எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, January 29, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அந்த உருவம் முழுவதுமாகத் தன்னை மறைத்துக் கொண்டிருந்தது விழிகளைத் தவிர்த்து! விழிகள் போதுமே குலசேகரன் கண்டு பிடிக்க! விழிகள் மூலம் அவை சாலையில் அந்த மூடு பல்லக்கில் வந்த பெண்ணின் விழிகள் தான் என்பதை எளிதாகப் புரிந்து கொண்டான் குலசேகரன். குலசேகரன் தன்னைப் பார்ப்பது அறிந்ததும், "ராஜவீதியில் ஏன் கலகம் செய்தாய்?" என அந்தக் குரல் கம்பீரமாய்க் கேட்டது. அதற்குக் குலசேகரன் தான் கலகம் எதுவும் செய்யவில்லை என்றும் தங்கள் மன்னரை நான் ஏளனம் செய்ததாக தளவாய் சொல்லிக் கொண்டு தன்னிடம் வம்பிழுத்ததாகவும் கூறினான். அதற்கு அந்தப் பெண் இத்தனை ஆற்றல் மிகுந்த குலசேகரன் ஆத்திரக்காரனாக இருப்பது சரியல்ல என்றாள்.

மேலும் அவள், "நாளை விசாரணை நடக்கும்போது பொறுமையாக நடந்து கொள்! விடுதலை கிடைக்கும்!" என்று சொன்னவள் மேலும் மன்னனிடம் மிகப் பொறுமையாக நடந்து கொள்ளவும் சொன்னாள். மீண்டும் குலசேகரனை ஆழமாகவும், அர்த்தம் பொதிந்தவாறும் பார்த்த அந்த உருவம் மேலே சென்று விட்டது!  மறுநாள் அரசவைக்குக் குறளனையும், குலசேகரனையும் அரச ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். வீர வல்லாளனின் சபையில் அவருக்கு முன்னே இருவரும் நிறுத்தப்பட்டார்கள். வீர வல்லாளருக்கு அப்போதே 62 வயது ஆகி இருந்தது! எனினும் பார்க்க 40 வயது போலக் காட்சி அளித்தார் அவர்! அவர்கள் இருவரையும் கடுமையுடன் உற்று நோக்கிய வீர வல்லாளர், "ஓஹோ! இந்தப் பயல்களா? இவர்கள் தான் கலகம் விளைவித்தவர்களா?" என்றும் வினவினார். யாரும் எதுவும் பேசவில்லை.

கோபம் அதிகம் ஆன வீர வல்லாளர் குறளனையும் குலசேகரனையும் பார்த்து, "ஏன் வாய் திறக்காமல் மௌனியாக இருக்கிறீர்கள்? எங்கிருந்து வந்தீர்கள்? எந்த நாடு உங்களுக்கு? இங்கே ஏன் குழப்பம் விளைவித்தீர்கள்? யார் அனுப்பி இங்கே வந்தீர்கள்? ஒற்றர்களா? வேவு பார்க்க வந்தீர்களா?" என்றெல்லாம் கேட்டார். குலசேகரன் தாங்கள் திருவரங்கத்திலிருந்து வருவதாய்க் கூறி விட்டு அங்கே நடந்தனவற்றை எல்லாம் ஒன்று விடாமல் விபரமாய்க் கூறினான். அவன் கூறியதைக் கேட்ட வல்லாளர் முகத்தில் புன்னகை மெல்ல அரும்பிப் பின்னர் அது பெரு நகையாக வெடித்தது.

"ஆம், ஆம்! நாங்கள் தில்லி சுல்தானுக்கு அடி பணியத் தான் செய்தோம். இல்லை எனில் என்ன செய்திருக்க முடியும்? உங்கள் பாண்டியரைப் போல் நாட்டை விட்டு ஓடவா முடியும்? அப்புறம் நாடு என்னாவது? மக்கள் என்னாவார்கள்? தில்லிப்படையை எதிர்க்க முடியாது  எனத் தெரிந்தும் எதிர்த்திருக்க வேண்டுமா? அடி பணிந்ததால் மக்களுக்குத் தானே நன்மை கிட்டியது! மக்கள் யுத்த பயம் இன்றி சௌகரியமாக இருக்கின்றனர் அல்லவா?ஆனால் திருவரங்கத்தில்! திருவரங்கமே நாசம் அடைந்து விட்டது! ஊரைக் கொள்ளை அடித்து மக்களையும் ஓட ஓட விரட்டி விட்டார்கள். மக்கள் எங்கே செல்வது எனத் தெரியாமல் ஊர் ஊராகச் செல்கின்றனர்! உங்கள் ரங்கநாதர் கதி என்ன? கருவறையை மூடி விட்டார்கள்! அழகிய மணவாளரோ இருக்குமிடம் தெரியாமல் மறைந்து வாழ்கிறார். எது நல்லது என்பதை நீயே யோசித்துக் கொள்!" என்றார்.

பின்னர் அவர் அவர்கள் இங்கே வந்ததன் காரணம் என்ன என்று கேட்டார். அரங்கமா நகரிலிருந்து தில்லிப் படைகளை விரட்ட வீர வல்லாளரின் துணையும் உதவியும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான் குலசேகரன். அதற்கும் வாய் விட்டுச் சிரித்தார் வீர வல்லாளர். பின்னர் கூறினார். "தில்லிப்படைகள் மதுரையை விட்டு நகரப்போவதில்லை. அதற்கு உதவி செய்யத் திருவரங்கத்தில் ஓர் படை கட்டாயமாய் இருக்கத் தான் செய்யும். அந்தப் படையை அகற்ற மாட்டார்கள். கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான மணங்குப் பொன்னும் நகைகளும் அரங்கன் மறைந்தாற்போல் அவனுடன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தில்லிப் படைகள் மட்டுமல்ல தில்லி சுல்தானும் நம்புகிறான். ஆகவே அவர்களுக்கு அவை கிடைக்கும் வரை திருவரங்கத்திலிருந்து நகரப் போவதில்லை!" என்றார்.

அதற்குக் குலசேகரன் அரங்கனின் சொத்தெல்லாம் கள்வரிடம் போய்விட்டதைக் கூறினான். "ம்ம்ம்ம் மன்னனில்லா நாடு! பாண்டிய மன்னன் மக்களைப் பரிதவிக்க விட்டு விட்டு ஓடி ஒளிந்து கொண்டான். இந்த தில்லிக் கொள்ளையர் போதாது என்று இப்போது களவர் வேறு கொள்ளையை ஆரம்பித்துவிட்டார்கள்!" என்று மனக் கசப்புடன் கூறிய வல்லாளர் சற்று நேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். பின்னர் கண்ணீர் ததும்பக் கூறியதாவது! "நானும் வைணவன் தான்! அரங்கமாநகருக்கும், அரங்கனுக்கும் நேர்ந்ததை நினைத்துக் கண்ணீர் விடுகிறேன். என்னால் வேறேன்ன முடியும்! இந்தத் தென்னாடு பல சிறு சிறு நாடுகளாகப் பிரிந்ததால் வந்த வினைதான் இவை எல்லாம். எல்லா மன்னர்களும் ஒன்று சேர்ந்து தில்லி சுல்தானை எதிர்த்திருக்கலாம் அல்லவா?"

"எங்கே! அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொள்ளவே அவர்களுக்கு நேரம் போதவில்லையே!நானும் எவ்வளவோ முயன்றேன். எல்லோரையும் ஒருங்கிணைக்க! முடியவில்லை. ஆனாலும் அரங்கமாநகரையோ அரங்கனையோ விட்டு விட என் மனம் ஒப்பவில்லை. ஏதேனும் செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். பார்க்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன். யோசிக்க அவகாசம் தேவை! அதற்கு முன்னால் ஒரு விஷயம் சொல்ல வேண்டுமே! குலசேகரா! உன்னைப் பார்த்தால் பெரு வீரனாகத் தெரிகிறது! என் அரசி ராமேஸ்வரம் செல்லவேண்டி ஏற்பாடுகள் செய்து வருகிறாள். நீ அவளுடன் துணையாகப் போய் வா!" என்றார்.

குலசேகரன் அரை மனதுடன், "தங்கள் சித்தம் பிரபோ! ஆனால் ராமேஸ்வரம் பக்கம் சென்றால் தில்லி வீரர்கள் விட்டு வைப்பார்களா?" என்று கேட்டான். அதற்கு வீர வல்லாளர் தான் அவர்களுடன் செய்துகொண்டிருக்கும் உடன்படிக்கை இருக்கும் வரை அவர்கள் தங்களுக்கு நண்பர்களே என்றார். மேலும் அவர்கள் உங்களைப் பிடிக்காமலும், உங்களை எதிர்க்காமலும் இருப்பதற்காக ஹொய்சள அரச இலச்சினையைத் தருவதாகவும் சொன்னார். 

Tuesday, January 09, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

வீர வல்லாளனிடம் பரிசில்கள் பெற்றுச் சென்ற ஹேமலேகா குலசேகரன் எதிர்பார்த்தபடி அவன் பக்கம் திரும்பக் கூட இல்லை. குலசேகரனுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்!  அவள் சென்ற பின்னரும் பல புலவர்களும் தங்கள் திறமைகளைக் காட்டிப் பரிசில்கள் பெற்றுக் கொண்டிருக்க நடுவில் கிடைத்த இடைவெளியில் குலசேகரனையும், குறளனையும் ஓர் அதிகாரி அறிமுகம் செய்து வைத்தார். மன்னன் அவர்களைப் பார்த்து விட்டு, "ஶ்ரீரங்கமா? நாளை விரிவாகப் பேசலாம்!" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். கொஞ்சம் ஏமாற்றம் அடைந்த குலசேகரன் குறளுடன் தாங்கள் தங்கி இருந்த சத்திரத்துக்குச் சென்றான். அங்கே உணவு உண்டுவிட்டுப் படுத்தவனுக்கு ஹேமலேகாவின் நினைவுகள் மேலோங்கின.

அவளுடைய புலமையை எண்ணி எண்ணி வியந்தான். அவள் பெயருக்கேற்றாற்போல் தங்கம் போல் ஜொலித்த அவள் அழகையும் அவன் நினைக்காமல் இல்லை. தானும் அவளைப் போல் படிக்காமல் போனோமே என்று கழிவிரக்கம் கொண்டான். தற்சமயம் தான் ஒவ்வொரு நாடாக, ஒவ்வொரு நகரமாக அலைவது இல்லாமல் எங்கேயானும் ஓர் இடத்தில் நிரந்தரமாக இருந்திருக்கலாமோ என்னும் எண்ணமும் கொண்டான். இம்மாதிரிச் சிந்தனைகளிலேயே இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. ஹொய்சள மன்னரோ, "நாளை" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர் பேசுவது வேற்று மொழி என்பதால் நம் இறைவனிடம் அவருக்கு கவனம் இல்லையோ எனக் குறளன் சந்தேகப்பட்டான். ஆனால் குலசேகரனோ அவர் மொழி வேறாக இருந்தாலும் நம்முடைய சமயத்தைத் தானே அவரும் பின்பற்றுகிறார். ஆகவே மொழி ஒரு தடையல்ல.  என்று சொன்னான். ஒருவேளை அவருக்கு நமக்கு உதவி செய்ய விருப்பம் இல்லையோ எனக் குறளன் கேட்க, அதை நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்று குலசேகரன் பதில் சொன்னான்.

மூன்று நாட்களாக அந்நகரை அவர்கள் சுற்றி வந்ததில் இந்த தில்லிக்காரர்களின் படை எடுப்பினால் இந்த நகரத்துக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள். அந்த நகரத்தின் தற்போதைய நிலையையும் ஶ்ரீரங்கத்தின் தற்போதைய நிலையையும் எண்ணிப் பார்த்து வருந்தினார்கள்.  அன்றும் அம்மாதிரி பேசிக் கொண்டு நகரைச் சுற்றி வருகையில் எதிரே ஒரு மூடு பல்லக்கு வந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றிக் காவல் வீரர்களும் ஒரு தளவாய் எனப்படும் தலைவனும் வந்து கொண்டிருந்தனர். அந்தத் தளபதி நகருக்குப் புதியவர்களான இவர்கள் இருவரையும் கண்டு அருகில் அழைத்து என்ன காரியமாய் வந்திருக்கிறார்கள் என விசாரித்தான். அவர்கள் திருவரங்கம் என அறிந்ததும் தில்லிப்படைகளின் கொள்ளை பற்றியும் நகரைக்காக்காமல் பாண்டியன் ஓடி ஒளிந்ததையும் குறித்துக் கேட்டறிந்தார்கள்.

குலசேகரனுக்கு உள்ளுக்குள் அவமானம் பிடுங்கித் தின்றது. சாதாரணமாக அவனும் அந்தத் தளபதியுடன் சேர்ந்து பாண்டியர்களைத் திட்டி இருப்பான். ஆனால் தளபதியின் ஏளனம் அவனுக்குள் சினத்தை மூட்டி விட்டது. இவர்கள் நம் தமிழ்நாட்டின் வடக்கே நமக்கு முன்னால் இருக்கின்றனர். இவர்கள் தடுத்து நிறுத்தி இருந்தால் தில்லிக்காரர்கள் ஶ்ரீரங்கம், மதுரை வரை வந்திருப்பார்களா என எண்ணினான். கோபத்துடன், தளபதியிடம், "தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் வாளா இருந்ததால் தானே எங்களுக்குப் பிரச்னை! அவர்கள் தில்லிக்காரர்களை ஓட ஓட விரட்டி இருந்தால் பாண்டியர்கள் ஏன் அஞ்சி ஓடி இருக்கப் போகிறார்கள்?" என்று கேட்டான். உடனே தளபதிக்கும் கோபம் வந்தது! "என்ன? நாங்களா தடுத்திருக்க வேண்டும்?" என்று கேட்க "ஆம், நீங்கள் தானே முன்னால் இருக்கிறீர்கள்? அவர்களைத் தடுத்து நிறுத்தாமல் நீங்கள் அடி பணிந்து வணங்கியதால் அவர்கள் உங்களைக் கடந்து எங்கள் நாட்டுக்கு வந்து சூறையாடி விட்டார்கள்!" என்றான் குலசேகரன் அதே கோபத்தோடு. மேலும், "உங்களுக்கும் பராக்கிரமம் எல்லாம் எதுவும் இல்லை! நீங்கள் அடி பணிந்தீர்கள்! எங்கள் மன்னர் எதிர்க்காமல் ஓடி ஒளிந்தார். இருவர் பராக்கிரமும் ஒன்றே தான்!" என்றான் ஏளனத்துடன்.

தளபதிக்குக் கோபம் பொங்க, "என்ன! எங்கள் அரசரையா வீரமில்லாதவர் என்கிறாய்?" என்று தன் வாளை உருவ, பதிலுக்குக் குலசேகரனும் ஏதோ மறுமொழி கூறிக் கொண்டே தன் வாளை உருவ இருவருக்கும் இடையே அங்கே உக்கிரமான வாட்போர் தொடங்கியது. அப்போது பின்னால் வந்த மூடு பல்லக்கு அந்த வாட்போரைக் கவனித்துவிட்டு நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மிகவும் இளமையும், அழகும் வாய்ந்ததொரு முகம் குலசேகரனைக் கூர்ந்து கவனித்தது. குலசேகரன் அதை எல்லாம் கவனிக்காமல் தளபதியின் வாளைத் தடுத்து நிறுத்தி அவனையும் காயப்படுத்திக் கீழே தள்ளிவிட்டான். தளபதிக்கு உதவியாகப் போரிட்ட வீரர்கள் ஓட்டமாய் ஓடி விட, பல்லக்கும் மெல்ல நகர்ந்தது. சிறிது நேரத்தில் சுமார் நூறு பேர் கொண்ட ஹொய்சளப்படைவீரர்கள் அங்கே வந்து குலசேகரனையும் குறளனையும் கைது செய்து கொண்டு போய்க் கோட்டைச் சிறையில் அடைத்தார்கள். உதவி கேட்டு வந்த இடத்தில் இப்படி மாட்டிக் கொண்டு விட்டோமே எனக் குலசேகரனுக்குள் வருத்தம் மேலோங்கியது.

அவர்கள் அந்தச் சிறைக்கு வந்த மூன்றாம் நாள்! கிடங்கின் படிகளில் யாரோ ஏறி வரும் சப்தமும், தீவர்த்தியின் வெளிச்சமும் தெரிந்தது. சிறிது நேரத்தில் தீவர்த்திகளைத் தாங்கிக் கொண்டு சிலர் வர அவர்களுடன் ஓர் உருவம் தலை முதல் கால் வரை போர்த்திய வண்ணம் வந்து கொண்டிருந்தது. குலசேகரன் இருந்த இடத்துக்கு வந்ததும் அவனைப் பார்த்துக் கைகாட்டி அழைத்தது.

Tuesday, January 02, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

பின்னர் பிள்ளை உலகாரியர் திருநாட்டிற்கு எழுந்தருளிய செய்தியையும், அரங்கனின் சொத்துக்கள் அனைத்தும் பறி போனதையும் கேள்விப் பட்டு சிங்கப்பிரான் மிகவும் வருந்தினார். அதோடு இல்லாமல் அரங்கனுடன் கூட வந்த இரு நாச்சியார்களும் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்பதை அறிந்தும் மனம் நொந்து போனார். அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் யோசனையில் ஆழ்ந்தார் சிங்கப் பிரான். பின்னர் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு தம் விருத்தாந்தத்தைச் சொல்ல ஆரம்பித்தார். திருவரங்கத்தில் தண்டு இறங்கி இருக்கும் உப தளபதியை சுரமா என்னும் எம்பெருமானின் அடியாள் ஒருத்தி மூலமாக மயக்கிப் பல காரியங்களையும் சாதித்து வருவதாய்க் கூறினார். 

உபதளபதியை நன்கு மயக்கித் தன் சொல்லுக் கட்டுப்படும்படி சுரமா செய்து விட்டதாகவும் தான் பற்பல விதமான மருந்துகளை அவள் மூலம் கொடுத்து உபதளபதிக்கு உணவுடன் சேர்த்துக் கொடுக்கச் செய்ததாகவும் அதன் காரணமாக அவன் இப்போது நித்திய நோயாளியாக இருப்பதையும் கூறினார். ஆனால் குலசேகரனுக்கும், குறளனுக்கும் இதனால் என்ன பலன் என்பது புரியவில்லை. தளபதி பலவீனம் எனில் படைகளும் பலவீனம் அடையும் என்று சிங்கப்பிரான் கூறினார். படைகள் பலவீனம் ஆனால் அதன் மூலம் நமக்கு ஏதேனும் நன்மை பயக்கலாம் என்றும் சொன்னார். ஆனால் அதைத் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளும் தலைமை அல்லது மன்னன் மற்றும் அவன் பலம் நம்மிடம் இல்லையே என்று குலசேகரன் கூறினான். 

அப்போது சிங்கப்பிரான் ஹொய்சள மன்னர் வீர வல்லாளரைப் பற்றிக் கூறி அவர் உதவி கிடைக்கும் என்றும் கூறினார். உடனே குலசேகரனும், குறளனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து சிங்கப்பிரானைத் தழுவிக் கொண்டு தாங்களும் அவரையே நாடுவதற்கு நினைத்ததாகச் சொன்னார்கள். பாண்டியரோ, சோழரோ இனி நாட்டைக் காக்கப் போவதில்லை! அந்த சக்தி வீர வல்லாளரிடமே இருக்கிறது. என்று இருவரும் ஒரு சேரக் கூறினார்கள். ஆனால் உடனடியாக அவர் உதவி கிட்டுமா என சந்தேகப்பட்டார் சிங்கப்பிரான். ஏனெனில் தற்சமயம் வரை ஹொய்சள அரசு தில்லிக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் ஓர் அரசாகவே இருந்து வருவதைச் சுட்டிக் காட்டினார். அதற்குக் குலசேகரன் அவர் மூலம் தில்லிப்படைகளை திருவரங்கத்தை விட்டு விலகும்படி கேட்டுக் கொண்டால் அரங்கனை மீண்டும் இங்கேயே கொண்டு வரலாம் என்று யோசனை சொன்னான்.

அவர்களையே போய் ஹொய்சள மன்னரைப் பார்த்து வரும்படி அனுப்பி வைத்தார் சிங்கப்பிரான். அப்போது ஹொய்சளம் கர்நாடகத்தில் கொஞ்சமும் தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியிலுமாகப் பரவிக் கிடந்தது. தென் தமிழகத்தைக் கைப்பற்ற வந்த தில்லிப் படைகளுக்குப் பணிந்து வளைந்து கொடுத்து ஹொய்சளம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. ஹொய்சளத்தின் தலைநகரம் துவார சமுத்திரம் என்னும் ஊர். ஆனால் அப்போது ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் மாளிகை கட்டிக் கொண்டு அங்கே இருந்து வந்தார். ஆகவே இப்போது அவரைத் தேடிச் சென்ற குலசேகரனும், குறளனும் திருவண்ணாமலைக்கே சென்றனர். 
பற்பல காணிக்கைகளையும் எடுத்துக் கொண்டு ராஜாங்க அதிகாரிகளைச் சந்தித்து மன்னனைச் சந்திக்க அனுமதி பெற்றுப் பிரதான ராஜசபா மண்டபத்திற்குள் நுழைந்தனர் இருவரும்.

மந்திரி, பிரதானிகள், வித்துவான்கள் புடைசூழ சிங்காதனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் வீர வல்லாளர். அப்போது அங்கே ஓர் பெண்ணின் குரல் கம்பீரமாகக் கேட்டது. அந்தக் குரல் முதலில் வடமொழியில் ஏதோ ஸ்லோகம் போன்ற ஒன்றைச் சொல்லிவிட்டுப் பின்னர் தமிழில் அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தது.  அதிர்ச்சி அடைந்த குலசேகரன் அந்தப்பக்கம் பார்த்தால் அவன் நன்கு அறிந்த ஹேமலேகா! அங்கே ரகுவம்சத்தின் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறிவிட்டு அதன் பொருளைத் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தாள். 

Sunday, November 12, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

இந்தச் சம்பவங்கள் எல்லாம் கற்பனை அல்ல. உண்மையாகத் தமிழகத்தில் நிகழ்ந்தவை. ஒரு சில கதா பாத்திரங்கள் மட்டுமே கற்பனை. மற்றபடி பிள்ளை உலகாரியர், வேதாந்த தேசிகர் போன்றோர் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல. அரங்கனைத் தூக்கிச் சென்றதும் ஊர் ஊராக ஊர்வலம் சென்று அரங்கனை மறைக்கப் பாடுபட்டதும் உண்மையே. இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தது பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் ஆகும். 1323 ஆம் ஆண்டில் நடந்தவை. பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே குறைந்து கொண்டு வந்த சோழ சாம்ராஜ்ஜியத்தின் அதிகாரம், இறுதிக் கட்டத்தை அடைந்தபோது பாண்டியர் பேரரசர்களாக ஆகி இருந்தனர். பாண்டியர்கள் தமிழ்நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆண்டு கொண்டிருந்தனர். பல பாண்டிய மன்னர்களும் சிறப்பாகவே ஆட்சி புரிந்து வந்தாலும் இவர்களில் மிகத் திறமைசாலியான குலசேகரப் பாண்டிய மன்னர் 1310 ஆண்டில் கொல்லப்பட்டார். அவருக்கு நேரடி வாரிசுகள் என ஐந்து பேர் இளவரசர்கள் என்னும் பெயரில் கிளம்பி நாட்டை ஐந்து துண்டாக்கி ஆட்சி புரிந்து வந்தனர்.

இவர்களின் ஒற்றுமைக் குறைவால் ஏற்கெனவே கொங்கு நாட்டுப் பகுதியிலும் அருண சமுத்திரம் என அப்போது அழைக்கப்பட்டு வந்த திருவண்ணாமலைப் பகுதியிலும் ஹொய்சாளர்களின் ஆட்சி நடந்து வந்தது.  மதுரையைப் பராக்கிரம பாண்டியர் ஆட்சி புரிந்து வந்தார். அந்தச் சமயம் தான் ஆரம்பத்தில் கூறியவாறு உல்லுக்கானின் படையெடுப்பு நிகழ்ந்தது. மற்றப் பாண்டிய மன்னர்கள் அவரவர் தலைநகரை விட்டு ஓடி ஒளியப் பராக்கிரமப் பாண்டியர் மட்டும் தைரியமாக உல்லுக்கானை எதிர்த்துப் போராடினார். ஆனாலும் நாம் சொன்ன மாதிரி பராக்கிரமப் பாண்டியர் தோற்றுப் போய்ச் சிறைப்பட்டார். மதுரை உல்லுக்கானின் ஆட்சிக்கு உட்பட நேரிட்டது. ஆனால் உல்லுக்கானுக்குத் தொடர்ந்து அங்கே இருக்க முடியாமல் தில்லியிலிருந்து அழைப்பு வரவே அவன் தனக்குப் பிரதிநிதியாக ஓர் ஆளை நியமித்தான். மாலிக் நேமி என்னும் அந்தப் பிரதிநிதி ஆளத் தொடங்கியதன் மூலம் தென் தமிழகம் துருக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டது.

இந்த மாலிக் நேமியின் ஆட்கள் தான் நாம் முந்திய அத்தியாயத்தில் பார்த்தவர்கள். அவர்கள் விடாமல் அரங்கன் ஊர்வலத்தாரைத் தொடர்ந்து சென்று எப்படியோ ஆறு பேர்களைப் பிடித்தார்கள். அவர்களில் வாசந்திகா என்னும் அரங்கனின் ஊழியத்துக்கு ஆட்பட்ட நாட்டியக்காரியும் ஒருத்தி. தப்பிச் செல்ல வழிவகை தெரியாமல் அகப்பட்டுக் கொண்டவள், எப்படியாவது குலசேகரன் வந்து தன்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்லுவான் என எதிர்பார்த்தாள். அரங்கனின் ராஜகிளியானது அவளுடனேயே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. சற்றைக்கொரு தரம் அது ரங்கா ரங்கா எனக் கூவிற்று. வாசந்திகாவுக்கு நேரம் ஆக ஆக குலசேகரன் வருவான் என்னும் அந்த நம்பிக்கை குறைந்தது. மதுரை நோக்கிச் செல்லும் ராஜபாட்டையில் ஓர் வண்டியில் அவளை ஏற்றி விட்டார்கள். மறுநாள் பொழுது இறங்கும் வேளையில் மதுரையை அடைந்தனர். அவளை அரண்மனைக்கு அப்போது ஆண்டு கொண்டிருந்த மாலிக் நேமியின் முன் அழைத்துச் சென்று நிறுத்தினார்கள்.

வாசந்திகாவின் அழகைப் பார்த்த மாலிக் நேமி அவளை ஓர் அரசகுமாரி என்றே நினைத்தான். இல்லை என்று அவள் சொன்னதை நம்பாமல் அவளைத் தன் அந்தப்புரத்திலேயே விடச் சொன்னான். அங்கே வாசந்திகா பல முறை சீரழிக்கப்பட்டாள். தப்பிக்கவும் முடியாமல் வாழவும் பிடிக்காமல் தவித்துக் கொண்டிருந்தாள் வாசந்திகா. ஒரு நாள் காலை தன் நிலையை எண்ணி எண்ணி அவள் வருந்தி அழுது கொண்டிருந்தாள். குலசேகரன் மட்டும் திரும்பி வந்து தன்னைக் காப்பாற்றி அழைத்துச் செல்லக் கூடாதா என்று எண்ணினாள். அவனையே நினைந்து வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இத்தகைய கதி ஏற்பட்டதே என விம்மினாள். தன் கனவெல்லாம் பாழாகி விட்டதை எண்ணி எண்ணிக்கலங்கினாள். குலசேகரன் பெரும்படை திரட்டிக் கொண்டு வந்து தன்னை மீட்டுச் செல்லப் போவதாகக் கற்பனையில் கண்டு மகிழ்ந்தாள்.

ஆனால் அப்போது குலசேகரன் வேறு ஒரு காரியம் பண்ணிக் கொண்டிருந்தான்.

புரட்டாசி மாதம். மாலை வேளை. காவிரிக்குக் கிழக்கே இரு பிரயாணிகள் நதியைக் கடந்து அழகிய மணவாளம் என்னும் கிராமத்துக்குள் நுழைந்தனர். அந்தக் கிராமத்தில் இருந்த சிங்கப்பிரான் என்னும் பெரியவர் இல்லம் நோக்கிச் சென்றார்கள். அவர்களைக் குலசேகரன் என்றும் குறளன் என்றும் அடையாளம் கண்டு கொண்டார் சிங்கப்பிரான். அன்புடன் அவர்களை வரவேற்றார். சிங்கப்பிரான் ஆவலுடன் நடந்த விஷயங்களைக் கேட்டார். முக்கியமாக அரங்கன் இருக்குமிடம் தெரிய ஆவலுடன் காத்திருந்தார். முதலில் மௌனம் சாதித்தக் குலசேகரனும், குறளனும் பின்னர் சிங்கப்பிரானின் பதட்டத்தைக் கண்டு அரங்கன் அழகர்மலையில் ஒளிந்திருப்பதைக் கூறினார்கள்.

இதைக் கேட்ட சிங்கப்பிரான் மேலும் பதறினார். மதுரை துருக்கர் வசம் இருக்கும்போது மதுரைக்கு அருகே அழகர் மலையில் அரங்கனை வைத்திருப்பது சரியா எனக் கலங்கினார். ஆபத்து வந்துவிடுமே என்று அஞ்சினார். ஆனால் குலசேகரனோ மதுரைக்குத் தெற்கே துருக்கப்படைகள் இன்னமும் அதிகமாகவும் அடர்த்தியாகவும் பரவி இருப்பதாகக் கூறினான். தெற்கே கொண்டு செல்வது தான் ஆபத்து எனவும் அழகர் மலையில் ஓர் மறைவான தோப்பிற்குள் மறைவான இடத்தில் அரங்கனை மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார்கள். இங்கிருந்து சென்ற அனைத்து பரிசனங்களிலும் மற்றமக்களிலும் அனைவரும் ஆங்காங்கே சிதறிப் போயோ அல்லது இறந்தோ அல்லது காணாமலோ போய்விட்டதாகவும் இப்போது எஞ்சி இருப்பது பனிரண்டே நபர்கள் தான் எனவும் அவர்கள் பொறுப்பில் தான் அரங்கன் இருப்பதாகவும் கூறினார்கள். 

Wednesday, November 08, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரனிடம் தன் உணர்ச்சிகளின் எதிரொலியை எதிர்பார்த்த வாசந்திகா ஏமாற்றமே அடைந்தாள். பின்னர் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள். குலசேகரனுக்கு அவள் மனம் புரிந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஊர்வலம் கிளம்ப ஆரம்பித்து விட்டது. ஆகவே அதில் போய் இணைந்து கொண்டான். இரண்டு நாட்கள் இடைவிடாப் பயணம் செய்து மூன்றாம் நாள் எங்கே தங்குவது என யோசிக்கையில் பிள்ளை உலகாரியரின் உடல்நிலை மோசமான செய்தி பரவியது. காட்டு மார்க்கத்தைக் கைவிட்டு விட்டு அருகில் உள்ள ஊரான ஜோதிஷ்குடியை நோக்கிப் பயணம் ஆனார்கள். இந்த ஜோதிஷ்குடி என்பது தற்போது காளையார் கோயில் என்னும் பெயரில் இருப்பதாகத் தெரிய வருகிறது. கிட்டத்தட்ட  மதுரை அருகில் உள்ளது. கொடிக்குளம் என்னும் பெயரிலும் வழங்கி வருகிறது.

இங்குள்ள கோயிலில் வேதநாராயணர் என்னும் பெயருடன் பெருமாள் அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலின் பின்னுள்ள குகையில் தான் நம்பெருமாள் என்று பிற்காலத்தில் பெயர் சூட்டப்படப் போகும் அழகிய மணவாளரை ஒளித்து வைக்கச் சொன்னார் பிள்ளை உலகாரியர். எனினும் இங்கும் அந்நியர்கள் பெருமாளைத் தேடி வந்ததாகச் சொல்கின்றனர். இங்குள்ள மலை உச்சிக்குப் பெருமாளைத் தன் கைகளால் தூக்கிக் கொண்டு பிள்ளை உலகாரியர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். பின்னர் எதிரிகள் அவ்விடம் விட்டுச் சென்றதும் திரும்பும் போது தவறிக் கீழே விழுந்து விட்டார் என்கின்றனர். அப்படி விழும்போது  அழகிய மணவாளருக்குச் சேதம் ஏற்படக் கூடாது என அவரை மார்போடு அணைத்தவண்ணம் மல்லாக்க விழுந்திருக்கிறார். ஆகையால் அவருக்கு முதுகில் பலத்த அடி பட்டிருக்கிறது. இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமாகி ஆனி மாதம் ஜேஷ்ட சுத்த துவாதசி வளர்பிறையில் திருநாடு எய்தினார் என்கிறார்கள். சீடர்களிடம் அழகிய மணவாளரை ஒப்படைத்துப் பாதுகாக்கும்படியும் உரிய சமயத்தில் ஶ்ரீரங்கத்தில் சேர்ப்பிக்கும்படியும் சொல்லி இருக்கிறார். இவருக்கு ஓர் தனிச் சந்நிதி பிற்காலத்தில் காளையார் கோயில் என்னும் ஜோதிஷ்குடி என்னும் கொடிக்குளத்தில் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

விதிமுறைப்படி அரங்கனின் பரிவட்டம், மாலைகள்  போன்றவற்றை உலகாரியருக்குச் சார்த்தி அவர் உடலுக்கு முறைப்படியான மரியாதைகள் செய்து அந்திமக் கிரியைகள் செய்து முடித்தார்கள். ஒரு மாதம் அங்கேயே தங்கி இருந்து உலகாரியருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் முறைப்படி செய்து முடித்தார்கள். கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டாலும் யாருக்கும் எங்கே போவது, எங்கே தங்குவது என்றே புரியவில்லை. இத்தனை நாட்களாக உலகாரியர் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார். திருவரங்கத்துக்குச் சீக்கிரம் திரும்பி விடலாம் என நினைத்துக் கிளம்பிய இந்தப் பயணம் இத்தனை நாட்கள் ஆகியும் திருவரங்கம் செல்லும்படியான நிலையில் இல்லை. வழியெங்கும் தில்லி துருக்கர்கள் ஆங்காங்கே தங்கி நாடு, நகரங்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் எங்கே செல்வது?

மதுரை அருகே இருப்பதால் அங்கே செல்லலாம் எனச் சிலர் விருப்பமாக இருந்தது. இன்னும் சிலர் நெல்லைச் சீமைக்குப் போனால் பாதுகாப்பு என நினைக்கக் கடைசியில் ராமேஸ்வரத்திற்கும் மதுரைக்கும் இடையே தென் திசையில் பயணம் செய்ய முடிவானது. இரு நாட்கள் பயணம் செய்தார்கள். மூன்றாம் நாள் பயணத்தில் எதிரே ஓர் சிவிகையும் அதைச் சுற்றிப் பரிவாரங்களும் வருவது தெரிந்தது. பரிவாரங்கள் அனைவருமே பெண்களாகவும் இருந்தனர்.  அந்தப் பரிவாரங்களில் உள்ள சில பெண்கள் அரங்கன் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி அவர்கள் யார், எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தனர். எங்கே போகிறார்கள் என்றும் விசாரித்தனர்.  அப்போது பேச்சுக்குரல் கேட்டுப் பல்லக்கில் இருந்து ஓர் பெண்மணி கீழே இறங்கினாள். நடுத்தர வயதுள்ள அவள் ராஜகுலத்தைச் சேர்ந்தவள் போல் காணப்பட்டாள்.

அந்தப் பெண்மணி தான் மதுரை அரசர் பராக்கிரம பாண்டியனின் பட்டத்து ராணி உலகமுழுதுடையாள் என்னும் பெயர் கொண்டவள் என்றும் மதுரையையும் தில்லித் துருக்கர் சூழ்ந்து கொண்டு போரிட்டதாகவும் தெரிவித்தாள். தீரத்துடன் போரிட்ட பாண்டிய நாட்டு மறவர்களுக்கும் அரசருக்கும் துர்க்கதி நேரிட்டு விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தாள்.  என்ன ஆயிற்று என விசாரித்த ஊர்வலத்தார் பாண்டிய மன்னர் இறந்துவிட்டாரா என்றும் வினவினார்கள். அதற்கு அவள் பாண்டியரை தில்லி வீரர்கள் சிறைப்பிடித்துச் சென்று விட்டதாகத் தெரிவித்தாள். மதுரை நகரில் உள்ள மக்கள் பெரும்பாலோர் ஊரை விட்டுச் சென்று விட்டதாகவும் தாங்களும் அதனால் தான் ஓடி வந்து விட்டதாகவும் கூறினாள்.

பின்னர் அவள் ஶ்ரீரங்கத்தின் நிலைமைக்கும் அரங்கனின் தற்போதைய நிலைமைக்கும் மனம் வருந்தி விட்டுத் தன் ஆபரணங்களை எல்லாம் கழற்றி அரங்கன் செலவுக்கும், சாப்பாட்டுக்கும் இருக்கட்டும் என்று கொடுத்தாள். கையில் இருந்த பொருளை எல்லாம் இழந்து விட்டு அரங்கனின் ஒரு வேளை நிவேதனத்துக்குக் கூடப் பொருளில்லாத நிலையிலும் அவர்கள் அந்த நகைகளை வாங்க மறுத்தனர். அரசகுலத்தாரின் உதவி தேவையில்லை என்றும் கூறினார்கள். அதற்கு ராணியோ அது தன் சொந்த நகைகள், பாரம்பரியச் சொத்து என்று கூறி வாங்கச் சொல்லி வற்புறுத்த வாங்கிக்  கொண்டார்கள். அதன் பின் ராணி புறப்பட்டுச் சென்று விட்டாள்.  அரங்கன் ஊர்வலம் தன் பாதையில் தொடர்ந்தது.

நான்காம் நாள் ஓர் சிற்றாற்றுப் படுகையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓர் சலசலப்புக் கேட்க சுற்றும் முற்றும் பார்த்தவர்களுக்கு ஆற்றின் கரையில் ஓர் உயரமான விளிம்பின் மேல் தில்லி வீரர்கள் குதிரையில் அணி வகுத்து நிற்பதைக் கண்டார்கள். திடுக்கிட்ட பரிசனங்கள் தாறுமாறாக ஓட ஆரம்பித்தனர். தில்லி வீரர்கள் உடனே ஆற்றில் இறங்கி அவர்களைத் தொடர முனைந்தார்கள். பரிசனங்கள் ஓட்டமாக ஓடினாலும் அரங்கன் பல்லக்கைத் தூக்கி வந்தவர்களால் அப்படி விரைவாகச் செல்ல முடியவில்லை. பின் தங்கி விட்டார்கள். அதற்குள் ஆற்றில் இறங்கி விட்ட தில்லி வீரர்கள் பின் தொடரத் தொடங்கி விட்டார்கள். அரங்கன் கதி என்னாகுமோ என அனைவரும் கலங்கும் சமயம் குலசேகரன் உருவிய வாளோடு அரங்கன் பல்லக்கை நெருங்கி அரங்கனைப் பீடத்தோடு சேர்த்துக் கட்டி இருக்கும் கயிற்றின் பிணைப்பைத் துண்டித்தான். இரு நாச்சியார்களின் பிணைப்பையும் துண்டித்தவன். நாச்சியார்களை ஶ்ரீபாதம் தாங்கிகள் இருவரிடம் கொடுத்து எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து செல்லும்படி கூறினான்.

பல்லக்கை அப்படியே விட்டுவிடச் சொல்லி விட்டு அரங்கனை அவன் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். மார்போடு அணைத்துக் கொண்டு அங்கிருந்த மச்சக்காரனின் குதிரையில் ஏறி குதிரையை விரட்டி அடித்தான். குதிரை வேகமாகப் பறந்தது! குலசேகரனும் பறந்தான்.

முதல் பாகம் முற்றியது!





Saturday, November 04, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

மறு நாள் காலையில் அவர்கள் தண்டு இறங்கி இருந்த இடத்தில் பிள்ளை உலகாரியரைப் பார்த்த அவருடைய அணுக்கத் தொண்டரான "விளாஞ்சோலைப் பிள்ளை" என்பார் உலகாரியரின் நிலையையும் திருவரங்கத்தை விட்டு வர நேர்ந்ததையும் அரங்கன் இப்படி ஊர் ஊராகச் சுற்ற வேண்டிய அவலநிலையையும் எண்ணி எண்ணி அழுதார். அதற்குப் பிள்ளை உலகாரியர்,"இதுவும் அரங்கன் லீலை" என்றே எண்ணிக் கொள்ள வேண்டும் என விளாஞ்சோலைப் பிள்ளைக்குச் சமாதானம் சொன்னார்.  இதைத் "திருவரங்கன் உலா"வாகக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். மேலும் அரங்கன் மேல் தீராத பக்தி கொண்டு அவனையே சரண் அடைந்தவர்களுக்கு அரங்கன் மேல் பக்தி ஒருக்காலும் குறையாது எனவும் எந்தத் துயரத்தையும் ஒரு பொருட்டாக எண்ண மாட்டார்கள் எனவும் அப்படி எண்ணினால் அவர்கள் ஆத்திகர்களே இல்லை. பொய்யான ஆத்திகம் பேசுபவர்கள் என்றும் கூறினார்.

அன்று அங்கே கழித்து விட்டு மறுநாள் காலையில் திருவரங்கன் உலா காட்டு வழியில் சென்ற போது ஒரு கள்ளர் கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அவர்களிடம் பொன்னும், நகையும், பொருளும் இருக்குமெனச் சோதனை போட்ட கள்ளர் தலைவன் மூட்டைகளில் புஞ்சை தானியங்களும் பல்லக்கில் திருவரங்கன் எவ்விதமான ஆடை, ஆபரணங்களின் பகட்டில்லாமல் எளிமையாகக் காட்சி கொடுத்ததையும் பார்த்துத் திடுக்கிட்டான். பரிசனங்களை விசாரித்து நடந்தவற்றைத் தெரிந்து கொண்டான். திருவரங்கப் பெருமாளின் செல்வமும், செல்வாக்கும் குறித்து அறிந்திருந்த அவன் இப்போது மனம் வருந்திப் பின்னர் தன்னிடமுள்ள கொள்ளை அடித்த மூட்டைகளைப் பிரித்து காசு, பணம், நகைகள் என அள்ளி எடுத்து ஒரு தாம்பாளம் நிறைய வைத்து அதைப் பிள்ளை உலகாரியரிடம் நீட்டினான்.

பிள்ளை உலகாரியர் அவற்றை ஏற்க மறுத்தார். கொள்ளை அடித்துச் சேர்த்த பொருட்களைத் தாமும் தம் பரிசனங்களும், அரங்கனின் அடியார்களும் தொடமாட்டோம் என உறுதிபடக் கூறினார். பரிசனங்களுக்கு உணவு வழங்கத் தேவையான பொருளையாவது பெற்றுக்கொள்ளும்படி கள்வர் தலைவன் வேண்டியும் பிள்ளை உலகாரியர் பட்டினி கிடந்து மரித்தாலும் மரிப்போம். ஆனால் இந்தப் பொருட்களைத் தொட மாட்டோம். எனத் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். கள்வர் தலைவனிடம் உன் உண்மையான சொத்துக்களைக் கண்டடை என்று சொல்லிவிட்டு ஊர்வலம் மேலே நகர உத்தரவிட்டார் பிள்ளை உலகாரியர். தன் உண்மையான சொத்து எது எனக் கேட்ட கள்வர் தலைவனுக்கு அரங்கனின் நாமத்தைச் சொல்லும்படியும் அந்தச் சொத்து அவனுக்குத் தானாக வந்து சேரும் என்றும் கூறினார் பிள்ளை உலகாரியர்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்த குலசேகரனுக்கு இந்தக் கூட்டத்தில் வாசந்திகா இருக்கும் இடம் தெரியவில்லை. எங்கே இருப்பாள் என யோசித்த அவன் முன்னர் வந்து நின்றார் ஓர் ஊர்வலத்தார். தன் தலையில் பாகை கட்டிக் கொண்டு வந்து நின்ற அவரைப் பார்த்த குலசேகரன் யார் என யோசிப்பதற்குள்ளாக, கலகலவெனச் சிரிக்கும் சப்தம் கேட்டு உற்றுப் பார்க்க ஊர்வலத்தார் வேஷத்தில் வாசந்திகா நிற்பது புரிந்தது.  காட்டில் அனைவரிடமிருந்தும் தப்பிப்பதற்காகவும் தான் பெண் என்பது புரியாமல் இருப்பதற்காகவும் இந்த வேஷத்தில் வருவதாக வாசந்திகா சொல்ல அதை ஆமோதித்தான் குலசேகரன்.

அப்போது குலசேகரன் தன்னையும் மச்சக்காரரையும் பார்த்து வரும்படி திருக்கோஷ்டியூருக்கு அனுப்பியது வாசந்திகா தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டான். வாசந்திகாவும் அதை உறுதி செய்தாள். தில்லிப் படை வீரர்களிடமிருந்து தப்பிக்கும் வழிதெரியாமல் தான் அப்படிச் செய்ததாகவும் கூறினாள். மச்சக்காரரை எப்படி நம்ப முடிந்தது என்னும் கேள்விக்கு, குலசேகரன் அவருக்கு ஆதரவு காட்டியதில் இருந்து மச்சக்காரர் நல்லவர் என்னும் எண்ணம் தனக்கு வந்தது என்றும் சொன்னாள். மச்சக்காரரைக் காப்பாற்ற வேண்டி அரங்கன் ஊர்வலத்தையே துறந்து குலசேகரன் சென்றதையும் ஆகவே மச்சக்காரர் உண்மையிலே நல் மனம் கொண்டவர் தான் என்பது உறுதிப்பட்டதாகவும் கூறினாள்.

குலசேகரன் தன்னை விரட்டினாலும் தான் திரும்ப அவனை அழைத்துக் கொண்டதையும் குறளனைப் போல் சஞ்சலங்கள் தன்னிடம் இல்லை எனவும் கூறினாள்.  மேலும் குலசேகரனைப் போன்றவர்களுக்காகவும் அவர்களை எல்லாம் மகிழ்விக்கவுமே தான் அரங்கனுக்கு எதிரில் ஆடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள். அங்குள்ள மற்றக் கூட்டத்தாரை விடக் குலசேகரன் ஒருவன் தான் ஆடும் ஆட்டத்தின் காரணத்தையும் அரங்கனுக்காக மட்டுமின்றி அவனுக்காகவும் தான் ஆடுவதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் சொன்னாள் வாசந்திகா. 

Wednesday, November 01, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஹேமலேகாவைக் குறைந்த நேரமே சந்தித்த குலசேகரனுக்கு அவள் எப்படி இருப்பாள் என்பதே நினைவில் இல்லை. அந்த நினைவில் அவன் வாசந்திகாவைப் பார்க்க வாசந்திகாவோ அவன் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்னும் குதூகல நினைவில் மூழ்கினாள்.  குலசேகரனுடன் ஆனந்தப் பேச்சு வார்த்தையும் மூழ்க நினைத்த வாசந்திகாவுக்கு ஏமாற்றமே மேலிட்டது. குலசேகரன் முழுவதும் தன் நினைவில் வந்து விட்டான். தான் மேற்கொண்டிருக்கும் முக்கியமான காரியத்தைக் குறித்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். மேம்போக்காக வாசந்திகா கேட்டவற்றுக்குப் பதில்களை அளித்தான். வாசந்திகாவோ அங்கே கிடந்த ஓர் பாறையை அரங்கனாகவும் அரங்கன் பாம்பணை மேல் படுத்திருக்கும் கோலமாகவும் எண்ணிக் கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பாடிக் கொண்டு ஆடவும் ஆரம்பித்தாள்.

பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்

காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்

சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும்,

நீதியாய்! நிற்சார்ந்து நின்று.

குலசேகரனின் நொந்த மனதுக்குப் பாசுரமும் அதன் பொருளும் அவள் பிடித்த அபிநயங்களும் ஆறுதலை அளித்தன. அவன் முகத்தைக் கண்ட வாசந்திகாவும் அவன் உண்மையில் தன் மேல் காதல் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடனேயே விடைபெற்றுச் சென்றாள். மறுநாள் அனைவரும் புறப்படுவதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த வேளையில் பிள்ளை உலகாரியரின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்குப் போய் விட்டிருந்தது. தொண்டர்களும் பரிசனங்களும் அழுது புலம்பிக் கொண்டு அவரின் கூடாரத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். பலவாறு சொல்லிப் பிரலாபித்தார்கள்.

இப்போது பிள்ளை உலகாரியரின் தாய், தந்தை குறித்து ஓர் சிறிய குறிப்பு.  வைணவ ஆசிரியப் பெருந்தகைகளில் ஒருவரான "நம்பிள்ளை" என்பாருக்கு "வடக்குத் திருவீதிப் பிள்ளை" என்றொரு சீடர் இருந்தார். அவர் திருமணம் ஆகியும் மனைவி மேல் பற்றில்லாமல் துறவி போல் பிரமசரிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். அதைக் கண்ட அவர் தாய்க்கு வருத்தம் மேலிட அவர் தம் பிள்ளையின் ஆசிரியரான நம்பிள்ளையை அணுகி நிலைமையைச் சொல்லிப் புலம்பினார். தம் குலம் தழைக்க வேண்டும் என்ற ஆசையினைப் பகிர்ந்து கொண்டார். மகன் இப்படித் தன் மனைவியைப் பாராமுகமாக இருப்பதை எண்ணி வருந்தினார்.

நம்பிள்ளை அவரைச் சமாதானம் செய்து அவர் மருமகளை அழைத்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் தம் சீடரான திருவீதிப்பிள்ளையை அழைத்து அவரைத் தம் மனைவியுடன் அன்றிரவு மட்டும் சுகித்து இருக்கும்படி சொல்லி, இது குருவின் கட்டளை என்றும் தெளிவு செய்து அனுப்பி வைத்தார். குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு திருவீதிப் பிள்ளை அன்றிரவு தன் மனைவியுடன் சுகித்திருந்தார். அதன் விளைவாகப் பிறந்தவரே பிள்ளை உலகாரியர் என்பார்கள்.

இந்தக் கதை நடந்து வந்த சமயம் பிள்ளை உலகாரியருக்குப் பிராயம் அறுபதை நெருங்கி கொண்டிருந்தது. வைணவ சமயத்தை நிலை நிறுத்த வேண்டி "பதினெட்டு ரகசியங்கள்" என்னும் நூலை எழுதி இருந்தார். அவற்றுள் சூத்திரங்களாக உள்ள "ஶ்ரீ வசன பூஷணம்" என்னும் நூலுக்குப் பலரும் வியாக்கியானங்கள் எழுதி இருப்பதோடு இன்னமும் எழுதியும் வருகின்றனர். இவர் ஆரம்பத்தில் இருந்தே பிரமசரியத்தில் ஈடுபாடு கொண்டதால் திருமணமே செய்து கொள்ளாமல் வழ்ந்து வந்தார். அரங்கன் சேவையையே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வந்த அவருக்குக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய குழப்பமான சூழ்நிலைகளால் உடல்நிலையும் மனோநிலையும் பரிபூரணமாகக் கெட்டுப் போயிருந்தது.

ஆழ்ந்த மன வருத்தத்தில் இருந்த அவர்  அரங்கனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செவ்வனே முடிக்க ஆசைப்பட்டார். அதை இப்போது தம்மால் நிறைவேற்ற முடியுமா என்னும் ஐயம் அவரைப் பிடித்து ஆட்டியது.  ஏற்கெனவே இருந்த பலவீனம், மனோவியாகூலம் எல்லாம் சேர்ந்து அவரை மயக்க நிலையில் தள்ளி இருந்தது.  அதைக் கண்ட அவர் சீடர்கள் மனம் வருந்தினார்கள். கூடாரத்திலிருந்து வெளியே வந்த அவர்களில் சிலர் தங்களுக்குள்ளாக ஆலோசனைகள் நடத்தினார்கள். ஆற்றங்கரையோரமாகத் தங்கி இருந்ததால் அந்தப் ப்ரதேசத்தில் அதிக நாட்கள் தங்கக் கூடாது என்பதால் ஓர் பல்லக்கை ஏற்பாடு செய்து பிள்ளை உலகாரியரை அதில் படுக்க வைத்துச் சுமந்து செல்லத் தீர்மானித்தார்கள்.