எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 22, 2022

அரங்கன் தப்பித்தானா? ஶ்ரீரங்க ரங்கநாதரின் பாதம் பணிந்தோம்!

 சற்று நேரம் யோசித்த மூத்த கொடவரான திருக்குருகூர்தாசர் மற்றவர்களைப் பார்த்துக் கூறலானார். "கீழே செங்குத்தான பகுதியில் யாரும் இல்லை என்பதாலும் அங்கே யாரும் இறங்க முடியாது என்பதாலும் இப்போது நாம் ஒரு வேலை செய்யலாம். நீங்கள் இருவரும் நல்லதொரு கயிற்றில் என்னைப் பிணைத்து என்னோடு அரங்க விக்ரஹத்தையும் சேர்த்து நன்றாகக் கட்டி விடுங்கள். காட்டுக்கொடிகளால் நல்ல உறுதியான கயிறைத் தயாரித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே கொடிகளால் இன்னொரு உறுதியான கயிற்றை நீளமாகத் தயாரியுங்கள். என்னை அந்த நீளமான கயிற்றில் பிணைத்து இருவருமாகக் கீழே இறக்கி விட்டுவிடுங்கள்.  இது செங்குத்தான பள்ளமாக இருக்கிறது. யாராலும் அவ்வளவு சுலபமாகக் கீழே இறங்க முடியாது. அதன் அப்பால் இருக்கும் இறக்கத்தில் யாரும் நடந்து செல்ல முடியாது. ஆனால் உருண்டு போக முடியும். அந்தச் சரிவில் நான் தொட்டதும் நீங்கள் உங்கள் பக்கத்துக் கயிறுகளை நழுவ விடுங்கள். நான் அந்தச் சரிவில் உருண்டு உருண்டு போய்க் கொள்கிறேன். சரிவில் உருண்டு போனால் கடைசியில் நான் அடிவாரத்தை அடைந்து விடுவேன். "என்று சொன்னார்.

ஆனால் இதைக் கேட்ட மற்ற இருவரும் திடுக்கிட்டுத் திகைத்துப் பயந்து போனார்கள். இது மிக மிக ஆபத்தான காரியம் என யோசித்தார்கள். ஆனால் திருக்குருகூர் தாசரோ அரங்கனைக் காப்பாற்ற வேண்டுமானால் இப்படி எல்லாம் செய்தே ஆகவேண்டும் என்று முடிவாகக் கூறினார்.  ஆனாலும் இருவரும் மீண்டும் மீண்டும் யோசிக்கவே திருக்குருகூர் தாசர் அவர்களைச் சமாதானம் செய்து இதை விட்டால் வேறு வழியில்லை என்றும் அங்கேயே அவர்கள் இருந்தால் எப்படியும் படைவீரர்கள் வந்து பிடித்துவிடுவார்கள். அரங்கனையும் தூக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி இருவரையும் சமாதானம் செய்தார்.  மிகவும் யோசித்துவிட்டுக் கடைசியில் வேறே வழி ஏதும் தோன்றாததால் அவர்கள் இருவரும் சம்மதித்தனர். காட்டுக்கொடிகளை அறுத்து எடுத்துக் கொண்டு வந்து கயிறு திரிக்க ஆரம்பித்தனர். 

பின்னர் மூத்த கொடவரான திருகுருகூர் தாசர் கீழே அந்தக் காட்டுத் தரையில் மல்லாந்து படுத்தார். அவர் வயிற்றின் மீது அரங்க விக்ரஹத்தைக் குப்புறப் படுக்க வைத்தார்கள் இருவருமாக. காட்டு மூலிகைக் கொடிகளால் இருவரையும் பிணைத்து நன்கு இறுகக் கட்டினார்கள்.  கட்டும்போதே அவர்கல் விக்ரஹத்தையும் கொடவரையும் தொட்டுத் தொட்டு வணங்கிக் கொண்டார்கள். பின்னர் அவரை விக்ரஹத்தோடு சேர்த்துக் கட்டிய காட்டுக்கொடிக் கயிற்றில் கொஞ்சம் பகுதியை நீளமாக விட்டு விட்டு அதில் ஒரு மூலையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து  பெரியவரின் இடுப்பில் பிணைத்துவிட்டு இன்னொரு மூலையை அங்கிருந்த பெரிய ஆலமர விழுதில் பிணைத்தார்கள்.

பின்னர் அவர்கள் மிகுந்த முயற்சியுடன் மீண்டும் மீண்டும் திருக்குருகூர் தாசரை வணங்கிக் கொண்டு, விக்ரஹத்தையும் தொட்டு வணங்கிக் கொண்டு அஞ்சலிகள் பலமுறை செய்துவிட்டு தாசரிடம் விடை பெற்றுக் கொண்டு அவரை மெல்ல மெல்ல அந்த மலை முகட்டின் நுனிக்கு எடுத்துச் சென்றார்கள். அவரோடு சேர்த்து அரங்கனையும் கொண்டு போக வேண்டி இருந்தது. கனம் தாங்கவில்லை. எப்படியோ மெதுவாக எடுத்துச் சென்று விட்டார்கள்.  பின்னர் மெதுவாகக் கிழவரையும்  அவரோடு இறுக்கிக் கட்டி இருந்த அரங்கனையும் சேர்த்து மெல்ல மெல்ல நிதானமாகக் கீழ் நோக்கி விட்டார்கள். பெரியவரும் கயிற்றில் தொங்கிய வண்ணம் ஊசலாடிக் கொண்டு கீழ் நோக்கிப் பயணித்தார். அந்த மலை முகடு கீழே பார்க்க முடியாதவண்ணம் உச்சியில் மிகவும் வளைந்தும் நெளித்தும் இருந்தது.  என்றாலும் பயத்துடனேயே மற்ற இரு கொடவர்களும் மெல்ல மெல்ல கொடிக்கயிற்றை நழுவ விட்டார்கள். உத்தேசமாக முன்பே கயிற்றில் கணித்துள்ள இடம் வந்ததும் முழுக்கொடியையும் கீழே நழுவ விட்டார்கள்.

கீழே சென்று கொண்டிருந்த திருக்குருகூர் தாசருக்குச் சரிவு தட்டியது, உடனே கிடு கிடு சரிவில் அரங்கனோடு சேர்ந்து உருண்டு உருண்டு வெகு வேகமாகப் போனார். சர்ரென இறங்கிய அந்தச் சரிவில் கீழே நெடுந்தூரம் அப்படி உருண்டு பயணம் செய்த பின்னரே அடிவாரம் வந்தது.  அந்தக் கடினமான பாறைச் சரிவில் கல்லிலும், முள்ளிலும்,, புதர்களிலும் உருண்டு மேலே எல்லாம் காயம் பட்டுக் கொண்டு எதையும் லட்சியம் செய்யாமல் அரங்கனைக் காப்பாற்றுவதே குறிக்கோளாய் தாசர் உருண்டு கொண்டிருந்தார்.  அவர் உருண்டு போனதைப் பார்த்த இரு கொடவர்களும் உடனே தாங்களும் அடிவாரம் செல்ல வேண்டும் என்று எண்ணினார்கள். அதன்படியே இருவரும் அடிவாரத்திற்கு இறங்க ஆரம்பித்து இரண்டே நாழிகையில் கீழே இறங்கி மூத்த கொடவரையும் அரங்கனையும் தேட ஆரம்பித்தனர். 

No comments: