எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, June 09, 2021

மஞ்சரியின் மாமன்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய் மாமன் வீட்டிற்கு எனச் சொன்னான் தத்தன். நேற்றுக் கேட்டதற்கு மாமன் கிடைக்கவில்லையே என தத்தன் சொன்னதை நினைவூட்டின மஞ்சரியிடம் தத்தன் முதலில் பெற்றோர் இல்லை என்பதை அவளிடம் சொல்லி மனதளவில் அவளைத் தயார் செய்ய வேண்டி இருந்ததாய்ச் சொன்னான். அதன் பின்னர் அவள் தாய் மாமன் வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல இருந்ததாயும் சொன்னான். மஞ்சரியின் கண்கள் நீரை ஆறாய்ப் பெருக்கின. உள்ளுக்குள் அவள் குமுறுகிறாள் என்பதை நிலை குத்திய அவள் பார்வையும் துடிக்கும் உதடுகளும் வெளிப்படுத்தின. அவள் வாய்விட்டு அழட்டும் என தத்தன் நினைத்தான். சில வினாடிகளில் அவள் குமுறிக் குமுறி வாய்விட்டுக் கதறினாள். 

தன் பாட்டனார் தன்னிடம் இந்த உண்மையைச் சொல்லாதது குறித்தும் சொல்லி இருந்தால் தான் ரொம்பவே வேதனைப் பட்டிருப்போம் என்பதால் தன் நன்மையைக் கருதியே பாட்டனார் சொல்லவில்லை எனத் தான் புரிந்து கொண்டதாகவும் சொன்னாள் மஞ்சரி. ஆனாலும் அதனால் ஏற்பட்ட தீமையும் உண்டு எனச் சொன்ன மஞ்சரியை தத்தன் நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் தென்பட்ட ஆச்சரியக் குறியைக் கண்ட மஞ்சரி தான் தன் பெற்றோர் இருப்பதாகவே கருதி ஆசைகளை வளர்த்துக்கொண்டதையும் பெற்றோருடன் சேர்ந்து வாழப் போகும் வாழ்வை நினைத்துக் கண்ட கனவுகளையும் சொல்லி இப்போது அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டதால் அவள் தாத்தா சிறு வயதிலேயே அவளுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி அவளைத் தயார் செய்திருக்க வேண்டும் என்றும் சொன்னாள். சிறிது நேரம் அவளை அழவிட்ட தத்தன் அவளை மாமன் வீட்டிற்காகக் கிளம்பச் சொல்ல அவளும் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினாள்.

சிங்கழகர் என அழைக்கப்பட்ட வயது முதிர்ந்த மஞ்சரியின் தாய் மாமன் ஒரு நந்தவனத்திற்கு அருகே உள்ள மண் வீட்டில் வசித்து வந்தார். விஷக்கடியினால் ஏற்பட்ட வியாதிகாரணமாக அவரால் அதிகம் நடமாட முடியாது. சுமார் அறுபது பிராயங்கள் ஆன அவர் மஞ்சரியையும் தத்தன்.வல்லபன் இருவரையும் பார்த்ததும் வியப்படைந்தார். யாரோ அதிதிகள் என எண்ணிக்கொண்டு அவர்களை உபசரித்து ஆசனங்களில் அமர வைத்து என்ன செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்தார். தத்தன் அவரிடம் மஞ்சரியைக் காட்டி அவருடைய சகோதரியின் பெண் தான் இந்தப் பெண் என்பதையும் சொல்லி அவள் பாட்டனார் வளர்த்து வந்ததையும் பெற்றோர் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது அந்நியப் படையெடுப்பில் கொல்லப்பட்ட விபரத்தையும் இது நாள் வரை மஞ்சரிக்கு அது விஷயம் தெரியாது என்பதையும் சொன்னான். பின்னர் அவர் இங்கே இருக்கும் விஷயத்தை மஞ்சரியின் தாத்தா மூலம் அறிந்து கொண்டதாகவும் அவர் காலம் ஆகிவிட்டதால் மஞ்சரியைத் தானும் வல்லபனும் பொறுப்பெடுத்துக் கொண்டு காஞ்சிகுக் கூட்டி வந்து அவரிடம் ஒப்படைக்க எண்ணியதையும் சொன்னான்.

சிங்கழகருக்கு ஒரு புறம் வியப்பு! மகிழ்ச்சி! இன்னொரு புறம் சோகம்! வருத்தம். அவருக்கும் தன் சகோதரி குடும்பம் குறித்த தகவல்களே இல்லாமல் இருந்ததில் இப்போது விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாலும் இன்னொரு பக்கம் துக்கமும் மேலிட்டது. மஞ்சரியைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் உகுத்தார். அவளைத் தன் கைகளால் தொட்டு ஆசீர்வதித்தார். துணை இல்லாமல் பற்றில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இப்போது துணையோடு வாழ்க்கையில் பற்றும் ஏற்பட்டு விட்டதாய்ச் சொன்னார்.இனி தன் வாழ்க்கையை மஞ்சரிக்காக வாழ வேண்டும் எனவும் சொன்னார். இது ஒரு சுமை தான் தனக்கு என்றாலும் சுகமான சுமை அதிலும் சொந்தமான ஒரு சுமை. தன் கடமை எனவும் சொல்லிக் கொண்டார். மஞ்சரியைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதாக உறுதியும் அளித்தார்.

சிறிது நேரம் சம்பிரதாயமான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தத்தனும் வல்லபனும் சத்திரத்துக்குக்கிளம்ப "ஐயா!" என மஞ்சரி அவர்களை அழைத்தாள். வல்லபனுக்குப் புரிந்தது அவள் தத்தனோடு தனியாகப் பேச விரும்புகிறாள் என்பது. ஆகவே அவன் தத்தனிடம் அவனைப் போய்ப் பேசச் சொல்லிவிட்டுத் தான் ஒதுங்கி நின்றான். மஞ்சரி தத்தன் வரவும் அவனிடம், இப்படித் தன்னை முன்பின் தெரியாத ஓர் இடத்தில் நிர்க்கதியாக விட்டுச் செல்வதைக் குறித்துக் குறை கூறினாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. தத்தன் திடுக்கிட்டான். மஞ்சரியோ மேலும் அவளை விட்டுவிட்டு அவர்கள் சீக்கிரம் கிளம்பியதற்கும் ஆக்ஷேபம் தெரிவித்தாள். என்னதான் தன் மாமன் அங்கே இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத புதிய இடம் தனக்குப் பாந்தமாக இல்லை எனவும் தத்தன் தான் சொந்தம் போலவும் மாமன் அந்நியராகவும் தெரிவதாய்ச் சொன்னாள்.  தத்தனையும் வல்லபனையும் விட்டுப் பிரியக் கஷ்டமாக இருப்பதாகவும் அதிலும் தத்தனோடு நிரந்தரப்பிரிவு ஏற்பட்டு விடுமோ என அஞ்சுவதாகவும் அதை நினைத்து வருந்துவதாகவும் சொன்னாள். தத்தனால் பேச முடியவில்லை. அவளைச் சமாதானம் செய்யப் பல நல்ல வார்த்தைகளைச் சொல்லி வாக்குறுதிகளைக் கொடுத்து மெல்ல மெல்ல அவளைச் சமாதானம் செய்ய முற்பட்டான். தானும் வல்லபனும் நாளையும் வருவோம் எனவும் காஞ்சியில் இருக்கும்வரை தினம் வந்து பார்த்துவிட்டுச் செல்வதாயும் வாக்குறுதி அளித்தான்.

No comments: