எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, April 07, 2022

மஞ்சரியின் வேண்டுகோள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இளைஞர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள்.  தத்தன் அவளைப் பார்த்து அன்புடனும் ஆதுரத்துடனும், "என்ன ஆயிற்று மஞ்சரி?" என வினவினான். மஞ்சரி அவனைப் பார்த்து, "ஐயா! அமைதியாக இருந்த நம் நாட்டிலே கடந்த இருபது/இருபத்தைந்து வருஷங்களாக என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மனம் வேதனை அடைகிறது.  நம் மூத்தோர்கள்/முன்னோர்கள் எத்தகையதொரு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் அனுபவித்தும் வருகின்றனரே! அதிலும் அரங்கமாநகரின் மனதுக்கு இனியவனான அந்த அரங்கன்! அவனுக்கே எத்தனை எத்தனை கஷ்டங்கள்! எப்படி எல்லாம் தப்பிப் பிழைத்திருக்கிறான்! இன்னமும் அவன் தன் இருப்பிடம் போய்ச் சேரமுடியவில்லையே! என்று நடக்கும் இது? நம் தாத்தா/தந்தை காலங்களில் நடக்கவில்லை எனில் நம் காலத்திலாவது நடக்குமா என எண்ணினால் மனம் சோர்ந்து போகிறது! அரங்கனுக்கே இத்தனை துன்பங்கள் நேர்ந்தது எனில் சாமானிய மக்கள் எவ்வளவு துன்பம் அடைந்திருப்பார்கள்!" என்று சொல்லிவிட்டு மேலும் விம்மி அழுதாள்.

மேலும் தொடர்ந்து, "ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அன்றாட வாழ்க்கை முறையையே அடியோடு மாற்றி விட்டார்களே! அவர்கள் அந்த சுல்தானியர்களின் இந்த நடவடிக்கையால் தானே என் தாய்/தந்தை இருவரையும் நான் ஒருசேர இழந்து அநாதை ஆகிவிட்டேன். இதைப் போல் ஒவ்வொரு குடும்பமும் தங்கள்/தங்கள் அன்புக்குப் பாத்திரம் ஆனவர்களையும் கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்துக்கள்/பூமி போன்றவற்றையும் இழந்து விட்டார்களே! இதற்கெல்லாம் என்ன மாற்று? எப்படி நிவர்த்தி செய்வது? அரங்கனும் தன் திருவரங்கத்தை இழந்துவிட்டான். "திரு" அவனை விட்டு நீங்கி விட்டதே! இப்படி அநாதையாய் அங்குமிங்கும் அலைகிறானே! இதைப் பற்றி யாரும் எதுவும் கேட்பதும் இல்லை. அரங்கனைப் பற்றிக் கவலைப்படுபவரும் இல்லை.  கண்டிப்பாரும் இல்லையே!"

"நம் நாடு வீரர்கள் நிறைந்திருந்த நாடு தான். ஆனால் இந்த சுல்தானியர்கள் உள்ளே நுழைந்த காலத்தின் தோஷமோ என்னமோ எல்லோரும் தங்கள் வீரத்தையும் ஆண்மையையும் இழந்து பெண்களை விட மோசமானவர்கள் ஆகிவிட்டார்களே! அவர்களுக்கு இருந்த திட மனதும் மனோபலமும் வீரமும் ஏட்டில் தான் இனி எழுதிப் பார்க்கணுமோ? எனக்கு துக்கம் அடங்கவில்லையே! மனது வேதனையில் தவித்துத் துடிக்கிறதே!" என்று கூறிய வண்ணம் மேலும் மேலும் விம்மி விம்மி அழுதாள்.  தத்தனுக்கு ஒரே திகைப்பு.  வாய் பேசாது நின்றான். ஆனால் வல்லபனுக்குள் ஆவேசம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. எரிமலை கொதிப்பது போல் அவன் உள்ளூரக் கொதித்தான். கண்களில் இருந்து துக்கக் கண்ணீருடன் சேர்ந்து அவன் உதடுகளும் ஏதோ பேசத்துடித்தன. ஆனால் பேச முடியவில்லை. ஒருவாறு அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டான். 

"மஞ்சரி! நீ பேசியதெல்லாம் என் உள்ளத்தில் அம்புகளைப் போல் தைத்திருக்கின்றன.  அந்த அம்புகள் கொடுக்கும் துன்பம் என்னை வாட்டி வதைக்கிறது. என் தந்தை வரையிலும் இருந்த மாந்தர்கள்  காட்டிய சிறுதுளி வீரத்தைக் கூட இப்போதுள்ள என் வயது இளைஞர்கள் காட்டவே இல்லையே! இது எவ்வளவு பெரிய கொடுமை! மற்றவர்கள் எப்படியோ! என் தந்தையின் கடைசி ஆவலும் இதுவாகவே இருந்தது. என் தாயும் என்னிடம் அதைச் சொல்லிச் சொல்லியே வளர்த்தாள். மற்றவர்கள் எப்படியோ தத்தனின் துணை கொண்டு நான் மாபெரும் லட்சியத்தை நோக்கிப் பயணப்பட்டிருக்கிறேன். அதை நிறைவேற்றி வைப்பேன். அரங்கனை அரங்கமாநகரில் கொண்டு சேர்ப்பேன்! இது சத்தியம்!" என்று ஆவேசம் வந்தவன் போல் பேசினான்.

பிறகு தன் இடுப்பிலிருந்து குறுங்கத்தியை எடுத்து மஞ்சரியின் எதிரே வைத்து அவளை அந்தக் கத்தியை எடுத்துத் தொட்டுக் கொடுக்கச் சொன்னான்.  அவள் அவ்விதம் கொடுப்பதன் மூலம் அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்குள் எப்போதும் கனன்று கொண்டிருக்கும் ஆவேசத்தீ அணையாமல் பாதுகாக்கும். அவன் லட்சியத்தை விட்டு இம்மி அளவும் பிறழாமல் நடக்கவும் உறுதுணையாக இருக்கும்.  மனம் வெதும்பி மஞ்சரி பேசிய வார்த்தைகளை எப்போதுமே நினைவூட்டும்!" என்றான்.

மஞ்சரி கண்களால் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் வல்லபன் பேச்சைக் கேட்டு அவள் இதழ்களில் புன்னகை ஒன்று பூத்தது கண்ணீல் நீரும் உதட்டில் முகிழ்ந்திருக்கும் புன்னகையுடனும் அவள் அந்தக் குறுவாளை எடுத்து வல்லபனிடம் நீட்டிக் கொண்டு, இப்போது தன் மனம் ஆனந்தப் பெருக்கில் திளைப்பதாகவும் உற்சாகம் அதிகம் ஆவதாகவும் கூறினாள். அவள் சொல்வதைக் கேட்ட வண்ணம் அங்கே நொண்டி நொண்டி நடந்து கொண்டு சிங்கழகர் வந்தார்.

No comments: