எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, January 13, 2007

ஓம் நமச்சிவாயா-27

எங்களை விட்டு அதிர்ச்சி விலகவே இல்லை. அடி ஏதும் பட்டிருந்தால்? மருத்துவ உதவிக்குக் கூட யாருமே இல்லை. இப்போது தான் "சக்தி விகடனில்" எங்களுக்கு ஒரு வருஷம் முன்னால் கைலை யாத்திரை மேற்கொண்ட திருச்சியைச் சேர்ந்த டாக்டர் கங்கா அவர்கள் எழுதியதில் தெரிந்து கொண்டேன். அவங்க குழுவில் ஒரு வண்டி இம்மாதிரிக் கவிழ்ந்து ஒருத்தருக்குக் கண்ணில் கண்ணாடித் துகள்கள் குத்தியும், வேறு இருவருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கிறது. டிரைவருக்குக் காயம் அதிகம் இருந்ததால் அவரை இன்னொருத்தர் துணையுடன் 1,000 கி.மீ கிழக்கே இருந்த தலைநகரான "லாசா"வுக்கு அனுப்பினாங்களாம். மற்றவர்களுக்கு டாக்டர் கங்காவும், அவங்க குழுவிலே வந்த மற்ற 5 மருத்துவர்களும் முதலுதவி செய்து இருக்காங்க. கைலை யாத்திரை முடிந்து திரும்பி டெல்லி வரும் வரை தினமும் மருத்துவம் செய்து இருக்காங்க. அவங்க எழுதி இருந்தது, "நான் குழந்தைகள் நல மருத்துவர், மற்றவர்கள் யாருமே கண் மருத்துவரோ அல்லது எலும்பு முறிவு மருத்துவரோ இல்லை. எங்களுக்குத் தெரிந்த வரை மருத்துவம் செய்தோம். கடவுள் அருளால் எங்க மருத்துவத்துக்குப் பயன் ஏற்பட்டது." என்று எழுதி இருக்கிறார்கள். அந்தக் குறைந்த பட்ச மருத்துவ உதவி கூட எங்களுக்குக் கிட்டாது. ரத்தம் வந்தால் வந்தது தான். அதோடு தான் கிட்டே இருக்கும் பர்யாங்கிலோ அல்லது மேம்பட்ட மருத்துவ உதவிக்காக லாசாவிற்கோ போகவேண்டும். எனவே, ஒரு சிறு சிராய்ப்புக் கூட இல்லாமல் நாங்கள் தப்ப முடிந்தது அந்தக் கைலை நாதன் திருவுளம் அன்றி வேறு ஏதும் இல்லை.

எங்கள் பயணம் தொடர்ந்தது. அன்றிரவு பர்யாங் வந்து சேர்ந்தோம். டாக்டர் நர்மதாவிற்கு உடலில் நீர்ச் சத்துக் குறைபாடு ஏற்பட்டது. அவங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்கள் திருமதி கல்பனாவும் அவள் கணவர் ஸ்ரீநிவாஸனும். இருவரும் இளம் வயதினராக இருந்தாலும் மிகப் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் டாக்டர் நர்மதாவிற்குச் சேவை செய்தார்கள். பர்யாங்கில் உடலில் க்ளூகோஸ் ஏற்ற வசதி இல்லை என்பதால் மறுநாள் சாகா போனதும் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முடிவு செய்யப் பட்டது. இரவில் பெரியவர் சங்கரனையும் அவருடன் சேர்ந்து அறையில் தங்கி இருந்த மற்ற நால்வரையும் சாப்பிட அழைக்க மறந்து போய் அவர்கள் இரவு 11 மணி வரை பார்த்துவிட்டுச் சமையல் பகுதிக்கு வந்து பார்த்தால் ஏதும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே ஸ்ரீலட்சுமியின் மரணத்தால் பாதிக்கப் பட்டிருந்த அவர்கள் எல்லாரும் உடனேயே திரு கிருஷ்ணாவையும், மனோகரனையும் கூப்பிட்டு மருத்துவ உதவி இல்லாமல் வந்ததற்கும், இப்போது சாப்பாடு சாப்பிடும்போது எல்லாரும் வந்தாச்சா என்று கவனிக்காததற்கும், அறைகள் சரியாகக் கொடுக்கப் படவில்லை என்றும் புகார் கொடுத்துத் திரும்பிப் போகும் போதாவது சரியாகக் கவனிக்கும்படிச் சொல்லி இருக்காங்க. எங்களுக்கு மறுநாள் காலை தான் திரு சங்கரன் சொல்லி இது தெரியும். நாங்கள் ஒரு 10 பேர் விடுதியின் மறுபக்கமாய்த் தங்கி இருந்தோம். விடுதின்னு தான் பேரு. எல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட அறைகள். ஆனால் படுக்க மெத்தை, போர்த்திக் கொள்ள ரஜாய், தலையணை கிடைக்கும். சற்றுக் குறை சொல்ல முடியாத விஷயம் இது ஒண்ணுதான். இல்லாவிட்டால் என்னதான் அவங்க கொடுத்த "ஸ்லீப்பிங் பாக்" உபயோகித்தாலும் தினமும் அதில் உள்ளே போய்ப் படுத்துவிட்டு வெளியே வருவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது.

மறுநாள் காலை எல்லாரும் "சாகா" நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். இப்போதும் எங்கள் வண்டி முன்னால் போய்க் கொண்டிருந்தது. அப்போது மறுபடி நல்ல வேளையாகச் சமவெளியில் போய்க் கொண்டிருக்கையில் ஒரு வண்டியின் சக்கரம் எங்களுக்கு முன்னால் ஓடி வந்தது. மறுபடி வண்டிகள் நிறுத்தப்பட்டுப் பார்த்தால் இம்முறை புனாவில் இருந்து வந்திருந்த திரு ராமச்சந்திரன் வந்த வண்டி அது. ஒரு பக்கச் சக்கரம் கழன்று ஓடியே போய் விட்டது. பின் ஒரு 2,3 பேர் அதை எடுத்து வரப் போக மற்ற டிரைவர்கள் வேறு சக்கரத்தை மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சக்கரம் மாற்றி வண்டி சரியாக இருக்கிறது என உறுதி செய்ததும் மறுபடி கிளம்பினோம். ஒரு வழியாக "சாகா" வந்தோம். சிலர் "பிரம்மபுத்ரா"வைக் கிட்டே போய்ப் பார்க்கப் புறப்பட நாங்கள் தொலைபேசப் போனோம். டாக்டர் நர்மதா அங்கே ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது. இரவு 9 மணி வரை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டுப் பின் விடுதிக்குத் திரும்பினார் டாக்டர் நர்மதா அவர்கள். அவங்க கணவரும் மனைவிக்குப் பணிவிடை செய்யச் சளைக்கவில்லை. சற்றும் அலுத்துக் கொள்ளாமல் அவங்க கூப்பிட்ட நேரத்துக்குக் கேட்ட உதவிகள் செய்து வந்தார். பின் மறு நாள் காலை "சாகா"வில் இருந்து "நியாலம்" நோக்கிப் புறப்பட்டோம். எல்லாரும் வழியில் மலை இறங்கும் போது பயப்பட்டிருக்கின்றனர். எல்லாரும் ஒரு முகமாய்ச் சொன்னது:போகும்போது இவ்வளவு தெரியவில்லை. இப்போ ரொம்பவே கஷ்டமாக இருக்கு." என்று தான். எல்லாம் "நியாலம்" போய்விட்டால் சரியாகி விடும் என்று நினைத்தோம். பின் அங்கிருந்து "நட்புப் பாலம்" கிட்டே தானே? நியாலம் போனாலே பாதி நிம்மதி என்ற நினைப்புடன் சாகாவில் இருந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.

Tuesday, January 09, 2007

ஓம் நமச்சிவாயா-26

திகில் தொடரா மாறிடுச்சேனு அட்லாண்டாவிலே இருந்து ஜீவாவும், கலிஃபோர்னியாவிலே இருந்து எஸ்.கே.எம்மும் கேட்டிருக்காங்க. எங்களுக்கு நேர்ந்த ஆபத்துக்களைத் தெரிவிச்சால் போறவங்க கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு செயல் படலாமேன்னு ஒரு எண்ணம் அதான், வேறே ஒண்ணும் இல்லை.

நாங்கள் பயணம் செய்த வண்டியின் டிரைவர் இருக்கிறதிலேயே ரொம்பவே அனுபவம் வாய்ந்தவர்னு எல்லாரும் சொல்வாங்க. எந்த வண்டியிலே பிரச்னை என்றாலும் இவர் முன்னாலே போயிடுவார் உதவி செய்ய. கடைசியிலே அந்த வண்டி கிளம்பினதும் தான் வந்து எங்க வண்டியைக் கிளப்புவார். ஆனால் எங்களை முன்னால் போய்ச் சேர்த்துடுவார். கிட்டத் தட்ட இருபது நாட்களாய்ப் பயணித்து வந்ததில் நாங்கள் ஒரு நெருக்கத்தையும், பாதுகாப்பையும் உணர ஆரம்பித்ததால் சற்றும் பயம் இல்லாமல் வண்டியில் உட்கார்ந்து தூங்க ஆரம்பித்தோம். ஆனால் டிரைவர் எப்போதும் போல் இல்லாமல் வண்டியின் முன்னே உள்ள சக்கரங்களைக் கவனிப்பதும், பின் வண்டியை ஓட்டுவதுமாய் இருந்தார். அமெரிக்க நாடு போல் இங்கே சீனாவிலும் இடது பக்கமாய் ஓட்ட வேண்டும். வெளியே பார்த்துக் கொண்டே வந்தார். பர்யாங்கை நோக்கிப் போக சில மலைகள் இறங்க வேண்டும். அவ்வாறு ஒரு 2 முறை மலை இறங்கி விட்டு, பள்ளத்தாக்கில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. சாலையில் இரு பக்கமும் மூன்று அடி அகல, ஆழத்தில் பள்ளங்கள் தோண்டிப் போட்டிருந்தது. எதற்கு என்று புரியவில்லை. ஆனால் வண்டிகள் போய்க் கொண்டிருந்ததால் அதைப் பற்றிச் சிந்தனை செய்யவே இல்லை. எங்கள் வண்டி இம்முறை சற்று முன்னால் போய்க் கொண்டிருந்தது.

நானும் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன். திடீரென வண்டி வேகம் எடுக்கிற மாதிரி ஒரு உணர்வு தோன்ற சட்டெனக் கண் விழித்தேன். வண்டியில் என் இருபக்கமும் உட்கார்ந்திருந்த என் கணவர் மற்றும் ட்ராவல்ஸ் காரப் பையன் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெரியவர் சங்கரனும் தூங்கிக் கொண்டிருந்தாப் போல் இருந்தது. வண்டி திடீரென ஒரு பக்கமாய் ஓட ஆரம்பித்தது. சாலை நடுவில் போகாமல் இம்மாதிரிக் குறுக்கே போய் முன்னால் போவது எங்கள் டிரைவரின் வழக்கம் என்பதால் நான் ஒண்ணும் கலவரமாய் உணரவில்லை. ஆனால் டிரைவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வண்டியை மெதுவாய்த் தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரப் போராடுவதை உணர்ந்தேன். அதே சமயம் வண்டி சாலையின் வலது பக்கம் உள்ள பள்ளத்திற்குள் போய் இறங்கி ஒரு பக்கத்துச் சக்கரங்கள் உள்ளே மாட்டிக் கொள்ள மற்ற சக்கரங்கள் மேலே தூக்கிக் கொள்ள வண்டி இரு சக்கரங்களின் உதவியால் அந்தப் பள்ளத்திற்குள் செங்குத்தாக நின்றது. நான் பயத்தில் அலறவே என் கணவரும், கூட வந்த பயணியும் விழித்துக் கொள்ளவே நிலைமையைப் புரிந்து கொண்ட சங்கரன் அவர்கள் என்னிடம், "கத்தாதீங்க, இந்தச் சமயததில் தான் தைரியமாய் இருக்கணும்." என்று சொல்லித் தேற்றவே, என் பக்கத்தில் இருந்த பையன் பள்ளத்தின் பக்கம் உட்கார்ந்திருந்ததால் வண்டியின் ஜன்னல் வழியாக மெதுவாக வெளியேறி எங்களையும் வெளியேற்ற முயன்றான். பெரியவரும் அந்தப் பக்கமாகவே மெதுவாக இறங்கினார்.

என் கணவரின் உயரம் காரணமாக அவரால் அந்தப் பக்கம் இறங்க முடிய வில்லை. இதற்குள் வண்டியைப் பிரேக் போட்டு நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கிக் குதித்து எங்கள் பக்க ஜன்னலைத் திறந்து விட்டு என் கணவர் இறங்க உதவி செய்தார். அவர் மெதுவாய் இறங்கி விட்டுப் பின் என்னை இறக்கினார். ஏற்கெனவே சரியில்லாத வலது காலுடன் இருந்த நான் இப்போது குதிரையில் இருந்து விழுந்து அடி வேறு பட்டுக் கொண்டிருக்கிறேன். இறங்குவதற்குள் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். அவ்வளவு வலி. மற்ற வண்டிகள் நிறுத்தப் பட்டு, எல்லாரும் உதவிக்கு ஓடி வந்தார்கள். டிரைவர் ஆபத்தை எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்ததால் அதிகம் அடியோ, காயமோ படாமல் நாங்கள் தப்பித்திருக்கிறோம். அந்தச் சமயம் அவர் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டதால் எங்கள் உயிர் மட்டும் இல்லாமல் உடல் காயமும் இல்லாமல் போனதை உணர்ந்தோம். இது இறை அருள் இல்லாமல் வேறு என்ன? பின் ரொம்பப் போராட்டத்துக்குப் பின் கயிறு, சங்கிலி எல்லாம் கட்டி இழுத்து வண்டியை வெளியே கொண்டு வந்து சக்கரங்களை மாற்றிப் பின் பயணத்தைத் தொடர்ந்தோம்.

Thursday, January 04, 2007

ஓம் நமச்சிவாயா-25.

இப்போ மறுபடி நாம் நம்ம பயணத்தைத் தொடர்கிறோம். தார்ச்சன் காம்பில் இருந்து திருமதி ஸ்ரீலட்சுமியின் உறவினர்கள், மற்றும் ட்ராவல்ஸ்காரர் ஒருத்தர், விசா கொடுக்குமிடத்தில் உதவ ஒருத்தர், மற்றும் குழுவில் இருந்து வெங்கடேசன் என்ற மும்பையில் இருந்து வந்த நண்பரின் தம்பி திரு வரதராஜன் ஆகியோர் போலீஸ் விசாரணை முடித்து உடனேயே ஸ்ரீலட்சுமியின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டுக் காட்மாண்டு கிளம்ப ஏற்பாடு செய்வதற்காக திரு மனோஹர் மற்றும் திரு கிருஷ்ணா ஆகியோர் தங்க, மற்ற குழுவினர் எல்லாரும் அவரவர் வந்த வண்டிகளில் ஏறி "அஷ்டப்த்" எனப்படும் எட்டு மலைகளுக்கு நடுவில் "திருக்கைலை"யும் அதன் எதிரே "நந்தி பீடம்" எனப்படும் நந்தி மலையின் தரிசனமும் பார்க்கப் புறப்பட்டோம். சற்றுச் செங்குத்தான மலை, குறுகலான பாதை. ஏற்கெனவே எல்லாரும் பரிக்ரமாவினால் சற்றுக் களைப்பாக இருந்தார்கள்.ஸ்ரீலட்சுமியின் மரணமும் சேர்ந்து கொண்டதால் எல்லார் மனதிலும் இனம் சொல்ல முடியாத பயம் நிழலாடியது. மேலும் அங்கே செய்ய வேண்டிய பூஜைகள், மற்றும் யாத்திரை முடிவில் செய்ய வேண்டிய பூஜைகள் என்று எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் எல்லாரும் புறப்பட்டோம்.

நல்ல உயரமான மேல் மலைக்குப் போன பின் ஒரு சமவெளி. அங்கே ஒரு ஆறு ஓடுகிறது. அது மானசரோவருக்குப் போவதாய்ச் சிலரும் இல்லை, கங்கா என்று சிலரும், பிரம்மபுத்ரா என்று சிலரும் சொன்னார்கள். எங்கள் டிரைவர் திபெத்திய மொழியில் சொன்னது எங்களுக்குப்புரியவில்லை. எங்களுடன் துணைக்கு எங்கள் ட்ராவல்ஸ் குழுவில் இருந்து யாரும் வர முடியவில்லை. அவர்கள் இன்றிரவு நாங்கள் தங்கும் மானசரோவர் கரையில் டெண்ட் போட்டுத் தங்குமிடம் அமைக்கும் பணிக்காகப் போய் விட்டார்கள். ஆகவே சொல்ல யாருமில்லை. குன்றின் உச்சியில் ஒரு பெளத்த ஆலயமும், திபெத்திய வழக்கப் படி முக்கோண முறையில் கட்டப் பட்ட கொடிகளும் இருந்தன. எல்லாரும் மேலே போனார்கள். என்னால் ஏற முடியவில்லை என்பதால் நான் ஏறவில்லை. எங்கள் டிரைவர்கள் எல்லாரும் அந்த நதியில் இறங்கி அத்தனைக் குளிரிலும் குளித்தார்கள். அவர்கள் குளியலே வேடிக்கையாக இருந்தது. ஒண்ணு,தலையை மட்டும் நனைத்துக் கொள்கிறார்கள் அல்லது பாதி உடலுக்குக் குளிக்கிறார்கள். அந்த மாதிரித் தான் சிலர் தலை மட்டும் நனைத்தும், சிலர் பாதி உடலுமாகக் குளித்தார்கள். நீர் நிரப்பிக் கொண்டார்கள். பின்னர் கைலை எதிரேயே ரொம்பக் கிட்டத்தில் இருக்கிறாப்போல் தெரிகிறது. ஆனால் போக 2 நாள் ஆகும் என்றார்கள். கைலை தரிசனம் முடித்து எதிரே உள்ள சிறிய பலிபீடம் போன்ற குன்றையும், அதற்கு எதிரே நந்தியின் தரிசனமும் (ஒரு குன்று தான் நந்தி போல் அமைப்பில் உள்ளது.) முடித்துக் கொண்டு எல்லாரும் கீழே இறங்கினோம். வண்டி ஒரு மயிரிழை நகர்ந்தாலும் கீழே அதல பாதாளம் தான். அவ்வளவு குறுகல். மேலும் நாங்கள் இத்தனை நாள் மலை ஏறி வந்த பாதை ஒன்றுமே இல்லை என்பது போல் ஒரே கற்களும், பாறையும், புழுதியும் உள்ள சாலை. ஏதோ போட்டிருக்கிறார்கள் தர்மத்துக்கு. பாதை என்ற பெயர் அவ்வளவு தான். கைலை வழி பூராவும் இப்படித்தான் பாதை இருக்கிறது. முந்தைய மத்திய அரசு இதற்குக் கொஞ்சம் வசதியான வழியாக மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்ததாயும், அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் சில எதிர்பாராத நிகழ்வுகளினாலும்,அரசியல் காரணங்களாலும் அதை நடைமுறைப் படுத்த முடியவில்லை எனவும், பின் ஆட்சி மாறி விட்டது எனவும் எங்கள் ட்ராவல்ஸ் குழுவின் பணியாளர்கள் கூறினர்.

"அஷ்டபத்"தில் இருந்து நாங்கள் கிளம்பி அன்று தங்க வேண்டிய இடமான மானசரோவர் ஏரிக்கரையை அடைந்தோம். இது மற்றொரு பக்கம். இதன் ஃபோட்டோ எடுத்தால் இந்தப் பக்கம் வரவில்லை. மறுபடி முயற்சி செய்கிறேன். இந்தப் பக்கம் ஏரிக்கரை கடற்கரை மாதிரி ஒரே மணலாக இருக்கிறது. நீண்ட கடற்கரை போன்ற அமைப்பு மட்டுமல்லாமல் ஏரித் தண்ணீரே அலை அடித்துக் கொண்டிருந்தது. இங்கே தான் பூஜைக்கு உகந்த கற்கள் கிடைக்கும் என்றும் சிலருக்கு லிங்கம் போன்ற அமைப்புள்ள சிற்பமே கிடைக்கும் என்றும் சொல்லி இருந்ததால் எங்கள் குழுவினர் சிலரும், என் கணவரும் லிங்கம் தேடப் போய்விட்டார்கள். மேலும் மானசரோவர் தீர்த்தம் எடுக்க என்று எல்லாரும் கிளம்பும்போது ட்ராவல்ஸ்காரர்களின் உதவி ஆள் ஒருத்தர் தாங்கள் நிறைய தண்ணீர் எடுத்து வைத்திருப்பதாயும், காட்மாண்டு வந்ததும் எல்லாருக்கும் ஒரு 5 லிட்டர் கேனில் தண்ணீர் கிடைக்குமென்றும் சொல்லவே சிலர் திரும்பி விட்டார்கள். ஆனால் என் கணவர் எதற்கும் இருக்கட்டும் என்று தண்ணீர் எடுத்து வரப் போனார். அப்போது எங்கள் டிரைவர் அங்கே இறங்க வேண்டாம் எனவும், ஆழம் அதிகம் என்றும் ஜாடையில் சொல்லித் தான் தண்ணீர் பிடித்து வைப்பதாய்ச் சொல்லிக் கேனை வாங்கிப் போய் அவர் தண்ணீர் பிடித்து வண்டிக்குள் வைத்து விட்டார். இது எவ்வளவு நல்லது என்று காட்மாண்டு போய்த்தான் எங்களுக்குப் புரிந்தது. அன்று எங்களுக்குத் தங்குமிடத்திற்கு மட் ஹவுஸ் எனப்படும் களிமண்ணால் கட்டிய வீடுகள் 2 மட்டுமே கிடைத்ததால், அதில் என்னைப் போல் உடல் நலம் சரியில்லாதவர்களைத் தங்க வைத்து விட்டு மற்றவர்கள் வெளியே டெண்டில் தங்க வைக்கப் பட்டார்கள். இந்த இடத்தில் மட் ஹவுஸுக்கு உள்ளேயே குளிர் தாங்க முடியவில்லை. டெண்ட்டில் உள்ளவர்கள் எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். ஒரு வழியாக அன்றிரவு முடிந்து நாங்கள் மறு நாள் "பர்யாங்" செல்ல (திரும்பும் வழியில் வரும் முதல் ஊர்) தயார் செய்து கொண்டோம். திரு கிருஷ்ணாவும், திரு மனோஹரனும் அதற்குள் வந்து விட்டார்கள். எங்களுடன் வண்டியில் ஆரம்பம் முதல் வந்த பிரெஞ்ச் வாலிபர் மற்ற வெளிநாட்டுக் காரர்களுடன் சேர்ந்து கொண்டதால் எங்கள் குழுவின் தலைமைச் சமையல்காரப் பையன் எங்களுடன் வந்தார். வண்டியும் கிளம்பியது. இரவு சரியாகத் தூங்க முடியவில்லை அதிகக் குளிரால். எங்களிடம் மிகுந்த "ரெட்புல்" பானத்தை (நாங்கள் இருவரும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை) எங்கள் டிரைவரிடம் கொடுத்தோம். வண்டியில் ஏறினதும் எங்களுக்குத் தூக்கமாக வந்தது. சற்று ஆட்டம் போட்டுக்கொண்டே இருந்தது வண்டியும். அதைப் பற்றியும் நினைக்காமல் டிரைவர் வெளியே பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினார், அதையும் சரியாகக் கவனிக்காமல் நாங்கள் அலுப்புடன் இருந்தோம். வண்டி போய்க் கொண்டிருந்தது,சற்று நேரத்தில் நேரப் போகும் ஆபத்தை எதிர்பார்க்காமல்.

Tuesday, January 02, 2007

ஓம் நமச்சிவாயா -24

கைலை மலையின் தோற்றங்களை நாம் நான்கு திசைகளிலும் பார்க்க முடிகிறது. உலகின் மையத்தில் இருப்பதாய்க்கூறப்படும் இந்தக் கைலையே "மஹா மேரு" என்றும் சொல்லப் படுகிறது. நான்கு திசைகளிலும் தோன்றும் 4 முகங்களும், மேல் நோக்கிய ஒரு முகமும் வருமாறு:
கிழக்கு நோக்கிய "தத்புருஷம்" என்னும் முகம் மின்னல் போல் ஒளி வீசும் ஸ்படிகம் என்றும்,
தெற்கு நோக்கிய "அகோரம்" என்னும் முகம் நீலக்கடலைப் போன்ற நீல ஒளி வீசும் நீலக்கல்லாகவும்,
மேற்கு நோக்கிய "சத்யோஜாதம்" என்னும் முகம் செந்நிறம் கொண்ட மாணிக்கக் கல்லாகவும்,
வடக்கு நோக்கிய முகம் "வாம தேவம்" எனப்படும் பளபளக்கும் தங்கமாகவும்,
மேல் நோக்கிய "ஈசானம்" என்னும் முகம் கண்களை உறுத்தும் வெள்ளியாகவும் தோன்றுகிறது என்று வர்ணிக்கிறார்கள்.

இப்போ சமீப காலத்தில் தினசரிச் செய்திகளில் இந்தியாவும், சீனாவும் இணைந்து கைலைப் பிராந்தியத்தில் செய்யப் போகும் ஆய்வுகள் பற்றிய செய்திகள் வந்தன.அவை கங்கை, பிரம்ம புத்ரா, சிந்து, சட்லெஜ், கர்நாலி போன்ற நதிகள் எங்கிருந்து உற்பத்தி ஆகின்றன என்பதையும் கண்டுபிடிக்கவும்தான் என்று படித்தோம். கைலையின் ஈசான முகத்தில் இருந்து தான் கங்கை ஆறு உற்பத்தி ஆகி வருவதாயும், மற்ற ஆறுகள் கைலையின் மற்றப் பக்கங்களில் இருந்து உற்பத்தி ஆகி வருவதாயும் சொல்கிறார்கள். எல்லாம் வல்ல அந்த ஆதிப் பரம்பொருள் பத்மாசனத்தில் தன் தொடையில் தேவியை உட்கார்த்தி வைத்துக் கொண்டு நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம். கண்ணால் காணுதற்கு அரிய இந்தக் காட்சியைக் கண்டு கொண்டே 52 கி.மீ. தூரம் உள்ள "பரிக்ரமா"வை மேற்கொள்கிறோம். நிரம்பக் கொடுத்து வைத்தவர்களுக்கும், மிகுந்த மன உறுதி படைத்தவர்களுக்குமே இதை முடிக்க முடிகிறது என்பது உண்மை.

"தார்ச்சன்" என்னும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கும் முதல் நாள் பரிக்ரமா அவ்வளவாகச் சோதனைகள் இல்லாதது, கொஞ்சம் சமவெளி, சற்றுக் குன்றுகள், ஆறுகள் என்றுதான் இருக்கின்றன என்றாலும் சிலர் (எங்களைப் போல்) இதிலேயே களைப்படைந்து போகிறார்கள்.வழி நெடுகக் காணும் கைலையின் தரிசனத்தால் ஓரளவு புத்துணர்ச்சி பெற முடியும். தார்ச்சனில் உள்ள பழமையான பெரிய "பெளத்த ஆலயம்" சீனப் புரட்சியாளர்களால் தரைமட்டமாக்கப் பட்டிருக்கிறது. இரண்டாம் நாள் "பரிக்ரமா" இருப்பதிலேயே சற்றுக் கடினமானது. கட்டாயமாய் எல்லாரும் 7 கி.மீ. நடக்க வேண்டும். அதன்பின் ஒரு செங்குத்தான மலையைக் கடக்கிறார்கள். கிட்டத் தட்ட 19,000 அடி உயரம் உள்ள அந்தச் செங்குத்தான மலையை ஏறிக் கடப்பதுதான் இந்தப் பரிக்ரமாவின் முக்கியமான சாதனை. கட்டாயம் எல்லாருடைய மன உறுதியையும் சோதிக்கக் கூடிய பயணம். 18,600 அடி உயரத்தில் "டோல்மா பாஸ்" என்னும் இடம் வருகிறது. இது சாட்சாத் அம்பாளின் உறைவிடமாய்க் கருதுகிறார்கள். இதற்குப் பக்கத்தில் உள்ள "கெளரிகுண்ட்" இதை உறுதி செய்கிறது. அந்த கெளரிகுண்டிற்குப் போக எல்லாருக்கும் அனுமதி இல்லை. மனோதிடமுள்ள வெகு சிலரே அங்கு அனுமதிக்கப் படுகின்றனர். அங்கிருந்து நீர் எடுத்து வர எங்கள் குழுவில் உள்ள யாரும் போகவில்லை. ட்ராவல்ஸ்காரர்களே போய் நீர் எடுத்து வந்திருக்கிறார்கள்.

இந்த டோல்மா-பாஸில் தான் பிராணவாயு ரொம்பவே கம்மி. இங்கு தங்கப் பத்து நிமிஷங்களுக்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை. அதற்குள் இதைக் கடந்து விடவேண்டும். பின் இந்தச் செங்குத்தான மலையில் இறங்க வேண்டும். இதுவும் ரொம்பவே கடினமானது தான். ஆனால் நம் கூட வரும் உதவி ஆளின் துணையுடன் இறங்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அன்று இரவு வரைக் கைலையின் தோற்றம் கிடைப்பதில்லை என்கிறார்கள். பின் மூன்றாம் நாள் முதல் நாள் பயணத்தைப் போல் சற்றுச் சுலபமானது. திரும்பவும் தார்ச்சனில் வந்து முடிகிறது. இதைத் தவிர உள்சுற்று எனப்படும் ஒரு பரிக்ரமா முறையும் உள்ளது கைலையில். இதன் தூரம் 28 கி.மீ. என்கிறார்கள். 13 முறை வெளிச்சுற்றை முடித்தவர்கள் (அதாவது 52 கி.மீ தூரம் உள்ள வெளிச்சுற்று) உட்சுற்றுக்குப் போகலாம் என்று கூறப்படுகிறது. கைலையின் மிக அருகில் போகவும், கரங்களால் தொடும் தூரத்துக்குப் போகவும் முடிகிற இந்தச் சுற்றை முடித்தவர்கள் சில பெளத்தத் துறவிகள் மட்டுமே என்று அறிகிறோம். உள்ளே அமர்நாத்தைப் போல் பனிலிங்க தரிசனம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். கைகளால் தொட முடிந்த தூரத்துக்குப் போனாலும் அந்த இடத்தின் புனிதம் கருதி யாரும் தொடுவதும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

Saturday, December 30, 2006

ஓம் நமச்சிவாயா -23

கைலை மலை பற்றிச் சிலத் தகவல்கள்

இந்த இடத்தில் கைலை மலை பற்றிச் சிலக் குறிப்புக்கள் கொடுக்க நினைக்கிறேன். முன்னாலேயே கொடுத்திருக்க வேண்டும். தொடரில் தொடர்பு விட்டுப் போகக் கூடாது என்று நினைத்ததால் எழுதவில்லை. இப்போ கைலைப் பயணம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம். திரும்பும் வழியில் "அஷ்ட பத்" போய்க் கொண்டிருக்கிறோம். அது இருக்கட்டும் தனியாக.

ஏற்கெனவேயே கைலை மலையும் ஒரு சக்தி பீடமாய்க் கருதப் படுகிறது எனத் தெரிவித்திருக்கிறேன். தட்சனின் யாகத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட அன்னையின் உயிரற்ற உடலைத் தோளில் போட்டுக் கொண்டு ஆடிய எம்பெருமான் தென்னாடுடைய சிவனின் கோபம் தணிய மஹாவிஷ்ணு தன் சுதர்ஸன சக்கரத்தால் அன்னையின் உடல் அங்கங்களைத் துண்டு துண்டாக அறுக்க அதிலே அன்னையின் உடல் கொழுப்புப் பூராவும் விழுந்து மூடிக் கொண்ட இடம் தான் திருக்கைலை ஆகும். அந்தக் கொழுப்புத் தான் உறைந்து காலப் போக்கில் பனியாக மாறியதாக சாக்தர்க்ளின் அபிப்பிராயம். திபெத்தின் மேற்குப் பகுதியில் (வடமேற்கு என்றும் சொல்லலாம்) ஒரு மூலையில் உள்ள திருக்கைலாய மலையின் உயரம் 22,028 அடிகளாகும். திபெத்திய பீடபூமியால் சூழப்பட்ட இந்த மலை இந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள் எல்லாருக்குமே ஒரு புனித யாத்திரைத் தலமாய் விளங்குகிறது. மற்றச் சுற்று வட்டார மலைகளில் இருந்து பனி கோடை காலத்தில் உருகினாலும் திருக்கைலாய மலையில் மட்டும் பனி உருகுவதில்லை. இந்தப் பனி மூடிய மலையைச் சுற்றி வரும் தூரம் (பரிக்ரமா செய்யும் தூரம்) கிட்டத் தட்ட 52 கிலோ மீட்டர் ஆகும்.

"மஹா நிர்வாண தந்திரம்" என்ற பெளத்த மத நூலின் படி பெளத்தர்களுக்கும், திருக்கைலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்களின் கோட்பாட்டின் படி பெளத்தர்கள் அதாவது பிட்சுக்கள் மலையின் உச்சியில் "டொம்சோக்" என்னும் சக்தி வாய்ந்த தெய்வத்தின் உருவம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. இந்தத் தெய்வம் மூன்று உலகங்களுக்குக் காவல். 12 கரங்கள் உள்ள இந்தத் தெய்வம், தன் கைகளில் அறிவைக் குறிக்கும் வண்ணம் கருவிகளைத் தாங்குகிறது. தேவியின் பெயர் "டோர்ஜி பாஸ்மோ" அல்லது "வஜ்ர வர்ஷி". செந்நிற அழகியான இந்தச் சக்தி வாய்ந்த தேவியான இவள் கையில் வைத்திருக்கும் அரிவாளினால் மனிதர்களின் ஆசைகளை வேரறுக்கிறாள். எல்லாத் திசைகளிலும் இந்த அரிவாள் தகாத ஆசை கொண்டவர்களை வேரறுக்கிறது. தன் இடக்கையால் "டொம்சேக்"கைத் தழுவிய நிலையில் காணப்படுகிறாள். ஆனால் இவள் காமத்தைக் கடந்தவள். "டொம்சேக்கும்" "வஜ்ரவர்ஷி"யான இந்தத் தேவியும் பிரிக்க முடியாதவர்கள். இது கிட்டத் தட்ட நம் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தை எடுத்துரைப்பதாய்த் தோன்றுகிறது.

திபெத்தின் புராணம் என்று அழைக்கப் படும், "காங்குரி கார்ச்சொக்" என்ற நூலில் கைலை மலையில் தான் கற்பக விருட்சம் இருப்பதாயும், மற்ற பகுதிகள் வைரம், வைடூரியம், மரகதம், பொன், வெள்ளி போன்ற நவரத்தினங்கள் நிறைந்ததாயும் கூறப்படுகிறது. இவர்கள் கடவுளும் டொம்சொக் எனப்படும் "தர்மபாலர்" 4 முகங்கள் கொண்டவர். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் கொண்டவர். அவை முக்காலங்களை உணர்த்துகிறது. புலித்தோல் அணிந்தவர், மண்டையோட்டு மாலை தரித்து, உடுக்கையைக் கையில் வைத்திருப்பவர், திரிசூலத்தைக் "காட்டம்" என்கிறார்கள். அதையும் குறிப்பிடும் இவர்கள் கடவுள் தோற்றத்தில் நம் சிவபெருமானின் வர்ணனையை ஒத்து இருக்கிறது.

ஜைனருக்கோ என்றால் அவர்கள் முதல் தீர்த்தங்கரர் "ரிஷபா நந்தா" இங்கே தான் முக்தி அடைந்ததாகவும் அவருடைய சமாதி மலை உச்சியில் இருப்பதாயும் நம்புகிறார்கள். கைலையை "அஷ்டபாதா" என்று அழைக்கும் அவர்களின் 24-வது தீர்த்தங்கரரான மஹாவீரர் இங்கே ஒரு முறை வருகை புரிந்ததாய்க் கூறுகிறார்கள். இந்துக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தத்தாத்ரேயர் கைலையில் பரிக்ரமா செய்ததாகவும், இப்போதும் கூட அங்கே உள்ள காடுகளில் மறைந்து இருக்கும் தத்தாத்ரேயர் மிகச் சிலர் கண்களுக்குத் தென்படுவதாயும் சொல்கிறார்கள். மஹா சிரஞ்சீவியான ஆஞ்சநேயப் பிரபு தன் சுய உருவுடன் கைலை மலைப் பிராந்தியத்தில் உலவிக் கொண்டிருப்பதாயும் சொல்கிறார்கள். கேதார்நாத்தில் உள்ள ஈசான மூலை வழியாக (நான் சென்றதில்லை) ஆதிசங்கர பகவத்பாதர் இமயம் க்டந்து கைலை ஏறி அங்கேயே ஐக்கியமாகி விட்டதாயும் சொல்வார்கள். நான்கு அடுக்குகள் கொண்டதாய்க் கூறப்படும் இந்தக் கைலையின் முதல் மூன்று அடுக்குகளில் யக்ஷர்களும், நான்காம் அடுக்கில் தேவர்கள், கின்னரர்கள், அஸ்வினி தேவர்களும் இருப்பதாயும் கூறுகிறார்கள். பக்கத்தில் உள்ள "அஷ்டப்த்தில்" தான் குபேரன் தன் செல்வத்தோடு வசிப்பதாயும் கூறுவார்கள். எட்டுமலைகள் கொண்ட அந்த மலைத் தொடர்கள் "குபேர பண்டார்" என்று அழைக்கப் படுகிறது.

தமிழ் மணம் நண்பர்கள் எல்லாருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். கைலை பற்றிய தகவல்கள் தொடரும்.
முத்தமிழ்க் குழும நண்பர்கள் எல்லாருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tuesday, December 19, 2006

22. ஓம் நமச்சிவாயா

டாக்டர் நர்மதாவின் கணவரும் திரும்பி விட்டார். மனைவியின் உடல் நிலை கருதியோ என்னவோ அவரும் திரும்பி விட்டார். அவர்தான் மோட்டார் பைக்கில் எங்களைக் கடந்தார் என்று தெரிந்து கொண்டோம். திரு. சிவநாராயணனும் அவரும் மோட்டார் பைக்கில் வந்திருக்கிறார்கள். அதற்கு 500 யுவான் ஒருத்தருக்குக் கொடுத்திருக்கிறார்கள். கேம்பில் போய்ச் செய்தி சொல்லவும் கிட்டத்தட்ட 300 யுவான் வரை கொடுக்க வேண்டுமாம். நல்லவேளையாக எங்களுக்கு யாரும் போய்ச் செய்தி சொல்ல அனுப்பவில்லை என்று சந்தோஷப்பட்டோம். 500 யுவான் என்பது கிட்டத்தட்ட ரூ.3,500/-ஆகிறது. நாங்கள் சென்ற சமயம் ஒரு யுவானுக்கு இந்திய ரூபாய் 6-60 மதிப்பு. மறுநாள் நாங்கள் எல்லாரும் பரிக்ரமாவில் இருந்து திரும்பி வருபவர்களை எதிர்பார்த்து இருந்தோம். அவர்கள் வருவதை வரவேற்க இங்கிருந்து எல்லா வண்டிகளும் கிளம்பிப் போனது. திருமதி மீராவும் வருபவர்களை வரவேற்கப் போனார். இங்கே நாங்கள் தங்கி இருந்த அதே கேம்பில் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட குழு ஒன்றும் வந்து திரும்பிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 25, 30 பேர் இருக்கும். சமையல்காரர், மருத்துவர், மருத்துவ உபகரணங்கள் என்று எல்லாவிதமான ஏற்பாட்டோடும் வந்திருந்தார்கள். இங்கே உள்ள திபெத்தியர் கூட்டம் கூட்டமாக வந்து சீனப் பொருட்களையும், மற்றும் பவளம், முத்து, கிரிஸ்டல் போன்ற மாலைகள், மணிகள், விக்ரஹங்கள் என்று விற்க வருகிறார்கள். என்னைப் பொறுத்த வரை நான் எப்பவுமே ரொம்ப மோசமான shopper. எல்லாரும் பொருட்கள் வாங்க நான் வேடிக்கை மட்டும் பாரத்துக் கொண்டிருந்தேன். நான் போன இடங்களில் இருந்து எல்லாம் பொருட்கள் வாங்கி வந்து கொண்டிருந்தால் வீட்டில் இடம் இருக்காது. அதை வைத்துப் பராமரிக்கவும் போவதில்லை. ஆகையால் நான் எதுவுமே வாங்கவில்லை. என் கணவருக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது. சிலபொருட்களைப் பார்த்தார். விலை சரிப்பட்டு வரவில்லை. நாங்கள் கொண்டு வந்திருந்த பணத்துக்குள் வரவில்லை. ட்ராவல்ஸ்காரர்கள் பணம் போதவில்லை என்றால் உதவி செய்கிறார்கள். ஆனால் அது அவசரம் என்றால் மட்டுமே பெறவேண்டும் என்று எங்கள் கொள்கை, ஆதலால் எதுவுமே வாங்காமல் இருந்து விட்டோம்.

சற்று நேரத்திற்கெல்லாம் பரிக்ரமா போனவர்கள் எல்லாம் திரும்ப ஆரம்பித்தார்கள். எல்லாரும் பார்க்கவே எதோ ரொம்பவே கஷ்டப்பட்ட மாதிரியும், ஏதோ சொல்ல முடியாத துக்கத்தில் இருப்பவர்கள் போலவும் தெரிந்தார்கள். என்னவென்று புரியவில்லை. அப்போது மத்தியானச் சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டதால் எல்லாரும் சாப்பிட ஆரம்பிக்கவும், சிலர் எங்கள் அறைக்கு வந்து என் உடல் நலத்தை விசாரித்து விட்டு அங்கேயே உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். ஏதோ சொல்ல நினைத்து சொல்லலாமா வேண்டாமா எனத் தயங்குவது போல் இருந்தது. எனக்குள்ளும் சொல்ல முடியாத அளவு ஏதோ சங்கடமாய் இருந்தது. அப்போது திருமதி ராமச்சந்திரன் அங்கே வந்தவர் என்னைப் பார்த்துவிட்டு உடனேயே கண்ணில் நீர் வர ஆரம்பித்தது. என்னவென்று கேட்டால் பரிக்ரமாவில் 2-வது நாள் ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும், திடீர் என மழை, திடீர் எனக்காற்று, திடீர் எனப் பனிமழை என்று மாறி மாறி வந்ததாயும் நடக்கவே முடியாமல் ரொம்ப உயரத்தில் போகும்போது அதாவது அங்கே "டோல்மா பாஸ்" என்னும் இடத்தில் மூச்சு விடப் பிராணவாயு போதாத இடம். அங்கே high altitude cross in the world. ஆகவே அங்கே கடக்கும்போது ஐந்து நிமிஷத்திற்குள் கடக்கவேண்டும். இல்லாவிட்டால் ரொம்பக் கஷ்டமாகி விடும். அப்போது அவரால் முடியவில்லை என்றும் வீட்டில் விட்டு வந்திருந்த குழந்தைகள் நினைவு வந்து ரொம்பவே அழுது விட்டதாகவும் கூறினார். கீழே இறங்கும்போதும் செங்குத்தாக இறங்க வேண்டி இருந்ததால் இறங்கவே முடியவில்லை என்றும் அவருடைய உதவி ஆள் கிட்டத்தட்ட அவரை இழுத்துக் கொண்டு போனார் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறினார்: டோல்மா பாஸைக் கடக்கும்போது ஸ்ரீலட்சுமிக்கு உடனடியாய்க் கடக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், உடனேயே அங்கே சற்றுக் கீழே வந்து அவசர டெண்ட் போட்டு அவருக்கு ஆக்ஸிஜன் கொடுத்து அங்கேயே வைத்திருந்தாகவும் சொன்னார். அவரால் மேற்கொண்டு 7 கி.மீ. கீழே இறங்கும் அளவு நடக்க முடியாது என்பதால் அவரை அங்கே தங்க வைத்து துணைக்கு 2 ஆளும் இருந்திருக்கிறார்கள். அவரால் சாப்பாடும் சாப்பிட முடியாமல் போய் விட்டது. அன்று பூராவும் கஷ்டப்பட்டு ராத்திரி கொஞ்சம் பரவாயில்லை, காலையில் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். திடீரென இரவு 2 அல்லது 3 மணி அளவில் அவர் உடல் நிலை ரொம்ப மோசமடைந்து அவர் ஆவி பிரிந்தது." இதைச் சொல்லி விட்டு திருமதி ராமச்சந்திரன் ரொம்பவே அழ ஆரம்பித்தார். எங்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. கைலையில் வந்து இறப்பது என்பது அவருக்குக் கொடுத்து வைத்திருக்கிறது என்று சமாதானப் படுத்திக் கொள்ளப் பார்த்தாலும் எங்களால் முடியவில்லை. அவரோட பாட்டும், பேச்சும் எங்கள் மனதை விட்டுப் போகவில்லை. வழியில் எவ்வளவு குறிப்புக்கள் எடுத்துக் கொண்டு வந்தார்? எவ்வளவு உற்சாகமாய் இருந்தார்? நாங்கள் சிலபேர் எதிர்பாராமல் பிரயாணம் மேற்கொண்டவர்கள். ஆனால் அவர் திட்டம் போட்டு நல்ல முன்னேற்பாடுகள் செய்து கொண்டு, "ட்ரெட் மில்" பயிற்சியிலிருந்து எல்லாம் மேற்கொண்டு தயாராகி வந்தார். இதைத் தான் விதி என்று சொல்வதா? புரியவில்லை. திருமதி தாரகராமனும் ரொம்பவே முடியாமல் ஆளே பாதியாகிச் சுருங்கி விட்டிருந்தார். அவரும் குதிரையில் இருந்து விழுந்து விட்டதாயும், அவருக்கும் ஆக்ஸிஜன் கொடுத்ததாயும், அவரால் நடக்க முடியாமல் போனதால் அவரோட குதிரைக்காரரும், உதவி ஆளும் அவரைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டதாயும் தெரிவித்தார்கள். எல்லாரும் ஒரு மனதாய்ச் சொன்னது, "நல்லவேளை, நீங்கள் வரவில்லை, வந்தால் நீங்களும் கஷ்டப்பட்டிருப்பீர்கள்" என்பது தான். எல்லாரும் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தோம். இதே யாத்திரைக் குழுவின் முதல் முதல் மே மாதம் வந்த குழுவிலும் இதே மாதிரி ஒரு பெண்மணி இறந்து விட்டதாயும் சொல்லிக் கொண்டார்கள். ஒருவேளை உயிர் காக்கும் மருந்துகளும், தேர்ந்த மருத்துவரும் இருந்திருந்தால் ஸ்ரீலட்சுமியைக் காப்பாற்றி இருக்கலாமோ என்னவோ?

அப்போது திரு கிருஷ்ணா வந்து எங்களை எல்லாம்,. "அஷ்டபத்" போகத் தயார் ஆகச் சொன்னார். எட்டு மலைகளுக்கிடையில் கைலையின் தரிசனம் மிக அருகில் கிடைக்கும். எதிரே நந்தி மலையும் இருக்கும். அதற்குப் போவதற்கு இங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் போய் அங்கிருந்து மலைகளின் உச்சியில் போய்த் தரிசிக்க வேண்டும். மலைப்பாதை ரொம்ப உயரம் என்பதால் நடக்கவேண்டாம் என்றும் இப்போது வண்டிகள் போகிறது, அதிலேயே போகலாம் என்றும் சொன்னார். 2004 வரை நடந்துதான் போய்ப் பார்த்திருக்கிறார்கள். "அஷ்டபத்தில்" நாங்கள் யாத்திரை முடிந்ததற்குப் பூஜையும், விநாயகருக்கு நன்றி தெரிவித்துப் பூஜையும் செய்வதாய் இருந்தது. தற்சமயம் இருந்த சூழ்நிலையால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது. ரொம்பவே வேதனையோடு எல்லாரும் "அஷ்ட பத்" தரிசனத்திற்குக் கிளம்பினோம். அங்கிருந்து திரும்பி இந்த கேம்ப் வர வேண்டாம் என்றும், மானசரோவரின் மற்றொரு கரையில் இரவு தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாயும், நேரே அங்கே போகவேண்டும் எனவும் திரு கிருஷ்ணா கூறினார். அவரும், திரு மனோஹரனும், எங்களில் ஒருவரான வரதராஜன் துணையுடன், இன்னும் எகோ ட்ராவல்ஸைச் சேர்ந்த 2 பேரும், ஸ்ரீலட்சுமியுடன் வந்தவர்களுடன் திருமதி ஸ்ரீலட்சுமியின் உடலை எடுத்துக் கொண்டு மலை இறங்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டுப் பின் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்வதாய்ச் சொன்னார். நாங்கள் கிளம்பினோம்.

Thursday, December 07, 2006

ஓம் நமச்சிவாயா-20

என்னிடம் கேட்ட மாதிரி ஸ்ரீலட்சுமிக்கும் முடியலைன்னதும் அவரிடமும் திரு கிருஷ்ணா கேட்டார்.

ஸ்ரீலட்சுமி தான் தொடரப் போவதாய் அறிவித்தார். அவருடைய சிநேகிதிகளின் துணையுடன் தான்

வருவதால் தனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்றும் தெரிவித்தார். மற்றபேர் எல்லாரும் தொடரப்

போவதாய்ச் சொல்ல, அதற்குள் நாங்கள் இருவரும் கலந்து பேசிக் கொண்டு பிரயாணத்தைத்

தொடருவதில்லை என முடிவு செய்து அதைத் திரு கிருஷ்ணாவிடம் தெரிவித்தோம். அவரும் என்

உடல்நிலையில் தொடருவது ரொம்பவே கஷ்டம் என்றும், நீங்கள் எடுத்தது சரியான முடிவுதான்,

அதனால் சோர்வு அடைய வேண்டாம் என்றும் இரண்டு முகம் தரிசனம் கிடைத்தது அல்லவா?

அதனால் நீங்கள் சந்தோஷமாய்த் திரும்பி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் ஆறுதல்

சொன்னார். நாங்கள் கேம்ப் இறங்கி இருக்கும் இடத்தில் எங்களுக்கு நேர்முகமாய்க் கைலையின் ஒரு

முக தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த முக தரிசனம் ஐயன் தன் சடாமுடியை விரித்துக்

கொண்டு ஆடும் தோற்றம் போலக் காட்சி தந்தது. சுற்றிலும் நட்சத்திரங்கள் மாலை போல அணி

வகுக்க அந்த இருண்ட வானில் வெள்ளை வெளேர் என்ற பனி படர்ந்த கைலைமலைச் சிகரமானது

ஐயனின் இன்னொரு பக்க முகத் தரிசனத்தைக் காட்டி நின்றது. காலைச் சூரிய ஒளியில் அதன்

தரிசனம் வேறு மாதிரிக் காட்சி அளிக்கும் என்றும், "பொன்னார் மேனியனே!" என்று சுந்தரர்

விளித்ததற்கு ஏற்பக் காலைச் சூரியனின் பொற்கிரணங்கள் பட்டுத் தங்கம் போல் தகதகவென்று

ஜொலிக்கும் என்றும் சொன்னார்கள். பார்க்கப் பார்க்கத் திகட்டாத செளந்தரியமான காட்சி. ஆனால்

இரு முகம் தான் பார்க்க முடியும் என்பது சற்று வருத்தமாய்த் தான் இருந்தது. இது இப்படி நேரும்

என்றுதான் முன்னாலேயே பசுபதிநாதர் கோவிலில் கூட எங்களால் நின்று கூட மற்ற இரு முக

தரிசனம் காணப் பெற முடியவில்லை போலும். அப்போதே இறைவன் சூசகமாய்த் தெரிவித்தானோ

என்னவோ?

இரவு என் கணவர் அசந்து உறங்க, எங்களுடன் தங்கி இருந்த மற்றப் பெண்கள் உதவ நான்

என்னோட சிலத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன். என்னை எழுப்பி உட்கார்த்தி வைக்கத்

திரு ரமேஷ் ரொம்பவே உதவியாக இருந்தார். இரவு போய்ப் பொழுது புலர்ந்ததும் எல்லாரும் கிளம்ப

ஆயத்தமானார்கள். சிலருக்கு முதலில் 7 கி.மீ. நடக்கவேண்டும் என்று தெரியாமல் குதிரையைத்

தேட குதிரை எல்லாம் வேறு இறங்குமுகமாய் இறங்கிப் போக ஆரம்பிக்க எல்லாரும் நடைப்

பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஒவ்வொரு நாள் பரிக்ரமா ஆரம்பிக்கும் முன் காலை உணவுக்குப்

பின் சில ஜூஸ் வகைகள், அல்லது பெப்ஸி, கோலா போன்ற குளிர்பானவகைகள், பிஸ்கட் வகைகள்

முதலியன வழியில் சாப்பிடக் கொடுக்கிறார்கள். உணவு விஷயத்தில் தேவைக்கு மேல் அதிகமாய்த்

தான் கொடுக்கிறார்கள். நம்மால்தான் சாப்பிட முடிவதில்லை. நாங்கள் திரும்பத் தயாராய்

இருந்தோம். என்னால் நிற்க முடியவில்லை. இதிலேயே நதியில் கீழே இறங்கிச் சற்றுத் தூரம் நடந்து

போய் அக்கரையில் இருக்கும் குதிரையில் ஏறிக் கொண்டு போகவேண்டும். எப்படியும் நிற்காமல்

போவதால் 4 மணி நேரமாவது ஆகும். பரிக்ரமாவைத் தொடருகிறவர்கள் கிளம்பிப் போக என்

கணவரின் குதிரையைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிவந்தார்கள். நல்ல வயசான குதிரையாக

இருந்தது. மெதுவாகப் போகிறது. என்னோட குதிரை அதை வம்பிழுக்க, எனக்குப் பயம் வந்தது.

அப்புறம் என் கணவர் இம்முறை கூடவே வந்ததால் என்னோட உதவி ஆளிடம் கடிந்து கொண்டு

கூடவே வந்து எனக்குப் பாதுகாப்பாக இருக்குமாறு கூறினார். அதற்குள் என் கணவரின் உதவிக்கு

இருக்கும் பெண்மணி என்னை மிக ஜாக்கிரதையாகக் குதிரையில் ஏற்றி, உட்கார வசதி செய்து

கொடுத்துக் காலையும் சற்றும் அவிழாமல் இருக்கும்படி ,மாட்டி விட்டுத் தான் கூட வருவதாயும்,

பயம் வேண்டாம் என்றும் சைகை செய்தாள்.

எங்கள் பயணம் ஆரம்பித்தது. நதியில் போய்க் கொண்டிருந்த போது ஒரு மோட்டார் பைக்

எங்களைக் கடந்து சென்றது. திரு கிருஷ்ணா மோட்டார் பைக்கில் ஆளை அனுப்பி எங்களுக்குத்

திரும்பி தார்ச்சன் கேம்ப் போக மோட்டார் அனுப்ப உதவி செய்வதாய்க் கூறி இருந்ததால் அதான்

போகிறார்கள் என்று நினைத்தோம். அந்த மலைப்பாதையில் அந்த பைக்கில் ஓட்டுநரைத் தவிர

இன்னும் யாரோ இருந்தார்கள். தெரிந்தமுகமாய் இருந்தது. யாரெனத் தெரியவில்லை. ஒரு வழியாக

நாங்கள் 3,4 மணி நேரம் கழித்து முதல் நாள் நாங்கள் குதிரை ஏறின இடம் வந்து சேர்ந்து

குதிரையில் இருந்து நான் இறக்கி விடப்பட்டேன். என் கணவர் வந்து பிடித்துக் கொண்டு என்னை

இறங்க உதவி செய்ததால் சற்று சமாளித்துக் கொண்டேன். ஆனால் உட்கார இடமும் இல்லை.

எங்களுக்காக எந்த வண்டியும் வந்திருக்கவில்லை. மலைவாழ் மக்களுக்கு வேண்டிய சாமான்கள்

கொண்டு வந்த ட்ரக் ஒன்று தான் திரும்பிப் போக ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. யாரை என்ன

கேட்பது ஒன்றும் புரியவில்லை. ஒன்று சீன மொழியில் பேச வேண்டும், அல்லது திபெத்திய மொழி

தெரிந்திருக்க வேண்டும். விழித்துக் கொண்டு இருந்த போது காதில் தேன் பாய்ந்தது போல அந்த

ட்ரக்கில் வந்து பரிக்ரமாவிற்கு இறங்கிய ஒருத்தர் எங்களிடம் ஆங்கிலத்தில் பேசினார். என்னைப்

பார்த்துவிட்டு ஏன் இப்படி நிற்க முடியாமல் நிற்கிறார்கள்? என விசாரிக்க நாங்களும் சொன்னோம்.

உடனேயே எங்கே போகவேண்டும் என்று கேட்டுவிட்டு அந்த ட்ரக் ட்ரைவரிடம் எங்கள் தேவையைச்

சொன்னார். அவரும் சற்றுப் பொறுத்தால் எல்லா சாமான்களையும் இறக்கிவிட்டு எங்களை ஏற்றிக்

கொண்டு தார்ச்சன் கேம்பில் விடுவதாயும் அதற்குள் எங்கள் ட்ராவல்ஸ் வண்டியும் வந்துவிட்டால்

நல்லது என்றும் கூறினார். ட்ரக் ட்ரைவர் கொண்டு விட 50 யுவான்கள் கேட்க அப்போது வேறு

வழியும் இல்லை, வேறு எந்த உதவியும் வரவும் வழி இல்லை என்பதால் ஒத்துக் கொண்டோம்.

நிற்க முடியாம நின்ற 1/2 மணி நேரத்திற்குப் பின் அந்த ட்ரக் ட்ரைவர் என்னை மெதுவாய்த் தூக்கி

வண்டியில் உட்கார வைக்க என்கணவரும் உட்கார்ந்து கொள்ள எங்களை தார்ச்சன் கேம்பிற்கு

அழைத்துப் போனார். வழியில் எங்கள் ட்ராவல்ஸ் வண்டி வர, நாங்கள் நிறுத்தி விசாரித்ததற்கு

எங்களைப் பற்றி எந்தத் தகவலும் வரவில்லை எனவும் வேறு யாரோ 7 பேர் பாதியில்

திரும்புவதாகவும் அவங்களுக்காக வண்டி செல்வதாயும் கூற எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

வழியில் எங்கள் ஒருங்கிணைப்பாளர் இன்னொரு வண்டியுடன் எதிர்ப்பட எங்களை அடையாளம்

கண்டுகொண்டு அவர் விசாரிக்க, நாங்கள் கொடுத்த தகவல் அவருக்கும் புதிதாய் இருந்தது.

எங்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் 7 பேர் திரும்புவதாயும் அவரும் உறுதிப்

படுத்தினார். நாங்கள் அந்த ட்ரக்கிலேயே மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து தார்ச்சன் கேம்ப்

போய்ச் சேர்ந்து அங்கே உள்ள பெண்மணியிடம் சொல்லவே, எங்களுக்கு ஒரு அறையைத் திறந்து

கொடுத்தார் அந்தப் பெண்மணி. பெரிய ஃப்ளாஸ்க் நிறைய வெந்நீரும் கொடுத்துவிட்டு அவர் போக

என் கணவர் எங்கள் குழுவின் ஆட்களைத் தேடிப் போய் நாங்கள் திரும்பி விட்டதை

அறிவித்துவிட்டு சாப்பாடு வேண்டும் என்றும் சொல்லவே வெறும் சாதமும், தயிரும் மட்டும் வாங்கி

வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தோம். அதற்குள் டாக்டர் நர்மதாவைப் பார்த்த நான் அவங்க நிலைமை

ரொம்பவே மோசமாய் இருப்பதை அறிந்து கொண்டேன். அவங்களுக்கு infection ஏற்பட்டு

diarroheaநிற்காமல் போய்க் கொண்டிருந்தது. அவர் கணவர்தான் மோட்டார் பைக்கில் திரும்பி

இருக்கிறார். பிறகு அவர் என்னை மருந்து வேண்டுமா என்று கேட்க நான் வேண்டாம் இருக்கு என்று

சொல்லிவிட்டு மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு, வலி குறையவும் மருந்துகள் சாப்பிட்டுவிட்டுப்

படுத்தோம். எங்களுக்குப் பின் சுமார் 2 மணி அளவில் குஜராத்தில் இருந்து வந்திருக்கும்

சிவநாராயணன், இன்னும் 2 பேர், பின் பங்களூரில் இருந்து வந்திருக்கும் மீராவும் அவர் கணவரும்

திரும்பினார்கள். திருமதி மீராவின் கணவருக்கு வீஸிங் ஜாஸ்தி ஆகவே அவர்கள் திரும்பி

இருக்கின்றனர். திரு சிவநாராயணன் குதிரையில் இருந்து விழுந்து அடிபட்டு ரத்தம் வந்து மயக்கம்

வரவே அவரும் மற்ற இருவரும் நடக்க முடியவில்லை என்பதாலும் திரும்பி விட்டனர்.

ஏற்கெனவே செந்திலும் குதிரையில் இருந்து விழுந்திருக்கிறார். ஆனாலும் சமாளித்துக் கொண்டு

போய்க் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்கள். திருமதி ஸ்ரீலட்சுமியும் குதிரையில்

உட்காரமுடியாமல் சரிந்து சரிந்து விழுவதாயும், திருமதி தாரகராமனும் உட்காரமுடியாமல் விழுந்து

விட்டதாயும் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். மறு

நாள் என்ன ஆனது? நாளை பார்ப்போமா?

இங்கே ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டி இருக்கிறது. கர்நாடக அரசும், குஜராத் அரசும்

கைலைப் பயணம் மேற்கொள்கிற யாத்திரீகர்களுக்கு அவர்கள் எந்த வழியில் போனாலும் சரி,

இந்திய வழியானாலும் சரி, நேபாள வழியானாலும் சரி பண உதவி செய்கிறது. கர்நாடக அரசு நபர்

ஒருத்தருக்கு ரூ.25,000/-ம் கொடுக்கிறது. குஜராத் அரசு ரூ.50,000/- கொடுக்கிறது. இது எந்த அரசு

வந்தாலும், மாறினாலும் தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதனாலே எங்கள் குழுவிலே

கர்நாடகாவில் இருந்தும் சரி, குஜராத்தில் இருந்தும் சரி நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது.

பாண்டிச்சேரி முதல் மந்திரி தன் சார்பின் நிதி உதவி செய்து ஒருத்தரை அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் யாத்திரீகர்களை வடிகட்டி அனுப்பும் இந்திய அரசு எந்த நிதி உதவியும் செய்வதில்லை.

என்ன ஒரு வசதி என்றால் கூடவே நல்ல தரமான வண்டிகளுடன் சமையல்காரர், மருத்துவர்,

மருத்துவ வசதியுடன் கூடிய உபகரணங்கள் என்று பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் உண்டு.

செலவுகளை நாம் பங்கிட்டுக் கொண்டாலும் பாதுகாப்புக் கிடைக்கிறதே, அதுவே பெரிசு இல்லையா?