எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, August 30, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

அரங்கனுக்கு அன்றைய நிவேதனப் பொருட்களைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்தான் கள்வர் தலைவன். ஊர்வலம் மேலே செல்ல வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தான். அந்தக் காட்டின் எல்லை வரை கூடவே வந்து செல்லும் வழியில் உள்ள பல்வேறு கள்வர் பற்றுக்களிலிருந்தும் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொண்டு செல்லும்படியாக அறிவுரை கூறினான். 
*********************************************************************************

இங்கே ஶ்ரீரங்கத்தில்  உயிரற்ற சடலங்களுக்கு அடியில் மறைந்திருந்த வேதாந்த தேசிகர் வெகு நேரம் அப்படியே கிடந்தார். இரவு வந்து வெகுநேரம் ஆனபின்னர் மெல்ல மெல்ல எழுந்து அமர்ந்தார். இதைக் குறித்த பதிவு 

சுதர்சன ஆசிரியரின் குழந்தைகளையும் எழுப்பினார்.  மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த சுருதப்பிரகாசிகையையும் எடுத்துக் கொண்டார்.  மெல்ல மெல்ல சப்தம் செய்யாமல் கோபுர வாயிலுக்கு வந்தார். யாரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டு வெளியேறித் தென் காவேரிக்குச் சென்றார். காவேரிக்கரையில் மேற்குப் பார்த்து மறைந்து மறைந்து நடந்தார். வெகுதூரம் போய் உறையூருக்கு அப்பால் கரையேறினார். ஒரு வயலில் இரு குழந்தைகளோடு படுத்து இரவைக் கழித்தார். காலையில் அருகிலிருந்த கிராமத்தை அடைந்தபோது அங்கிருந்த கிராமவாசிகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஶ்ரீரங்கத்திலிருந்து தப்பி வந்தவர்களும் இருந்தனர். அரங்கத்தில் நடந்ததை எல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அனைவரும் கண்ணீர் பெருக்கினார்கள். அரங்கனோடு தாங்களும் போக தேசிகர் தங்களை அனுமதித்திருக்கலாம் என அவர்களில் சிலர் கூற, கூட்டமாக அரங்கனோடு  செல்வது ஆபத்து என்றார் தேசிகர். 

அரங்கமாநகரே பாழாகிவிட்டதாகவும், தமிழ் பேசும் மக்கள் வாழும் இந்த நாடே இருள் சூழ்ந்து இருப்பதாகவும் அனைவரும் க்ஷேமமாக இருக்க அரங்கனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். அனைவரும் ஓவென்று அலறித்துடித்து அழுதனர் அந்த சோகத்தைக் கண்ட தேசிகர் வாயிலிருந்து அப்போது ஒரு ஸ்லோகம் வந்தது. "அபீதிஸ்தவம்" எனும் பெயரில் தற்போது வழங்கப்படும் அந்த ஸ்லோகம் 28 பாக்களால் ஆனது என்றும், இப்போதும் கிடைப்பதாகவும், கஷ்டங்கள் நீங்கவும் மனோபயம் அகலவும் மக்கள் இதைப் பாராயணம் செய்வார்கள் என்றும் தெரியவருகிறது. இந்தப் பாடலிலேயே யவனர்கள் என வெள்ளையரையும் தேசிகர் குறிப்பிட்டிருப்பதால் பின்னாட்களில் ஆங்கிலேய ஆட்சி ஏற்படப் போவதை தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்டார் என்பவர்கள் உண்டு.

அன்று முழுதும் அங்கே பிரார்த்தனைகள் செய்த வண்ணம் உபவாசமாக இருந்த தேசிகர் மறுநாள் அந்த இரு இளம்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கிழக்கே தொண்டைமான் காட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கே வழி நெடுகக்காணக்கிடைத்த துளசிதளங்களை வைத்து வழி கண்டு பிடித்து மேலே நடந்தார். சிறிது தூரம் வரை காணப்பட்ட துளசிதளங்கள் அதன் பின்னர் அங்குமிங்கும்  சிதறிக் காணப்பட்டது. அதற்கப்புறம் சிறிது தூரத்தில் துளசி தளங்களையே காணமுடியவில்லை. தேசிகர் தாமாக ஒரு வழியைக் குறி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். நேரம் ஆக ஆக காட்டின் அடர்த்தி அதிகம் ஆகி வந்தது. இருட்டு அப்பிக் கொண்டது. போகும் வழி புரியவில்லை. காட்டையே சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது அவருக்கு. வந்த வழி கூடத் தெரியவில்லை. அதனால் திரும்பிப் போகவும் முடியவில்லை. மேலும் சற்றுத் தூரம் நட்ந்தவர் ஒரு மரத்தடியில் கிடந்த  முழு மனித எலும்புக்கூடுகளைக் கண்டு திகைத்தார்.

அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மரங்களின் தாழ்ந்த கிளைகளில் புடலங்காய் காய்த்துத் தொங்குவதைப் போல் பாம்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பின்னர் செய்வதறியாமல் வேறு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். செல்லும்போதே ஜீயரை அழைத்துக் கொண்டு சென்றார். அவரது சீடரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயரை அழைத்தால் குரலை அடையாளம் கண்டு கொண்டு பதில் கொடுப்பார் என நம்பினார். அவரது குரல் தான் எதிரொலித்ததே தவிர பதில் ஏதும் கிட்டவில்லை. அந்த மாபெரும் பள்ளத்தாக்கில் விழுந்து விடுவோமோ எனப் பயந்து அங்கேயே நின்றார். இருள் சுற்றுவட்டாரத்தை விழுங்கிக் கொண்டு வந்து அவர் இருக்கும் இடத்தையும் விழுங்கியது.

Saturday, August 29, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

இங்கே

அரங்கனைக் கள்வர்கள் நடுவே விட்டு விட்டு வந்து மாதங்கள் மூன்று ஆகிவிட்டன. அரங்கன் என்ன ஆனான் என்பதைப் பார்ப்போமா?

சுற்றி வளைத்துக்கொண்ட கள்வர்களின் தலைவன் அவர்கள் சொல்வதை நம்பாமல் பெட்டகங்களைத் திறந்து காட்டச் சொன்னான். முதல் பெட்டகத்தில் அரங்கனின் நகைகள், அணிமணிகள், ஆபரணங்கள், வைரங்கள், பதக்கங்கள், ரத்தின ஹாரங்கள், முத்து நகைகள், பவள மாலைகள் வெள்ளியிலும், பொன்னாலும் செய்யப்பட்ட கங்கணங்கள் எனக் காணப்பட்டன. அவற்றைக் கண்ட கள்வர் தலைவன் கண்களில் வெறியே மிகுந்தது. மிகவும் ஆசையுடன் அவற்றைத் தன் கைகளால் துளாவிப் பார்த்தான். அப்போது அவன் பின்னே பிள்ளை உலகாசிரியர் வந்து அவனை "அப்பா!" என அழைத்தார்.  அவனையே பார்த்துக்கொண்டு வந்த அவர் மேல் சந்தேகம் கொண்ட கள்வர் தலைவன் தன் இடையிலிருந்து வாளை உருவினான். கைகளில் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டான்.

அதைக் கண்டு பயப்படாமல் பிள்ளை உலகாரியர், "அப்பா, உன் வாளைக் கண்டு நான் பயப்படவில்லை. எதிர்வாளைக் கொண்டு வரவும் மாட்டேன். வீரனான நீ வாயால் பேசாமல் வாளை உருவி வாளால் பேசப்பார்க்கிறாயே!" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, "யார் நீங்கள்? எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள்?" என்று வினவினான்.  பிள்ளை உலகாரியர் அவனுக்கு பூலோக வைகுண்டமாம் ஶ்ரீரங்கத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அங்கே உறையும் ரங்கநாதனைக் குறித்து வர்ணித்தார். அத்தகைய ரங்கராஜனின் பக்தர்கள் தாங்கள் எனவும் இந்தச் சொத்தெல்லாம் அரங்கனின் சொத்துக்கள் என்றும் எடுத்துச் சொன்னார்.

நல்லவேளையாகக் கள்வர் தலைவன் அரங்கனைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவருடைய சொத்துக்கள் ஏன் காட்டுக்கு வரவேண்டும் என அவனுக்குப் புரியவில்லை. அதோடு இவர்கள் அவனை ஏமாற்றுவதாகவும் நினைத்தான். அரங்கன் சொத்துக்களை இவர்கள் திருடிக் கொண்டு ஓடுவதால் தான் நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் இந்தக்காட்டுக்குள் வந்திருக்கின்றனர் என்றே நினைத்தான். அப்படியே அவர்களிடம் கேட்கவும் செய்தான். அதற்குப் பிள்ளை உலகாரியர் ஶ்ரீரங்கத்துக்குள் அந்நியர்கள் புகுந்ததை அவன் அறியவில்லை என்று புரிந்து கொண்டார்.

அந்நியப் படையெடுப்பையும் அரங்க நகரையே அவர்கள் பாழாக்கியதையும் எடுத்துச் சொன்னார். அரங்கனின் சொத்துக்களுக்காக அவர்கள் சுற்றி அலைவதையும் அரங்கனையே ஒரு முறை எடுத்துச் சென்றதையும் மறுமுறையும் எடுத்துச் செல்லாமல் இருக்கும்பொருட்டே அரங்கனையே அவர்கள் எடுத்துக் கொண்டு அவன் சொத்துக்களோடு தென்னாட்டை நோக்கிப் போவதையும் கூறினார். அரங்கன் இப்போது இந்தக் காட்டுக்குள் தான் இருக்கிறான் என்றும் கூறினார். அரங்கன் காட்டுக்குள்ளே இருப்பது தெரிந்ததும் கள்வர் தலைவன் ஆச்சரியம் அடைந்தான். பதட்டத்துடன், "எங்கே அரங்கன்? எங்கே அரங்கன்?" என்று கேட்டான். பரிசனங்களுக்குப் பிள்ளை உலகாரியர் சமிக்ஞை செய்ய அவர்களும் திருச்சின்னங்களை ஊதிக்கொண்டும், பிரபந்தங்களைப் பாடிக் கொண்டும் திருப்பல்லக்கில் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தனர்.

அரங்கனை நேரில் கண்ட கள்வர் தலைவன் திகைத்து நின்றான். அரங்கன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அனைவரும் செல்வார்கள். ஆனால் அவன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அந்த அரங்கனே வந்திருக்கிறானே!  இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார்.  அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளரைக் கண்டு வியந்தான் கள்வர் தலைவன்.  அவன் கண்களில் கண்ணீர்  சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக்  கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே! எனப் புலம்பினான். தங்கள் எல்லை வரை அரங்கனுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் காப்பதாக வாக்களித்தான்.

Friday, May 15, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் தெப்போத்சவம்! சில தகவல்கள்!

அரங்கனின் தெப்போற்சவம் குறித்துக் கிடைத்த சில தகவல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  பாண்டியர்களின் காலத்தில் இது ஆரம்பித்திருக்கிறது. திருப்பள்ளியோடத் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்தது. "பொன் வேய்ந்த பெருமாள்" என்னும் பட்டப்பெயர் கொண்ட சுந்தரபாண்டியன் காலத்தில் சித்திரை மாதம் தான் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது காவிரியில் இப்போது போல் இல்லாமல் நீர் நிறைய ஓடிக் கொண்டிருந்த காலம். ஆகவே திருக்காவிரியில் பெரியதாக ஊருணி ஒன்று எடுப்பித்து அதிலே காவிரி நீரைப் பாய்ச்சி முத்துக்கள், பவளங்கள் பதித்த திருக்காவணம் (இங்கே காவணம் என்னும் சொல் பந்தலைக் குறிக்கும். முன்னாட்களில் பந்தல் என்னும் சொல் யாரேனும் இறந்தால் அந்த வீடுகளில் போடுவதை மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது.  திருமணம், விழாக்கள் போன்ற சுபகாரியங்களுக்குப் போடுவதைக் காவணம் என்றோ கொட்டகை என்றோ அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கே இறைவனுக்காகப் போடப் பட்டதால் திருக்காவணம் என்றாகி விட்டது.) கட்டி இருக்கின்றனர். பின்னர் திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணுவித்து அதிலே உபய நாச்சிமார்களுடன் அரங்கன் (அப்போதைய பெயர் அழகிய மணவாளர்) எழுந்தருளி தெப்போத்சவம் கண்டிருக்கிறான்.

பின்னர் மெல்ல மெல்ல ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று நடைபெற்று வந்திருக்கிறது. அப்படி ஒரு சமயம் திருப்பள்ளி ஓடத்திலே தெப்பத்திருநாள் கண்டருளும் சமயம் ஒரு சில மாந்திரீகர்களுடைய துர்மந்திரப் பிரயோகங்களால் தெப்பம் காவிரியின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த கூரநாராயண ஜீயர் சுவாமிகள் தம்முடைய வலக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்பத் திருப்பள்ளி ஓடம் வெள்ளத்தை எதிர்த்து நிலை கொண்டது. சுதர்சன சதகம் இயற்றி ஶ்ரீசுதர்சனரையும் வேண்டினார். (இங்கே திருக்காவிரி என்று சொல்வது வட திருக்காவிரி அதாவது கொள்ளிடம் ஆகும்). அதன் பின்னர் அழகிய மணவாளப் பெருமாள் பிரச்னைகள் ஏதுமின்றி ஆஸ்தானம் கண்டருளினார்கள். இதன் பின்னர் அழகிய மணவாளரை அவ்வளவு தொலைவு அழைத்துச் சென்று தெப்போத்சவம் காண்பதில் உள்ள சிரமங்களை நினைத்துக் கூர நாராயண ஜீயர் அவர்கள் கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டச் செய்தார். அதிலே திருப்பள்ளி ஓடத்திருநாளை நடத்த ஆரம்பித்தனர். அதிலிருந்து தெப்பத்திருநாள் நடைபெறும்போதெல்லாம் விட்டவன் விழுக்காடு என்னும் பெயரில் பிரசாதம் ஶ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கூரநாராயண ஜீயருக்குப் பின்னர் கி.பி.1489 ஆம் ஆண்டில் கந்தாடை ராமாநுஜ முனி காலத்தில் அடையவளைந்தான் தெருவுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டுவிக்கப் பட்டது. இந்தக் கந்தாடை ராமாநுஜ முனி என்பவர் விஜயநகர சாளுவர்கள் வீர நரசிம்மன் என்பவனுடைய தமையன் ஆவார். இவர் திருக்கோயிலின் கந்தாடை அண்ணனைத் தம் குருவாக ஏற்றதால் கந்தாடை ராமாநுஜ முனி என அழைக்கப்பட்டார். இவரும் இவருடைய சீடர்களும் திருவரங்கக் கோயில் வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள். தற்காலத்தில் கந்தாடை மடத்தின் பட்டத்தை யாரும் அலங்கரிப்பதில்லை. முன்னர் கந்தாடை ராமாநுஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவருக்கு அழகிய மணவாளர் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். தற்சமயம் இந்த மரியாதை நடைபெறுவதில்லை.

முதலில் சித்திரை மாதத்திலும் பின்னர் ஆடி மாதத்திலும் நடைபெற்று வந்த தெப்போற்சவம் விஜயநகரச் சக்கரவர்த்தியான கிருஷ்ணதேவராயர் காலத்தில் மாசி மாதம் நடைபெற்ற பிரம்மோத்ஸவத்தின் ஒரு வகை என்று சொல்கின்றனர். இத்திருநாள் இப்போது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.  பின்னர் கி.பி. 1535 ஆம் ஆண்டிலும், 1536 ஆம் ஆண்டிலும், 1539 ஆம் ஆண்டிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்வெட்டுக்களைப் பொறித்தது துளுவ வம்சத்து அரசன் ஆன அச்சுததேவ ராயர் காலத்தில் ஆகும். இதில் திருநாளின் இரண்டாம் நாளன்று விடாய் ஆற்றிக்கு அழகிய மணவாளப்  பெருமாள் அக்கச்சி அம்மன் தோப்புக்கு எழுந்தருளி இருந்திருக்கிறார். ஆறாம் திருநாளன்று தெப்போத்சவம் கண்டருளி இருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்கள் இப்போதும் ஶ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கச் சுவரில் உள்ள நாயக்கர் சிலைகளுக்கு முன்பு உள்ளதாகத் தெரிய வருகிறது.

பிரம்மோத்சவம் போலவே இந்தத் தெப்போத்சவத் திருநாளும் நடைபெறுவதால் ஒன்பது நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் திரு வீதி உலா வருகிறார். இப்போது எட்டாம் நாளன்று தெப்போத்சவமும் ஒன்பதாம் நாளன்று ஶ்ரீசடாரிக்குத் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்று அன்றிரவு பந்தக்காட்சியும் நடக்கும். தெப்போத்சவம் திதிகளின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இதற்குக் கொடியேற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் காலை வீதி உலாவில் பல்லக்கில் மட்டுமே எழுந்தருளுவார். வாகனங்கள் கிடையாது.  இதுவும் கிட்டத்தட்ட ஒரு வசந்தோத்சவம் போலவே கொண்டாடப் படுகிறது.  திருவிழாவின் நான்காம் நாள் மாலை வெள்ளி கருடனின் நம்பெருமாள் சேவை சாதிக்கிறார். மாசி மாத கருட சேவையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.

தகவல்கள் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம்

Monday, May 04, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!

திருவரங்கத்திலிருந்து கிளம்பிய அரங்கன் ஊர்வலம் பின்னால் வருபவர்களுக்காகத் துளசிச் செடியின் இலைகளையும், சின்னச் சின்னக் கிளைகளையும் ஒடித்துப் போட்டுக் கொண்டே சென்றாலும் பலருக்கும் திசை மாறித்தான் போயிற்று. ஆகவே மேற்கே ஒரு குழுவும், கிழக்கே ஒரு குழுவுமாகச் சென்றனர். அரங்கனோடு சேர்ந்து போனவர்களோ திருச்சிராப்பள்ளி நகரைக் கடந்து தொண்டைமானின் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தைத் தொண்டைமான் காடு என அந்நாட்களில் அழைத்தனர்.  வேதாந்ததேசிகர் இன்னமும் வந்து சேர்ந்து கொள்ளாதது குறித்து அனைவரும் கவலையிலும் ஆழ்ந்திருந்தனர்.

ஆனால் அந்தப் பகுதியில் வெகுநேரம் தங்க முடியாது. ஏனெனில் கள்வர் பயம் அதிகம். ஆனாலும் பிரதான சாலைகளின் வழி சென்றால் தாங்கள் கண்டுபிடிக்கப்படுவோம் என்னும் அச்சம் காரணமாகச் சுற்று வழியாகவே சென்றனர். வசதி படைத்தவர்கள் பல்லக்குகள், குதிரைகள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள அதிகமான பயணிகள் கால்நடையாகவே சென்றனர். அவர்களில் சிலர் குழுக்குழுவாகப் பிரிந்து சென்றவர்கள் ஆங்காங்கே இடையில் தென்பட்ட தலங்களில் தங்கினார்கள். ஆனால் அரங்கனும், அவனுடன் சென்றவர்களும் மட்டும் எங்கும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். இரு தினங்கள் சென்றும் ஶ்ரீரங்கத்திலிருந்து தகவல் ஏதும் இல்லை. ஆகவே சற்றுத் தங்கிச் செல்லலாம் என ஒரு இடத்தில் தங்கி விட்டார்கள்.

தங்கிய இடத்தில் இரவைக் கழித்த மறுநாள் ஶ்ரீரங்கத்திலிருந்து இரு ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டனர். ஶ்ரீரங்கத்தில் நடந்த கோர யுத்தம் பற்றியும் நகரமே பற்றி எரிந்ததையும், எல்லோரையும் கொன்று அழித்துவிட்டார்கள் என்பதையும் அவர்கள் விபரமாகச் சொல்லவே அனைவர் மனமும் துக்கத்தில் ஆழ்ந்து போயிற்று. திகைத்துப் போன உலகாரியரை அவர் சீடரான கூர குலோத்தமதாசர் தேற்றிச் சமாதானம் செய்து அனைவரும் விரைவில் அவ்விடத்திலிருந்து அகல வேண்டும் எனவும், இல்லை எனில் டில்லிப் படைகள் விரைவில் வந்து பிடித்துக் கொள்வதோடு அரங்கனையும் கைப்பற்றி விடுவார்கள் எனவும் சொல்ல உடனே அந்த இடத்திலிருந்து அந்த ஊர்வலம் அகன்றது.

மாலை மங்கும் நேரத்தில் தங்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில் ஈட்டிகளைத் தாங்கிய வண்ணம் வலுவான தேகத்துடனும் கொடிய மீசைகளுடனும் முப்பது கள்வர்கள் சூழ்ந்து கொண்டுவிட்டனர். தொண்டைமான் காட்டுப்பகுதியே கள்வர்களுக்குப் பிரசித்தம். வழிப்பறி செய்வதில் நிபுணர்கள் அவர்கள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.  கள்வர்கள் அனைவரும் அவர்களை நோட்டம் விட்டுப் பெட்டகங்கள் வைத்திருப்பதையும் கண்டுகொண்டனர். அந்தப் பெட்டகங்களில் என்ன இருக்கிறது என்று விசாரணையும் செய்ய ஆரம்பித்தனர்.

அரங்கனின் பொருட்கள், அவன் நகை நட்டுக்கள் என்று சொல்ல, என்ன அரங்கனா? அவன் எந்த ஊர்க்காரன்? எந்த நாட்டுக்கு ராஜா? என்றெல்லாம் கேலி பேசினார்கள். அரங்கம் என்ன, இந்த உலகுக்கே அவன் தான் ராஜா! திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கிறான், ரங்கராஜன் எனப் பரிசனங்கள் சொல்ல, உலகையே காப்பவன் இங்கே இந்தக் காட்டுக்குள் நாங்கள் வசிக்கும் இடம் ஏன் வந்தான்? பெட்டகங்களைத் திறவுங்கள் எனக் கள்வர் தலைவன் கட்டளை இட்டான். பயந்து கொண்டே பெட்டகங்களைப் பரிசனங்கள் திறந்து காட்டினார்கள்.  பொன்னும், மணியும், முத்தும், பவளமும், வைர வைடூரியங்களும், தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட ஆபரணங்களும் கண்களைக் கவர்ந்தன அவற்றை ஆசையுடன் தன் கைகளால் எடுத்துப் பார்த்தான் கள்வர் தலைவன்.

Saturday, May 02, 2015

ஶ்ரீரங்கரஙகநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கமாநகருள்!

அங்கிருந்த அனைவரும் அதிசயித்து நிற்க அந்தப் பெண் மேலே பேசினாள். ஶ்ரீரங்கத்து மனிதர்களிடம் கருணை வைக்குமாறு உல்லூக்கானை வேண்டினாள். ஆனால் உல்லூக்கானோ இங்கிருப்பவர்களைத் தான் கொல்லாமல் விட வேண்டுமானால் ஶ்ரீரங்கத்துச் செல்வம் அனைத்தும் தன் காலடியில் வந்து விழ வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண் அனைத்தையும் பாண்டிய நாட்டு வீரர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாய்க் கூறினாள். மிச்சம், மீதி இல்லை என்னும் அவளைப் பார்த்து இத்தனையையும் பார்த்துக் கொண்டு உன் தெய்வங்கள் எல்லாம் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தனவா? அவை எல்லாம் கல்லாலும், உலோகங்களாலும் ஆன சிலைகள் தானே எனக் கேலி செய்தான் உல்லூக்கான். அதற்கு அந்தப் பெண் அந்த அணிமணிகளை விக்ரஹங்களுக்கு அளித்து அழகு பார்த்ததே இந்த மானுடர்கள் தானே! தெய்வங்கள் அவற்றைக் கேட்கவில்லையே! ஆகவே அவர்களுக்கு இந்த அணிமணிகள் இருந்தாலும் ஒன்று தான்; இல்லை என்றாலும் ஒன்று தான் என்று சொன்னாள்.

ஆனாலும் அரங்கத்து ஆட்கள் இன்னமும் ஏன் தன்னோடு போரிடத் தயாராக இருக்க வேண்டும்? மிச்சம், மீதி இருப்பதைப் பாதுகாக்கவே அவர்கள் போரிடுகின்றனர் என்றூ உல்லூக்கான் சந்தேகத்துடன் அவளிடம் சொன்னான். உள்ளே வேறேதும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தங்களைக் காத்துக் கொள்ளவே தயாராக இருக்கிறார்கள் எனவும், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் அந்தப் பெண் வேண்ட, உல்லூக்கான் தான் உள்ளே போய்ப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறான். அந்தப் பெண்ணும் அந்த ஆட்களை ஏதும் செய்யக் கூடாது; இனி யாரையும் கொல்லக் கூடாது என்றெல்லாம் உல்லூக்கானிடம் வாக்குக் கேட்கிறாள்.  அப்படியே அங்கே காவலுக்கு இருந்த வீரர்களை எல்லாம் அப்பால் போகச் சொல்லி உல்லூக்கான் கட்டளையிட இத்தனை நேரம் வீரர்களுக்காகப் பேசிய அந்தப் பெண் மயங்கி விழ அவளை மருத்துவரிடம் தூக்கிச் சென்றனர். பிழைப்பாளோ அல்லது அரங்கனுக்காக அவள் உயிரையும் கொடுக்க நேருமோ தெரியாது!

காவலிருந்து வீரர்கள் அமைதியாக வெளியேற டில்லி படைகள் உள்ளே சென்று ஒவ்வொரு தூணையும், சிற்பத்தையும் கல்சுவரையும், மண்டபத்தையும் உடைத்துத் தோண்டிப் பார்க்கின்றனர். எதுவும் கிடைக்கவில்லை. உல்லூக்கானுக்குத் தக்வல் போகிறது. அவனுக்கு அப்படியும் சந்தேகம். இங்கிருக்கும் பொருட்கள் அவ்வளவு எளிதில் வெளியே சென்றிருக்க முடியாது. எப்படிக் கண்டு பிடிக்கலாம் என யோசிக்கிறான்  பின்னர் அரங்க நகரிலே சிறு படை ஒன்றை நிறுத்திவிட்டு மற்ற வீரர்களை அழைத்துக் கொண்டு காவிரியைக் கடந்து மதுரை போகக் கிளம்புகிறான். அலங்கோலமாய்க் கிடந்தது அரங்கமாநகரம். ஆங்காங்கே உயிரற்ற உடல்கள் கிடக்க, வீடுகள் சிதிலமடைந்து விழுந்து கிடக்க, கோயிலின் மண்டபங்கள், தூண்கள், சிற்பங்கள்  உடைந்து கிடக்கப் பெரும் சூறாவளி அடித்து ஓய்ந்த்து போல் காணப்பட்டது அரங்கமாநகரம்.


Tuesday, April 28, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கமாநகருள்!

டில்லிப் பரிவாரங்களின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டு வரவே வேதாந்த தேசிகர் அங்கே கிடந்த உடல்களுக்கு அடியில் தாமும் படுத்துக் கொண்டு அந்தக் குழந்தைகளையும் படுக்க வைத்து சப்தம் போடாமல் இருக்கச் சொன்னார். வீரர்களுடன் உல்லூக்கானும் ஆவேசத்துடன் வந்து கொண்டிருந்தான். கண்ணில் பட்ட ஶ்ரீரங்கத்து மனிதர்கள் எல்லாம் அவன் வீரர்களால் கொல்லப்பட்டும், அவன் திருப்தி அடைந்ததாய்த் தெரியவில்லை. கோயில் சிற்பங்களை  உடைக்கவும், பிராகாரங்களின் தளங்களைத் தோண்டிப் பார்க்கவும் கட்டளை இட்டான். பதுங்கி இருப்பவர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்க உத்தரவிட்டான். கோயிலின் அனைத்துப் பொன்னும், மணியும், ரத்தினங்களும் மற்றப் பொருட்களும் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பேராசை அவனுக்கு.

அப்போது கோயீலின் அடியார் கூட்டத்தில் ஒரு கூட்டமாக இருந்து வந்த நாட்டியம் ஆடும் காரிகைகள் இவர்களை எப்படியேனும் திசை திருப்ப வேண்டும் என்னும் எண்ணத்தோடு தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஆடல், பாடல்கள் எனப் பல்வேறு விதமான காரியங்களைச் செய்து கொண்டு அங்கே கூட்டமாக வந்தனர். அவர்கள் முகத்தின் காந்தியும், அவர்கள் வரும்போது முன்னே எழுந்த சந்தன மணமும், ஆடை , ஆபரணங்களின் நேர்த்தியும், பாடல்களுக்கும், தாளங்களுக்கும் ஏற்ப அனைவரும் தாமரை போன்ற தங்கள் பாதங்களைத் தரையில் வைத்துக் கைகளால் அபிநயம் பிடித்தவாறு வந்த நேர்த்தியும் அனைவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது அவர்களின் வளையல்களிலிருந்து எழுந்த கிண்கிணிச் சப்தமும், காலின் சலங்கைகள் எழுப்பிய கலீர் கலீர் என்னும் ஒலியும் அந்தப் பிராந்தியத்தில் அதுவரை நிலவியிருந்த பேரமைதியைக் கலைத்தது.

அவர்களில் எவரும் இந்த முகமதியப் படைவீரர்களைக் கண்டு பயந்ததாகத் தெரியவில்லை மாறாக உல்லூக்கானுக்கு நேர் எதிரே அனைவரும் நின்று கொண்டு பாடல்கள் பாடுவோர் தேனினும் இனிய குரலில் பாடல்களைப் பாட ஆடத் தெரிந்தவர்கள் மிகவும் தைரியமாக ஆடவும் தொடங்கினார்கள். எப்படியேனும் இவர்களை மயக்கியே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தோடு ஒரு நாட்டிய நங்கை உல்லூக்கானைப் பார்த்துச் சிரித்த வண்ணம் தன் கைகளை நீட்டி அழைக்க உல்லூக்கானோ அந்தக் கரங்களை வெட்டும் நோக்கோடு வாளைப் பாய்ச்சினான். ஆனால் அந்தப் பெண் நல்லவேளையாக நகர்ந்து விட்டாள். இல்லை எனில் அவள் கரங்கள்  துண்டாடப்பட்டிருக்கும். என்றாலும் வாளின் நுனி பட்டு ஒரு கரத்தில் ஆழமான காயமும், வலியும் ஏற்பட்டு விட்டது அந்தப் பெண்ணுக்கு.  ரத்தம் கொட்டத் தொடங்கியது.

ஆனாலும் பாடுபவர்கள் பாடலை நிறுத்தவில்லை. ஆடிக் கொண்டிருந்த மற்றவர்களும் ஆட்டத்தை நிறுத்தவில்லை. வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை துரித கதியில் வாசிக்கத் தொடங்க ஆடுபவர்களும் அந்த வேகத்துக்கு ஏற்ப ஆடத் தொடங்க. ரத்தம் கொட்டும் கையுடன்  அந்தப் பெண்ணும் ஆடத் தொடங்கினாள்.  அதைப் பார்த்த உல்லூக்கான் கோபத்துடன் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லிக் கட்டளை இட்டான். ஆட்டமும் நிற்க, காயம்பட்ட பெண்ணை மட்டும் உல்லூக்கான் தனியாக அழைத்தான். அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானை நோக்கி வந்தாள். அருகில் வந்த அந்தப் பெண்ணை உல்லூக்கான் கடுமையாகக் கடிந்து கொள்ள, அதை ஹொய்சள வீரன் ஒருவன் அவளுக்கு மொழி பெயர்த்துச் சொன்னான். ஆனால் அந்தப் பெண் சிறிதும் கலங்காமல் உல்லூக்கானைப் புகழ்மாரி பொழிந்து பேசினாள்.


தகவல் உதவி: திருவரங்கன் உலா, ஶ்ரீவேணுகோபாலன், மற்றும் ஶ்ரீரங்க பங்கஜம்.

Sunday, April 26, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனின் பயணம்!

இங்கே வடக்கு வாயிலில் இறந்தவர்களில் அவர்களை வழி நடத்திய பஞ்சு கொண்டான் என்பவரைப் பாராட்டும் விதமாகப் பின்னாட்களில் கோயில் திறந்து வழிபாடுகள் நடைமுறைக்கு வந்ததும், பஞ்சுகொண்டான் என்பவரின் பெயரை அருளிப்பாடி மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. அது நாளடைவில் மறைந்ததாய்த் தெரிய வருகிறது. வடக்கு வாயில் விழுந்து சுல்தானின் வீரர்கள் கோயிலுக்குள்ளே எளிதாக நுழையவும் விரைவில் அரங்க நகர்க் கோட்டை விழுந்தது. பிராகாரங்கள் அல்லோலகல்லோலப் பட, பரிசனங்கள் அங்குமிங்கும் செய்வதறியாது ஓட, கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள் சுல்தானின் வீரர்கள். பிரகாரங்கள் அனைத்தும் உடல்களால் மூடப்பட்டுக் கிடந்ததைப் பார்க்கையில் அரங்கனைக் காக்கும் பணியில் எத்தனை எத்தனை இன்னுயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பது புரிந்திருக்கும்.  இந்தக் குழுவில் தான் ஶ்ரீமத் வேதாந்த தேசிகப் பெருமானும் இருந்தார். அவரும் சுல்தான்களின் வீரர்களிடமிருந்து தப்பிக்க அங்குமிங்கும் ஓடினார்.

வேதாந்த தேசிகர் க்கான பட முடிவு


படத்துக்கு நன்றி தினமலர் கூகிள் வாயிலாக

கொத்துக் கொத்தாக உடல்களையும், தலைகளையும் பார்த்த தேசிகர் செய்வதறியாது மயங்கினார். அப்போது அங்கே சுதர்சன ஆசிரியர் என்பார் மார்பில் காயத்துடன் விழுந்து கிடந்தார். இவர் நடாதூர் அம்மாள் என்பவரின் சீடர். இந்த நடாதூர் அம்மாள் அரங்கனுக்கு வேண்டியவற்றை எல்லாம் ஒரு தாயின் பரிவோடு செய்வாராம். அரங்கனுக்கு நிவேதனமாக வேண்டிய பாலில் கூட சூடு அதிகம் இல்லாமல் விரல் பொறுக்கும் சூடு இருக்கும்படி பார்த்துக் கொண்டு வாயால் ஊதி ஊதிக் கொடுப்பாராம்.  ஆகையால் அவருக்கு நடாதூர் அம்மாள் என்னும் பெயர் ஏற்பட்டது. அத்தகையவரின் சீடரான சுதர்சன ஆசிரியர் தான் அப்போது இறக்கும் தருவாயில் இருந்தார். தன்னிரு மகன்களையும் சுல்தானின் வீரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டி அங்கிருந்த ஒரு தூணுக்கு அப்பால் உள்ள படிக்கட்டில் கல்லோடு கல்லாகப் படுக்க வைத்திருந்தார்.

இப்போது வேதாந்த தேசிகரைக் கண்டதும் கண்களில் ஒளி பெற்றவராகத் தன் மகன்கள் இருவரையும் அழைத்தார். தம் மகன்கள் கைகளைப் பிடித்து தேசிகர் கைகளில் ஒப்படைத்தார். கூடவே தனக்கு அடியில் ஒளித்து வைத்துக் கொண்டிருந்த ஒரு ஓலைச்சுவடிக்கட்டை எடுத்துத் தம் இரு கரங்களாலும் அதை தேசிகரிடம் கொடுத்து, "ஐயா, உம்மைக் கண்டது அரங்கனையே கண்டது போல் இருக்கிறது. நான் பெற்ற செல்வங்கள் மூன்று. மூன்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இதோ என் மகன்கள் இருவர் மற்றும் நடாதூர் அம்மாள் பக்கத்திலே இருந்து உபந்நியாசம் கேட்டுக் கேட்டு மனதில் தரித்துக் கொண்டு எழுத்தில் வடித்த சுருதப் பிரகாசிகை என்னும் நூல். இதனைப் பின் வரும் சந்ததிகள் படித்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு இருக்கிறது. ஆகவே இதையும் தாங்கள் காப்பாற்றி வைத்துப் பின் வரும் சந்ததிகளுக்குக் கொடுக்க வேண்டும்." என்று சொல்லிச் சுவடிக்கட்டையும் தேசிகர் கரங்களில் ஒப்படைத்தார்.  தன் இரு குமாரர்களையும் தேசிகர் சொல்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வளவில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அங்கே முகலாய வீரர்களின் ஆவேச முழக்கம் கேட்கவே தேசிகர் செய்வதறியாது திகைத்தார்.

பி.கு. இந்த சுருதப் பிரகாசிகை, ஶ்ரீமத் ராமானுஜர் அருளிச் செய்த ஶ்ரீ பாஷ்யத்தின் விளக்கவுரை எனவும் இன்றளவும் அது கிடைத்து வருவதாகவும் தெரிய வருகிறது.  மேற்படி சுருதப் பிரகாசிகை அந்நியர் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதே இன்றளவும் அது கிடைப்பதன் காரணம் ஆகும். ஶ்ரீபாஷ்யம் என்பது பிரம்ம சூத்திரத்துக்கு ஶ்ரீமத் ராமானுஜர் எழுதிய  வடமொழி விளக்கவுரை. இந்த ஶ்ரீ பாஷ்யத்துக்கே விளக்கவுரையாக அமைந்தது தான் சுருதப் பிரகாசிகை(கேட்டபடியே எழுதப்பட்டது என்கிறார்கள் இதை.)