எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, October 29, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

பிள்ளை உலகாரியரைக் கண்ட குலசேகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்தத் தோப்பின் ஓர் ஓரமாகத் திரை போட்டு மேலே விதானத்தால் மூடி நடுவில் ஓர் படுக்கையை விரித்துப் படுத்திருந்தார் பிள்ளை உலகாரியர். அவரை வணங்கித் தன் கவலையையும் தெரிவித்தான் குலசேகரன். அதற்குப் பிள்ளை உலகாரியர் அவர்களை ஆசுவாசம் செய்தார். பின்னர் அவர்களை ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருக்கும்படி வற்புறுத்தினார். அப்போது தான் அரங்கனைக் காப்பாற்றி எடுத்துச் செல்ல முடியும் என்றும் எடுத்துச் சொன்னார்.  அதைக் கேட்ட குறளன் என்பவனும் குலசேகரனும் அதற்கு ஒத்துக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் அரங்கனின் ஊர்வலத்தில் வந்த சாதாரண மக்களும் அரங்கனின் பரிசனங்களும் ஒன்று கூடி மச்சக்காரனின் உடலைத் தகுந்த மரியாதைகளுடன் புதைத்தார்கள்.  அவர்களுடன் வந்த ஶ்ரீபாதம் தாங்கி ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவரை வேட்டுவர் குடியிருப்பில் தங்கிச் சிகிச்சை எடுக்கும்படி ஏற்பாடுகள் செய்து பின்னர் சுத்திகள் எல்லாம் செய்து முடித்து நிலவு மேலே எழும்பினதும் அரங்கனது பயணத்தைத் துவக்கினார்கள். காற்று தென்றலாக வீசியது. நிலவோ வெள்ளியை உருக்கி ஊற்றினாற்போல் ஒளியைப் பொழிந்தது. குலசேகரனுக்கு அந்தப் பயணத்தின் இடையே மச்சக்காரனின் நினைவு வந்தபோதெல்லாம் தேம்பி அழுதான். கடைசியில் அவர்கள் பாதி இரவில் ஓர் காட்டாற்றின் கரையில் வந்து பயணத்தை நிறுத்திக் கொண்டார்கள்.

அங்கேயே வேட்டுவர் தந்த தானியங்களை அடுப்பிலிட்டு வேக வைத்துக் கஞ்சி போல் காய்ச்சி அரங்கனுக்கு நிவேதனம் செய்து அவர்களும் உண்டார்கள்.  பின்னர் அனைவரும் படுக்க ஆயத்தம் செய்தனர். குலசேகரனுக்கு உணவு இறங்கவில்லை. படுக்கவும் பிடிக்கவில்லை. மிகக் கவலையுடன் அவன் காட்டாற்றில் இறங்கினான். கரையிலிருந்து கீழிறங்கி ஆற்றின் மணல்வெளிக்குச் சென்று அங்கே படுத்தான். மனம் புழுங்கியது.  அடுத்தடுத்து நேர்ந்த தாயின் மரணம், தான் அன்புடன் பழகிய மச்சக்காரனின் மரணம் இரண்டும் அவனை வாட்டியது. குறுகிய நேரமே பழகினாலும் மச்சக்காரன் மிகவும் நல்லவன் என்றும் வெள்ளை மனம் கொண்டவன் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. 

அவன் மனதில் அரங்கன் பால் கொண்டிருந்த மாசு மருவற்ற தூய பக்தியை எண்ணி எண்ணிக் குலசேகரன் மனம் விம்மினான். அந்த பக்தியினால் அன்றோ அவன் அவ்வளவு அடிகளைத் தாங்கி இருக்கிறான்.  அதனால் அன்றோ அவன் இறக்கவும் நேரிட்டது! தன்னையும் அறியாமல் தூங்கிய குலசேகரனுக்குக் கொடிய கனவுகள் மாறி மாறி வந்தன. மச்சக்காரனின் இறந்த உடலைக் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு தான் அந்தக் காட்டாற்றின் கரைக்கு வந்ததாக அவனுக்குள் ஓர் எண்ணம். அதுவே கனவாகவும் வந்தது. உடலை தகனம் செய்ய நினைக்கையில் அவனை யாரோ மதுரமான குரலில், "ஆர்ய!" என்று அழைத்தனர்.

குலசேகரன் முன்னால் அப்போது நின்று கொண்டிருந்தது ஹேமலேகா! அவனுக்கு அது கனவா, நனவா என்றே புரியவில்லை. ஹேமலேகா, ஹேமலேகா என்றழைத்த வண்ணம் தன்னை உலுக்கிக் கொண்டு எழுந்தவன் எதிரே உண்மையாகவே அவள் அமர்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டான்.  மீண்டும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்க்க அது ஹேமலேகா இல்லை, வாசந்திகா என்பதும் புரிந்தது. எப்படியோ அவன் உண்ணாமல் வந்து விட்டதைக் கவனித்திருந்த வாசந்திகா ஓர் தொன்னை நிறையக் கூழை நிறைத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். ஹேமலேகாவின் நினைவிலேயே இருந்த குலசேகரனுக்கு அது அவளே கொடுப்பது போலிருக்க மறுப்புச் சொல்லாமல் வாங்கி அருந்தினான். 

Wednesday, October 25, 2017

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

வந்த வீரர்கள் மச்சக்காரனையும் அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த குலசேகரனையும் பார்த்துத் தயங்கி  நின்றார்கள். மச்சக்காரன் அவர்களை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டுவிட்டு இவர்களை எல்லாம் விட்டு விடு, இவர்களுக்கும் அரங்கனுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினான். அவன் குரலின் கண்டிப்பைக் கண்ட தில்லி வீரர்கள் தலைவன் அரை மனதோடு அதற்குச் சம்மதித்தாலும் மச்சக்காரனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு கொஞ்சம் சந்தேகம் அடைந்தான். அதற்கு மச்சக்காரன் காட்டு வழியில் வந்தபோது திருடர்கள் அடித்துவிட்டதாய்க் கூறினான். குதிரை வீரர்களிடம் திட்டவட்டமாக இந்தக் கூட்டத்தினரைத் தொந்திரவு செய்யாமல் போக விடு என்றும் கூறினான். அவர்கள் அகன்றனர்.

குலசேகரன் மச்சக்காரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி கூறினான். குலசேகரனிடம் அவர்களில் ஒருவர் பேசியதை வைத்துத் தான் விஷயத்தைப் புரிந்து கொண்டதாகக் கூறிய மச்சக்காரன் அரங்கனைக் காப்பாற்ற வேண்டியே அவர்கள் இப்படி மறைமுகமாகத் தன்னை வேண்டி இருக்கிறார்கள் என்பதையும் தான் புரிந்து கொண்டதாய்த் தெரிவித்தான். அதனால் அவர்கள் தப்பிச் செல்லத் தான் அனுமதி கொடுக்கச் சொன்னதாயும் கூறினான். மேலும் அரங்கனை இவர்களிடமிருந்து காப்பாற்றத் தான் ஓர் காரணமாக அமைந்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டான்.

அரங்கன் ஊர்வலத்தார் பலரும் குலசேகரன் இருக்குமிடம் தெரிந்து கொண்டு அங்கே வந்து அவனையும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அதற்குக் குலசேகரன் மறுக்க அவர்கள் சொன்ன சமாதானங்களையும் ஏற்க மறுக்க மச்சக்காரன் அவனை ஒத்துக் கொள்ளச் சொன்னான். ஆனால் குலசேகரனோ மச்சக்காரன் இல்லாமல் தான் பயணம் செய்யப் போவதில்லை என்று சொல்லிவிட்டான். கூட்டத்தினர் மச்சக்காரனையும் உடன் அழைத்துச் செல்வதாக உறுதி கூறிக் குலசேகரனை மீண்டும் வற்புறுத்தக் குலசேகரனும் மனம் இசைந்தான். குதிரை மீது மச்சக்காரனைக் குப்புறப் படுக்க வைத்துத் தான் கவனமாகக் குதிரையை ஓட்டியவண்ணம் உடன் சென்றான் குலசேகரன்.

சிறிது நாழிகையில் அவர்கள் வேட்டுவக்குடியை நெருங்கினார்கள். பூவரச மரங்கள் நிறைந்த தோப்பில் பரிவாரங்கள் அனைவரும் கூடி இருந்து மச்சக்காரனையும் குலசேகரனையும் வரவேற்றனர். மச்சக்காரன் படுத்திருந்த குதிரையை அரங்கனின் பல்லக்குக்கு அருகே இழுத்துச் சென்றான் குலசேகரன். மாலை நேர வழிபாட்டுக்கான நேரம்! திரை திறக்கப்பட்டு அரங்கனாகிய அழகிய மணவாளர் திவ்ய தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட குலசேகரன் மச்சக்காரனை எழுப்பி அரங்கனைத் தரிசனம் செய்யச் சொன்னான். மச்சக்காரனிடமிருந்து பதிலே வராமல் போகத் திடுக்கிட்ட குலசேகரன் அவனை உலுக்கி எழுப்ப அவன் உடல் குதிரையிலிருந்து கீழே விழுந்தது.

குலசேகரன் மண்ணில் அந்த உடல் விழுவதற்குள்ளாகத் தன் கைகளில் பிடித்து மெல்லக் கீழே கிடத்தினான். மச்சக்காரன் முகத்தில் புன்னகை மறையவே இல்லை! அரங்கனைப் பார்க்கப் போகிறோம் என்னும் மகிழ்ச்சியில் எழுந்த அந்தப் புன்னகை மறையாமலேயே அவன் மறைந்து விட்டான். குலசேகரன் அவனை உலுக்கு உலுக்கென்று உலுக்கியும் அவன் கண் திறக்கவில்லை.  பெரிதாக ஓவென்று அலறி அழுதான் குலசேகரன். அவன் அலறலைக் கேட்ட குதிரையும் கனைத்தது அதுவும் அழுவது போல் தோன்றியது.குலசேகரனுக்குக் கோபம் வந்தது.

கூட்டத்தினரைப் பார்த்துக் கோபத்துடன், "ஒரு உயிர் அநியாயமாகப் போய்விட்டது.அரங்கன் மீது முழு விசுவாசமும் பக்தியும் கொண்டிருந்த ஓர் உயிர்! இவருடைய வெளி வேஷத்தைப் பார்த்து நீங்கள் இவரை இகழ்ந்தீர்கள்! இவருடைய உள் மனதை யாரும் பார்க்கவில்லை! அரங்கன் மீது இவர் கொண்டிருந்த அபாரமான காதல் காரணமாகவே இன்று நீங்களும் சரி, அரங்கனும் சரி பாதுகாக்கப் பட்டிருக்கிறீர்கள். இவர் இல்லை எனில் தில்லித் துருக்கர்கள் உங்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிச் சென்றிருப்பார்கள். உண்மையில் இவர் தான் அரங்கனின் உண்மையான பக்தர்! நீங்களோ நானோ அல்ல!" என்றான்.

அப்போது அங்கே குறளன் என்பவன் முன்னே வந்து குலசேகரனிடம் மன்னிப்புக் கேட்கக் குலசேகரனின் கோபம் மேலும் பொங்கியது. குறளனின் அடியால் தான் அவர் முதுகு பிளந்து கடந்த மூன்று நாட்களாகத் துடித்ததைக் குலசேகரனால் மறக்க முடியவில்லை. அப்படி இருந்தும் அரங்கனையும் அவர் பக்தர்களையும் மச்சக்காரப் பெரியவர் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை நினைத்து அவன் மனம் நன்றியில் நிறைந்தது. எனினும் குறளனின் மேல் கோபம் தணியவில்லை. அப்போது குறளன் தாய் செய்ததுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தான் செய்த செயலுக்கான தண்டனையும் தனக்குக் கிடைத்ததாகக் கூறித் தன் முதுகில் தில்லித் துருக்கர்கள் கொடுத்திருந்த சாட்டை அடிகளைக் காட்டினான்.

என்றாலும் மச்சக்காரர் இறக்கும் முன்னர் அரங்கனைப் பார்த்திருந்தால் ஒருக்கால் பிழைத்திருப்பாரோ என்னும் எண்ணம் குலசேகரனுக்குள் தோன்றியது. மச்சக்காரருக்குத் தான் கொடுத்த அடிகள் தான் தமக்குத் திரும்பி வந்ததாகக் குறளன் கூறியதில் குலசேகரனுக்குக் கொஞ்சம் வருத்தமும் அதே சமயம் இனம் புரியா ஆறுதலும் ஏற்பட்டது. மச்சக்காரர் உண்மையில் மகான் தான்! அதான் உடனடியாகக் குறளனுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் சமயம் பிள்ளை உலகாரியர் அழைப்பதாகப் பரிசனங்களில் ஒருவர் வந்து குலசேகரனை அழைத்தார்!

Tuesday, October 24, 2017

நாளை முதல் எழுதுவேன்!

ரொம்ப வருஷமா எழுதலையோனு நினைச்சிருந்தேன். இந்தப்பக்கமே வர முடியலை! புத்தகங்கள், குறிப்புகள் எல்லாவற்றையும் தனியா எடுத்து வைச்சிருந்தேன். அவற்றைத் தேடி எடுக்கலை! அதோடு போன செப்டெம்பரில் இருந்து அடுத்தடுத்துக் குடும்பப் பிரச்னைகள், நிகழ்வுகள், அமெரிக்காப் பயணம், திரும்பி வந்து மாமியாரின் காரியங்கள் என ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தினம் ஒரு தரமாவது இங்கே எதுவும் எழுதலையேனு வருத்தம் வரும். இனியாவது கொஞ்சம் சுறுசுறுப்பு வரணும் என அந்தப் பெருமாளையே நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு நாளையிலிருந்து எழுத ஆரம்பிக்கணும். யாரும் படிக்கலைனாக் கூடப் பரவாயில்லை. எடுத்த காரியத்தை முடிக்கணும்.

Saturday, September 03, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்~ தில்லி வீரர்களின் கொடூரம்!

வரும் படைகள் எவருடையது என்ற குழப்பத்தில் அனைவரும் ஆழ்ந்தனர். வருபவர்கள் தில்லிப் படையினர் என்பது விரைவில் தெரிந்தது. உடனே அங்கிருந்தோரில் ஒருவன் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பில் மறைந்திருக்கும்படி அறிவுறுத்தினான். உடனே அனைவரும் அழகியமணவாளரின் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வேட்டுவர் குடியிருப்பை நோக்கி ஓடினார்கள். நோய்வாய்ப் பட்டிருந்தவர்களோடு பிள்ளை உலகாரியரும் அங்கேயே தங்கி விட்டார்.  அடுத்த சில கணங்களில் அந்தத் தோப்பை தில்லி சுல்தானின் படை நெருங்கி விட்டது. குதிரைகள் ஒரு நூறு ஒரே நேரத்தில் சடசடவென்ற சப்தத்தோடு நின்றன.

அவர்களின் தலைவன் பரிவாரங்களையும் பிள்ளை உலகாரியரையும் பார்த்து, "யார் நீங்கள்? எங்கே போகிறீர்கள்?" என்று வினவ அவர்கள் ராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை செல்வதாகக் கூறினார்கள். ஆனால் தலைவன் அதை நம்பாமல் உரக்கச் சிரித்தான். பொய் சொல்லுவதாகவும் ஏளனம் செய்தான். ஆனால் ஶ்ரீரங்கத்துப் பரிவாரங்களும் மற்றவர்களும் விடாமல் ராமேஸ்வரமே செல்வதாகக் கூற ராமேஸ்வரம் செல்லும் வழி இதுவல்ல வென்று அந்த தில்லி சுல்தானின் படைத்தலைவன் கூறினான். பின்னர் அவர்கள் ஶ்ரீரங்கத்திலிருந்து வருவதைத் தான் அறிந்து கொண்டு விட்டதாகவும் கூறினான். ஆனால் ஶ்ரீரங்கத்துக்காரர்கள் விடாமல் நோய்வாய்ப்பட்டதால் அங்கே தங்கி இருப்பதாகவும், நிழலும் நீரும் இங்கே கிடைப்பதால் தங்கி இருப்பதாகவும் கூறினார்கள். பின்னர் அவன் பார்வை அங்கே படுத்திருந்த உலகாரியர் மேல் பட்டது. அவரின் தீர்க்கமான நாமத்தைப் பார்த்த அவன் அவர் அருகே சென்று அவரைப் பார்த்து எழுப்பினான்.

"ஹே, கிழவா! எழுந்திரு! உன்னைப் போல் நாமம் தரித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறிவேன். நீ உண்மையைச் சொல்ல வேண்டும். எங்கே போகப் புறப்பட்டீர்கள்?" என்று வினவினான். உலகாரியரோ, "நாங்கள் ஶ்ரீவைணவர்கள். பகவானின் திருநாமமே எங்களுக்கு அமிர்தம். அதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை!" என்றார். இதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்ட அந்தத் தலைவன் தன் கையிலிருந்த சாட்டையை எடுத்து ஓங்கி அவரை அடிக்க வேண்டும் என்று கையைத் தூக்கக் கூட்டத்திலிருந்த பலரும் ஓடோடி வந்து உலகாரியரை மறைத்துக் கொண்டு, எங்களை அடித்துக் கொள், அவரை ஒன்றும் செய்யாதே! என்று அலறினார்கள்.  கோபம் கொண்ட அந்தத் தலைவன் சாட்டையை ஓங்கி அங்கிருந்த ஓர் ஆளின் மேல் அடித்தான். வீறிட்டுக் கத்தினான் அவன். மீண்டும் மீண்டும் சாட்டையை ஓங்கிக் கொண்டு அதே ஆளையே திரும்பத் திரும்ப அடிக்க அவன் அடி வாங்குவதைக் கண்டு தாங்க முடியாத பிள்ளை உலகாரியர் மயங்கிக் கீழே விழுந்தார்.

பரிவாரங்கள் கோபத்தில் கொந்தளித்தனர். அப்போது ஒருவன் ஓடோடி வந்து, தலைவனைப் பார்த்து, "நிறுத்துங்கள், பிரபு!" என்று கத்தினான். யாரென்று பார்த்தால் அரங்கனோடு வேட்டுவர் குடிக்கு மறைந்திருக்கச் சென்றவர்களில் ஒருவன் அங்கே வந்து தாங்கள் யாத்திரிகர்கள் தாம் என்றும் அதை தில்லி சுல்தானின் ஒற்றர் தலைவனுக்கு நிரூபித்துக் காட்டிவிட்டதாகவும் கூற தலைவனுக்கு ஆச்சரியம். யார் அந்த ஒற்றர் தலைவன் என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு அந்த ஆள் அவரைப் பெயர் மூலம் அறிந்ததில்லை என்றும் அடையாளம் தெரியும் என்று கூறிவிட்டுக் கன்னத்தில் பெரிய மச்சம் இருக்கும் என்றும் கூறினான். "அவரா" என்று தயங்கிய தலைவன் அவர் தான் என்றும் சொல்வதற்கும் நிரூபித்ததற்கும் என்ன அத்தாட்சி என்று கேட்டான்.

அதற்கு வந்தவன் அவரே இங்கே பக்கத்தில் திருக்கோட்டியூரில் இருப்பதாகவும் இங்கே இருந்து அரை நாழிகைப் பயணத்தில் அவரைக் காணலாம் என்றும் கூறினான். அதற்குத் தலைவன் அவனையே அந்த ஒற்றர் தலைவனைக் காட்டும்படி கூற இருவரும் திருக்கோட்டியூருக்குக் கிளம்பினார்கள். அனைவரும் உடன் சென்றனர். அரை நாழிகைக்கும் குறைவான நேரத்திலேயே திருக்கோட்டியூரை அடைந்தனர். எல்லா இடங்களிலும் தேடியவர்களுக்குக் கடைசியில் ஒரு வீட்டுத்திண்ணை மேல் மச்சக்காரன் இருப்பதையும் அவர்கள் தலைவனான குலசேகரன் என்பான் அங்கே இருந்து மச்சக்காரனுக்குப் பணிவிடை செய்வதையும் பார்த்தார்கள். கூட்டமாக ஆட்கள் வருவதைப் பார்த்தக் குலசேகரன் என்பான் திரும்பிப்பார்க்க தில்லிப் படை வீரர்களையும் அவர்களுடன் ஶ்ரீரங்கத்து ஆள் ஒருவனையும் பார்த்தான்.

ஶ்ரீரங்கத்து ஆள்குலசேகரனிடம் தாங்கள் யாத்திரிகர்கள் என்பதை நம்பாமல் தில்லி வீரர்கள் கொடுக்கும் தொந்திரவைச் சொன்னான்.அரங்கன் ஊர்வலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துத் தொந்திரவு கொடுப்பதாகவும் அனைவரையும் சாட்டையால் அடிப்பதையும் கூறி உங்கள் ஒற்றர் தலைவனே இதை அறிவார் என்று கூறி இங்கே அழைத்து வந்ததாகச் சொன்னான். அப்போது இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மச்சக்கார ஒற்றர் தலைவன் மெல்ல முனகவும் குலசேகரன் அவனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டான். தன் மடியில் சாய்த்த வண்ணம் அமர்த்திக் கொண்டான்.

Saturday, August 20, 2016

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனும் பட்டினி!

இந்த சுரதானியையும் ஒருவன் காதலித்ததாகவும், அரங்கனையே நினைத்திருந்த சுரதானி இறந்த பின்னர் அவள்  விருப்பமான அரங்கன் மேல் அவள் கொண்ட காதல் அவனுக்கும் வந்துவிட்டதாகவும், சுரதானி காதலித்த அந்த அழகிய மணவாளர் மேல் அவனுக்கும் ஈர்ப்பு பிறந்துவிட்டதாகவும் ஒரு கூற்று உண்டு. அந்த அரங்கன் மேல் கொண்ட காதல் மாறாமல் பார்க்கும் பொருளை எல்லாம் அரங்கனாகவே அவன் பாவித்ததாகவும் அப்படி ஓர் நாள் அவன் சுட்ட ரொட்டியை எடுத்துக் கொண்டு ஓடிய கோழியையும் அரங்கனாகவே பாவித்து, நெய் தடவாத ரொட்டியை எடுத்துச் சென்று விட்டாயே அரங்கா என்று கூவிய வண்ணம் தொடர்ந்தவனுக்கு ஓர் அற்புத அனுபவம் கிட்டியதாகவும், அந்த நேரமே அவன் ஜீவன் முக்தனாக மாறி விட்டான் என்றும் அவனுக்கு முக்தி கிடைத்து அரங்கனின் கழல்களை அடைந்ததாகவும் சொல்கின்றனர்.

ஆண்டாள் வைத்த பக்திக்குப் பின்னர் சுரதானியின் காதலே அதிகம் பேசப்படுகிறது. ஆகவே பின்னர் வந்த நாட்களில் கோவிலில் சுரதானியின் உருவத்தைச் சித்திரமாக எழுதி வைத்து தினம் காலை கோதுமை ரொட்டி, கிச்சடி என்னும் பருப்புச் சேர்த்த பொங்கல் ஆகியவற்றை நிவேதனமாகப் படைப்பதாகவும் அந்த நேரத்தில் அரங்கனுக்குக் கைலி உடுத்துவதாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. அரங்கன் விக்ரஹம் மாற்றில்லாப் பசும்பொன்னால் செய்யப்பட்டிருப்பதாக ஓர் கூற்று. மேலும் விக்ரஹத்தினுள் வைர, வைடூரியங்களையும் நவரத்தினங்களையும் புதைத்து மறைத்து வைத்திருப்பதாகவும் சுல்தானின் வீரர்கள் நினைத்தனர்.

ஆனால் சுரதானியின் தந்தை சுரதானி இறந்த பின்னர் பாரசீகமே திரும்பினாலும் உறவினர்களில் சிலர் இங்கேயே இருந்து வந்தனர். அவர்களுக்கு அந்த அரங்கன் சிலையில் ஏதோ மாய, மந்திரம் இருப்பதாகவும், வசிய சக்தி அதில் இருப்பதாகவும் நம்பினார்கள். ஆகவே அந்த விக்ரஹத்தை எப்படியேனும் தேடி அடைந்து உருக்கி உலோகமாக மாற்றி விடவேண்டும் என்னும் வெறியில் விக்ரஹத்தைத் தேடி அலைந்தனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைக்காக நம் அரங்கனைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் அரங்கனோ எவரும் அறியாமல் காட்டுக்குள் ஒளிந்து ஒளிந்து பரிசனங்களாலும் முக்கிய பக்தர்களாலும் எடுத்துச் செல்லப்பட்டு வந்தான்.

திருக்கோஷ்டியூருக்கு அருகே உள்ள சோலைகளில் அரங்கன் மறைத்து வைக்கப் பட்டிருந்தான், ஊர் மக்களுக்கே அந்த விஷயம் தெரியாது. அரங்கனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சாமான்கள் வாங்க வந்தபோது ஊர் மக்கள் இல்லாமல் ஊரே வெறிச்சோடி இருப்பதைக் கண்டு அங்கிருந்த ஓரிருவரிடம் விசாரித்தால் டில்லி சுல்தானின் சூறைக்கும் படையெடுப்புக்கும் பயந்து மக்கள் ஊரை விட்டே ஓடிவிட்டதாகத் தகவல்கள் கிடைத்தன.  ஆகவே உணவுப் பொருள்கள் ஏதும் கிடைக்காமல் அரங்கனுடன் சென்ற பலருக்கும் உடல் நலிவு ஏற்பட்டது. உலகாரியரின்  உடலும் மிகவும் நலிந்து விட்டிருந்தது.  முன்பிருந்த பொலிவு அவரிடம் இப்போது இல்லை.  நகருக்குள் வந்து அவருக்காகக் கஞ்சிக்குச் சிறிதேனும் உணவு சம்பாதிக்க வந்த மக்களும் ஏதும் கிடைக்காமல் தயங்கிக் கொண்டிருந்தனர்.

அங்கே வந்த ஓர் அரங்கவாசியைக் கண்டதும் அவன் டில்லி ஒற்றனாக இருப்பானோ என்றே நினைத்துக் கொண்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர். இவன் கண்களில் படாமல் அரங்கன் ஊர்வலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவு கட்டினார்கள். ஆனால் உண்மையில் வந்தவன் ஒற்றனே அல்ல. நல்லவனே ஆகும். எல்லோரும் ஒருவர் மற்றவரைச் சந்தேகப்படும் அளவுக்கு மனம் வெறுத்துப் போய் மாறி விட்டனர். இதைக் கண்ட அந்த அரங்கவாசிக்குத் தன் நிலைமை கண்டு வேதனை ஏற்பட்டது.  ஆனால் அவனைக் கண்டு தப்பி ஓடியவர்கள் அரங்கன் ஒளிந்திருந்த இடம் சென்று டில்லி ஒற்றன் தங்களைத் தேடி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உலகாரியரின் உடல்நிலை இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டு கருத்துச் சொல்லும்படியாக இல்லை.

அங்கிருந்த வேறொரு முதியவர் பார்த்துச் சொன்னதும் அனைவரும் அப்போது ராகுகாலமாக இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்று அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பினர். ஒரே ஓட்டமாக ஓடினார்கள். அவர்கள் நடக்க அவர்கள் சென்ற பாதை சுருங்கிக் கொண்டே வந்தது. ஓர் இடத்தில் ஶ்ரீபாதம் தாங்கி ஒருவன் மயங்கி விழ அனைவரும் அரங்கனின் பல்லக்குக் கவிழாமல் பாதுகாத்துக் கீழே இறக்கிவிட்டு ஶ்ரீபாதம் தாங்கிக்கு மயக்கம் தெளிவித்தார்கள். ஆனால் பல நாட்கள் உணவில்லாமல் இருந்த அவனுக்கு மயக்கம் தெளிந்தாலும் முன்போல் நடமாட முடியவில்லை.  உலகாரியரிடம் கேட்டுக் கொண்டு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றால் அது வேட்டுவரின் கிராமமாக இருந்தது. அங்கிருந்து வேறிடம் செல்லலாம் என அனைவரும் முயன்றால் சிலரால் எழுந்து நடமாடவே முடியவில்லை. ஒரு வாய்த் தண்ணீராவது வேண்டும் என்று பலரும் அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் படுத்து விட்டனர்.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் பலரும் அரங்கனுக்கும் அமுது படைக்க முடியாமல் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையிலிருந்து மீள்வது எப்படி என்று கலங்கினார்கள். உலகாரியர் இது அரங்கன் நமக்கு வைத்திருக்கும் சோதனை என்றும் பசி, களைப்பு எல்லாம் நம் போன்ற சாமானியர்களுக்குத் தான் என்றும் அரங்கனுக்கு இல்லை என்றும் தெளிவூட்டினார். இத்தகைய சோதனைகள் மூலம் நம் பக்தி புடம் போடப்படுவதாகவும் உலகாரியர் கூறினார். உணவைத் தேடிச் சென்ற மக்கள் அங்கிருந்த வேட்டுவர் தலைவனிடம் நடந்ததை நடந்தபடியே கூறி உதவி கேட்டான். தானியங்களும் தண்ணீரும் கொடுத்து உதவும்படி கேட்டார்கள். நடந்ததைக் கேட்டறிந்த வேட்டுவர் தலைவன் குடியிருப்பில் இருந்த புல்லரிசி, தினை மாவு, தேன், பனங்கிழங்குகள், காட்டுக் கிழங்குகள், பழங்கள் என்று சேகரித்துக் கொண்டு அவர்களுடன் சென்றான்.

பின்னர் அரங்கனின் பல்லக்கின் எதிரே நின்று கொண்டு அனைவரும் அவர்கள் பாணியில் ஒரு நடனம் செய்து அரங்கனுக்கு அஞ்சலி செய்தனர். வேட்டுவர் குடியிருப்பின் ஊருணிக்கிணற்றிலிருந்து குடிநீரும், குடியிருப்புகளிலிருந்து காய்ச்சிய பாலும் வந்தது. அந்தப் பாலில் கொஞ்சம் போல் ஶ்ரீபாதம் தாங்கிக் கொடுத்தால் நீண்ட நாட்கள் உணவுண்ணாமல் இருந்த காரணத்தாலோ என்னமோ அவரால் அதைக் குடிக்க முடியவில்லை. கொஞ்சம் போல் குடித்தவர் பின்னர் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் மூச்சு குறுக அப்படியே கிடந்தார்.

அந்தச் சமயம் அங்கே இருந்த பலருக்குள்ளாகவும் தில்லி ஒற்றன் என்று நினைத்தவன் பெரிய வீரனாக இருந்ததால் அவனுடைய பாதுகாப்பு தங்களுக்கு வேண்டும் என்றும், உண்மையில் அவன் அரங்கவாசி என்றும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த வீரனுடன் நண்பனாக இருந்த இன்னொருவனோ அவன் அரங்க வாசி தான் ஆனால் இப்போது ஒற்றனாக மாறிவிட்டான் என்றும் அவன் தங்களுடன் சேரக் கூடாது என்றும் அரங்கனை தில்லிக்காரர்களிடம் காட்டிக் கொடுத்துவிடுவான் என்றும் கடுமையாக மறுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே ஒரு பெரிய படை வீரர்கள் குதிரைகளில் வரும் மாபெரும் சப்தம் அலை ஓசை போல் கேட்டது. அனைவர் நெஞ்சமும் தடக் தடக் என்று அடித்துக் கொண்டது.

Thursday, May 19, 2016

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! சுரதானியின் பக்தி!

அழகிய மணவாளர் விக்ரஹம் இருக்குமிடம் தெரிந்து கொண்ட அந்தப் பெண்மணி மீண்டும் நெடுந்தூரம் பயணம் செய்து தில்லியில் இருந்து ஶ்ரீரங்கம் வந்தடைந்தாள். திருவரங்கம் வந்ததும் கோயில் ஊழியர்களைக் கூட்டி அவர்களிடம் அழகிய மணவாளரின் இருப்பிடத்தைக் குறித்துக் கூறினாள். அவரை எப்பாடு பட்டேனும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். அனைவரும் சம்மதித்துப் பாடத்தெரிந்த சிலரும், ஆடத்தெரிந்த சிலரும் ஒன்று கூடினார்கள். சுமார் அறுபது பேர்களை ஆடல், பாடல்களில் தேர்ந்தவர்களாகக் கண்டு எடுத்து அனைவரும் மீண்டும் தில்லி நோக்கிப் பயணித்தார்கள்.

அவர்கள் அனைவரும் உசேன் கசன்பி பாதுஷாவின் மாளிகைக்குச் சென்று பாதுஷா மனம் மகிழும் வண்ணம் ஆடல், பாடல்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். மனம்மகிழ்ந்த பாதுஷா அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை மனம் நிறையும் வண்ணம் கொடுப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட அவர்கள் தங்களுக்கு இந்த விலை மதிக்கக் கூடிய தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், ஆடை, ஆபரணங்கள் தேவையில்லை என்றும் விலை மதிக்க முடியாத வேறொரு பரிசு பாதுஷாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அது அவர்களைச் சேர்ந்தது தான் என்றும், படையெடுப்பின் போது இங்கே வந்து விட்டது என்றும் அதைத் திரும்பக் கொடுத்தால் போதும் என்றும் இறைஞ்சினார்கள். அப்படிப் பட்ட பரிசு என்ன என்று பாதுஷா கேட்டதற்குத் திருவரங்கன் சிலை தான் என்றனர்.

அதைக் கேட்ட பாதுஷா அந்தச் சிலையில் அப்படி என்ன இருக்கிறது? அதைப் போய்க் கேட்கிறீர்களே என்று சொல்லிவிட்டு அந்தச் சிலை அந்தப்புரத்தில் அவன் மகள் விளையாடுவதற்கு எடுத்துப் போயிருப்பதாகவும் அவளிடமிருந்து அதை எடுத்துக் கொள்ளுமாறும் கூறினான்.  சந்தோஷம் அடைந்த நாட்டியராணிகள் அந்தப்புரம் சென்று சுரதானியிடம் விக்ரஹத்தைக் கேட்டு வாங்கச் சென்றார்கள். அங்கே சென்றால் விக்ரஹம் சர்வாலங்கார பூஷிதராக அலங்கரிக்கப் பட்டுச் சுரதானி அதன் எதிரே மெய்ம்மறந்து தன்னையும் இவ்வுலகையும் மறந்து அமர்ந்திருந்தாள்.  அவள் முகமே தெய்விகமாகக் காட்சி அளித்தது. இதைக் கண்ட நாட்டியப் பெண்கள் எப்படி எடுத்துச் செல்வது என்று பயந்து போனார்கள். இந்த அழகிய மணவாளர் தன் அழகால் இந்தத் துலுக்கப் பெண்ணையும் தன் வசப்படுத்தி விட்டாரே எனப் பேசிக் கொண்டார்கள். பின்னர் சாதாரணமாகக் கேட்டால் இவள் தரமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டு சுரதானியிடம் மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்தார்கள்.

பின்னர் அவளுக்குப் பிரசாதம் கொடுப்பதாக நடித்து அந்தப் பிரசாதத்தில் மயக்க மருந்தைக்கலந்து கொடுத்துவிட்டார்கள். அதை உண்ட சுரதானியும் மயக்கத்தில் ஆழ்ந்து போக விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு அரங்கம் திரும்பினார்கள் நாட்டியராணிகள். ஆனால் இங்கே மயக்கம் தெளிந்து எழுந்த சுரதானியோ விக்ரஹத்தைக் காணாமல் கலக்கம் அடைந்தாள். அழுது புலம்பினாள். அது இல்லாமல் தான் உயிர் வாழ மாட்டேன் என்று தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் முயன்றாள். பாதுஷாவுக்குச் செய்தி போக தன் மகளின் இந்த அதீதக் காதல் அவனை ஆச்சரியப் படுத்தியது.  மகளின் பாசத்தின் ஆழத்தைக் கண்ட அவன் உடனே சிறு படை ஒன்றைத் தயார் செய்து விக்ரஹத்தைத் தூக்கிச் சென்றவர்களைப் பின் தொடருமாறு பணித்தான். சுரதானி தில்லியில் இருக்க மனமின்றித் தானும் அந்தப் படையோடு சென்றாள்.

தில்லி சுல்தான் தங்களைத் தொடருவது கண்டு அந்தப் பாடகர்களின் குழு ஶ்ரீரங்கத்திற்குச் செல்லாமல் வழியிலேயே திருமலைக்குத் திரும்பி விட்டது. அங்கே அழகிய மணவாளரை ஒளித்து வைத்தார்கள். விக்ரஹத்தைத் தேடித் திருவரங்கம் வந்த சுரதானி அங்கே அது இல்லாமல் சோகம் மிகுதியாகத் தன் உயிரை விட்டு விட்டாள். இதை அறிந்த கோயில் ஊழியர்கள் கோயிலின் கர்பகிரஹத்துக்கு எதிரே இருக்கும் அர்ஜுன மண்டபத்தில் இவளுக்காகத் தனி சந்நிதி ஏற்படுத்தினார்கள். இஸ்லாமியர் வழக்கப்படி விக்ரஹ ஆராதனை கூடாது என்பதால் இங்கே துலுக்க நாச்சியார் என்னும் பெயரில் சுரதானிக்கு வண்ணச் சித்திரமே காணப்படுகிறது. அகிலும், சந்தனமும் கலந்த தூபம் போடுவார்கள் இவருக்கு. இவருக்கு அரங்கநாதர் கைலி அணிந்தே காட்சி கொடுத்து அருளுவார்.  நிவேதனமும் சப்பாத்தி, பால், வெண்ணெய் என்று அளிப்பதாகக் கூறுகின்றனர்.

அநேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இப்படி ஒரு துலுக்க நாச்சியார் சந்நிதி இருக்கிறது. இதைப் போலவே கர்நாடகா மேல்கோட்டையில் செல்வப் பிள்ளையும், அழகர் கோயிலில் கள்ளழகரும் துலுக்க நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

Sunday, May 08, 2016

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! சுரதானியின் பக்தி!

அம்சகலா விரும்பிய வண்ணம் நிறைவேற்ற சிங்கப்பிரான் மிகவும் கஷ்டப்பட்டார். திருமடப்பள்ளிக்குச் சென்று அங்கு அடுப்பினருகே சிந்திக்கிடந்த அரிசிகளைத் திரட்டி அம்சகலாவுக்கு வாய்க்கரிசி போட பத்திரப்படுத்தினார்.  அந்த அடுப்பிலிருந்தே இரண்டு எரியும் கட்டைகளையும் எடுத்துக் கொண்டார். அரங்கனின் துணிகளைத் துவைக்கும் ஈரங்கொல்லிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களிடம் பெருமாளின் பரிவட்டம் இருக்கிறதா எனத் தேடிப்பார்த்துக் கிடைத்த பழைய பரிவட்டத்தை எடுத்துக் கொண்டார். இனி மாலை ஒன்று தான் தேவை. அதற்கும் ஓர் வழி கண்டு பிடித்த சிங்கப்பிரான் அருகிலுள்ள சோழங்கநல்லூரில் குடி கொண்டிருந்த ஆநிரை மேய்த்த பெருமானுக்குச் சூட்டப்பட்டிருந்த மாலைகளில் ஒன்றை வேண்டிப் பெற்றார். பின்னர் எல்லாவற்றையும் பயன்படுத்தி அம்சகலாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார்.  அதன் பின்னர் இந்த உயிர்த் தியாகம் குறித்துத் திருவரங்கம் கோயிலின் அதிகாரிகள் திருவரங்கம் மீண்டும் உன்னதம் அடைந்த பின்னர் அம்சகலாவின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைத்ததாகவும், அதன் பின்னர் கோயிலைச் சார்ந்த எந்த தேவதாசி இறந்தாலும் இத்தகைய மரியாதைகளை அளித்து வந்ததாகவும் தெரிகிறது. இது பல வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இப்போது இல்லை.

இங்கே அரங்கனோடு சென்றவர்கள் ஊர்ப்பக்கம் சென்று அரங்கனின் நிவேதனத்துக்கும் மற்றும் பரிஜனங்களுக்கும் மற்றவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வாங்கி வந்தனர்.  அதன் பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது தில்லி சுல்தானின் ஆள் ஒருவன் அவர்களைத் தொடருவதாக நினைத்துக் கொண்டு அவனைத் தனிமையில் சென்று ஓரிருவர் சந்தித்தார்கள்.  தில்லி சுல்தானின் ஆளை மரத்திலிருந்து பறித்த மிளாறுகளால் அடித்து வீழ்த்தினார்கள்.  ஆனால் அவனுக்குத் திருவரங்கன் மேல் இருந்த அளவு கடந்த அன்பைப் பார்த்து அவனைக் குறித்துக் கேட்டார்கள். அவன் தான் 27 வருடஙக்ளுக்கு முன்னர் மாலிக்காபூர் தலைமையில் நடந்த யுத்தத்தின் போது அவனால் சிறைப்பிடிக்கப்பட்டு தில்லி சென்று மதம் மாற்றப்பட்டதாகத் தெரிவித்தான். அப்போது தான் முதல் முதல் அரங்கனைக் குறித்து அறிந்ததாகவும் தெரிவித்தான்.

மாலிக்காபூர் தென்னாட்டை முற்றுகையிட்டுத் திரும்பும்போது கணக்கற்ற செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்றான். பொன் மட்டுமே 9000 மணங்கு என்று கணக்குச் சொல்கின்றனர்.  அவற்றை அவன் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். அப்போது தான் இவை தவிர திருவரங்கக் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரங்கநாதனின் அழகிய மணவாளன் என்னும் பெயர் கொண்ட அர்ச்சாவதார விக்ரஹமும் ஒன்று இருந்தது. அந்த விக்ரஹம் அப்துல்லா உசேன் என்னும் பாதுஷாவிடம் கிடைத்தது. அவன் மகளான சுரதானி தந்தைக்குக் கிடைத்த பரிசில்களை எல்லாம் பார்த்தவளுக்கு இந்த அரங்கநாதனின் விக்ரஹத்தின் அழகு கண்ணையும், மனதையும் கவர அந்தத் திருவரங்கன் விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமென்று கெட்டுப் பெற்றுக் கொண்டாள். அந்த விக்ரஹத்தின் பேரில் அசாத்திய பிரேமையும் கொண்ட அவள் ஒரு தெய்விகமான மனோநிலைக்கு ஆட்பட்டாள்.

அதற்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து அதன் முன்பாக தன்னை மறந்த நிலையில் பலமணிநேரம் அமர்ந்திருப்பது அவளுக்கு வாடிக்கை. அதை ஒரு கணமேனும் பிரியாமல் பாதுகாத்து வந்தாள். இங்கே திருவரங்கத்திலோ அடியார்களுக்கு அழகிய மணவாளப் பெருமான் இல்லாமல் அவரைப் பார்க்காமல் ஒரு நாள் கழிவதே பெரிய விஷயமாக இருந்து வந்தது. அதிலும் திருக்கரம்பனூரில் இருந்த அடியாள் ஒருத்தி எம்பெருமானைப் பார்க்காமல் உணவே அருந்த மாட்டாள். அவள் விக்ரஹம் கொள்ளை அடிக்கப்பட்டதும் தில்லிக்குப் போய்விட்டதையும் அறிந்து கொண்டு அது போன வழியே தானும் பிரயாணப்பட்டாள். பல மதங்கள் பயணம் செய்து அவள் தில்லியை அடைந்தாள். விக்ரஹம் சுரதானியிடம் இருப்பதை அறிந்து கொண்டாள்.