எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 24, 2012

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!


வைகுண்ட ஏகாதசி குறித்து அனைவரும் அறிவோம். என்றாலும் தெரியாதவர்களுக்காக ஒரு சின்னக் குறிப்பு. நமக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த நாளின் துவக்கம் தான் மார்கழி மாதம். அந்த மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்த நேரம் ஆகும். ஆகவே மார்கழி மாதம் அதிகாலையில் நாம் இறைவனைத் துதிக்கிறோம். அது போலவே தென்பாகத்திலுள்ள பாற்கடலில் யோக நித்திரையில் இருக்கும் மஹாவிஷ்ணுவைத் தேவர்களும் துதிக்கின்றனர். அவர்கள் துதித்த நாளே வைகுண்ட ஏகாதசி நாள் எனச் சொல்லப் படுகிறது. அவர்களின் துதியால் மகிழ்ந்த மஹாவிஷ்ணு தம் யோக நித்திரையிலிருந்து எழுந்து வந்து அவர்களுக்குத் தரிசனம் கொடுத்தாராம். அந்த வாசல் வடக்கே அமைந்திருக்கும். அதுவே வைகுண்ட வாசல் திறந்து மஹாவிஷ்ணு வெளிவந்ததைக் குறிப்பிடும் வண்ணமே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் அன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்கிறது. இந்த ஏகாதசி வந்த விதத்தை அறிவோமா?

முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கு மிகவும் தொந்திரவு கொடுக்க யோக நித்திரையில் இருந்த மஹாவிஷ்ணுவின் மஹாசக்தியான ஏகாதசி என்பாள் வெளிவந்து அந்த முரனைக் கொன்றாள். கண் விழித்துப் பார்த்து அதிசயித்த மஹாவிஷ்ணு, தன் சக்தியான ஏகாதசியைக் கெளரவிக்கும் விதத்தில் இந்நாளில் விரதம் இருந்து ஏகாதசியைப் போற்றுவோருக்குச் சகல நன்மைகளும் கிடைக்கும் என வரமளித்தார். சக்தி விழிப்புடன் இருந்து சரியான நேரத்தில் செயலாற்றியதால் நாமும் நம் சக்தியைப் பயன்படுத்தி விழிப்புடன் (உடல் மட்டுமில்லாமல் ஆன்மிக விழிப்புடனும்) இருந்து விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஏகாதசிகள் ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் வரும், தேய்பிறையிலும் வரும். வளர்பிறை ஏகாதசி 12, தேய்பிறை ஏகாதசி 12 மொத்தம் 24 என்றாலும் நாழிகைக்கணக்குகளினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக வருஷத்துக்கு 25 ஏகாதசிகள்.

எட்டு வயதில் இருந்து எண்பது வயது வரஇ கடைப்பிடிக்கலாம் எனச்ச் சொல்லப் படும் இந்த ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்றே ஒரே வேளை உணவு உட்கொண்டு, அன்றிரவு பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். நாம் இருக்கும் விரதம் வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படும் மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி எனில் அன்று காலை சீக்கிரம் எழுந்து குளித்துக் கோயிலுக்குச் சென்று சொர்க்கவாசல் திறப்பையும், மஹாவிஷ்ணு சொர்க்க வாசல் வழியாக வெளிவருவதையும் பார்த்து வரலாம். அன்று முழுதும் பழங்கள், இளநீர் என்றே சாப்பிட வேண்டும். அரிசி, கோதுமை போன்றவற்றினால் ஆன உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இரவு முழுதும் கண் விழித்து ஹரி நாமம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலை சீக்கிரமாய் எழுந்து குளித்து, ஹரி நாமத்தைச் சொல்லிக் கொண்டே, சுண்டைக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைப் பல்லில் படாமல் உட்கொண்டு பாரணை பண்ணி விரதத்தை முடிக்க வேண்டும். துவாதசி அன்று சீக்கிரம் உணவு உட்கொள்ள வேண்டும். இந்த உணவில் சுண்டைக்காய், அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். விரதம் இருந்ததால் சூடான வயிறும் உடலும் குளுமை பெறுவதற்கும் ஜீரண சக்தியைச் சரியாக்குவதற்கும் இவை உதவும்.

மது, கைடபர்களை அழிக்கப் போரிட்ட விஷ்ணுவிடம் அவர்கள் பணிந்து வணங்கித் தங்களை வைகுண்டத்திலேயே இருக்கும் பாக்கியத்தைக் கேட்டதாகவும், அவ்வண்ணமே அவர்களுக்கு விஷ்ணு அருள் செய்ததாகவும், அப்போது அவர்கள் தங்களுக்குக் கிடைத்த இம்மாதிரியான கருணையை பூலோக வாசிகளுக்கும் காட்டுமாறும், வைகுண்டத்தில் எப்படி வடக்கு வாசல் வழியாக விஷ்ணு வெளி வந்து தேவர்களுக்குக் காட்சி கொடுத்தாரோ, அவ்வண்ணம் பூலோகத்தின் பெருமாள் கோயில்களில் அர்ச்சாவதாரமாக விஷ்ணு வெளி வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தர வேண்டும் என்றும், அவரை வடக்கு வாசல் வழியே வெளி வருகையில் தரிசிக்கும் பக்தர்களுக்கும், அவரோடு தொடர்ந்து வரும் பக்தர்களுக்கும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை நீக்கி அவர்களுக்கு முக்தியை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் பூலோகத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்புக்கான காரணத்தைத் தெரிந்து கொள்கிறோம்.  இனி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி குறித்துப் பார்ப்போம். 

Tuesday, December 18, 2012

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வைகுண்ட ஏகாதசியும், அரையர் சேவையும்!


ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித்திருவிழா மிகவும் பிரபலம் ஆனதாகும்.   சிதம்பரத்தில் இதே மார்கழியில் எப்படி திருவாதிரைத் திருவிழா பிரபலமோ அதே போல் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா.  மார்கழி மாதத்தில் அமாவாசை கழிந்து வரும் சுக்லபக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும்.  இவ்வருடம் கார்த்திகை மாதக் கடைசியில் அமாவாசை வந்ததால், மார்கழி மாதம் ஒன்பதாம் தேதியே வைகுண்ட ஏகாதசித் திருநாள் வருகிறது.  ஆகவே கார்த்திகை 28-ஆம் தேதியன்று இரவில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னோட்டமாக கர்பகிரஹத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பித்து நடைபெறும்.  பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சந்தனு மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.  அங்கேயும் திருநெடுந்தாண்டகம் அபிநயமும் வியாக்யானமும் நடைபெறும்.  இதை அரையர் சேவை என்பார்கள். 


இரு பகுதிகளாக நடைபெறும் திருநாளில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து என்றும் அழைக்கப்படும்.  முதல் திருநாளன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் கிளம்பி அர்ச்சுன மண்டபம் வந்தடைவார்.  இந்த மண்டபம் கிளி மண்டபத்தை ஒட்டி மேலே ஏறிச் சென்றால் வந்தடையும்.  துலுக்க நாச்சியார் சந்நிதி இங்கே தான் இருக்கிறது.  இங்கே நம்பெருமாள் சர்வாபரண பூஷிதராகக்  காட்சி கொடுப்பார்.  இவருக்கு முன்னே அரையர்கள் முதலில் நம்பெருமாளைப் பிரதக்ஷிணம் வந்து வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்டு பின்னர் அவர் எதிரே நின்று கொண்டு பாசுரங்கள் பாடி வியாக்யானமும் செய்வார்கள்.  முதலாயிரத்தில் பல்லாண்டு முதல் இரு பாசுரங்களும், அதற்கேற்ற அபிநயமும், வியாக்யானமும், பெரியாழ்வார் திருமொழியின் 212 பாசுரங்களும் பாடப்படும்.

இதைத் தவிரவும் மூலஸ்தானத்தில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பெரிய பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர் முன்னிலையில் அரையர் சேவை திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவைப் பாசுரங்கள்  பாடுதலும் நடைபெறும்.  மூலஸ்தானத்தில்  பெரிய பெருமாளுக்கு முத்தங்கி அணிவித்து சேவை நடைபெறும்.  கூட்டம் இப்போவே தாங்கலை. L இன்னிக்கு அரையர் சேவை பார்க்கலாம்னு கிளம்பிப் போனோம்.  உள்ளே நுழையவே பெரிய வரிசையாக மக்கள் கூட்டம்.  அப்புறமா அங்கிருந்த காவல்துறைப் பெண்மணியிடம் வரிசையில் நிற்க முடியாது எனக் கேட்டு வேண்டிக் கொண்டு ஒரு சிலரைத் தனியாக விட்டுக் கொண்டிருந்த வாயில் வழியே உள்ளே சென்றோம்.  மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளைச் சேவிக்க ஐம்பது ரூபாய்க் கட்டணத்திலேயே ஐநூறு பேருக்கும் மேல் நின்றிருந்தனர்.  ஆகவே பெரிய பெருமாளுக்கு இங்கிருந்தே வணக்கம் சொல்லிட்டு நேரேக் கிளி மண்டபம் நோக்கி நடையைக் கட்டினோம்.  அங்கிருந்து விமான தரிசனம் செய்யும் அர்ஜுன மண்டபத்துக்கு ஏறினோம்.  சிறிது தூரத்தில் நம்பெருமாள் சாய்ந்த கொண்டையோடு அழகாய் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அரையர்கள் அப்போது தான் நம்பெருமாளைப் பிரதக்ஷிணமாக வந்து உத்தரவு வாங்கிக் கொண்டு சேவையை ஆரம்பித்துக் கொண்டிருந்தார்கள்.  படம் எடுக்கலாமா எனத் தெரியவில்லை.  அங்கிருந்த கோயில் பணியாளரைக் கேட்டதுக்குச் சில பத்திரிகைக் காரர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.  செல்லில் எடுக்கலாமா என யோசித்தேன்.  அங்கிருந்து காவல் துறைப் பணியாளர் வேண்டாம்னு எச்சரித்தார்.  செல்லைப் பிடுங்கிடுவாங்கனு சொன்னார்.  ஆகவே அந்த யோசனையைக் கைவிட்டோம். L

ஆனால் சுற்றிச் சுற்றி வந்து நம்பெருமாளை நன்கு சேவித்துக் கொண்டோம்.  பின்னர் சிறிது நேரம் அரையர் சேவையைப் பார்த்துவிட்டுப் பின்னர் வீடு வந்தோம்.  பலத்த போலீஸ் பாதுகாப்பு, சோதனைகள், கெடுபிடி,  ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம்னு ஊரே விழாக்கோலத்தில் இருக்கிறது.  சிதம்பரத்திலும் ஆருத்ரா தரிசனம் சமயத்தில் கூட்டம் வெள்ளமாக இருந்தாலும் அங்கே தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நன்றாக இருந்தன.  மேலும் நடராஜர் வெளியே வரும் பாதையில் எல்லாம் மக்கள் ஒதுங்கி நின்று எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தரிசனம் செய்யும் வண்ணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  இங்கே கோயிலுக்குள்ளேயே நடப்பதால் கூட்டம் தாங்கவில்லை.   ஆனாலும் சமாளிக்கின்றனர்.   கோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழையும் வழி சிறிதாக இருப்பதால் அங்கே எப்போதும் நெரிசலாகவே இருக்கிறது.  

ஆழ்வார்கள் அனைவரும் பெருமாளுக்கு எதிரே பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாசுரத்திற்கான வியாக்யானம் அரையர் சேவையுடன் நாளை  பாடப் படும் எனத் தெரிகிறது.





Thursday, December 13, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 15

ஶ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலின் விமானம் இருட்டில் காட்சி அளிக்கும் கோலம் இது. தீபாவளிக்குப் போனப்போ பெரிய பெருமாளைப் பார்க்க முடியலை.  அதனாலும் இங்கே இப்போது வைகுண்ட ஏகாதசிக்காக விழாக் கோலம் பூண்டிருப்பதாலும், அப்புறமாப் பெரிய பெருமாளைப் பார்ப்பதே ரொம்பக் கஷ்டம்னு எல்லாரும் சொன்னதாலும் நேத்திக்கு மத்தியானம் ஒன்றரை மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம்.  ஶ்ரீரங்கம் கோயில் சேவை நேரங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை.  அது குறித்துத் தனியாக அட்டவணை தருகிறேன். புதுசா வரவங்களுக்குப் பயன்படும்.  ஆனால் மத்தியானம் ஒன்றரை மணியில் இருந்து மாலை ஆறு வரை பெரிய பெருமாள் சேவை சாதிக்கிறார்.  வெயில், கூட்டமும் உள்ளே போனது அங்கேயே காத்திருக்கும்.  ஆகவே கூட்டமும் இருக்கும் தான்.  ஆனால் இந்தச் சமயம் போனாலேயே எல்லா சந்நிதியும் பார்க்க முடியும் என்பதோடு தாயாரையும் சேர்த்துத் தரிசிக்கலாம்.  தாயார் சந்நிதி மூன்று மணிக்குத் தான் திறக்கிறார்கள்.  ஆனாலும் பெரிய பெருமாளைப் பார்த்துக் கொண்டு, சக்கரத்தாழ்வார், மேலப் பட்டாபிராமர்,  போன்றோரையும் தரிசித்துக் கொண்டு போனோமானால் மூன்று மணி ஆகித் தாயார் சந்நிதி திறந்து தாயார் இலவச சேவையே தருவாள்.

நேத்திக்கு நாங்க பெரிய பெருமாளைப் பார்க்கப்போனப்போ ஐம்பது ரூபாய்ச் சீட்டு எடுத்துத் தான் போனோம்.  சுமார் நூறு, நூற்றைம்பது பேர் இருந்தனர்.  ஆனால்  இலவச சேவைக்குக் கூட்டம் நெரிசல் தாங்கலை.  அதிலே ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம்.  உள்ளே  சந்தனு மண்டபம் தாண்டி குலசேகரன் படி அருகே எல்லாரும் ஒன்றாகவே உள்ளே செல்ல வேண்டி இருப்பதால் அவங்க முண்டி அடித்துக் கொண்டு போயிடறாங்க.  இருந்தாலும் சுமார் முப்பது முதல் நாற்பது நிமிஷம் காத்திருந்திருப்போம்.  நேற்றுப் பெருமாளின் அடியிலிருந்து முடி வரை நல்ல தரிசனம் என்றாலும் திருப்பதியிலே ஜரகண்டி என்பது போல் இங்கே சொல்லாமல் பிடித்துத் தள்ளவென்றே ஒரு பட்டரை நிறுத்தி இருக்காங்க.  எல்லாரையும் பிடிச்சுத் தள்ளிட்டு இருக்கார். :(  இதுவே கேரளா என்றாலோ, கர்நாடகா என்றாலோ மக்கள் இப்படிக் கஷ்டப் பட வேண்டாம் என்பதும் மனதில் உறைத்தது.  என்ன செய்ய!  செந்தமிழ் நாட்டில் பிறந்துட்டு இதுக்கெல்லாம் ஆசைப் படலாமா?  சரி, சரி வைகுண்ட ஏகாதசி பத்திச் சொல்ல வந்துட்டு, என் சொந்த, சோகக் கதையைச் சொல்றேனே!

சுமார் 21 நாட்கள், நடைபெறும் இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என இரு பிரிவாக நடைபெறும்.  டிசம்பர்-ஜனவரி மாதங்களுக்கு இடையில் அதாவது மார்கழி-தை மாதங்களுக்கு இடையில் நடைபெறும்.  தீபாவளி கழித்து ஒரு நல்ல நாளில் தென்னை மரத்தின் அடித்தண்டினை இந்த விழாவிற்கான முதற்கம்பமாக நடுவார்கள்.  இந்தப் பந்தல் முழுதும் அமைத்து முடியும் போது 47 கம்பங்கள் இருக்கும்.  மூன்றாம் பிராகாரத்தின் வடகிழக்கு வாசலில், ஆயிரக்கால் மண்டபத்தின் முன்னே அமைக்கப்படும்.  இவற்றோடு சேர்த்தே ஆயிரக்கால் மண்டபத்திற்கு ஆயிரம் கால்கள் என்கிறார்கள்.  இது குறித்து தகவல் விசாரித்துச் சொல்கிறேன்.  அம்மன் சந்நிதிக்கு அருகே இருக்கும் இரண்டாம் பிராகாரத்தின் வடக்கு வாயில் தான் பரமபத வாசல் என அழைக்கப் படுகிறது.  ஆண்டு முழுதும் மூடி இருக்கும் இது வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே திறக்கப் படும். இந்த வடக்கு வாயில் வழியாகவே நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்படுகிறார்.

தொடர்ந்து அதிகாலை நாலே முக்கால் மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ளிருக்கும் திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.  அதற்கு முன்னோடியாக பகல் பத்துத் திருநாள் நாளை டிசம்பர் பதினான்காம் தேதி இந்த வருடம் துவங்குகிறது.  இன்றிரவு பூர்வாங்கமாக ஸ்ரீரங்கநாதரின் மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.  பின்னர் பகல்பத்து உற்சவம் ஆரம்பிக்கும்.  14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடக்கும் பகல் பத்து உற்சவங்களில் தினமும் நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்தை விட்டுக் கிளம்பிக் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் சர்வாலங்கார பூஷிதராக சிறப்பு அலங்காரத்தில் அமர்ந்து சேவை சாதிப்பார்.

அரையர்கள் நம்பெருமாள் முன்னிலையில் திருமொழிப் பாசுரங்களைப் பாடி, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்.


தொடரும்.

Tuesday, December 11, 2012

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 14




அரங்கனைத் தேடிச் செல்பவர்கள் தொடர வசதியாகத் துளசிச் செடிகளைக் கொத்துக் கொத்தாகப் பிய்த்து வழி நெடுகப் போட்டுக்கொண்டே சென்றனர் அரங்கனோடு திருவரங்கத்திலிருந்து கிளம்பியவர்கள் அனைவரும்.  அதோடு மட்டுமில்லாமல் அரங்கனுக்குப் பூசப்பட்ட பரிமள கஸ்தூரியின் வாசனையும் சேர்ந்தே அரங்கன் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்தது.  இந்த விஷயம் தான் அவர்களுக்குக் கவலை அளித்து வந்தது.  இந்த அதிசயமான நறுமணத்தின் மூலம் அரங்கன் இருக்குமிடத்தைக் கண்டு எதிரிகள் பின் தொடர்ந்தால் என்ன செய்வது எனக் கவலைப் பட்டனர்.  எனவே காடுகளுக்குள்ளும், சோலைகளுக்குள்ளுமே புகுந்து சென்றனர்.  அந்நாட்களில் இயற்கை அன்னையின் வளத்தைக் களவாடும் அளவுக்கு மனிதர் துணிய ஆரம்பிக்கவில்லை.  ஆகவே பூமித்தாய் தன் அனைத்து வளங்களோடும் பரிபூர்ண சர்வாலங்கார பூஷிதையாகவே காட்சி அளித்தாள். விரைவில் திருச்சினாப்பள்ளி நகரின் கரையைக் கடந்து அருகிலுள்ள தொண்டைமான் காட்டில் புகுந்தனர்.  அந்நாட்களில் திருச்சிராப்பள்ளி சிறியதொரு நகரம்.  கோட்டையும், அகழியும் இருந்தன.  நகரை அடுத்துக் கழனிகளும் சோலைகளும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணப்பட்டன.
தொண்டைமான் காட்டில் ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்லலாம் என பிள்ளை உலகாசிரியர் முடிவு செய்தார்.


 ஏனெனில் திருவரங்கத்திலிருந்து வேதாந்த தேசிகரும் மற்றப் பெரியவர்களும் வந்து சேர்ந்து கொள்வதாய்ச் சொல்லி இருந்தனர்.  இன்றிரவு இங்கே தங்கினால் அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள்.  பின்னர் நாளை பயணத்தைத் தொடங்கலாம் என நினைத்தனர்.  ஆனால் மறுநாள் பொழுது விடிந்தும் எவரும் வரவில்லை.  எனவே அரங்கனோடு இருப்பவர்களுக்குக் கவலை அதிகரித்தது.  ஆனாலும் இங்கே தங்குவது ஆபத்து என்று புரிந்து கொண்டிருந்தார்கள்.  ஆகவே அங்கிருந்து கிளம்பினார்கள்.  காட்டிலேயே பெரும்பாலும் சென்றனர்.  பிரதான சாலைகளைத் தவிர்த்தனர்.  சுற்று வழியாகவே சென்றனர்.  கூடச் சென்ற மக்களில் வசதி படைத்தோர் பல்லக்குகள், குதிரைகளில் பிரயாணம் செய்தனர்.  கால்நடையாகச் சென்றவர்களே அதிகம். பரிசனங்கள் எனப்படும் கோயில் ஊழியர்கள் முன்சென்று வழிகாட்டுகையிலேயே துளசிக் கொத்துக்களை அவர்கள் பறித்துக் கீழே போட்டுக் கொண்டு சென்றனர்.  பின்னால் பிள்ளை உலகாசிரியரும் அவர் சீடர்களும் மற்ற மக்களும் செல்ல அரங்க்கன் பல்லக்கு அவர்களைத் தொடர்ந்தது.  இரு தினங்கள் இவ்விதம் யாத்திரை செய்தவர்கள் களைப்புத்தாங்காமல் ஓர் இடத்தில் தங்கினார்கள்.

அப்போது வேதாந்த தேசிகரின் சீடர்களில் ஒருவரான “பிரம்ம தந்திர சுதந்திர ஜீயர்” என்பார் கவலையுடன் பிள்ளை உலகாசிரியரை அணுகி வேதாந்த தேசிகர் இன்னமும் வந்து சேரவில்லை என்பதைக் குறித்த தம் கவலையைப் பகிர்ந்து கொண்டார்.  துளசிக் கொத்துக்களைப் பார்த்துக்கொண்டு வந்து சேர்வார்கள் எனத் தாம் நம்புவதாப்  பிள்ளை உலகாசிரியர் கூறி அவரைச் சமாதானம் செய்ய எச்சரிக்கை முரசு அடித்தது.  திடுக்கிட்ட அனைவரும் அரங்கனைப் பல்லக்கோடு மறைத்துவிட்டுப் பார்க்க, வந்தவ்வர்கள் ஸ்ரீரங்கத்து வாசிகளான சில நண்பர்களே. அவர்கள் போர் மூண்டு ஸ்ரீரங்கம் எதிரிகள் கைகளில் சிக்கிக் கோயிலிலும் 12,000-க்கும் மேற்பட்ட அந்தணர்கள் உயிர் விட்டதையும், பல பெண்கள் அரங்கன் சேவையைத் தவிர வேறொன்றும் அறியாப் பெண்கள் எதிரிப்படைகளால் பிடித்துச் செல்லப்பட்டதாகவும், அரங்கனுக்குத் தவிர மற்றவருக்கு ஆடியோ, பாடியோ காட்டாத பெண்களைத் துன்புறுத்தி தங்களுக்காக ஆடும்படியும், பாடும்படியும் செய்வதையும் கூறிவிட்டு, அழுது கொண்டே தாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறி வருந்தினார்கள். 


அவர்களில் சொந்த சொத்துக்கள் பறிபோனதால் கவலைப்படுவதாக நினைத்த மற்றவர்கள் அவர்களைச் சமாதானம் செய்ய அவர்களோ, அரங்கமே எரிந்து போனதை நினைத்துத் தாங்கள் வருந்துவதாய்க் கூறிவிட்டு, பேரழகு வாய்ந்த திருவரங்க நகரம் இன்று விதவைக் கோலம் பூண்டு கழுகுகளும், ஓநாய்களும் திரிந்து கொண்டிருக்கக் காணப்படுவதாய்க் கூறினார்கள்.  இவற்றைக் கேட்ட பிரம்மதந்திர ஜீயர் தம் ஆசானுக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலையில் திருவரங்கத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.  இங்கே இருந்தவர்களுக்கு அவரைத் திரும்ப அழைத்து வருவது பெரும் பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது. ஆனாலும் அதையும் மீறிக்கொண்டு ஓட ஆரம்பித்த அவர் கண்களில் இருந்து தாரையாய்க் கண்ணீர் மழை பொழிந்தது.  இதைக் கண்ட பிள்ளை உலகாசிரியர், திகைத்துப் போய் அரங்கா, இதுவும் உன் சோதனையோ எனக் கலங்கி நின்றுவிட்டார்.


மனம் தளர்ந்த உலகாசிரியரைத் தேற்றிய கூரகுலோத்தமதாச நாயனார் என்பவர் அவர் நம்பிக்கையும், தைரியமும் கொண்டு விளங்கினாலேயே மற்றவர்களும் அந்த நம்பிக்கையும் தைரியமும் இழக்காமல் இருப்பார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அவரை மேற்கொண்ட பயணத்துக்குத் தயாராக்கினார்.  தில்லிப் படைகள் காட்டுக்குள்ளேயும் அரங்கனைத் தேடி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் மேலோங்க அந்த ஊர்வலம் அந்த இடத்தை விட்டு அகன்றது.  மாலை மயங்கும் நேரம்.  காட்டினிலே தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள் அரங்கனோடு பயணித்தவர்கள்.  பிள்ளை உலகாசிரியர் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரெனக் காட்டிலிருந்து திடு திடு வென சப்தங்கள்.  சுற்றிலும் சூழ்ந்திருந்த காட்டுச் செடிகளும், மரங்களும் அசைந்தன.  மனிதர்கள் காலடி சப்தங்கள்.  தங்களுடன் வந்தவரல்லாது வேறு யார் இங்கே வந்திருப்பார்கள்?  திகைத்த கூட்டம் சுற்றிச் சுற்றிப் பார்க்கக் கைகளில் தூக்கிப் பிடித்த ஈட்டிகளோடும், வாள்களோடும் ஒரு சிறு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  நீண்ட கொடிய மீசைகளோடும், ஆஜாநுபாகுவாகவும், திரண்ட புஜங்களோடும் காணப்பட்ட  அவர்கள் கள்ளக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  சில கணங்களிலேயே அனைவருக்கும் புரிந்து விட்டது.  அந்த நாட்களில் தொண்டைமான் காடும், அதன் சுற்றுப்புறங்களும் கள்ளர் கூட்டங்களுக்குப்பெயர் பெற்றிருந்தது.  அத்தகையதொரு கூட்டத்திலேயே அவர்கள் மாட்டிக் கொண்டார்கள். 

என்ன செய்யப் போகிறார்கள்?

Wednesday, November 14, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கனின் தீபாவளிக் கொண்டாட்டம்.



அரங்கன் தீபாவளி கொண்டாடுவது அமர்க்களமாக இருக்கும் என ஸ்ரீரங்கம் வரும் முன்னரே கேள்விப் பட்டிருக்கேன்.  நேற்றுக் காலையிலேயே கோயிலுக்குப் போக எண்ணம்.  ஆனால் முடியவில்லை.  மாலை அரங்கன் சந்தனு மண்டபத்தில் எட்டு மணி வரை சேவை சாதிப்பான் என்பதைத் தெரிந்து கொண்டு சென்றோம்.  அரங்கன் சேவை அதி அற்புதம்.  எதிரே கிளி மண்டபத்தில் ஆழ்வாராதிகளையும், அப்படியே ஆசாரியர்களையும் சேவித்துக் கொண்டோம்.  அப்படியே விமான தரிசனமும், பர வாசுதேவர் தரிசனமும் செய்து கொண்டோம்.  பெரிய பெருமாள் ஏழு மணிக்கப்புறமாய்த் தான் தரிசனம் தருவார். அதுக்குக் கூட்டம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டிருந்தது.  ஆகவே வந்துவிட்டோம்.  இன்னொரு நாள் தான் போகணும்.  போகப் போகக் கவர்ந்து இழுக்கும் கோயிலாக இருக்கிறது. பார்க்கப் பார்க்கத் திருப்தியும் அடையவில்லை. இனி நம்பெருமாளின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்து:


ஆண்டாள் கவலையுடன் அமர்ந்திருக்க, ரங்க மன்னார் வருகிறார்.  இதழ்க்கடையில் சிரிப்பு.  குறும்புச் சிரிப்பு.  "என்ன ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! என்ன விஷயம்? "



"ஒன்றுமில்லை;  தீபாவளி வருகிறது.  அப்பா வருவாரா, மாட்டாரா எனத் தெரியவில்லை."

"ஏன், இங்கே உனக்குப் பட்டுப் பட்டாடைகளுக்கு என்ன குறைவு? இவை போதவில்லையா? இந்தப் பெண்களே...............

"போதும் நிறுத்துங்க!  உங்களை விடவும் அலங்காரப் பிரியர் வேறு யார் இருக்கிறார்கள்?  என் கவலையெல்லாம் உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் அப்பாவுக்குச் சீர் தர இயல வேண்டுமே என்பது தான். "



அரங்கன் இளமுறுவலோடு ஆண்டாள் அருகே அமர்ந்தான்.  ஆயிற்று; நாளை தீபாவளி.  மாமனார் வந்து சீர் கொடுக்க வேண்டும், என மாப்பிள்ளை சும்மா இருக்க முடியுமா!  அவனுடைய அடியார்களை எல்லாம் அவன் தானே கவனிக்க வேண்டும். அதோடு அவன் வேறு எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டுமே.  எண்ணெயில் தானே ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி இருக்கிறாள்.  முதல் நாள் இரவே அரங்கன் எண்ணெய்க் கோலம் காண்கின்றான்.  மற்றவங்க எண்ணெய் தேய்த்துக்கிறதுக்கும் அரங்கன் தேய்ச்சுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கே.  இங்கே அரங்கன் கோயிலின் பட்டத்து யானையான ஆண்டாள், ரங்கா, ரங்கா எனப் பிளிற, மேள, தாளங்கள் முழங்க அரங்கன் எண்ணெய்க் காப்பு நடக்கிறது.

அப்பாடா! அரங்கனுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் ஒரு நிம்மதி.  இனிமேலே நம்முடைய அடியார்களைக் கவனிப்போம்.  யாரங்கே, ஆழ்வார்களுக்கெல்லாம் எண்ணெய், சீயக்காய், கொண்டு கொடுங்கள்.  அவங்க வீட்டுப் பெண்களை மறக்காதீங்க.  ஆகவே மஞ்சளும் கொடுக்கணும்.

ஆழ்வார்களுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா!  ஆசாரியர்கள், வைணவத்தைப் பரப்பியவர்கள், அவங்களுக்கு?

இதோ, அவங்களுக்கும் தான்.  அதோடு நாளைக்கு அவங்களுக்கெல்லாம் தீபாவளிப் பரிசும் உண்டு. " அரங்கன் அறிவிக்கிறான். இப்போது அரங்கன் ரகசியமாக, மிக ரகசியமாகத் தன் அடியார் ஒருத்தரை அழைத்து, "ரங்க நாயகிக்கு எண்ணெய் அனுப்பியாச்சா?  அவள் படிதாண்டாப் பத்தினி.  அப்புறமாக் கோவிச்சுக்குவா. சேர்த்தித் திருவிழா  அன்னிக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளப் போகிறாள். நான் மறந்துட்டேன்னு நினைக்கப் போகிறாள்." என்று கிசுகிசுக்க, ஆண்டாள், "என்ன விஷயம்?" எனக் கேட்க, அரங்கன் மெளனமாகப் புன்னகைக்கிறான்.

மறுநாள் தீபாவளி அன்று தாயார் ரங்கநாயகி, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் அனைவரும் எண்ணெய் அலங்காரம் செய்து கொண்டு திருமஞ்சனமும் செய்து கொள்கிறார்கள்.  அரங்கன் மட்டும் தன்னுடைய அர்ச்சா மூர்த்தியான நம்பெருமாளை உசுப்பி விடுகிறான்.  பெரிய பெருமாளுக்கு எண்ணெய் அலங்காரம் நடந்து புதுசாக ஆடை, அலங்காரம், மாலைகள் முடிந்ததும், நம்பெருமாளுக்கும் நடக்கின்றது.  நம்பெருமாள் உலாக்கிளம்புகிறார்.  ஆனால் கோயிலுக்குள்ளேயே தான்.

"ஆஹா, அப்பா வந்துவிட்டாராமே, அங்கே இப்போது போக முடியுமா? அனைத்துப் பெரியவர்களும் கூடி இருக்கின்றனரே." ஆண்டாளுக்குக் கவலை.


ஆம்,  பெரியாழ்வார் உட்பட அனைத்து ஆழ்வார்களும், ஆசாரியர்களும் அரங்கனின் சேவையைக் காண மூலஸ்தானத்துக்கு நேர் எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரே தனியாகப் பிரிந்து காணப்படும் கிளிமண்டபத்தில் எழுந்தருளுகிறார்கள்.  அனைவரும் அரங்கன் வருகைக்குக் காத்திருக்கப் பெரியாழ்வார் நாணய மூட்டைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.  மாப்பிள்ளையான அரங்கனுக்குச் சீராகக் கொடுக்க வேண்டியவை அவை.  அரங்கனோ சாவகாசமாக மூலஸ்தானத்துக்கு எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்திற்கு வந்து மீண்டும் ஒரு அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகிறான்.

பின்னர் தீபாவளிச் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.  பின்னர் பகல் நான்கு மணிக்குப் பெரியாழ்வார் சீராகக் கொடுத்த நாணய மூட்டைகள் அரங்கனைச் சுற்றிப் பெரியாழ்வார் சார்பில் கோயில் அரையர்களால் வைக்கப் படுகிறது.  இந்த நாணய மூட்டையை "ஜாலி" அல்லது "சாளி" என்கிறார்கள்.  இவற்றை ஏற்றுக் கொள்ளும் அரங்கன் தம் மாமனார் பெருமையை உலகறியக் காட்ட வேண்டி இரண்டாம் பிராகாரத்தில் நாணய மூட்டைகளோடு வலம் வருகிறான்.  பின்னர் மீண்டும் கர்பகிருஹத்துக்கு எதிரிலுள்ள சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.

மெல்ல மெல்ல இரவு எட்டு மணி ஆகிறது.  தனக்காகக் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசாரியர்களைக் கிளி மண்டபத்திற்கு வந்து அரங்கன் ஒவ்வொருவராகப்பெயரைச் சொல்லி அழைக்க, ஒவ்வொருவருக்கும் அரங்கன் சார்பில் தனியாக மரியாதை செய்யப் படுகிறது.  அரங்கனின் மரியாதையைப் பெற்றுக்கொண்ட ஆழ்வார்களும், பதில் மரியாதையைப் பெற்றுக் கொண்ட பெரியாழ்வாரும் அரங்கனிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு தத்தம் சந்நிதிக்குச் செல்கிறார்கள்.  ஆனாலும் கூடி இருக்கும் மக்களுக்காக அரங்கன் இன்னும் சிறிது நேரம் அங்கே சேவை சாதிக்கிறான்.  நேரம் ஆவதைக் குறித்துக் கவலை இல்லாமல் பக்தர்களுக்கு சேவை சாதித்துவிட்டுப் பின்னர் அரங்கன் தன் தீபாவளிக் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்கிறான்.

ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். "என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?"

"சுவாமி, தங்கள் கருணையே கருணை!" ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.

படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர்.  தகவல் உதவி: தினமலர்

Friday, November 09, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 13


கோயிலில் இருந்தவர்களை வெளியேற்ற நினைத்தால் எவரும் வெளியேற மறுத்தனர்.  கோயிலிலேயே தங்குவதாய்க் கூறினார்கள்.  அரங்கன் முன்னிலையில் அவனுக்காக நாட்டியம் ஆடும் பெண்மணிகளும் கோயிலுக்குள்ளேயே தங்கினார்கள்.   சற்றும் பயமே இல்லாமல் அனைத்தையும் அரங்கனிடம் ஒப்படைத்துவிட்ட அந்தப் பெண்கள் போரிடச் செல்லும் ஆண்களுக்காக உணவு தயாரிப்பதில் முனைந்தனர்.  கோயிலின் அந்தணர்கள் அனைவரும் வாளும், கத்தியும், கதையும் ஏந்தி யுத்தத்துக்குத் தயாரானார்கள்.  உல்லுகான் அனுப்பிய செய்தியில் அனைத்துச் சொத்துக்களையும் சுல்தானிடம் ஒப்படைக்கச் சொல்லி இருந்ததை மறுத்த அவர்கள், தாங்கள் அனைவரும், இந்த ஸ்ரீரங்கமும், கோயிலும் அதன் சொத்துக்களும் ரங்கநாதனுக்கே அடிமை எனவும், அவர்களுக்கு ராஜா ரங்கராஜாதான் எனவும் கூறி அடிபணிய மறுத்தனர்.  இன்னொரு பக்கம் ஒரு அரசனுக்கு ஐந்து அரசனாகப் பாண்டியர்கள் பிரிந்து நிற்பதையும் அவர்கள் ஒற்றுமையின்மையால் நேரிட்ட இந்தத் துன்பத்தை எண்ணியும் மனம் கலங்கினார்.   தாங்கள் அனுப்பி வைத்த அழகிய மணவாளர் எங்கே இருக்கிறாரோ என நினைத்து வருந்தினார்கள்.

  கோயிலின் தலைமை அதிகாரியான  ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் தலைமையில் 12,000 வைணவர்கள்  அந்நியப் படையெடுப்பை எதிர்க்கத் திரண்டனர்.  ஒரு பக்கம் போர்த் தந்திரங்களும், பயங்கர ஆயுதங்களையும் ஏந்திய வலுவான படை. இங்கேயோ எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தங்கள் மனோபலத்தையும் அரங்கனையுமே நம்பிய மக்கள்.  எனினும் மிகவும் உத்வேகமாக எதிர்த்து நின்றனர்.  எதிரிகள் வடக்கு வாசலில் காவல் நின்ற பஞ்சு கொண்டான் என்பவரை எதிர்த்து உள்ளே புகுந்தனர்.  இந்த வடக்கு வாசல் ஆர்ய படாள் வாசல் எனப் படுகிறது.  வட மாநிலங்களிலிருந்து வந்த “கெளட” தேசத்து அரசர் கொடுத்த பொருளைக் கோயில் நிர்வாகம் வாங்க மறுக்கவே தம் தேசத்து ஆர்ய அந்தணர்களை நியமித்து அந்தப்பொருட்களை அங்கே பாதுகாத்து வைத்திருந்த காரணத்தால் இந்தப்பெயர் என்கிறார்கள். 

வடக்கு வாசலில் காவல் இருந்த வில்லிதாசரின் மகன் குலசேகரனையும், பஞ்சு கொண்டானையும் எதிர்த்து உள்ளே புகுந்த வீரர்கள் 12,000 அந்தணர்களையும் கொன்று குவித்தனர்.   பஞ்சு கொண்டானும் உயிர் நீத்தார்.  குலசேகரன் எவ்வாறோ தப்பி விட்டான்.  அரங்கனைத் தேடி அவனும் அவனுடன் இன்னும் சிலரும் சென்றனர். உயிர் நீத்த அந்தணர்களில்  சுதர்சன பட்டர் என்னும் பெரியாரும் ஒருவர்.   இவர் நடாதூர் அம்மாள் அவர்களின் சீடர் ஆவார். அவரிடம் அமர்ந்து பாடம் கேட்டு “சுதபிரகாசிகை” என்னும் பிரம்மசூத்திர வியாக்யானம் ஆன ஸ்ரீ பாஷ்யத்துக்கு விளக்கவுரை எழுதியவர். அந்த சுதபிரகாசிகையையும், தம்மிரு மகன்களையும் அங்கே பிணங்களுக்கு நடுவே மறைந்திருந்த வேதாந்த தேசிகரிடம் பராசர பட்டர் என அழைக்கப்பட்ட சுதர்சன பட்டர் ஒப்படைத்தார். 

மூலவரான ரங்கநாதரைக் கல்சுவரால் மறைக்க ஏற்பாடு செய்த வேதாந்த தேசிகர், ரங்கநாயகித் தாயாரையும்ம் அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஒளித்து வைக்க ஏற்பாடு செய்தார்.  அவரை அழகிய மணவாளரின் ஊர்வலத்தோடு சேர்ந்து செல்லும்படிக் ஓயில் அதிகாரிகள் வேண்டியும் அவர் போக மறுத்தார்.  அவர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு அழகிய மணவாளரைத் தூக்கிச் சென்றவர்கள் தேசிகர் பின் தொடர்வதற்கு ஏதுவாக உலர்ந்த இலைகளையும், துளசிக் கொத்துக்களையும் போட்டுக்கொண்டு சென்றிருந்தார்கள். ஆனால் இங்கே கோயிலில் தங்கிய வேதாந்த தேசிகருக்கு இப்போது ஒரு மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.  சுதர்சன பட்டரின் குழந்தைகளையும், சுதபிராகாசிகையையும் மறைத்துக் கொண்டு ஒளிந்திருந்த வேதாந்த தேசிகர் அங்கிருந்து  கிளம்பினார்.  கிரஹண காலத்துச் சூரியன் போல மறைந்திருக்கும் அரங்கனை மீண்டும் எவ்விதமான இடர்ப்பாடுகளும் இல்லாமல் தாம் தரிசிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கிளம்பினார் தேசிகர்.


அரங்கன் சென்ற வழிதெரியாமல் விழித்துக்கொண்டு இருந்த தேசிகருக்குத் துளசிக் கொத்துகளை வைத்து அடையாளம் கண்டு செல்லும்படி கூறப்பட்டது.  ஆனால் திடீரென அடித்த காற்றில் அவை பறந்து வேறு திசைகளில் வியாபித்து இருக்க தேசிகரோ நிலைமை தெரியாமல் அவற்றைத் தொடர்ந்தே சென்றார்.  ஆனால்  அவருக்குச் சற்றே முன்னால் சென்ற வில்லிதாசரின் மகன் குலசேகரனும் இவ்விதம் தவித்தபோது ஒய்சள ராஜகுமாரியுடன் இருந்த ஒரு பெண் தொண்டைமான் காட்டுக்குள் அரங்கன் ஊர்வலம் புகுந்து செல்வதாகக் கூறி அடையாளமும் காட்ட குலசேகரன் அரங்கனைத் தொடர்ந்து சென்றான்.  ஸ்ரீதேசிகருக்காகக் காத்திருந்த பிள்ளை லோகாச்சாரியார் ஊர்வலத்தைக் கிளப்பிக் கொண்டு மேலும் தெற்கே சென்றார்.  தேசிகரோ வழி தப்பிப் போய் உறையூரை அடைந்தார்.  அரங்கன் ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்ல எண்ணிய மக்களைத் தடுத்து நிறுத்தினார். பாண்டிய அரசர்கள் போன இடம் தெரியாமல் மறைந்துவிட்டனர்.  ஆகவே இங்கே ஸ்ரீரங்கத்தில் அவர்களை எதிர்ப்பார் இல்லாத டில்லிப் படை கோயிலுக்குள் புகுந்து அனைவரையும் வெட்டி வீழ்த்தித் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டு எதுவும் கிடைக்காமல் கோபம் கொண்டு மதுரை நோக்கிச்  சென்றனர்.

Tuesday, October 30, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 12

நவராத்திரி ஆரம்பத்தன்று  கோயிலுக்குப் போனோம்.  தாயாரைப் பார்க்க முடியலைனு ஏற்கெனவே சொன்னேன்.  அது என்னமோ தெரியலை;  தாயாரைப் பார்த்தா பெருமாளைப் பார்க்க முடியலை;  பெருமாளைப் பார்த்தாத் தாயாரைப் பார்க்க முடியலை.  இது எங்களுக்கு மட்டும் தான் நடக்குதுனு நினைக்கிறேன்.  சரி, இப்போ அரங்கனும், அரங்க நாயகியும் என்ன ஆனாங்கனு பார்ப்போமா?  அரங்கனை அனுப்பிட்டோம் ஊரை விட்டே.  ஆனால் அரங்க நாயகி என்ன ஆனாள்னு தெரிய வேண்டாமா?  நம்ம கதையைத் தொடர்வோம். 


  அரங்கன் சந்நிதி மூடப் பட்ட உடனேயே அனைவரும் தாயாரின் கதி என்னமோ என நினைத்தார்கள்.  ஆனால் தாயாரையும் மூலவரை வெளியேற்றி சந்நிதிக்கு அருகேயுள்ள வில்வ மரத்தடியில் மண்ணுக்குள் புதைத்து வைத்தனர்.  தாயார் படிதாண்டாப் பத்தினி எனப் பெயர் வாங்கியவள்.  ஆனால் இது தான் முதல்முறையாக வள் சந்நிதியை விட்டு வெளியே வந்திருப்பாள் என எண்ணுகிறேன்.  இந்தத் தாயார் பின்னால் சில காலம் கழித்துக் கோயிலில் வழிபாடுகள் ஆரம்பித்த சமயம் மீண்டும் பிரதிஷ்டை செய்யத் தேடியபோது கிடைக்கவே இல்லை.  எங்கே தேடினாலும் கிடைக்கவில்லை.  பின்னர் எப்போது கிடைத்தாள் என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.  அரங்கநாயகியையும் மறைத்த பின்னர் கோயிலில் இருந்த அதிகாரிகள், வேதாந்த தேசிகரை அரங்கனோடு செல்லும்படி வேண்டிக் கொண்டனர்.  ஆனால் தேசிகர் மறுத்தார்.  இங்கே ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரிய பெருமாளைக் காக்க வேண்டி இத்தனை மக்கள் இருக்கத் தான் மட்டும் தப்பிப்பிழைப்பதில் அவருக்குச் சம்மதம் இல்லை.  ஆனால் வைணவத்தை  நிலை நிறுத்த வந்த உந்நதமான ஆசாரியர்களில் ஒருவரான தேசிகரைக் காப்பாற்றியே தீர வேண்டும் என அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டனர். 

இவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க அதற்குள்ளாக தில்லிப் படைகள் ஆற்றில் இறங்கித் தாக்க முன்னேறும் தகவல் கிடைத்தது.  ஹொய்சளப் படை வீரர்கள் வழிகாட்ட தில்லிப் படை முன்னேறியது.  அனைவரும் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளோடு வந்து கொண்டிருந்தனர்.  அவர்களுக்குத் தலைமை வகித்து நடத்தி வந்தவன் உல்லு கான் என்னும் தளபதி.  தில்லி சுல்தானாக இருந்த கியாசுதீன் துக்ளக்கின் மூத்தகுமாரன் ஆன இவனே முகமது-பின் – துக்ளக் என்ற பெயரில் பிரபலமடைந்தவன்.   அங்கே கோயிலையே கோட்டையாக மாற்றிய வண்ணம் ஊர்க்காரர்கள் அனைவரும் போருக்குத் தயாரானார்கள்.  பட்சிராஜன் தோப்பு என அந்நாட்களில் அழைக்கப் பட்ட கருடன் சந்நிதியைச் சுற்றி இருந்த தோப்புக்கள் எல்லாம் ஆட்கள் நடக்க முடியாதபடிக்கு முட்கள் பரப்பப்பட்டு, முட்களால் ஆன பந்துகள் தூவப்பட்டுக் காணப்பட்டன.  இவற்றில் மனிதரோ, குதிரைகளோ செல்ல முடியாது.  எதிரிப் படைகள் முன்னேறி தெற்கு வாயிலுக்கு வராமல் இருக்கச் செய்த இந்த முன்னேற்பாடுகள் எல்லாமும் வீணாகத் தான் போயின.

அவற்றின் இடையே கால்களை வைத்து எதிரிப்படைகள் முன்னேறினார்கள்.  ஆனால் வடக்கு வாயிலுக்கு வந்த படைகள் உடனடித் தாக்குதலில் ஈடுபடாமல் சற்றே பின்னோக்கிச் சென்று ஸ்ரீரங்கத்தின் மக்களைச் சரணடையும்படியும், கோயிலில் உள்ள சகலவிதமான ஆபரணங்கள், நகைகள், பொருட்கள், தானியங்கள் அனைத்தையும் சுல்தானுக்குச் சமர்ப்பிக்கும்படியும் ஆணையிட்டனர்.  ஆனால் ஊர் மக்களோ தங்களுக்கு அரசன் அந்த ரங்கராஜன் ஒருவனே எனவும், அவன் யாருக்கும் கப்பம் கட்டும் நிலையில் இல்லை என்றும் ஈரேழு பதினான்கு உலகுக்கும் அதிபதியானவனைக் கப்பம் கட்டச் சொல்லும் உரிமையும் எவருக்கும் இல்லை எனவும் அறிவித்தனர்.  போர் ஆரம்பித்தது.  அரங்கன் தென்காவிரிக்கரையில் தேசிகருக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.  அரங்கன் அடுத்து எங்கே சென்றான், தேசிகர் அரங்கனைச் சேர்ந்தாரா என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.