எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 24, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 3


கோயில் பெரிய கோயில், பெருமாள் பெத்த பெருமாள்,  தாயாரும் பெரிய தாயார், ஊரும் பெரிய ஊர், தளிகை பெரிய தளிகை, வாத்யம் பெரிய வாத்யம், மற்றும் பலகாரங்கள் எல்லாமும் நிவேதனத்துக்குப் பெரியவையாகவே தயாரிக்கப்படும்.  இப்படி எல்லாவற்றிலும் இந்தக் கோயில் பெரிதாகவே உள்ளது.  ஸ்ரீரங்கத்தை மதுரகவி ஆழ்வார் தவிர்த்து மற்ற எல்லா ஆழ்வார்களும் பாடி இருக்கின்றனர்.  ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பு சுமார் 156 ஏக்கர் ஆகும்.  பங்குனி மாதம், வளர்பிறை சப்தமி திதியில், சனிக்கிழமை, சந்திரன் ரோஹிணியிலும், குரு ரேவதியிலும் இருக்கையில் ஸ்ரீரங்கநாதர் இங்கே வந்து சேர்ந்ததாகக் கூறுகின்றனர்.   வலக்கையைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு திருமுடியைத் தாங்க, முதுகுப் பக்கம் வடக்கு நோக்கி இருக்க, இடக்கையால் திருவடியைச் சுட்டிய வண்ணம் தெற்கு நோக்கு திருமுக மண்டலத்தை வைத்துக்கொண்டு நேராக இலங்கையைப் பார்த்த வண்ணம் பள்ளி கொண்டிருக்கிறார், ஸ்ரீரங்கநாதப் பெருமான்.   இதைத் தொண்டரடிப்பொடியாழ்வார்,

குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கிக்
கடல்நிறக்கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ!  என் செய்கேன் உலகத்தீரே!

மேலும்

கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே             (23)
என்கிறார்.

இந்த ரங்கநாதர் முழுக்க முழுக்கச் சுதையில் ஆனவர்.  ஆகவே இவருக்குத் திருமஞ்சனம் என்றஅபிஷேஹங்கள் கிடையாது.  தினமும் கொள்ளிடம் எனப்படும் வடகாவிரி நீரில் நம்பெருமாள் எனப்படும் உற்சவரான அர்ச்சாமூர்த்திக்கே அபிஷேஹங்கள் நடைபெறுகின்றனர்.  தொன்று தொட்டுக் கைங்கரியம் செய்யும் பட்டாசாரியார்கள் ஸ்ரீரங்கநாதரின் சுதை உருவச் சிலாரூபத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர் . எப்படி எனில் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தன்று, தெற்கே காவிரியில் இருந்து நீர் எடுத்துப் போய் நம்பெருமாளுக்கு அபிஷேஹம் ஆகும்.   அப்போது சிலா உருவில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் ஆடைகள், ஆபரணங்கள் களையப்பட்டு, பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ,  போன்ற வாசனாதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, மூலிகைகளின் சாறுகள் சேர்க்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கப்  பட்டு இந்த எண்ணையை ஸ்ரீரங்கநாதருக்கு தாராளமாகக் காப்பிட்டு விடுவார்கள்.  திருமுக மண்டலத்தை விடுத்து மற்ற பாகங்களைப் பட்டுத் துணியால் மூடி விடுவார்கள்.  இந்த எண்ணெய்க்காப்பிலேயே பெருமாள் ஒரு மண்டலம் எனப்படும் நாற்பத்தைந்து நாட்கள் இருப்பார்கள் என ஒரு சாராரும், தீபாவளி வரை என இன்னொரு சாராரும் கூறுகின்றனர்.  எப்படி இருந்தாலும் எண்ணெய்க் காப்பிட்டு சுதை உருவில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் சிலா உருவைக்  காப்பாற்றி வருவது என்னவோ உண்மை.  அந்தச் சமயம் உற்சவ மூர்த்தியின் உடலிலும் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு குறைகள், நிவர்த்தி செய்யப்படும்.  பின்னர் நான்கு நாட்கள் கழித்து இதே போல் தாயாருக்கும் செய்யப்படும்.


ஸ்ரீரங்க விமானம்: இந்த விமானம் ஆதியில் தானாகவே உருவானது என்கின்றனர்.  இது பொன்னால் வேயப்பட்டு “ௐ” என்னும் பிரணவ வடிவில் உள்ளது.  இந்த விமானத்தில் உள்ள பரவாசுதேவர் கையில் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார்.  அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், கிண்ணம் வாயருகில் சென்று சேர்ந்து கிண்ணத்தில் உள்ளதைப் பர வாசுதேவர் குடிக்கிறாப் போல் ஆனால் உலகம் அழியும் எனச் சொல்வார்கள்.  இது சிறு வயதில் கேட்டது.  ஸ்ரீரங்க விமானத்தின் வெளியே விக்னேஸ்வரர் நின்று காவல் புரிவதாகவும், கீழ்ப்பக்கம் மஹாவிஷ்ணுவின் யோக மாயை ஆன துர்கை இருப்பதாகவும் கூறுகின்றனர்.  அவசரம் அவசரமாப் போங்க, போங்கனு சொல்லுவதால் இவற்றை எல்லாம் நிதானமாய்ப் பார்க்க முடிவதில்லை. L ஸ்ரீரங்க விமானத்துக்குள்ளே ஆதிசேஷன் மேல் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டிருக்கிறார்.  மேலும் ஸ்ரீரங்கவிமானத்தினுள், சப்த ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், அனைத்து தேவர்களும், த்வாதச ஆதித்யர்களும், நவக்ரஹங்களும் இருக்கின்றனர்.   மேலும் தன்னுடைய இந்த ரூபத்தைக்குறித்து பகவான், தான் இங்கே “த்ரிதாமன்” ஆக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  பகவான் மூன்றே மூன்று இடங்களில் தாம் “த்ரிதாமன்” ஆக இருப்பதாகவும் அவற்றில் இது முதன்மையானது எனவும் கூறப்படுகிறது.  இந்த மூன்று இடங்களிலும் தனது சுயரூபத்தோடு இருப்பதால் த்ரிதாமன் எனப்படுவதாகக் கூறுகின்றனர்.


மேலும் ஸ்ரீரங்க க்ஷேத்திரம் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படுகிறது.  மனிதராலோ, தேவர்களாலோ, ரிஷி, முனிவர்களாலோ நிர்மாணிக்கப் படாமல் தானாகவே உண்டான க்ஷேத்திரங்கள் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படும்.  அவை ஸ்ரீரங்கத்தைச் சேர்த்து எட்டு ஆகும்.

1.ஸ்ரீரங்கம்,
2.ஸ்ரீமுஷ்ணம்
3.திருமலை
4.சாளக்ராம மலை
5.நைமிசாரண்யம்
6.தோதாத்ரி
7.புஷ்கர க்ஷேத்ரம்
8.பத்ரிநாதம்


இவற்றில் முதன்மையானதும் ஸ்ரீரங்கமே.  108 திவ்ய ஸ்தலங்களில் முக்கியமானதும், முதன்மையானதுவும் ஸ்ரீரங்கமே.  தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட க்ஷேத்திரங்களுக்கு திவ்ய க்ஷேத்திரங்கள் என்றும், ரிஷி, முனிவர்கள், போன்றோர் தங்கள் சித்தியால் ஏற்படுத்தும் க்ஷேத்திரங்களுக்கு “ஸைந்தம்” என்றும், மனிதர்களால் நிர்மாணிக்கப்படும் கோயில்களை “மாநுஷம்” என்றும் கூறுவார்கள்.  இப்படி ஸ்வயம்வ்யக்தம், தைவிகம், ஸைந்தம், மாநுஷம் என்னும் நால்வகையான நிர்மாணம் செய்யப்பட்ட கோயில்களே நூற்றெட்டு திருப்பதிகளில் அடங்குகிறது.  ஆதியில் ஸ்ரீரங்க நாதரை வழிபடும் முறையை பிரம்மாவுக்கு ஸ்ரீரங்கநாதரே சொல்லிக் கொடுத்தார் என்று ஸ்ரீரங்க மஹாத்மியம் கூறுகிறது.  பாஞ்சராத்ர முறைப்படி வழிபடச் சொன்னதாகவும் ஒரு நாளை ஐந்து காலமாகப் பிரித்துக்கொண்டு வழிபாடுகளை நடத்தச் சொன்னதாகவும், நித்யகர்மாக்களுக்கும், அநுஷ்டானங்களுக்கும்  பின்னரே தனது அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கவேண்டும் எனவும் கூறியதாகத் தெரிய வருகிறது.  பிரமனும் அவ்வாறே பாஞ்சராத்ர முறைப்படி வழிபட்டதாகவும், பின்னர் ஐந்து ருத்ரர்கள், பிரம்ம ரிஷிகள்,ஸ்வயாம்புவ மநு, தக்ஷப்ரஜாபதி தேவர்கள் என அனைவருக்கும், த்வாதச அக்ஷர உபதேசம் செய்து இந்தப் பூஜாமுறையை அறிமுகப் படுத்தி வைத்ததாகவும், பிரமனாலும் ஒரு முறை ஸ்ரீரங்கநாதர் தோன்றிய முறை விவரிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. பின்னர் பிரம்மா சூரியனுக்கும் இந்த வழிபாட்டு முறையைச் சொல்லிக் கொடுக்க, சூரியன் தன் மகனான வைவஸ்வத மநுவுக்குச் சொல்ல, அவனிடம் இருந்து வைவஸ்வத மநுவின் புத்திரன் இக்ஷ்வாகுவுக்குப் போய் அவர்களின் குல தனம் ஆயிற்று.  பின்னர் ஸ்ரீரங்கநாதர் விமானத்தோடேயே காவிரிக்கரைக்கு வந்த வரலாற்றைப் பார்த்தோம். 

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீரங்கம் பற்றி சிறப்பான நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் பெருமாளைப் பற்றி முழுமையான தகவல்கள்...
பெருமாளைப் பற்றியும், வழிபாடு நடக்கும் முறையையும் மற்றும் பலவற்றையும் அருமையாக சொல்லி உள்ளீர்கள்... மிக்க நன்றி !

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

வல்லிசிம்ஹன் said...

ஆரமபமாயாச்சா:)
இனி சந்தோஷம்தான்.
எத்தனை தகவல்கள்.
இப்பதன் திருச்சிரா மலையைப் பற்றி படித்து முடித்தேன்.
விபீஷணன் விமானத்தைக் கையில் கொடுக்கக் கீழே வைத்துவிட்டதால் குட்டுப்பட்ட பிள்ளையார் என்று இந்தத் தகவல் சொல்கிறது.
பாவம். பிள்ளையாரை யார்வது குட்ட முடியுமா!

ஸ்ரீராம். said...

அற்புதமான தகவல்களுடன் ஆதியிலிருந்து எழுதுகிறீர்கள். படிப்பதோடு மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்! மதுரகவி ஆழ்வார் மட்டும் பாடாததற்கு குறிப்பாக ஏதும் காரணம் உண்டா? அந்தக் காலத்தில் இந்நாள் போல கோவிலுக்கு வருவோரிடம் ஆர்ப்பாட்டங்கள் கெடுபிடிகள் இருந்திருக்காது. மக்கள் தொகையும் குறைவாகவே இருந்திருக்கும். அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் அழகை நாளெல்லாம் பார்த்து கவி பாட முடிந்தது. நேரமும் இருந்தது! இந்நாளில் அவரைப் பார்க்கவே நேரம் கொடுக்காமல் துரத்தும்போது அங்கே உள்ளே என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன என்று எப்படிப் பார்ப்பது? 'சுதை' என்றால் என்ன? ஸ்வயம்வ்யக்தம், தைவிகம், ஸைந்தம், மாநுஷம் என்னும் நால்வகையான நிர்மாணம் என்றெல்லாம் தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடருங்கள்.

Geetha Sambasivam said...

வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

தொடர்ந்து வருவதற்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே. உங்கள் பதிவுக்கும் வந்து பார்த்தேன். நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, உச்சிப்பிள்ளையார் தலை இன்னும் பள்ளமாக இருக்காக்கும். அவர் பிள்ளையாரா விபீஷணன் எதிர்க்க வரலையே? பிராமணப்பையனாகத் தானே வந்தார்? அதனால் விபீஷணன் குட்டிட்டார். :))))))

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், எடுத்துக்கொண்ட வேலை நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலையும் வந்து விட்டது. :))))

சுதை வேலைப்பாடு என்பது சிற்பங்களைக் கல்லில் வடிக்காமல் செங்கல், சுண்ணாம்புச் சாந்து கலந்து செய்வது. இவற்றிற்கு அபிஷேஹங்கள் செய்ய முடியாது. பெரும்பாலான மாரியம்மன் சிலைகள் சுதை வேலைப்பாடுகளே. கோபுரங்களில் இருக்கும் சிலைகள் சுதை வேலைப்பாடுகளே.

Subhashini said...

Geetha mami, You are explaining very clearly. I am reading all your posts. I need to read your Chidambara ragasiyam also.. may be later...