எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 05, 2021

மஞ்சரியின் சந்தேகம்! ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்.!

ஓட்டமாக ஓடிய வல்லபன் மனதில் சந்தேகம் எழ வாயிலருகே திரும்பிப் பார்த்து, கவனித்துக் கொள்வீர்களா? என்று மீண்டும் கேட்க, அந்தப் பெண்ணோ அவனைப் பார்த்துச் சிரித்தாள்.  ஆனால் அந்தச் சேவகனின் கட்டிலருகே இருந்த அவன் நண்பன் கட்டிலை விட்டு நகரவும் வல்லபன் அவன் எங்கே நம்மைப் பார்த்துவிடுவானோ என்னும் அச்சத்துடன் ஓட்டமாய் ஓடிவிட்டான். அவன் சென்ற பின்னர் அந்தப் பெண் யோசனையில் ஆழ்ந்தான். அவள் தன் கையிலிருந்த விளக்கை அங்கே இருந்த ஒரு மாடத்தில் வைத்துவிட்டுப் படுக்கைகள் போட்டு நோயாளிகளைப் படுக்க வைத்திருந்த இடத்தை நோக்கிச் சென்றாள். தத்தனின் கட்டிலைத் தேடிக் கொண்டு சென்றாள். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களுக்கு அந்தச் சேவகனின் கட்டில் அருகே இருந்த இன்னொருவன் தன்னைப் பார்த்தது தெரிய வந்தது.

ஆனால் அவள் எதையும் கவனிக்காதவள் போல முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு இயல்பாகவே நடந்து கொண்டாள்.  தத்தனின் கட்டில் அருகே சென்றவள் கட்டிலின் அருகே மண்டியிட்டு அமர்ந்த வண்ணம் அவனை, "ஐயா! ஐயா!" என அழைத்தாள் மெதுவாக. ஆனால் தத்தன் ஏதும் பேசவில்லை. ஜூர வேகம் அதிகமாக இருந்தது. உடலில் இருந்து ஜ்வாலை வீசியது. கண்களைத் திறக்காமல் அப்படியே அசையாமல் இருந்தான். பயந்து போன அந்த இளம்பெண் அவன் நெற்றியில் கையை வைத்தாள். தத்தனின் உடல் சூட்டைத்தாங்காமல் தன் கைகள் பொரிந்துவிடுமோ என்று எண்ணும் வண்ணம் கொதிக்கவே அவள் திகிலுடன் கையை உதறிவிட்டு எடுத்து விட்டாள். அவள் மனதில் கலவரமும் பயமும் ஏற்பட்டது. அங்கும் இங்குமாகப் பார்வையைத் திருப்பியவள் கண்களில் மீண்டும் அந்தச் சேவகன் தன்னையே பார்த்துக் கொண்டு கட்டிலருகே நிற்பது தெரிய வந்தது.

அவன் அங்கிருந்து திடீரெனக் கிளம்பியவன் தத்தன் கட்டிலருகே அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை நோக்கியே வந்தான். அவனைக் கவனிக்காதது போல் காட்டிக் கொண்ட அந்தப் பெண் தன் மனமும்  உடலும் பரபரப்பதை அடக்கிக் கொண்டு என்ன செய்யலாம் என்ற யோசனையில் அந்த மனிதன் வருவதைப் பார்த்துக் கொண்டு அவனைப் பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்தாள். அந்த மனிதன் கட்டிலை நோக்கி வருவதைக் கண்டு தான் உள்ளூர கவலை கொண்டிருப்பதை அவள் காட்டிக் கொள்ளவில்லை.

அருகே வந்த அந்த மனிதனோ அவளை, "மஞ்சரி! " என அழைத்தவாறே, "இது யார்? உன் தாத்தா தானே நோயாளி என்றாய்? இவர் யார்? உனக்குத் தெரிந்தவரா?" என்றும் கேட்டான். அதற்கு மஞ்சரி, எழுந்து கொண்டே, "இவர் எனக்கு உறவில்லை. வைத்தியருக்கு ஏதோ உறவாம். கடும் ஜன்னி கண்டிருக்கிறது. இவரை நன்றாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர் சொன்னார். நான் அதைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தேன். இப்போது இவருக்கு நினைவே இல்லை. நினைவு தப்பி விட்டது. இன்று இரவு போவதே கஷ்டம்!" என்று சொன்னவள், கடைசி வார்த்தையை இழுத்தவாறே சொன்னாள். அந்தச் சேவகனின் ஊகத்திற்கு அதை விட்டவள் போல் பேச்சையும் பாதியில் நிறுத்தினாள்.

அவன் தத்தனின் கட்டிலை நோக்கி வருவதைத் தடுக்கும் விதமாக அவளே முன்னேறிச் சென்று அவனைத் தடுத்துத் திரும்பும் வண்ணம் செய்தவள் அவனிடம், உங்கள் நண்பரின் கால் இப்போது எப்படி உள்ளது? என்றும் கேட்டாள். அவனை அப்படியே அந்தச் சேவகன் படுத்திருந்த கூடம் வரை அழைத்துச் சென்று விட்டாள். ஆனால் அந்தச் சேவகனோ அங்கே உள்ளே செல்லாமல் அங்கேயே இருந்த ஓர் ஆசனத்தில் அமரவே மஞ்சரிக்குச் சந்தேகம் வந்துவிட்டது.

No comments: