எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, March 08, 2019

குலசேகரன் செய்த முயற்சிகள்!

தான் செய்த மாபெரும் தவறால் அவதிப்படும் திருவண்ணாமலை மக்களுக்கும் ஹொய்சளமன்னர் வல்லாள தேவருக்கும் தான் ஏதாவது செய்து பரிகாரம் தேட வேண்டும் எனக் குலசேகரன் நினைத்தான். யோசித்து அவனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. எதற்கும் முதலில் கோட்டைக்குள் போக வேண்டும். அதற்கு ஓர் வழி கண்டு பிடித்தாகவேண்டும். குலசேகரன் இருட்டாக இருந்தபோதிலும் மரம், செடி, கொடிகளுக்கிடையே மறைந்தே மெல்ல மெல்லநடந்து சென்றான். சுல்தானியர்கள் தண்டு இறங்கி இருந்த பாசறைக்கு அருகே கிட்டத்தட்ட அவன் வந்து விட்டான். அவன் நடந்து சென்று கொண்டிருந்த பாதையிலிருந்து சிறிது தூரத்தில் அவர்கள் கூடாரங்கள் தென்பட்டன.ஆங்காங்கே சிறு அடுப்புகள், பெரிய அடுப்புகள் என மூட்டப்பட்டு உணவு தயாராகிக் கொண்டிருந்தது. வீரர்கள் தங்களை இங்கே வந்து எதிர்ப்போர் யாரும் இல்லை என்பதால் சற்று விச்ராந்தியாகவே பேசிக் கொண்டும், ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டும் இருந்தார்கள்.

கூடாரங்களுக்கு வெளியே ஆங்காங்கே சிறு சிறு கடைகள் முளைத்திருந்தன. அவற்றில் உள்ளூர் வியாபாரிகள் சிப்பாய்களுக்கு வேண்டிய தானியங்கள், காய்கள், பழங்கள், பூக்கள் எனக்கொண்டு வந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். இந்தச் சமயம் தான் தாங்கள் சம்பாதிக்க முடியும் என்பதால் வியாபாரிகள் அங்கே கூடி இருந்தனர். ஊழியர்களை வைத்து பேரம்பேசி வியாபாரங்கள் நடந்து கொண்டிருந்தன. இவை எல்லாம்போதாது என்னுமளவுக்கு இன்னொரு பக்கம் ஆயுதங்களும் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன.  இதை எல்லாம் பார்த்த குலசேகரனுக்கு உள்ளூர மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைத்தான். சற்று யோசித்தவன் அங்கிருந்த வியாபாரிகளின் ஊழியர்கள் அணிந்திருந்த உடைமுறைகளைக் கவனித்துக் கொண்டான்.சற்று மறைவாகப் போய்த் தன் உடையையும் அவ்வாறே மாற்றிக் கொண்டு ஓர் ஊழியனைப் போல் தலையில் பாகையும் கட்டிக் கொண்டான்.

அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் நடுவில் அவனும் கலந்து கொண்டு, அங்கே நடப்பனவற்றைக் கவனித்துக் கொண்டு அதே போல் அவனும் செய்ய ஆரம்பித்தான். ஓர் ஊழியன் போலவே நடந்து கொண்டு அங்கே இருந்த வியாபாரிகளில் ஒருவருக்காக அவன் சின்னச் சின்ன மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு சுல்தானிய வீரர்கள் பக்கம் சென்று அவர்கள் பக்கமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மறுபடி வியாபாரியிடம் வந்து அதைக் கொடுத்து எனச் செய்து கொண்டிருந்தான். அங்கிருந்த ஒரு வியாபாரியின் நன்மதிப்பையும் குலசேகரன் சிறிது நேரத்தில் பெற்றுவிட்டான். மேலும் இருட்டத் தொடங்கவே வியாபாரம் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது.  வியாபாரிகள் அன்றைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு மிச்சம் இருக்கும் பொதிகளைக் கழுதைகள், மாடுகளின் மேல் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த தங்கள் கூடாரங்களுக்குள் சென்று இளைப்பாற ஆரம்பித்தனர்.

அவர்களில் நங்கூரான் என்பவனிடம் தான் குலசேகரன் ஊழியம் செய்தான். சிறிது நேரத்திலேயே அவரிடம் நன்மதிப்பையும் பெற்று விட்டான்.  நங்கூரானுக்கு வயது நிறைய ஆகி இருந்ததோடு காலில் ஏதோ ஆறாத காயத்தினால் ரணமாகவும் இருந்தது. ஆகவே நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தார்.  மற்றவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். அவருடன் இருந்த மற்ற நான்கு ஊழியர்களும் அவ்வளவு திறமையாக வியாபாரம் செய்யவில்லை. அவருடன் ஒத்துழைக்கவில்லை. ஆனால் குலசேகரன் அவரது குழுவுடன் அங்கே சென்று கலந்து கொண்டு தன் திறமையால் அவருக்கேற்றபடி நடந்து கொண்டு அவருக்கு லாபம் வரும்படியாக வியாபாரங்களைச் செய்து கொடுத்தான். ஆகவே அவர் குலசேகரனைத் தன்னுடன் நிரந்தரமாகத் தங்கும்படி கேட்டுக் கொண்டார். தன்னுடைய கூடாரத்துக்கும் அழைத்துச் சென்றார். அங்கே சென்றதுமே அலைச்சல் மிகுதியால் நங்கூரான் படுத்துத் தூங்கி விட்டார்.  அவர் தூங்கும் வரை காத்திருந்த குலசேகரன் மெதுவாக எழுந்து கொண்டு அங்கிருந்து நழுவி மேற்குத் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மேலே செல்லச் செல்ல மக்கள் நடமாட்டம், சப்தங்கள் எல்லாம் குறைந்து விட்டன.  கனத்த இருட்டு எங்கும் போர்த்தி இருந்தது. அங்கிருந்து சற்று தூரத்தில் அந்த இருட்டில் கோட்டையின் அரண் ஓர் மலையைப் போல் உயர்ந்து காணப்பட்டது.  நீள நெடுகப் படர்ந்திருந்த ஓர் கரும் பூதத்தைப் போல் அது காட்சி அளித்தது. அரணுக்குக் கீழே அகழி! அகழி நிறைய நீர் ஓடிக் கொண்டிருந்தது. அகழி ஆழமாக இருக்கும் என்பதைக் குலசேகரன் உணர்ந்திருந்தான். அதோடு இல்லாமல் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த முதலைகளை இப்போது அகழியில் விட்டிருப்பார்கள். எனவே நீந்திக் கடக்க முடியாது. அதோடு தண்ணீரில் நீந்துகையில் சப்தம் கேட்கும். அகழிக்கு அடுத்து வேறு ஏதும் மறைப்புக்களே இல்லாமல் வெகு தூரத்துக்கு வெகு தூரம் வெட்டவெளியாகவே காட்சி தந்தது. பிறர் கண்களில் படாமல் மறைந்து செல்வது கடினம்.  ஒரு சின்னச் செடி கூட இல்லை.எவ்விதமான நகர்வும் கோட்டையில் இருப்பவர்களுக்கு அங்கிருந்து இந்த வெட்டவெளியைக் கண்காணிக்க முடியும். ஆகவே சுல்தானியப் படைகள் அங்கே வந்தால் முதல் தாக்குதல் கோட்டையிலிருந்து தான் வரும். அதனாலும் சுல்தானியப் படைகள் சற்றுத் தள்ளியே தண்டு இறங்கி இருந்தார்கள்.

1 comment:

Anuprem said...

காட்சிகள் கண்முன் விரிகின்றன...