எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, January 16, 2013

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசிச் சிறப்பு!


ஏகாதசி அன்று விருச்சிக லக்னத்தில் சிம்ம கதியில் பக்தர்களின் உற்சாக முழக்கங்களோடும், வாத்திய இசை முழக்கங்களோடும் மூலஸ்தானத்தில் இருந்து கிளம்பும் நம்பெருமாள் மதுரையின் ராணி மங்கம்மாள் அளித்த ரத்தின அங்கியில், பாண்டியன், கொண்டை, கிளிமாலையோடு புறப்படுகிறார்.  பெருமாளின் திருமேனியில் பனி விழாவண்ணம் துணிக்கூடாரம் பிடித்துக் கொண்டு வருவார்கள்.  சந்தனு மண்டபத்துக்கு முதலில் வரும் நம்பெருமாள் அங்கே சிறிது நேரம் இருந்து பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக் கொண்டு பின்னர் வழியெங்கும் காத்து நிற்கும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த வண்ணம் சேனை முதலியார் சந்நிதிக்கு வருவார்.  அங்கே அரங்கனின் திருவடியில் சமர்ப்பித்த மாலை சேனை முதலியாருக்குச் சமர்ப்பிக்கப் படுகிறது.  இதன் மூலம் தான் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை தன் அதிகாரத்தைச் சேனை முதலியாருக்கு மாற்றிக் கொடுக்கிறான் அரங்கன். பின்னர் பக்தர் கூட்டம் வெள்ளமாய்ப் பின் தொடரப் பரமபத வாசல் நோக்கி அரங்கன் ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்கிறது.

பரமபத வாசலை அரங்கனோடு சேர்ந்து கடப்பது அரியதான ஒன்றெனில் அவன் அந்த வாசல் வழியே வருகையில் எதிரே நின்று தரிசிப்பதும் சிறந்ததாகவே கூறப்படுகிறது.  நாழி கேட்டான் வாசல், கொடிமரம் போன்றவற்றைக் கடந்து நம்பெருமாள் திரை மண்டபம் வந்து சேர்கிறார்.  அங்கே யஜுர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்றுமறையாகும்.  அதைத் தொடர்ந்து மற்றவேதங்களும் சொல்கிறார்கள்.  வேதங்களைப் பெருமாளின் சுவாசமாகச் சொல்கின்றனர்.  பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்குப் பெருமாள் வந்து சேர்கிறார்.  பரமபத வாசலைத் திறக்க, அரங்கனின் ஆணை வேண்டும்.  ஆகவே சற்று நேரம் பக்தர்களோடு சேர்ந்து பரமனும் காத்திருக்கிறான்.  சிறிது நேரத்தில், பரமனின் ஆணை பிறப்பதாக ஐதீகப்படி ஆணை பிறந்ததும் பரமபத வாசலின் மணிகள் கணீர், கணீர் என ஒலிக்கக் கதவுகள் திறந்து கொள்கின்றன.  கூடி இருக்கும் கூட்டம் ரங்கா, ரங்கா, கோவிந்தா, கோவிந்தா என கோஷம் போட எட்டுத் திசைகளும் அதிரும் வண்ணம் வாத்திய முழக்கங்கள் செய்யப் பரமன் தன் அடியார் கூட்டத்தோடு பரமபத வாசலை அணுகினான்.  அந்த அதிகாலை வேளையில் குறிப்பிடப் பட்ட முஹூர்த்த நேரமான 4-45 மணி அளவில் தன் பக்தர்களுக்கு அருள வேண்டிப் பரமபத வாசல் வழியே ஆயிரங்கால் மண்டபம் அடைகிறான் நம்பெருமாள்.

அரையர் சேவையும் தொடர்ந்து நடைபெற, ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்த அரங்கன் அங்கே பரமபதத்தின் திருமாமணி மண்டபத்தை நினைவு கூரும் வண்ணம் கட்டப்பட்ட பூலோகத் திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானம் இருக்கிறான்.  மீண்டும் அரையர் சேவை நடைபெறும்.  வைகுண்ட ஏகாதசி அன்று நள்ளிரவு வரை அரங்கன் தரிசனம் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்குக் கிடைக்கும்.  யோக நித்திரையிலேயே என்றென்றும் இருக்கும் பரமன் தன் பக்தர்களுக்காக வேண்டி இன்று தன் நித்திரையை ஒழித்து ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் வீற்றிருந்து அரையர் சேவை, முதலானவற்றைக் கேட்டுக் கொண்டும், நடு நடுவே தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டும் ஓய்வில்லாமல் தரிசனம் தந்தருளுவான்.

அதன் பின்னரே மூலஸ்தானம் சென்று சேர்வான். வைகுண்ட ஏகாதசி முழுநாளும் அதிகாலை நான்கு மணியில் இருந்து இரவு பத்து மணி வரைக்கும் பரமபத வாசலும் பக்தர்கள் கடப்பதற்காக வேண்டித் திறந்திருக்கும்.  அதன் பின்னர் அடுத்த பத்து நாட்களுக்கு இராப்பத்து உற்சவம் நடைபெறும்.  அதன் நிறைவு நாளன்று நம்மாழ்வாருக்கு மோக்ஷம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.  அதைக் குறித்து அடுத்துப் பார்ப்போம்.



Thursday, January 03, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வைகுண்ட ஏகாதசிச் சிறப்பு!





அர்ச்சுன மண்டபத்தில் அன்று முழுதும் ஆஸ்தானம் இருக்கும் நம்பெருமாளுக்கு அரையர்கள் இரு முறை தங்கள் சேவையைக் காணிக்கையாக்குவார்கள்.  இந்த அரையர் சேவை இன்றும், இந்த வருடமும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஒன்று.  இதைப் புகைப்படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. :(    அனுமதி கொடுப்பதில்லை.  அரங்கனுக்கு மட்டுமே உரித்தானது என்று சொல்கின்றனர்.  ஒரு நாளைக்குக் குறைந்தது 212 பாசுரங்கள் வீதம் பகல் பத்து பத்து நாட்களிலும் இராப்பத்தில் கடைசிநாளான நம்மாழ்வார் மோக்ஷ தினத்துக்கு முதல்நாள் நடைபெறும் தீர்த்தவாரி வரை தினமும் பாசுரங்கள் பாடி அரையர்களால் அபிநயம் பிடித்துக் காட்டப் படுகிறது. கொடியேற்றத்தன்று திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் திருவிழாவின் பகல் பத்து முதல் நாளன்று பெரியாழ்வாரின் திருமொழி வியாக்யானம், அபிநயத்தோடு ஆரம்பித்து நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் கண்டருளும் நம்பெருமாள் பகல்பத்தின் கடைசி நாள் அன்று அதாவது வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாளன்று மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த மோகினி அலங்காரம் அன்று நடைபெறுவதற்கான காரணம் பின் வருமாறு:

ஏற்கெனவே சென்ற இடமெல்லாம் பக்தர்களைப் பைத்தியமாய் அடித்துத் தன் பக்கம் இழுத்த அழகிய மணவாளன் ஆன நம்பெருமாளுக்குத் தனியாக மோகினி அலங்காரம் என்று வேண்டுமா?  இல்லை; இல்லை.  அதனால் எல்லாம் இவன் அனைவரையும் கவர்ந்தான் எனச் சொல்வதற்கு இல்லை. ஆனால் தில்லையம்பலத்து ஆனந்த நடராஜரை எவ்வாறு ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசிப்பது ஆனந்தம் அளிக்கிறதோ அவ்வாறே நம்பெருமாளையும் மோகினி அலங்காரத்தில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உண்மையில் மக்களுக்குப் பித்தே ஏற்பட்டு விடும். அப்படியொரு பிரகாசமான பேரழகு. காணக் கண் கோடி வேண்டும்.  இதன் தாத்பர்யம் என்னவெனில் மார்கழிமாதம் தசமியன்று தான் திருப்பாற்கடல் கடையப் பட்டு அமிர்தம் வந்ததாகச் சொல்வார்கள்.  துர்வாசரின் சாபத்தினால் தேவலோகத்தை இழந்த இந்திரன், தன் சக்தியையும் இழக்கவே திருமாலின் ஆலோசனைப் படி அசுரர்களின் உதவியோடு, தேவர்களும் கூடிப்  பாற்கடலைக் கடைந்தனர்.

மத்தாக இருந்த மந்த்ர மலை சாய்ந்துவிழுந்துவிடும் நிலையில் கூர்மமாக மாறி அந்த மலையைத் தன் மேல் தாங்கினார் திருமால்.  வாசுகியான பாம்பரசனைக் கயிறாகக் கொண்டு கடைந்ததால் அதன் வாய் வழி வந்த விஷமும், பாற்கடலின் மேலே இருந்த ஆலகால விஷமும் ஒன்று சேர்ந்து வெளிவரவே அதைத் திரட்டி ஒரு உருண்டையாக்கி உட்கொண்டு ஈசன் திருநீலகண்டராக ஆக, பின்னர் ஒவ்வொன்றாக வெளிவந்து கடைசியில் தங்கக் கலசத்தில் அமுதமும் வெளிவந்தது.  அசுரர்கள் அதைப் பறித்துக்கொள்ள எப்போதும் போல் ஏமாந்த தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர்.  திருமாலும் ஒரு அழகிய பெண்ணாக மாறி தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அமுதம் கொடுப்பதற்கு முன் வந்து அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமுதம் கிட்டச் செய்தார்.  இந்த சுக்லபக்ஷ தசமியின் மறுநாளே தேவர்கள் வைகுண்ட வாசியான மஹாவிஷ்ணுவான திருமாலைப் போற்றி வணங்கித் தங்களுக்குத் தரிசனம் கொடுத்தருள வேண்ட மஹாவிஷ்ணுவும், வைகுண்ட வாசலான பரமபத வாசலைத் திறந்து வெளி வந்து பரமபதத்தில் ஆஸ்தானமாக வீற்றிருந்து தேவாதி தேவர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.  இதுவே வைகுண்ட ஏகாதசித் திருநாளின் முதல்நாளன்று மோகினி அலங்காரத்திற்கான காரணமும், மறுநாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழி வெளி வந்து (அன்றொரு நாள் விரஜா நதிக்கரையில் உள்ள பரமபதத்தில்  காட்சி அளித்தவாறு) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானம் இருந்து காட்சி அளிக்கிறார்.

அரங்கன் ஆஸ்தானமிருந்து கட்டளையிடும் அழகைப்  பார்க்கும் முன்னர் அரங்கனின் திவ்ய அலங்காரம் குறித்த ஒரு வர்ணனை.  தோளில் கிளி மாலையுடனும், தலையில் பாண்டியன் கொண்டையுடனும் காட்சி அளிக்கும் நம்பெருமாளுக்கு ரத்தின அங்கியால் அலங்கரிக்கின்றனர்.  வைகுண்ட ஏகாதசி அன்று நம்பெருமாள் முழுதும் ரத்தினங்களால் ஆன அங்கி அணிந்திருப்பார்.  இந்த ரத்தின அங்கியை சூரியனின் கதிர் வீச்சுக்குச் சமமாகச் சொல்கின்றனர்.  இந்தக் கதிர்வீச்சு மருத்துவ மற்றும் தெய்வீக குணம் உள்ளது. என்றாலும் இதுவும் ஒரு அளவுக்கு மேல் போனால் ஆகாது என்பதால் அந்த ரத்தின அங்கியில் அவரைப் பாதி வரை தான் பார்க்க இயலும். இடுப்புக்குக் கீழே சல்லாத்துணியால் மறைத்திருப்பார்கள்.  இவ்வாறு ஒளி மிகுந்த ரத்தினங்களின் கிரணங்கள் சூரிய கிரணங்கள் போல் பக்தர்கள் மேல் படுவதால் அதன் பாதிப்பைக் குறைக்கவே பெரிய பெருமாளை முத்தங்கியால் அலங்கரிக்கின்றனர்.  வைகுண்ட ஏகாதசி அன்று நம்பெருமாள் பரமபத வாசல் காணுவதே முக்கியம் என்பதால் அதை முதலில் கண்ட பக்தர்கள் பின்னர் மூலவரான பெரிய பெருமாளைக் காண வரும்போது சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் போன்ற சந்திரனின் கதிர்வீச்சின் குணம் கொண்ட முத்துக்களால் ஆன அங்கி அணிவிக்கப் படுகிறது.  சூரிய கிரணங்களின் வீரியத்தை ஈடு செய்யும் வகையிலேயே இந்த அங்கி பெரிய பெருமாளுக்கு அணிவிக்கப் படுகிறது.


இந்த மோகினி அல்ங்காரத்துடன் பராங்குசநாயகியான நம்மாழ்வாரைப் பார்த்து, நம்பெருமாள் கேட்டாராம்: "என்ன எப்படி என் அலங்காரம்?  அதோ அங்கே பார், ஶ்ரீயை விட என் அலங்காரம் பிரமாதமில்லை?  அவளை விட நான் அழகு இல்லை?  என்னைப் பார் என் அலங்காரத்தைப் பார்!"

நம்மாழ்வார்: தேவரீர் அடியேனை க்ஷமிக்க வேண்டும்.  ஒரே ஒரு குறை உள்ளது!

நம்பெருமாள்:  குறையைச் சொல்லும் சடகோபரே, நிவர்த்திக்கிறேன்.

நம்மாழ்வார்: தேவரீரால் இயலுமா?

நம்பெருமாள்: அதென்ன அப்படிக் கேட்டுவிட்டாய்?

நம்மாழ்வார்: தேவரீருக்கு எல்லா அலங்காரமும் பொருந்தியே வருகிறது.  அதே போல் இந்த மோகினி அலங்காரத்திலும் ஜொலிக்கிறீர் தான்!

நம்பெருமாள்:  அப்புறமென்ன?

நம்மாழ்வார்:  ஆனால் ஸ்ரீஎனப்படும் மஹாலக்ஷ்மித் தாயாரின் கடைக்கண்களில் இருந்து கிளம்பும் கருணை ஒளியான ஜோதியை இங்கே காண முடியவில்லையே ஸ்வாமி!

நம்பெருமாளின் முகத்தில் குறுநகை.  படிதாண்டாப் பத்தினியான ரங்கநாயகியைப் பார்த்து, இப்போது சந்தோஷமா என்னும் பாவனையில் பார்க்கிறார்.

Tuesday, January 01, 2013

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!


கிட்டத்தட்ட மற்ற ஊர்களின் பிரம்மோற்சவம் போல ஸ்ரீரங்கத்தின் வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகும்.  இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிக்கிறார்.  இப்போதைய காலகட்டத்தில் தான் இது வைகுண்ட ஏகாதசி உற்சவம் என அழைக்கப் படுகிறது.  ஆனால் இதன் பெயர் உண்மையில் திரு அத்யயன உற்சவம் என்றே அழைத்து வந்தனர்.  விஷ்ணு ஆலயங்களின் ஆகம முறைகளை முறையே பாஞ்சாராத்ரம், வைகானஸம் என இரண்டாகப் பிரித்துள்ளனர்.  அவற்றில் பாஞ்சராத்ர ஆகமத்தில், ப்ரசின ஸம்ஹிதையில் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை தொடங்கி இருபது நாட்கள் ஸ்ரீமஹா விஷ்ணுவான பெரிய பெருமாளுக்கு உற்சவம் செய்ய வேண்டும் எனச் சொல்லப் பட்டிருப்பதாக அறிகிறோம்.  அதன் படி மார்கழி மாத சுக்லபக்ஷத்தின் பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக அமைந்துள்ளது.  இதன் முதல் பத்து நாட்கள் பகல் பத்து எனவும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் அழைக்கப் படுகிறது.

பகல் பத்து என்ற முதல் பத்து நாட்கள் நடைபெறுவதே திரு அத்யயன உற்சவம் ஆகும்.  இந்தப் பத்து நாட்களிலும் பெருமாளின் முன்பு பன்னிரு ஆழ்வார்களும் பாடிய நாலாயிர திவ்ய ப்ரபந்தம் முழுதுமாகப் பாடப்பட்டு, அரையர்களால் அபிநயமும் பிடித்துக் காட்டப்படும்.  இந்தப் பகல் பத்து உற்சவம் தொடங்குவதற்கு முன்னர் முதன் முதல் திருமங்கை ஆழ்வார் பாடியருளிய திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.  இதுவே வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் ஆரம்பக் கொடியேற்றம் எனலாம்.  இதைத் தொடர்ந்து நடப்பதுதான் புகழ் பெற்ற அரையர் சேவை.  அரையர்கள் என்றால் அரசர்கள் என்னும் சொல்லின் திரிபு எனச் சொல்கின்றனர்.  இவர்களும் அரசர்கள் மகுடம் சூட்டிக் கொள்வதைப் போல் தலையில் பட்டுக்குல்லாய் அணியும் உரிமை பெற்றிருக்கின்றனர்.  அந்தக் குல்லாய்களை அணிந்து கொண்டே அபிநயம் பிடிப்பார்கள்.  அதோடு மட்டுமா?  இந்தப் பட்டுக்குல்லாய், நாம் குலசேகரன் படியில் நுழையும் இடத்தில் உள்ள ஜய, விஜயர்கள் தலையிலும் காணலாம்.  பெருமாளுக்கும் பட்டுக்குல்லாய் அணிவிக்கப்படுவது உண்டு.  கம்பளி போர்த்துவார்கள்.  மழை பெயதால் பெருமாள் நனையாமல் இருக்கத் துணிக்கூடாரம் குடை போல் விரிந்து அவரை மழையிலிருந்து பாதுகாக்கும்.  பெரிய பெருமாளுக்கும் குல்லாய் உண்டு. தாயாருக்கும் குளிரிலிருந்து பாதுகாப்புக் கொடுக்கின்றனர்.

அரையர் சேவையின் அரையர்கள் தங்கள் கைகளில் தாளங்களை ஏந்திக் கொண்டு பாசுரத்தின் பொருள் விளங்குமாறு அபிநயம் செய்தபடியே பாடுவார்கள்.  நடிப்பு, முத்திரைகள், இசை என நுணுக்கமான இந்தக் காட்சியானது பாசுரத்தின் பொருளை அப்படியே மனக்கண்ணில் தோன்றும்படிச் செய்துவிடும்.  பார்ப்பவர்கள் மெய்ம்மறந்து பார்க்கின்றனர்.  பகல் பத்து உற்சவத்தின் பெரும் சிறப்பு இந்த அரையர் சேவை. பத்து நாட்களிலும் தினம் இருமுறை நடைபெறும்  ஒவ்வொரு முறையும் குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெறும்.  அர்ச்சுன மண்டபத்தில் பெருமாள் ஆஸ்தானம் இருந்து அரையர் சேவையைக் கண்டு களித்துக் கொண்டே பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  பாசுரங்கள் புரியாதவர்கள் கூட மனம் ஒன்றிப் போய் ஆழ்வார்களின் உள்ளம் பெருமாளின் கருணையில் தோய்ந்திருந்ததை நன்கு உணரும்படிச் செய்வதே அரையர் சேவையின் மகத்துவம்.

அடுத்தது நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அர்ச்சுன மண்டபத்துக்குப் புறப்பாடு காணுதல்.  சாதாரணமாக எல்லாம் கிளம்பமாட்டார் நம்பெருமாள்.  நல்ல லக்னமாக நிர்ணயிக்கப் பட்ட வ்ருச்சிக லக்னத்தில் தங்கக்குடை பிடித்து முன்னே தீப்பந்தம் ஒளி வீசிச் செல்ல, வாத்தியங்கள் முழங்க ஆண்டாளம்மாள் ரங்கா, ரங்கா என அழைக்க சிம்ம கதியில் செல்வார் பெருமாள்.  பெருமாளைத் தோளுக்கு இனியானில் காண இயலாது.  இதற்கெனத் தனிப் பல்லக்கு உண்டு.  அந்தப் பல்லக்கில் பெருமாளைத் தோளில் தாங்கி வருபவர்களை "ஸ்ரீபாதம் தாங்குவார்" என அழைக்கின்றனர்.  இன்றைய நாட்களில் இது மருவி சீபாதந்தாங்கி என்றாகிவிட்டது.  நம்பெருமாளுக்குத் திரையிட்டு அலங்காரங்கள் செய்து முடித்தவுடன், "அருளப்பாடு ஸ்ரீபாதம் தாங்குவார்" எனக் குரல் கொடுத்து அழைப்பார்கள். ஸ்ரீபாதம் தாங்கிகள் உள்ளே செல்லக் கதவுகள் மூடப்பட்டுப் பின்னர் திறக்கையில் பேரொளிப் பிழம்பாய், அழகான அலங்காரங்களுடன், முகத்தில் குறுநகை விளங்க, கைகள் அபயம் காட்ட வெளிப்படுவார் நம்பெருமாள்.  பார்ப்பவரைப் பித்துப் பிடிக்கச் செய்யும் அலங்காரம்.  மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் அர்ச்சுன மண்டபம் நோக்கிச் செல்வார்.

Monday, December 24, 2012

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!


வைகுண்ட ஏகாதசி குறித்து அனைவரும் அறிவோம். என்றாலும் தெரியாதவர்களுக்காக ஒரு சின்னக் குறிப்பு. நமக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த நாளின் துவக்கம் தான் மார்கழி மாதம். அந்த மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்த நேரம் ஆகும். ஆகவே மார்கழி மாதம் அதிகாலையில் நாம் இறைவனைத் துதிக்கிறோம். அது போலவே தென்பாகத்திலுள்ள பாற்கடலில் யோக நித்திரையில் இருக்கும் மஹாவிஷ்ணுவைத் தேவர்களும் துதிக்கின்றனர். அவர்கள் துதித்த நாளே வைகுண்ட ஏகாதசி நாள் எனச் சொல்லப் படுகிறது. அவர்களின் துதியால் மகிழ்ந்த மஹாவிஷ்ணு தம் யோக நித்திரையிலிருந்து எழுந்து வந்து அவர்களுக்குத் தரிசனம் கொடுத்தாராம். அந்த வாசல் வடக்கே அமைந்திருக்கும். அதுவே வைகுண்ட வாசல் திறந்து மஹாவிஷ்ணு வெளிவந்ததைக் குறிப்பிடும் வண்ணமே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் அன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்கிறது. இந்த ஏகாதசி வந்த விதத்தை அறிவோமா?

முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கு மிகவும் தொந்திரவு கொடுக்க யோக நித்திரையில் இருந்த மஹாவிஷ்ணுவின் மஹாசக்தியான ஏகாதசி என்பாள் வெளிவந்து அந்த முரனைக் கொன்றாள். கண் விழித்துப் பார்த்து அதிசயித்த மஹாவிஷ்ணு, தன் சக்தியான ஏகாதசியைக் கெளரவிக்கும் விதத்தில் இந்நாளில் விரதம் இருந்து ஏகாதசியைப் போற்றுவோருக்குச் சகல நன்மைகளும் கிடைக்கும் என வரமளித்தார். சக்தி விழிப்புடன் இருந்து சரியான நேரத்தில் செயலாற்றியதால் நாமும் நம் சக்தியைப் பயன்படுத்தி விழிப்புடன் (உடல் மட்டுமில்லாமல் ஆன்மிக விழிப்புடனும்) இருந்து விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஏகாதசிகள் ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் வரும், தேய்பிறையிலும் வரும். வளர்பிறை ஏகாதசி 12, தேய்பிறை ஏகாதசி 12 மொத்தம் 24 என்றாலும் நாழிகைக்கணக்குகளினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக வருஷத்துக்கு 25 ஏகாதசிகள்.

எட்டு வயதில் இருந்து எண்பது வயது வரஇ கடைப்பிடிக்கலாம் எனச்ச் சொல்லப் படும் இந்த ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்றே ஒரே வேளை உணவு உட்கொண்டு, அன்றிரவு பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். நாம் இருக்கும் விரதம் வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படும் மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி எனில் அன்று காலை சீக்கிரம் எழுந்து குளித்துக் கோயிலுக்குச் சென்று சொர்க்கவாசல் திறப்பையும், மஹாவிஷ்ணு சொர்க்க வாசல் வழியாக வெளிவருவதையும் பார்த்து வரலாம். அன்று முழுதும் பழங்கள், இளநீர் என்றே சாப்பிட வேண்டும். அரிசி, கோதுமை போன்றவற்றினால் ஆன உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இரவு முழுதும் கண் விழித்து ஹரி நாமம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலை சீக்கிரமாய் எழுந்து குளித்து, ஹரி நாமத்தைச் சொல்லிக் கொண்டே, சுண்டைக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைப் பல்லில் படாமல் உட்கொண்டு பாரணை பண்ணி விரதத்தை முடிக்க வேண்டும். துவாதசி அன்று சீக்கிரம் உணவு உட்கொள்ள வேண்டும். இந்த உணவில் சுண்டைக்காய், அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். விரதம் இருந்ததால் சூடான வயிறும் உடலும் குளுமை பெறுவதற்கும் ஜீரண சக்தியைச் சரியாக்குவதற்கும் இவை உதவும்.

மது, கைடபர்களை அழிக்கப் போரிட்ட விஷ்ணுவிடம் அவர்கள் பணிந்து வணங்கித் தங்களை வைகுண்டத்திலேயே இருக்கும் பாக்கியத்தைக் கேட்டதாகவும், அவ்வண்ணமே அவர்களுக்கு விஷ்ணு அருள் செய்ததாகவும், அப்போது அவர்கள் தங்களுக்குக் கிடைத்த இம்மாதிரியான கருணையை பூலோக வாசிகளுக்கும் காட்டுமாறும், வைகுண்டத்தில் எப்படி வடக்கு வாசல் வழியாக விஷ்ணு வெளி வந்து தேவர்களுக்குக் காட்சி கொடுத்தாரோ, அவ்வண்ணம் பூலோகத்தின் பெருமாள் கோயில்களில் அர்ச்சாவதாரமாக விஷ்ணு வெளி வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தர வேண்டும் என்றும், அவரை வடக்கு வாசல் வழியே வெளி வருகையில் தரிசிக்கும் பக்தர்களுக்கும், அவரோடு தொடர்ந்து வரும் பக்தர்களுக்கும், தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை நீக்கி அவர்களுக்கு முக்தியை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் பூலோகத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்புக்கான காரணத்தைத் தெரிந்து கொள்கிறோம்.  இனி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி குறித்துப் பார்ப்போம். 

Tuesday, December 18, 2012

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வைகுண்ட ஏகாதசியும், அரையர் சேவையும்!


ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித்திருவிழா மிகவும் பிரபலம் ஆனதாகும்.   சிதம்பரத்தில் இதே மார்கழியில் எப்படி திருவாதிரைத் திருவிழா பிரபலமோ அதே போல் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா.  மார்கழி மாதத்தில் அமாவாசை கழிந்து வரும் சுக்லபக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும்.  இவ்வருடம் கார்த்திகை மாதக் கடைசியில் அமாவாசை வந்ததால், மார்கழி மாதம் ஒன்பதாம் தேதியே வைகுண்ட ஏகாதசித் திருநாள் வருகிறது.  ஆகவே கார்த்திகை 28-ஆம் தேதியன்று இரவில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னோட்டமாக கர்பகிரஹத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பித்து நடைபெறும்.  பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சந்தனு மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.  அங்கேயும் திருநெடுந்தாண்டகம் அபிநயமும் வியாக்யானமும் நடைபெறும்.  இதை அரையர் சேவை என்பார்கள். 


இரு பகுதிகளாக நடைபெறும் திருநாளில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து என்றும் அழைக்கப்படும்.  முதல் திருநாளன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் கிளம்பி அர்ச்சுன மண்டபம் வந்தடைவார்.  இந்த மண்டபம் கிளி மண்டபத்தை ஒட்டி மேலே ஏறிச் சென்றால் வந்தடையும்.  துலுக்க நாச்சியார் சந்நிதி இங்கே தான் இருக்கிறது.  இங்கே நம்பெருமாள் சர்வாபரண பூஷிதராகக்  காட்சி கொடுப்பார்.  இவருக்கு முன்னே அரையர்கள் முதலில் நம்பெருமாளைப் பிரதக்ஷிணம் வந்து வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்டு பின்னர் அவர் எதிரே நின்று கொண்டு பாசுரங்கள் பாடி வியாக்யானமும் செய்வார்கள்.  முதலாயிரத்தில் பல்லாண்டு முதல் இரு பாசுரங்களும், அதற்கேற்ற அபிநயமும், வியாக்யானமும், பெரியாழ்வார் திருமொழியின் 212 பாசுரங்களும் பாடப்படும்.

இதைத் தவிரவும் மூலஸ்தானத்தில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பெரிய பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர் முன்னிலையில் அரையர் சேவை திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவைப் பாசுரங்கள்  பாடுதலும் நடைபெறும்.  மூலஸ்தானத்தில்  பெரிய பெருமாளுக்கு முத்தங்கி அணிவித்து சேவை நடைபெறும்.  கூட்டம் இப்போவே தாங்கலை. L இன்னிக்கு அரையர் சேவை பார்க்கலாம்னு கிளம்பிப் போனோம்.  உள்ளே நுழையவே பெரிய வரிசையாக மக்கள் கூட்டம்.  அப்புறமா அங்கிருந்த காவல்துறைப் பெண்மணியிடம் வரிசையில் நிற்க முடியாது எனக் கேட்டு வேண்டிக் கொண்டு ஒரு சிலரைத் தனியாக விட்டுக் கொண்டிருந்த வாயில் வழியே உள்ளே சென்றோம்.  மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளைச் சேவிக்க ஐம்பது ரூபாய்க் கட்டணத்திலேயே ஐநூறு பேருக்கும் மேல் நின்றிருந்தனர்.  ஆகவே பெரிய பெருமாளுக்கு இங்கிருந்தே வணக்கம் சொல்லிட்டு நேரேக் கிளி மண்டபம் நோக்கி நடையைக் கட்டினோம்.  அங்கிருந்து விமான தரிசனம் செய்யும் அர்ஜுன மண்டபத்துக்கு ஏறினோம்.  சிறிது தூரத்தில் நம்பெருமாள் சாய்ந்த கொண்டையோடு அழகாய் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அரையர்கள் அப்போது தான் நம்பெருமாளைப் பிரதக்ஷிணமாக வந்து உத்தரவு வாங்கிக் கொண்டு சேவையை ஆரம்பித்துக் கொண்டிருந்தார்கள்.  படம் எடுக்கலாமா எனத் தெரியவில்லை.  அங்கிருந்த கோயில் பணியாளரைக் கேட்டதுக்குச் சில பத்திரிகைக் காரர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.  செல்லில் எடுக்கலாமா என யோசித்தேன்.  அங்கிருந்து காவல் துறைப் பணியாளர் வேண்டாம்னு எச்சரித்தார்.  செல்லைப் பிடுங்கிடுவாங்கனு சொன்னார்.  ஆகவே அந்த யோசனையைக் கைவிட்டோம். L

ஆனால் சுற்றிச் சுற்றி வந்து நம்பெருமாளை நன்கு சேவித்துக் கொண்டோம்.  பின்னர் சிறிது நேரம் அரையர் சேவையைப் பார்த்துவிட்டுப் பின்னர் வீடு வந்தோம்.  பலத்த போலீஸ் பாதுகாப்பு, சோதனைகள், கெடுபிடி,  ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம்னு ஊரே விழாக்கோலத்தில் இருக்கிறது.  சிதம்பரத்திலும் ஆருத்ரா தரிசனம் சமயத்தில் கூட்டம் வெள்ளமாக இருந்தாலும் அங்கே தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நன்றாக இருந்தன.  மேலும் நடராஜர் வெளியே வரும் பாதையில் எல்லாம் மக்கள் ஒதுங்கி நின்று எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தரிசனம் செய்யும் வண்ணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  இங்கே கோயிலுக்குள்ளேயே நடப்பதால் கூட்டம் தாங்கவில்லை.   ஆனாலும் சமாளிக்கின்றனர்.   கோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழையும் வழி சிறிதாக இருப்பதால் அங்கே எப்போதும் நெரிசலாகவே இருக்கிறது.  

ஆழ்வார்கள் அனைவரும் பெருமாளுக்கு எதிரே பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாசுரத்திற்கான வியாக்யானம் அரையர் சேவையுடன் நாளை  பாடப் படும் எனத் தெரிகிறது.





Thursday, December 13, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 15

ஶ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலின் விமானம் இருட்டில் காட்சி அளிக்கும் கோலம் இது. தீபாவளிக்குப் போனப்போ பெரிய பெருமாளைப் பார்க்க முடியலை.  அதனாலும் இங்கே இப்போது வைகுண்ட ஏகாதசிக்காக விழாக் கோலம் பூண்டிருப்பதாலும், அப்புறமாப் பெரிய பெருமாளைப் பார்ப்பதே ரொம்பக் கஷ்டம்னு எல்லாரும் சொன்னதாலும் நேத்திக்கு மத்தியானம் ஒன்றரை மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம்.  ஶ்ரீரங்கம் கோயில் சேவை நேரங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை.  அது குறித்துத் தனியாக அட்டவணை தருகிறேன். புதுசா வரவங்களுக்குப் பயன்படும்.  ஆனால் மத்தியானம் ஒன்றரை மணியில் இருந்து மாலை ஆறு வரை பெரிய பெருமாள் சேவை சாதிக்கிறார்.  வெயில், கூட்டமும் உள்ளே போனது அங்கேயே காத்திருக்கும்.  ஆகவே கூட்டமும் இருக்கும் தான்.  ஆனால் இந்தச் சமயம் போனாலேயே எல்லா சந்நிதியும் பார்க்க முடியும் என்பதோடு தாயாரையும் சேர்த்துத் தரிசிக்கலாம்.  தாயார் சந்நிதி மூன்று மணிக்குத் தான் திறக்கிறார்கள்.  ஆனாலும் பெரிய பெருமாளைப் பார்த்துக் கொண்டு, சக்கரத்தாழ்வார், மேலப் பட்டாபிராமர்,  போன்றோரையும் தரிசித்துக் கொண்டு போனோமானால் மூன்று மணி ஆகித் தாயார் சந்நிதி திறந்து தாயார் இலவச சேவையே தருவாள்.

நேத்திக்கு நாங்க பெரிய பெருமாளைப் பார்க்கப்போனப்போ ஐம்பது ரூபாய்ச் சீட்டு எடுத்துத் தான் போனோம்.  சுமார் நூறு, நூற்றைம்பது பேர் இருந்தனர்.  ஆனால்  இலவச சேவைக்குக் கூட்டம் நெரிசல் தாங்கலை.  அதிலே ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம்.  உள்ளே  சந்தனு மண்டபம் தாண்டி குலசேகரன் படி அருகே எல்லாரும் ஒன்றாகவே உள்ளே செல்ல வேண்டி இருப்பதால் அவங்க முண்டி அடித்துக் கொண்டு போயிடறாங்க.  இருந்தாலும் சுமார் முப்பது முதல் நாற்பது நிமிஷம் காத்திருந்திருப்போம்.  நேற்றுப் பெருமாளின் அடியிலிருந்து முடி வரை நல்ல தரிசனம் என்றாலும் திருப்பதியிலே ஜரகண்டி என்பது போல் இங்கே சொல்லாமல் பிடித்துத் தள்ளவென்றே ஒரு பட்டரை நிறுத்தி இருக்காங்க.  எல்லாரையும் பிடிச்சுத் தள்ளிட்டு இருக்கார். :(  இதுவே கேரளா என்றாலோ, கர்நாடகா என்றாலோ மக்கள் இப்படிக் கஷ்டப் பட வேண்டாம் என்பதும் மனதில் உறைத்தது.  என்ன செய்ய!  செந்தமிழ் நாட்டில் பிறந்துட்டு இதுக்கெல்லாம் ஆசைப் படலாமா?  சரி, சரி வைகுண்ட ஏகாதசி பத்திச் சொல்ல வந்துட்டு, என் சொந்த, சோகக் கதையைச் சொல்றேனே!

சுமார் 21 நாட்கள், நடைபெறும் இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என இரு பிரிவாக நடைபெறும்.  டிசம்பர்-ஜனவரி மாதங்களுக்கு இடையில் அதாவது மார்கழி-தை மாதங்களுக்கு இடையில் நடைபெறும்.  தீபாவளி கழித்து ஒரு நல்ல நாளில் தென்னை மரத்தின் அடித்தண்டினை இந்த விழாவிற்கான முதற்கம்பமாக நடுவார்கள்.  இந்தப் பந்தல் முழுதும் அமைத்து முடியும் போது 47 கம்பங்கள் இருக்கும்.  மூன்றாம் பிராகாரத்தின் வடகிழக்கு வாசலில், ஆயிரக்கால் மண்டபத்தின் முன்னே அமைக்கப்படும்.  இவற்றோடு சேர்த்தே ஆயிரக்கால் மண்டபத்திற்கு ஆயிரம் கால்கள் என்கிறார்கள்.  இது குறித்து தகவல் விசாரித்துச் சொல்கிறேன்.  அம்மன் சந்நிதிக்கு அருகே இருக்கும் இரண்டாம் பிராகாரத்தின் வடக்கு வாயில் தான் பரமபத வாசல் என அழைக்கப் படுகிறது.  ஆண்டு முழுதும் மூடி இருக்கும் இது வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே திறக்கப் படும். இந்த வடக்கு வாயில் வழியாகவே நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்படுகிறார்.

தொடர்ந்து அதிகாலை நாலே முக்கால் மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ளிருக்கும் திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.  அதற்கு முன்னோடியாக பகல் பத்துத் திருநாள் நாளை டிசம்பர் பதினான்காம் தேதி இந்த வருடம் துவங்குகிறது.  இன்றிரவு பூர்வாங்கமாக ஸ்ரீரங்கநாதரின் மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.  பின்னர் பகல்பத்து உற்சவம் ஆரம்பிக்கும்.  14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடக்கும் பகல் பத்து உற்சவங்களில் தினமும் நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்தை விட்டுக் கிளம்பிக் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் சர்வாலங்கார பூஷிதராக சிறப்பு அலங்காரத்தில் அமர்ந்து சேவை சாதிப்பார்.

அரையர்கள் நம்பெருமாள் முன்னிலையில் திருமொழிப் பாசுரங்களைப் பாடி, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்.


தொடரும்.

Tuesday, December 11, 2012

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 14




அரங்கனைத் தேடிச் செல்பவர்கள் தொடர வசதியாகத் துளசிச் செடிகளைக் கொத்துக் கொத்தாகப் பிய்த்து வழி நெடுகப் போட்டுக்கொண்டே சென்றனர் அரங்கனோடு திருவரங்கத்திலிருந்து கிளம்பியவர்கள் அனைவரும்.  அதோடு மட்டுமில்லாமல் அரங்கனுக்குப் பூசப்பட்ட பரிமள கஸ்தூரியின் வாசனையும் சேர்ந்தே அரங்கன் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்தது.  இந்த விஷயம் தான் அவர்களுக்குக் கவலை அளித்து வந்தது.  இந்த அதிசயமான நறுமணத்தின் மூலம் அரங்கன் இருக்குமிடத்தைக் கண்டு எதிரிகள் பின் தொடர்ந்தால் என்ன செய்வது எனக் கவலைப் பட்டனர்.  எனவே காடுகளுக்குள்ளும், சோலைகளுக்குள்ளுமே புகுந்து சென்றனர்.  அந்நாட்களில் இயற்கை அன்னையின் வளத்தைக் களவாடும் அளவுக்கு மனிதர் துணிய ஆரம்பிக்கவில்லை.  ஆகவே பூமித்தாய் தன் அனைத்து வளங்களோடும் பரிபூர்ண சர்வாலங்கார பூஷிதையாகவே காட்சி அளித்தாள். விரைவில் திருச்சினாப்பள்ளி நகரின் கரையைக் கடந்து அருகிலுள்ள தொண்டைமான் காட்டில் புகுந்தனர்.  அந்நாட்களில் திருச்சிராப்பள்ளி சிறியதொரு நகரம்.  கோட்டையும், அகழியும் இருந்தன.  நகரை அடுத்துக் கழனிகளும் சோலைகளும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணப்பட்டன.
தொண்டைமான் காட்டில் ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்லலாம் என பிள்ளை உலகாசிரியர் முடிவு செய்தார்.


 ஏனெனில் திருவரங்கத்திலிருந்து வேதாந்த தேசிகரும் மற்றப் பெரியவர்களும் வந்து சேர்ந்து கொள்வதாய்ச் சொல்லி இருந்தனர்.  இன்றிரவு இங்கே தங்கினால் அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள்.  பின்னர் நாளை பயணத்தைத் தொடங்கலாம் என நினைத்தனர்.  ஆனால் மறுநாள் பொழுது விடிந்தும் எவரும் வரவில்லை.  எனவே அரங்கனோடு இருப்பவர்களுக்குக் கவலை அதிகரித்தது.  ஆனாலும் இங்கே தங்குவது ஆபத்து என்று புரிந்து கொண்டிருந்தார்கள்.  ஆகவே அங்கிருந்து கிளம்பினார்கள்.  காட்டிலேயே பெரும்பாலும் சென்றனர்.  பிரதான சாலைகளைத் தவிர்த்தனர்.  சுற்று வழியாகவே சென்றனர்.  கூடச் சென்ற மக்களில் வசதி படைத்தோர் பல்லக்குகள், குதிரைகளில் பிரயாணம் செய்தனர்.  கால்நடையாகச் சென்றவர்களே அதிகம். பரிசனங்கள் எனப்படும் கோயில் ஊழியர்கள் முன்சென்று வழிகாட்டுகையிலேயே துளசிக் கொத்துக்களை அவர்கள் பறித்துக் கீழே போட்டுக் கொண்டு சென்றனர்.  பின்னால் பிள்ளை உலகாசிரியரும் அவர் சீடர்களும் மற்ற மக்களும் செல்ல அரங்க்கன் பல்லக்கு அவர்களைத் தொடர்ந்தது.  இரு தினங்கள் இவ்விதம் யாத்திரை செய்தவர்கள் களைப்புத்தாங்காமல் ஓர் இடத்தில் தங்கினார்கள்.

அப்போது வேதாந்த தேசிகரின் சீடர்களில் ஒருவரான “பிரம்ம தந்திர சுதந்திர ஜீயர்” என்பார் கவலையுடன் பிள்ளை உலகாசிரியரை அணுகி வேதாந்த தேசிகர் இன்னமும் வந்து சேரவில்லை என்பதைக் குறித்த தம் கவலையைப் பகிர்ந்து கொண்டார்.  துளசிக் கொத்துக்களைப் பார்த்துக்கொண்டு வந்து சேர்வார்கள் எனத் தாம் நம்புவதாப்  பிள்ளை உலகாசிரியர் கூறி அவரைச் சமாதானம் செய்ய எச்சரிக்கை முரசு அடித்தது.  திடுக்கிட்ட அனைவரும் அரங்கனைப் பல்லக்கோடு மறைத்துவிட்டுப் பார்க்க, வந்தவ்வர்கள் ஸ்ரீரங்கத்து வாசிகளான சில நண்பர்களே. அவர்கள் போர் மூண்டு ஸ்ரீரங்கம் எதிரிகள் கைகளில் சிக்கிக் கோயிலிலும் 12,000-க்கும் மேற்பட்ட அந்தணர்கள் உயிர் விட்டதையும், பல பெண்கள் அரங்கன் சேவையைத் தவிர வேறொன்றும் அறியாப் பெண்கள் எதிரிப்படைகளால் பிடித்துச் செல்லப்பட்டதாகவும், அரங்கனுக்குத் தவிர மற்றவருக்கு ஆடியோ, பாடியோ காட்டாத பெண்களைத் துன்புறுத்தி தங்களுக்காக ஆடும்படியும், பாடும்படியும் செய்வதையும் கூறிவிட்டு, அழுது கொண்டே தாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறி வருந்தினார்கள். 


அவர்களில் சொந்த சொத்துக்கள் பறிபோனதால் கவலைப்படுவதாக நினைத்த மற்றவர்கள் அவர்களைச் சமாதானம் செய்ய அவர்களோ, அரங்கமே எரிந்து போனதை நினைத்துத் தாங்கள் வருந்துவதாய்க் கூறிவிட்டு, பேரழகு வாய்ந்த திருவரங்க நகரம் இன்று விதவைக் கோலம் பூண்டு கழுகுகளும், ஓநாய்களும் திரிந்து கொண்டிருக்கக் காணப்படுவதாய்க் கூறினார்கள்.  இவற்றைக் கேட்ட பிரம்மதந்திர ஜீயர் தம் ஆசானுக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலையில் திருவரங்கத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.  இங்கே இருந்தவர்களுக்கு அவரைத் திரும்ப அழைத்து வருவது பெரும் பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது. ஆனாலும் அதையும் மீறிக்கொண்டு ஓட ஆரம்பித்த அவர் கண்களில் இருந்து தாரையாய்க் கண்ணீர் மழை பொழிந்தது.  இதைக் கண்ட பிள்ளை உலகாசிரியர், திகைத்துப் போய் அரங்கா, இதுவும் உன் சோதனையோ எனக் கலங்கி நின்றுவிட்டார்.


மனம் தளர்ந்த உலகாசிரியரைத் தேற்றிய கூரகுலோத்தமதாச நாயனார் என்பவர் அவர் நம்பிக்கையும், தைரியமும் கொண்டு விளங்கினாலேயே மற்றவர்களும் அந்த நம்பிக்கையும் தைரியமும் இழக்காமல் இருப்பார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அவரை மேற்கொண்ட பயணத்துக்குத் தயாராக்கினார்.  தில்லிப் படைகள் காட்டுக்குள்ளேயும் அரங்கனைத் தேடி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் மேலோங்க அந்த ஊர்வலம் அந்த இடத்தை விட்டு அகன்றது.  மாலை மயங்கும் நேரம்.  காட்டினிலே தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள் அரங்கனோடு பயணித்தவர்கள்.  பிள்ளை உலகாசிரியர் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரெனக் காட்டிலிருந்து திடு திடு வென சப்தங்கள்.  சுற்றிலும் சூழ்ந்திருந்த காட்டுச் செடிகளும், மரங்களும் அசைந்தன.  மனிதர்கள் காலடி சப்தங்கள்.  தங்களுடன் வந்தவரல்லாது வேறு யார் இங்கே வந்திருப்பார்கள்?  திகைத்த கூட்டம் சுற்றிச் சுற்றிப் பார்க்கக் கைகளில் தூக்கிப் பிடித்த ஈட்டிகளோடும், வாள்களோடும் ஒரு சிறு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  நீண்ட கொடிய மீசைகளோடும், ஆஜாநுபாகுவாகவும், திரண்ட புஜங்களோடும் காணப்பட்ட  அவர்கள் கள்ளக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  சில கணங்களிலேயே அனைவருக்கும் புரிந்து விட்டது.  அந்த நாட்களில் தொண்டைமான் காடும், அதன் சுற்றுப்புறங்களும் கள்ளர் கூட்டங்களுக்குப்பெயர் பெற்றிருந்தது.  அத்தகையதொரு கூட்டத்திலேயே அவர்கள் மாட்டிக் கொண்டார்கள். 

என்ன செய்யப் போகிறார்கள்?