எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, March 31, 2022

சீராமதாசர் எங்கே! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 சீராமதாசருக்கும் மற்ற மூத்த கொடவர்கள் இருவருக்கும் என்ன கதி நேர்ந்தது என்பது பற்றித் தெரியாமலேயே இங்கே சிங்கழகர் தனிமையில் கிடந்து தவித்துக் கொண்டிருந்தார். துருக்கியப் படைகள் மேலே ஏறிக் கொண்டிருந்ததை நேரில் பார்த்தார் ஆகையால் அந்தப் படைகளால் கொடவர்களுக்கும் அரங்கனுக்கும் என்ன கேடு நிகழ்ந்ததோ எனப் பரிதவித்துக் கொண்டிருந்தார்.  பகல் போய் மாலையும் நெருங்கியது. மாலை ஏற ஏறச் சிங்கழகரின் தவிப்பும் அதிகம் ஆகிவிட்டது. ஆனால் அவர் வெளியே வந்தால் உடனே மலையைச் சூழ்ந்திருக்கும் துருக்கியப் படைகள் கண்களில் பட்டுவிடுவார். ஆகவே அப்படியே அமர்ந்திருந்தார். மெல்ல மெல்ல அந்தியும் மறைய ஆரம்பித்தது. ஆங்காங்கே நிழல்கள் நீண்டு போய் இருட்டுக் கவிய ஆரம்பித்தது. அப்போது தூரத்திலிருந்து ஏதோ குரல் கேட்ட மாதிரி சிங்கழகருக்குத் தெரியவே கூர்ந்து கவனித்தார். "சுவாமி, அழகர் சுவாமி!" என யாரோ மெல்லிய குரலில் மிக மிகச் சன்னமாகக் கூப்பிடும் ஒலி அவருக்குக் கேட்டது. தன்னைத் தான் யாரோ அழைக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டவரின் மனதிலும்/உடலிலும் தெம்பு கூடியது. சற்றுக் கூர்ந்து கவனித்தவர் குரல் கேட்ட திசையை ஒருவாறு அனுமானித்துக் கொண்டு அந்தத் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிட்டே செல்லச் செல்லக் குரலும் அருகில் கேட்கத் தொடங்கியது.

சற்றுத் தொலைவிலேயே சீராமதாசரைச் சிங்கழகர் கண்டு கொண்டார். அவரைக் கண்டதுமே சிங்கழகருக்கு ஏற்பட்ட ஆனந்தத்தில் சுற்றுச் சூழலை மறந்து, சீராமரே! சீராமரே! எனக் கத்திக் கூப்பிட்ட வண்ணம் ஓடினார். ஓடி வந்ததில் மூச்சு இரைத்தது சிங்கழகருக்கு. சீராமதாசரை நெருங்கியதும் அவரைப் பார்த்துக் கட்டித் தழுவிக் கொண்டார். இருவருக்கும் என்ன பேசுவது எனத் தெரியாமல் பிதற்றினார்கள். உளறினார்கள்; அழுதார்கள்; மீண்டும் மீண்டும் கட்டிக் கொண்டார்கள். சிங்கழகரும் அங்கே இருந்த அரங்கனைக்கண்டு கொண்டார். உடனே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சீராமதாசரிடம் நடந்தவற்றைப் பற்றிக் கேட்டார்.  சீராமதாசரால் முதலில் பேசவே முடியவில்லை. கண்ணீர் பெருகியது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு நடந்தவற்றைப் படிப்படியாகக் கூறினார். அதற்குள்ளாக அவருக்குப் பல முறை தொண்டை அடைத்ஹ்டுக் கொண்டது. சிங்கழகரும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டதும் பேசுவது ஏதும் அறியாமல் கண்ணீர் உகுத்தார்.

மெல்ல மெல்ல இரவு தன் கரங்களை நீட்டியது. இருவரும் அன்றிரவு அங்கேயே தங்க முடிவு செய்து அங்கேயே உட்கார்ந்து கொண்டு பழையனவற்றை எல்லாம் பேசிப் பேசிப் பேசித் தீர்த்தார்கள். புலம்பினார்கள். மறுநாள் காலை விடிந்ததும் முதல் வேலையாக சிங்கழகர்  திருக்குருகூர் தாசர் மற்றும் வில்லிபுத்தூர் தாசர் இருவரின் திருமேனிகளையும் தேடிச் சென்றார். அவற்றுக்கான கடைசிக் கிரியைகளை முறைப்படி செய்ய விரும்பினார் அவர். அதைக் குறித்து சீராமதாசரிடம் கூறிவிட்டுக் கிளம்பினார். சீராமதாசர் எதுவுமே பேசாமல் "உம்" கொட்டினார். சிங்கழகர் அதை முன்னாலேயே கவனித்தார். சீராமதாசரால் எதுவும் பேச முடியவில்லை என்பதும் பேசுவது தெளிவாக இல்லாததையும், வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்பதையும் கண்டு கொண்டார்.  தாம் சொன்னதை எல்லாம் அவர் புரிந்து கொண்டாரா என்னும் சந்தேகம் சிங்கழகருக்கு ஏற்பட்டது. சந்தேகங்களின் நடுவே அவர் இப்போது முதலில் கவனிக்க வேண்டியது இறந்த இரு தாசர்களின் உடல்களைக் கண்டு பிடித்து அந்திமக் கிரியைகளை நடத்த வேண்டும் என்பதே! ஆகவே சீராமதாசரைத் தேற்றும் விதமும் தெரியாமல் அப்படியே விட்டு விட்டுச் செல்ல நினைத்தார். அதீத சோகத்தில் இருப்பவர் சற்றுத் தனியாக இருந்தால் மேலே மேலே வரும் யோசனைகளில் சரியாகிவிடுவார் என்று நினைத்தார் சிங்கழகர்.

அவரைக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு அவரிடம் இருந்து ஏதும் மறுமொழி வரும் முன்னரே சிங்கழகர் அங்கிருந்து கிளம்பி விட்டார். அன்று முழுதும் அலைந்து திரிந்து கடைசியில் நடுப்பகலில் இறந்து போன இரு தாசர்களின் உடல்களையும் சிங்கழகர் கண்டு விட்டார். மனதில் துக்கம் பொங்கி வழிந்து கண்கள் வழியே ஆறாய்ப் பெருகியது.  அரங்கனைப் பார்த்து, அரங்கா! அறுபது பேர் இருந்த இடத்தில் இப்போது வெறும் இரண்டு பேராக மாறி விட்டதே! இன்னும் என்னென்ன நடக்கப் போகிறாதோ என நினைத்துக் கொண்டு வருந்தி அழுதார். பின்னர் இரு தாசர்களின் திருமேனிகளையும் ஓர் ஓடையின் படுகைக்குக் கொண்டு சென்றார்.  பின்னர் தம் கைகளாலேயே மணலில் குழிகள் பறித்து அவர்கள் உடல்களை அந்தக் குழியில் கிடத்தி விழி சோர முறைப்படி பிரார்த்தனைகள் எல்லாம் செய்து பின்னர் அவர்கள் மேனிகளை மண்ணால் மூடினார். எரிக்க ஒன்றும் வழியில்லாமல் போய்விட்டதை எண்ணி மனம் நொந்தார்.  பின்னர் சீராமதாசரை விட்டு விட்டு வந்த இடம் நோக்கிச் சென்றால் அங்கே அவர் இல்லை.

No comments: