எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, January 10, 2021

தத்தனும் மஞ்சரியும்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

இப்போது இன்னமும் இருவர் சேர்ந்து கொள்ள நான்கு பேரின் குரலும் வாதங்களில் முற்ற ஆரம்பித்தது. கடைசியில் அங்கேயே ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொண்டனர்.  பேசிக் கொண்டே மேலே நடக்க ஆரம்பித்தனர். வல்லபன் மறைந்திருந்த திண்ணையை விட்டு மெதுவாக எழுந்தான். நல்லவேளையாகத் தன்னைப் பார்க்கவில்லை, பிழைத்தோம் என எண்ணிக் கொண்டான். பெரிய வீதிகள் வேண்டாம் என முடிவெடுத்துச் சிறிய வீதிகளில் சுற்றிப் பார்த்து ஒரு வீட்டின் திண்ணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். திண்ணையில் ஏறியவனுக்குத் தன் நிலை குறித்து சுய பச்சாத்தாபம் உண்டாகியது. அந்தப் பெண் இப்போது நம்மைப் பார்த்தால்? என எண்ணிக் கொண்டவன், மெல்ல மெல்ல யோசனைகளும், கனவுகளுமாக உறங்க ஆரம்பித்தான்.  அங்கே தத்தன் மருத்தூவமனையில்! .............
***********************************************************************************
 சேவகர்கள் கண்களில் பட வேண்டாம் என தத்தனைக் கட்டிலோடு இறந்தவனாகச் சொல்லிக் கொண்டு வந்து மறைத்து வைத்திருந்தார்கள். மருத்துவமும் தொடர்ந்து கொண்டு இருந்ததால் தத்தனுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. இரவா, பகலா எனத் தெரியாத பொழுது. ஏதேதோ சப்தங்கள் கேட்பது போலவும் இருந்தது. நிசப்தமாகவும் தெரிந்தது. தத்தன் கண்களை விழித்துப் பார்த்தான். சப்தங்கள் தாம் விசித்திரமாக இருந்தனவெனில் காட்சிகளும் அப்படியே விசித்திரமாகத் தெரிந்தன! தான் உயிரோடு இல்லையோ? மேலுலகம் வந்து விட்டோம் போல் தெரிகிறது. அதனால் தான் விசித்திரமான சப்தங்களும், விசித்திரமான காட்சிகளும் தெரிகின்றன என தத்தன் நினைத்துக் கொண்டான்.  மீண்டும் நினைவுகளைத் தொடர்ச்சியாகக் கொண்டு வர முயன்றான். களைப்பு மேலிட்டது. நினைவுகளா, கனவுகளா எனத் தெரியாமல் மிதப்பது போல் உணர்ந்தான். அவனுக்கு நினைவுகளைக் கோர்வையாகக் கொண்டு வர முடியவில்லை. 

ஒரு வேளை இவை அனைத்தும் நினைவில்லையோ? கனவுகளோ? அல்லது தான் இறந்து தான் விட்டோம் போல இருக்கிறது. அப்போது கேட்ட ஒரு குரல் பெண் குரல் போல் இருந்தது. பழகிய குரலாகவும் இருந்தது. யார் குரல்? அந்தச் சின்னஞ்சிறு இளம்பெண்! நம்மைப் பார்த்துச் சிரித்தாளே! அவள் குரலோ? ஆம்! அப்படித்தான் தெரிகிறது.  வைத்தியர் வீட்டு வாசலில் தான் நீரில் விழுந்தபோது தன்னைப் பார்த்து நகைத்த குரல். ஏதோ சொல்கிறாளே! தத்தன் பெரு முயற்சியுடன் தன் கண்களைத் திறந்து குரல் வந்த திசையில் பார்த்தான். அவள் உருவம் போல் ஓர் பெண் உருவம் அங்கே தெரிந்தது. ஆனால் அது அந்தப் பெண் தானா? தத்தனுக்கு மறுபடி நினைவு தப்பி விட்டது. இரண்டு நாட்கள் இப்படித் தூக்கத்திலும் விழிப்பிலும் மாறி மாறிப் போராடினான் தத்தன். மூன்றாம் நாள் அவனுக்கு நினைவு சுத்தமாகத் தெளிவாகத் திரும்பி விட்டது.

கண்களை விழித்துப் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். தான் மருத்துவமனையில் இருப்பதையும் உலகம் எப்போதும் போல் இயங்குவதையும் கவனித்துப் புரிந்து கொண்டான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஆகையால் கட்டிலில் இருந்து இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பிப் பார்த்தான். ஒரு பக்கம் பார்த்தபோது அந்தப் பெண் ஓர் கலயத்தில் எதையோ குழைத்துக் கொண்டிருந்தாள்.  அவள் பெயர் தெரியவில்லையே என நினைத்துக் கொண்டே, "ஏ! பெண்ணே! இந்தா!" எனக் கூப்பிட்டான் தத்தன். அந்தப் பெண்ணிற்கு ஆச்சரியம் மேலிட்டது. ஒரு கணம் அவனைப் பார்த்தவள் அவனுக்கு முழு நினைவு திரும்பி விட்டதை உணர்ந்து கொண்டு அவன் பக்கம் பிரகாசமான முகத்துடன் வந்தாள்.

நினைவு திரும்பி விட்டதா எனக்கேட்டுக் கொண்டே வந்தாள் அந்தப் பெண். அவள் முக அழகும், கண்களின் பிரகாசமும், தத்தனைக் கவர்ந்து இழுத்தது. இவ்வளவு பருவ அழகுடன் கூடிய ஒரு இளம்பெண்ணை முதல்முறையாகக் கிட்டத்தில் பார்த்த தத்தன் மூச்சுத் திணறிப் போய் விட்டான். அவள் மேனியின் சுகந்தன் அவனை எட்டியது. அவ்வளவு கிட்டத்தில் அந்தப் பெண் நின்றிருந்தாள். அவளைப் பார்த்துத் தான் மயங்கி விட்டதை அவள் உணரக் கூடாது என்னும் எண்ணம் திடீரெனத் தோன்ற அவனிடம் பழைய மிடுக்கு வந்துவிட்டது. "யார் நீ?" என்று அதட்டிக் கேட்க அவளுக்கும் கோபம் வந்தது. 

"ஆஹா! என்னைத் தெரியாது அல்லவா? நேரிலே பார்த்ததே இல்லை அல்லவா? அதான் கேட்கிறீர்கள்! யார் நீ! யார் நீ!" என்று அவனைப் பார்த்துச் சொன்னவண்ணம் பழிப்புக் காட்டினாள். அதற்கு பதில் சொல்லாமல் தத்தன் இது எந்த இடம் என்றும் தன்னை ஏன் அங்கு அந்தப் பெண் வைத்திருக்கிறாள் என்றும் கேட்டான். மேலும் வல்லபன் எங்கே என்றும் விசாரித்தான். அவள் அதற்குக் கிண்டலாக, "இது பூலோகம் தான் ஐயா! வைகுண்ட வாசலை எட்டிப் பார்த்த உங்களை அங்கே போக விடாமல் இங்கேயே வைத்திருக்கிறோம். நீங்கள் கேட்கும் கேள்விகளும், கேட்கும் தோரணையும் பிரமாதமாய்த் தான் இருக்கிறது. உங்களுக்கு நீங்கள் கடும் ஜூரத்தில் இருந்ததும் உங்களைக் காப்பாற்றியதும் பெரியதாய்த் தெரியவில்லை. குணப்படுத்தினவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் தோன்றவில்லை. ஏதோ உங்களைப் படுத்தி எடுத்துவிட்ட மாதிரி தான் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கிறீர்கள்!" என்று கடுமையாகச் சொன்னாள்.

No comments: