எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 24, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! படை துரத்தியது!

மெல்ல மெல்ல முன்னேறிவிட்டோம் என நினைத்த குலசேகரனும்  மற்றப் பயணிகளும் ஆசுவாசப்பெருமூச்சு விடும் முன்னரே நான்காவது நாழிகையிலேயே மூன்றாவது தில்லி வீரர்கள் அடங்கிய பாதுகாப்புப் படை ஒன்று எதிரே ரோந்து சுற்றுக் கொண்டிருந்தது. பல்லக்கு ஊர்வலத்தைப் பார்வை இட்ட அவர்கள் கொஞ்சம் சந்தேகத்துடனேயே அவர்களை நிறுத்தினார்கள். தில்லி வீரர்கள் மொத்தம் ஐம்பது பேருக்குள் இருக்கலாம். கொஞ்சம் கலக்கத்துடனேயே பல்லக்குகள் நிறுத்தப்பட்டு இலச்சினைகளும், முத்திரைகளும் காட்டப்பட்டு தலைவன் அனுமதியும் கொடுத்துவிட்டான். அவசரம் அவசரமாகப் பல்லக்குத் தூக்கிகள் பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு நடக்க யத்தனிக்கையில் ஒரு பல்லக்குத் தூக்கியின் கால் முன்னால் சென்ற பல்லக்குத் தூக்கியின் கால்களில் பட்டு இடறிவிடப் பல்லக்குத் தூக்கிகளால் சமாளிக்க முடியாமல் பல்லக்குகீழே விழுந்தது.

உள்ளிருந்த பெண் ஒருத்தியும் அதனோடு சேர்ந்து விழுந்தாள். வெளிறிப் போய் மிக ஒல்லியாகக் காட்சி அளித்த அவளைக் கண்ட தில்லி வீரர்கள் இவள் ஹொய்சளப் பரிசனங்களுடன் வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் இதில் ஏதோ சூது இருக்கிறது என்றும் கண்டு கொண்டனர். ஒருவருக்கொருவர் கண் ஜாடை காட்டிக் கொண்டனர். எல்லாவற்றையும் மோசமாக்குவது போல் அந்தப் பெண்ணுடன் உள்ளே இருந்த மூட்டை ஒன்றும் கீழே விழுந்து வைக்க அதிலிருந்த இருவாள்கள் கீழே விழுந்து, "ஜணஜண" என்ற ஒலியை எழுப்பின. அந்தக் காலை வேளையில் அந்தச் சப்தம் ஏதோ இடி இடித்தாற்போல் இருந்தது பல்லக்கு ஊர்வலத்தாருக்கு! என்ன செய்வது, என்ன சொல்வது எனப் புரியாமல் விழித்தார்கள். ஆனால் தலைவனுக்குச் சந்தேகம் மேலிட்டது.

ஆகவே ஒவ்வொரு பல்லக்கின் அருகிலும் போய்ப் பல்லக்குத் திரையைத் தன் வாளால் விலக்கிப் பார்த்தான். ஒவ்வொரு பல்லக்கிலும் இம்மாதிரி வெளிறிப் போய் ஒல்லியாகக் காட்சி அளிக்கும் பெண்களும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஓர் மூட்டையும் அதன் நிறையப் போர் ஆயுதங்களையும் கண்டனர். ஆனாலும் அந்தத் தலைவன், குலசேகரனிடம்,
"உங்கள் ஹொய்சள நாட்டில் பெண்களுக்கு முக்கியமாய்ச் சேடிகளுக்கு உணவு அளிக்கும் பழக்கமே இல்லையா?" என்று கேட்டான். குலசேகரன் பதில் சொல்லும் முன்னர் அவனுடன் வந்த துணைத் தலைவன் இதில் ஏதோ சூது இருப்பதாய்த் தான் நம்புவதாய்க் கூறினான். தலைவன் மேலும் யோசிக்கையில் அந்தப் பல்லக்குகளில் இருந்த மூட்டைகளை துணைத் தலைவன் மெல்லத் தட்டவே ஆயுதங்களின் பேரொலியோடு அது கீழே சரிந்து விழுந்தது.  தலைவன் உடனே குலசேகரனைப் பார்த்து இது என்னவெனக் கோபமாய் வினவ குலசேகரனும் வழியில் கள்ளர்களால் ஆபத்து நேரிடும் என்பதற்காகத் தற்காப்புக்கு வைத்திருப்பதாய்ச் சொன்னான்.

ஆனால் தலைவனோ தற்காப்பு ஆயுதம் எனில் கைகளில் ஏந்தி வரலாமே, ஏன் மூட்டையில் வைத்திருக்க வேண்டும் எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு மற்றப் பல்லக்குகளையும் சோதனை செய்ய வேண்டும் என அவற்றைக் கீழே இறக்கச் சொன்னான். மற்றச் சில பல்லக்குகளிலும் காணப்பட்ட ஆயுதப் பொதிகளைக் கண்ட தலைவன் அனைத்துப் பல்லக்குகளையும் நிறுத்தி அனைவரையும் கீழே இறங்கும்படி கட்டளை இட்டான். குலசேகரனும் அவ்வாறே செய்யும்படி வாயால் கட்டளை இட்டுக் கொண்டே கண்ணால் ஜாடை காட்ட, உடனடியா அந்தச் செய்தி பல்லக்கு ஊர்வலத்தோடு சென்ற அனைவருக்கும் போய்ச் சேர்ந்தது. குலசேகரன் தன் வாளை உருவிக் கொண்டு, "அரங்கன் புகழ் வாழ்க!" என்று கத்திக் கொண்டு தலைவன் மேல் பாய்ந்தான். அதைத் தொடர்ந்து அனைவரும் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தில்லி வீரர்கள் மேல் பாய்ந்தனர். அந்த இடமே போர்க்களம் ஆயிற்று!

ஆரம்பத்திலேயே குலசேகரன் தலைவனின் தலையைத் துண்டித்துவிட்டான்.மற்ற ஹொய்சள வீரர்களும் ஆத்திரத்துடன் தில்லி வீரர்களைத் தாக்கினார்கள். அரை நாழிகையில் ஒரே ஒருவனைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டார்கள்.ஓடினவனையும் கொல்லத் துரத்திச் சென்றாலும் அவன் எப்படியோ தப்பி விட்டான். அவன் மூலம் செய்தி சென்று ஒரு பெரும் கூட்டமே தங்களைத் தாக்க எந்நேரமும் வரலாம் எனக் குலசேகரன் எதிர்பார்த்தான்.  என்றாலும் செய்தி போய்ச் சேருவதற்குள்ளாகக் கணிசமான தூரம் சென்றுவிட வேண்டும் என நினைத்து அனைவரையும் அவசரப் படுத்திக் கிளம்ப வைத்தான்.  மிஞ்சி மிஞ்சி இருநாழிகை தான் ஆகி இருந்தது. ஓடிய ஓட்டத்தில் அனைவரும் களைத்துச் சோர்ந்து போய்விட்டார்கள். இனி முடியாது என எண்ணும் தருணம் ஓர் சின்னக் குன்று போன்ற மேடு ஒன்று வந்தது. அதில் ஏறிக் கீழே இறங்கும் சமயம் தற்செயலாகப் பின்னால் பார்த்தால் மாபெரும் படை ஒன்று புழுதி பறக்க அவர்களைத் துரத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தது. குலசேகரன் ஒரு கணம் திகைத்து நின்றான்.

1 comment:

Nagendra Bharathi said...

அருமை