எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, March 09, 2019

ஆபத்தான நிலைமையில் கிருஷ்ணாயியும், இளவரசனும்!

மெல்ல மெல்ல வெளிச்சத்தில் இருந்து மறைந்து கொண்டும், இருட்டில் வேகமாக நடந்தும் குலசேகரன் கோட்டை அரணுக்குக் கொஞ்சம் சமீபமாக வந்து விட்டான். ஆனால் எதிரே வீரர்கள் கண்காணிப்புப் பணிகளில் குதிரை மீது அமர்ந்த வண்ணம் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அதோடு இல்லாமல் தூரத்தில் தெரிந்த கோட்டை வாசலுக்கு நேர் எதிரே ஓர் சுல்தானியப் படையும் அணி வகுத்து எந்நேரமும் தாக்கத் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவையும் தாண்டிக் கொண்டு தான் அங்கே செல்வது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதைக் குலசேகரன் நன்கு தெரிந்து கொண்டான். என்ன செய்வது என யோசித்த வண்ணம் அங்கேயே தயங்கிச் சுற்றிச் சுற்றி வந்தான். அப்போது கொஞ்ச தூரத்தில் தெரிந்த தாழைப்புதரில் ஏதோ சலசலப்பு! நடமாட்டம் போல் தெரிந்தது.

அந்தத் தாழைப்புதர் மேலே பெரிதாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருந்தபடியால் அதன் அருகே சென்றதும் எதுவும் முதலில் தெரியவே இல்லை. எச்சரிக்கையாக வாளை உருவிக்கொண்டு மெல்ல மெல்லச் சென்ற குலசேகரனுக்கு அந்தத் தாழைப்புதர் மேலே கூடிக் கொண்டு பந்தல் போல் காட்சி அளிக்க நடுவே ஓர் வாயில் போன்ற துவாரம் காணப்பட்டதைக் கண்டான். அவசர காலத்துக்கு ஒளிந்து கொள்ள உதவும் என மனதுக்குள் நினைத்தவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏதோ மனிதக் குரல் அங்கே இருந்து கேட்டது. அதுவும் விசித்து விசித்து அழும் சப்தம். உற்றுக் கவனித்த குலசேகரன் காதுகளில் இப்போது எதுவும் விழவில்லை. என்றாலும் உடனே
"யார் அங்கே!" என்று சன்னமான குரலில் அந்தப் புதரின் நுழைவாயில் அருகே தலையை நுழைத்துக் கொண்டே கேட்டான் குலசேகரன். அமைதி! எந்தவிதமான பதிலும் இல்லை. சற்று யோசித்த குலசேகரன் அங்கிருந்து தான் செல்வது போல் போக்குக் காட்டி சப்தங்கள் செய்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று சற்றுத் தூரத்தில் சென்று நின்றவண்ணம் மறைவாக இருந்து கொண்டு எட்டிப் பார்த்தான்.

உடனடியாக எதுவும் நிகழவில்லை. கிட்டத்தட்டக் குலசேகரனின் பொறுமை முழுவதும் போய் அவன் அங்கிருந்து செல்லலாம், எல்லாம் தன்னுடைய பிரமை என நினைத்த சமயம் அந்தப் புதருக்குள் இருந்து ஓர் உருவம் மெல்ல மெல்ல வெளி வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தது.  உடனே குலசேகரன் அதன் மீது பாய்ந்தான். "யாரது!" என்று கேட்ட வண்ணம் ஓடோடி வந்தான். ஆனால் அந்த உருவம் உடனே மிரண்டு பயந்து கொண்டு அந்தப் புதரின் நுழைவாயில் வழியாக உள்ளே சென்று விட்டது! அதன் நடை, உடை, பாவனைகள் மூலம் அது ஓர் பெண் என்பதைக் குலசேகரன் அதற்குள்ளாகப் புரிந்து கொண்டிருந்தான். யாரோ ஓர் பெண் கோட்டைக்கு உள்ளே சென்றிருக்க வேண்டியவள், எதிரிகளின் அணி வகுப்பைப் பார்த்து மிரண்டு போய் உள்ளேயும் போகத் தெரியாமல் தப்பியும் செல்ல முடியாமல் அங்கே ஒளிந்திருக்கிறாள் என்பதைக் குலசேகரன் கண்டு கொண்டான். பாவம்! எத்தனை நாட்களாகக் காத்திருக்கிறாளோ!

ஆகவே உடனே அந்தத் தாழைப்பந்தல் அருகே சென்று தணிந்த குரலில் குலசேகரன், "தாயே, நீங்கள் யார்? உண்மையைச் சொல்லுங்கள்! என்னால் இயன்ற உதவியைச்செய்கிறேன். நான் உங்கள் நண்பன் தான்!" என்றான். ஆனால் பதிலே வராமல் அந்தப்பெண்ணின் விசும்பல் மட்டுமே கேட்டது. பதில் ஏதும் வரவில்லை. குலசேகரன் மீண்டும், "அம்மணி, நானும் ஹொய்சளன் தான். அந்த வீரர்களில் ஒருவன் தான்! என்னை நம்புங்கள்! நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்கள்! உங்களுக்கு நான் எந்த வகையில் உதவ வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்." என்றெல்லாம் குலசேகரன் பலவிதமாகப் பேசவும் அந்தப் பெண் கொஞ்சம் மனம் மாறி வெளியே வந்தவள் குலசேகரனிடம், "நீர் யார்? உம் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்?" என்றெல்லாம் விசாரித்தாள். அதற்குக் குலசேகரன் மறுமொழியாக, "அம்மணி! என் பெயர் குலசேகரன்! நான் அரங்கனைக் காப்பாற்றுவதற்காக......." என்று சொல்ல ஆரம்பிக்கையிலேயே, "சுவாமி! சுவாமி! தாங்களா!" என்று புலம்பிக்கொண்டு அந்தப் புதரில் இருந்து ஓடி வந்த ராணி கிருஷ்ணாயி குலசேகரனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

உள்ளிருந்து வந்தது கிருஷ்ணாயி தான் என்பதை நன்கு புரிந்து கொண்ட குலசேகரன்,"இதென்ன ராணி! தாங்கள் இங்கே எப்படி? என்ன ஆயிற்று? ஏன் தன்னந்தனியாக மாட்டிக் கொண்டீர்கள்?" என்று கேட்டவண்ணமே அவள் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான். ஆனால் அவளோ பிடியை விடாததோடு இன்னமும் இறுக்கிக் கொண்டு, "சுவாமி! சுவாமி! ஒரு வாரமாக இங்கே இருக்கிறேன். அதுவும் உணவும் நீரும் இல்லாமல்! நான் மட்டும் இல்லை சுவாமி! உங்கள் மகன், உங்கள் அருமை மகன்! அவனும் என்னோடு பட்டினி இருக்கிறான்! புலம்புகிறான்! எந்நேரமும் அவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்னும் கலக்கத்தில் நான் இருக்கிறேன்!" என்று சொல்லிப் புலம்பினாள். வாய் விட்டு அழுதாள்.  குலசேகரனுக்கு உள்ளுக்குள் அவள் கூறிய உறவு முறையைப் பாராட்டுவதில் சம்மதம் இல்லை. ஆனால் இது ஆபத்துக்காலம். அகப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு பெண்! அதுவும் ஒரு சிறுவனோடு! அந்தச் சிறுவனோ ஓர் ராஜ்யத்துக்கு வாரிசாக ஆகப் போகிறான்.இப்போது நாம் இதை எல்லாம் நினைக்கக் கூடாது.

இப்படி எல்லாம் சிந்தித்த குலசேகரன் அவள் மேலும் அந்தச்சிறுவன் மேலும் இரக்கம் கொண்டவனாய் கிருஷ்ணாயி வழிகாட்ட அந்தத் தாழைப்புதர்ப் பந்தலுக்குள் நுழைந்தான்.  உள்ளே வெறும் தரையில் அந்தச் சிறுவன் கிடந்ததையும் அவன் குற்றுயிராக இருந்ததையும் கண்டான். அதோடு இல்லாமல் அவன் புலம்பினாலோ, கத்தினாலோ வெளியே குரல் கேட்காமல் இருப்பதற்காகத் தன் மேல் துணியால் கிருஷ்ணாயி அந்தச் சிறுவனின், ஹொய்சள இளவரசனின் வாயை நன்கு அடைத்திருந்தாள். சிறுவன் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தான்.மிக ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட குலசேகரன் மேலே என்ன செய்யலாம் என யோசித்த வண்ணம் கண்களில் தானாகப் பெருகிய கண்ணீருடன் அந்தச் சிறுவனை எடுத்துத் தன் மடியில் சார்த்திக் கொண்டான்.

1 comment:

Anuprem said...

பழைய பதிவுகளை படிக்க வேண்டும் ...

இவர்கள் உறவு முறை அறிய ...இடையில் படிக்க ஆரம்பித்ததால் வந்த குழப்பம் எனக்கு ...