏற்பட்ட வலிதான் என்பதையும் புரிந்து கொண்டேன். அவர் இதைச் சுட்டிக் காட்டியது மட்டுமல்ல. அதற்கான பரிகாரத்தையும் கூறிவிட்டார். அது தான் அரங்கனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயம். அந்த அரங்க விக்ரஹம் வெறும் விக்ரஹம் மட்டுமல்ல. ஒரு தெய்விக மூலிகை. அதை எப்பாடுபட்டாவது தேடிக்கொண்டு வந்து தமிழக மக்களின் துயரைப் போக்கி அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உண்டு பண்ண வேண்டும்."

"ஒரு சாமானியனான என்னுடைய உடல் வலியைப் போக்குவதற்கு நடு இரவில் மூலிகையைத் தேடி அலைந்தனர் என் பரிவாரங்கள். ஒரு நாட்டின் மக்களது மன வலியைப் போக்க ஓர் தளபதியாக நான் செய்ய வேண்டியது என்ன என்பதை அந்த நிகழ்ச்சி மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த முதியவர் சுட்டிக் காட்டியதும் தான் நான் புரிந்து கொண்டேன். அந்த வயோதிகர் மூலமாக அந்த மக்களின் மனக்கருத்து வெளிப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாகச் சிரித்து அவர்களை எல்லாம் அவமானப்படுத்தி விட்டேன். இப்போது என் தலையாய வேலை அரங்கனைக் கண்டு பிடிக்க வேண்டியது ஒன்றே ஆகும்." என்றார் கோபண்ணா.

இந்த ஒரு சம்பவம் உங்கள் மனதை மாற்றிவிட்டதா எனப் பண்டிதர் கேட்க கோபண்ணா, இல்லை இன்னமும் இருக்கிறது என்று மேலும் தொடர்ந்தார். 

1 comment:

நெல்லைத் தமிழன் said...

அரங்கனைக் கண்டுபிடிக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டாரா கோபண்ணா?

ராஜ தேள் என்பது நட்டுவாக்காளியாக இருக்குமோ?