![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgntZEKDRdx9QK3Jm9gKGarpICYGLVZLax8EuneZa19Qri3JGKEgIaTYCvO6IrWarhXAxYT0rFZY6ugRpaSV3liROpzd28h3LSrBNcvZObEiPhTfM9DQfRXAcVF1zGlt4NgUTxdzA/s320/GOCA9Q8MTFCAFE0Y0LCA9H6UBFCAHQVRKQCADI9XX2CAET3QCACAP30OFBCAZLL3YICA315J66CA3VCKZUCA695LH2CA3S82BLCAMEWM06CAL9X4NYCAER8T7JCAAPW063CAFHJ3D6CAJ5ON48.jpg)
ஹிரண்யனுக்காக நரசிம்ம அவதாரம் எடுக்கத் தன்னிடத்தை விட்டு ஸ்ரீமந்நாராயணன் வந்ததால் அவர் பிரிவைத் தாங்க முடியாமலும், அவருக்குச் சேவை சாதிக்க முடியாமலும் தவித்த கருடாழ்வார் அவர் இருக்குமிடம் தேடி வந்தார். நரசிம்மமோ? ஒளிந்து வேடிக்கை காட்டியது. தன் பக்தனுக்காக க்ஷண நேரம் கூடத் தாமதிக்காமல் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்ட நரசிம்மத்தின் பெருமையை உணர்ந்த கருட பகவான், தானும் அவரைத் தரிசிக்க வேண்டிப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை மட்டும் போதாது என உணர்ந்து தவம் இருக்க ஆரம்பித்தார். கருடன் தவம் இருந்த மலையே கருடாத்திரி எனவும் கருடாசலம் எனவும் அழைக்கப் படுகின்றது. வேதாத்திரி மலையின் ஒரு பக்கம் இருந்து எதிரே நோக்கினோமானால் கருடனின் மூக்கும், இருபக்கமும் விரிந்த சிறகுகள் போல மலைச் சிகரங்கள் இருப்பதையும் காணலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4VJmTgy1C8No1BXt3NWnqiqc7sHE3pFoDzQUQL5TAbCk8d5QGUvc8v1qr6aI7sEEr8wG06kkdwy4Eg7Ejro2x5kxU_SxxhDpsLG6w4-DvZtwHaA6M4Fz2yzktIWkiOljZsylFOw/s320/imagesahobilam+kize.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2wmMVw33ZFiP0eAYPUIVjfQSoszh3GRaNQ6G1ATLdYmMuFKxvanhUTLtjU-4FVpLFFUfg7xx3z8FP4PcNM4e8Nq5TMsDLrlZ8yZPAF9HbwGC6Wbd45NS9uXmDd9x9FvPpKXr50w/s320/images.jpg)
இறைவன் தன் பக்தனுக்காக விரும்பி எடுத்த வடிவம் நரசிம்ம வடிவம். அதனாலேயே சிங்கவேள் எனத் தமிழில் சொல்லுகின்றனர். சிங்கமாய் விரும்பி வேட்கையுடன் வந்த குன்றம் இது என்பதாலும் சிங்கவேள் குன்றம் எனப் பெயர் ஏற்பட்டதாய்த் தெரிய வருகின்றது. மேலும் ருத்ர ரூபமாய் மட்டுமே அறிந்த நரசிம்மரின் வேறு பல தோற்றங்களையும் கொண்டது இந்த நவநரசிம்மர்களின் சந்நிதிகள். கீழ் அஹோபிலத்தில் பிரஹலாத வரதரின் ஆலயம். மேல் அஹோபிலத்தில் (இதற்குப் பேருந்து, கார், வேன்கள் செல்லும்) மலைச்சாரலில் ஆலயம் அஹோபில நரசிம்ம ஆலயமாகப் பிரதான ஆலயமாய் இருக்கின்றது. மலைச்சாரலில் அதன் மடிப்புகளில் ஒளிந்துள்ள மறைவான குகைப் பகுதிகளிலேயே மற்ற நரசிம்மர்களின் ஆட்சி நடந்து வருகின்றது. மேல் அஹோபிலம் வரையிலும் தனியார் வாகனங்கள் அல்லது பேருந்துகளில் செல்லமுடியும். அதன் பின்னர் நம்மை அந்த நரசிம்மரே அழைத்துச் செல்லவேண்டும்.
2 comments:
அஹோபிலம் ஸ்ரீ அழகிய சிங்கர் மடம் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டுகிறேன்.
மடம் பத்தி இன்னிக்கு எழுதிடறேன் மெளலி.
நன்றி விஜி, தங்கள் வரவுக்கு.
Post a Comment