எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, September 03, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்--திருக்கோயில் வழிபாட்டு முறைகள்--பகுதி 8

இதைத் தவிரவும் சரக்கறைத் தலைவர் கோயிலுக்குச் சேர்ந்த பசுக்களைத் தலைமை இடையன் முன்னிலையில் பால் கறப்பது, கறந்த பாலை ஒப்படைத்தல் போன்றவற்றோடு கோயிலுக்கு அளிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், புறாக்கள், பசுக்கள், மான்கள், மயில்கள், கிளிகள் ஆகியவற்றையும் ஒழுங்காகப் பராமரிக்கிறார்களா என்று கண்காணிப்பார். மாட்டுத் தொழுவங்கள் பல இருந்தன.  ஒவ்வொரு தொழுவமும் ஒவ்வொரு இடையன் தலைமையில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு இருவேளைகள் இடையர்களின் மேற்பார்வையில் பால் கறக்கப்பட்டுக் கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இவர்களிலேயே கோயில் கண்காளிப்பாளர் ஒருத்தரும் இருந்தார். அவர் திருமதில்கள், கோயில் கோபுரங்கள் ஆகியவற்றின் மேல் வளர்கின்ற செடிகள், மரங்கள், புல்லுருவிகள் ஆகியவற்றை நாள்தோறும் அகற்றுவதற்கு ஆட்களை நியமித்து வேலை வாங்குவார். கட்டிடங்களைப் பழுது பார்ப்பார்.  புதிய கட்டிடங்கள் தேவைப்பட்டால் ஆட்களை நியமித்துக் கட்டிக் கொடுப்பார்.  மற்ற அலங்கார வேலைகளான திரைச்சீலைகள், தொங்கல்கள், தோரணங்கள் ஆகியவற்றை அழகாய் அமைக்கத் திட்டங்கள் செய்து, நித்திய, நைமித்திகத் திருவிழாக் காலங்களில் பந்தல்கள் அமைத்து, அவற்றை அழுகு படுத்துவார்.  இவருக்குத் தனியாக இரண்டு ஏகாங்கிகள் உண்டு.

பூந்தோட்டங்களைக் கவனித்துக்கொள்ளவும், பருவகாலத்துக்கு ஏற்ப மலர்ச்செடிகளை நட்டுப் பயிராக்கவும்  அவற்றைப் பாதுகாக்கவும் தனியாகக் கண்காளிப்பாளர் இருப்பார்.  இவர் இதோடு கூட கோயிலுக்குத் தேவையான காய்கறிகள், கரும்பு போன்ற சாறுள்ள பயிர்கள் ஆகியவற்றையும் பயிர் செய்து தேவையான காய்களைத் திருமடைப்பள்ளிக்குச் சேர்ப்பிப்பார்.  சரக்கு அறைகளில் பொருட்கள் திருட்டுப் போகாமல் பாதுகாப்பதும், திருட்டுப்போனால் அவற்றைக் கண்டறிந்து உரிய தண்டனை கொடுப்பதும் இவர் பொறுப்பாகும்.

கோயிலைச் சார்ந்த நிலங்களுக்குத் தனியான கண்காணிப்பாளர் உண்டு. பருவ காலங்களுக்கு ஏற்றாற்போல் விதை விதைத்தல், பயிர் செய்தல், விளைந்தவற்றைத் தொகுத்துத் திரட்டி சரக்கு அறைகளில் உரிய இடத்தில் சேர்ப்பித்தல், கோயிலைச் சார்ந்த கிராமங்களில் இருந்து கோயிலுக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுத்தல், கோயிலைச் சார்ந்த மருத்துவமனையைக் கண்காணிக்க ஆட்களை நியமித்தல், மருத்துவமனை நன்கு நடைபெறுகிறதா என மேற்பார்வையிடுதல் ஆகியவை இவர் பணி.  இந்த மருத்துவ மனை கோயிலுக்கு உள்ளே இருந்ததாகவும், கிராமம் ஒன்றை அந்த மருத்துவமனையின் செலவுகளுக்காக வழங்கப் பெற்றிருந்ததாகவும் அறிய வருகிறோம். மருத்துவமனை சிறப்பாக நடைபெற்றதாகவும், கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.  இடையில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பினால் இது நலிவுற்றுப் பின்னர் கி.பி. 1493 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் தொடங்கியது எனக் கோயில் ஒழுகு சொல்கிறது.

இது வரை சொன்னவை எல்லாம் ஶ்ரீராமாநுஜரால் கோயிலில் சீரமைக்கப்பட்ட நிர்வாகங்களின் நடைமுறைகள் என்றும் கோயில் ஒழுகு சொல்கிறது.  ஆனால் இந்த நிர்வாகமும், சீரமைப்பும், சமயத் தலைவர்களின் பொறுப்பிலேயே கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்து வந்ததாகவும் சோழ அரசர்களோ, பாண்டிய அரசர்களோ இவற்றில் குறுக்கிடாமல் சிறிதும் மாற்றாமல் அதன் பாதுகாவலர்களாக மட்டும் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.  ஆனால் பின்னர் 1311, 1323 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பின் பின்னர் இவற்றில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்பட்டன.  அவற்றைத் திருவரங்கன் ஆகிய நம்பெருமாள் அரங்கத்துக்  கோயிலை விட்டுச் சென்ற உலாவில் இருந்து மீண்டும்  பார்க்கலாம். 

2 comments:

ஸ்ரீராம். said...

இத்தனை வேலைகளும் இப்போது நடக்கிறதா? இத்தனை பேர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்களா?

Geetha Sambasivam said...

இப்போவும் திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றன.கோயிலிலேயே நந்தவனம், மடைப்பள்ளி எல்லாம் உண்டு. மற்ற வேலைகளும் உண்டு. ஆனால் கோயிலுக்கென நிலங்கள் தான் இல்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருப்பதாக பாவனையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது குறித்து விரிவாகப் பின்னர் வரும். :)))