எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 31, 2019

அரங்கனைக்காணச் செல்வோம், வாரீர்!


அரங்கன் மேல்கோட்டையில்

மேலுள்ள சுட்டியில் தான் நாம் கடைசியாக நம்மாழ்வார் அரங்கனைப் பிரிந்த நிகழ்வு குறித்தும், அரங்கன் மேல்கோட்டை சென்று அங்கே செலுவநாராயணர் கோயிலில் சகல சௌகரியங்களோடும் தங்கி இருந்ததையும் குறித்துக் கண்டோம். நாம் அரங்கனைப் பிரிந்து வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. அவன் நிலை இப்போது என்ன என்பதைக் காண்போமா?

மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்தில் செலுவப்பிள்ளையின் திருக்கோயிலில் குடி போன அரங்கன் அயல் ஊருக்கு ஓர் அநாதை போல் வந்ததை நினைவூட்டுவது போல மிக எளிமையாக அன்பர்களால் செய்விக்கப்பட்ட தினப்படி வழிபாடுகள், வாராந்தர, மாதாந்திர, வருடாந்தர உற்சவங்களை எளிமையான முறையில் கொண்டாடவைத்து அனைவரையும் கண்டருளிக் கொண்டிருந்தார்.  திருவரங்கத்திலிருந்து புறப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்டவர்களில் இப்போது ஐந்து பேர் தான் மிஞ்சி இருந்தனர். அவர்களில் மூன்று பேர் ஒருவருக்கொருவர் உறவினர்களான கொடவர்கள். அநேகமாகக் குடகுப் பகுதி மக்கள் கொடவர்கள் என அழைக்கப்பட்டிருக்கலாம். மற்ற இருவர் அரங்கனுக்கு நித்ய சேவை செய்யும் கைங்கரியக்காரர்கள்.

இவர்கள் அரங்கன் மேல் தாளாத பாசம் கொண்டு மிகுந்த விசுவாசத்துடனும் பக்தியுடனும் சேவை செய்து வந்தனர். அப்போது அவர்களுக்கு ஹொய்சள மன்னர் சுல்தானியப் படைகளை வென்ற விஷயம் சிறுகச் சிறுகப் பரவி அவர்கள் காது வரையில் வந்து விட்டது! இதைக் கேட்ட ஐவரும் மிகவும் மனம் மகிழ்ந்து ஆடிப்பாடிக் கொண்டு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபட்டனர். மறுநாள் காலையில் மேல்கோட்டை வீதியில் ஓர் சூரியன் உதித்தது. பேரொளி தோன்றியது. கூர்ந்து நோக்கிய ஊர்க்காரர்கள் அந்த ஒளி பொருந்திய முகத்தைக் கொண்டவர் வேறு யாருமில்லை, வேதாந்த தேசிகர் என்பதைக் கண்டு கொண்டார்கள்.  வேதாந்த தேசிகருக்கு அப்போது எழுபது பிராயம் தாண்டி விட்டிருந்தது. தும்பைப் பூவைப் போல் நரைத்த சிகையுடனும், ஒளி பொருந்திய கூர்மையான பார்வையைக் கொண்ட கண்களுடனும் இரு இளைஞர்கள் உடன் வர அவர்களுடனே தன் மகனான வரதாசியா என்பவனும் கூட வர வந்து கொண்டிருந்தார்.

அந்த இரு இளைஞர்களும் வேறு யாரும் இல்லை. திருவரங்கத்தில் நடைபெற்ற கலவரத்தில் வெட்டுக்காயம் பட்டு இறந்து போன சுதர்சன பட்டரின் மைந்தர்களே ஆவார்கள்.  இங்கே பார்க்கலாம் அந்தச் சிறுவர்கள் குறித்து எழுதி இருப்பதை! தேசிகர் அந்தக் குழந்தைகள் இருவரையும் தம் மகன்களைப் போலவே பாவித்து வளர்த்து அவர்களுக்கு எல்லாவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் வித்தைகளையும் கற்றுக் கொடுத்து அவர்களோடு சேர்த்துத் தன் மகனையும் ஓர் ஞானக் களஞ்சியமாகவே மாற்றி இருந்தார். திருவரங்கம் பாழ்பட்ட பின்னர் அரங்கன் கூட்டத்தார் போட்ட துளசிச் செடிகளைப் பின் தொடர்ந்து வந்த வேதாந்த தேசிகருக்குச் சில நாட்களில் காற்றினால் துளசிச் செடிகள் இடம் மாறிப் பறக்கவே அரங்கனைத் தொடர இயலவில்லை. ஆகவே வழி பிசகிப் போனார். காடுகளில் திரிந்து அங்கும் இங்குமாக அலைந்து கடைசியில் தம்முடைய சீடர்களில் ஒருவரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயரைச் சந்தித்துக் காவிரிக்கு ஓரமாக மேற்குத் திசையில் ஹொய்சள ராஜ்ஜியத்தை அடைந்து அடைக்கலம் பெற்ற கதையை ஏற்கெனவே பார்த்தோம்.
இங்கே

இங்கே

அவர் தங்கி இருந்தது உண்மையில் கொங்கு நாடு எனப்படும் பிரதேசம். தற்போதைய கோவை மாவட்டமும் அதைச் சேர்ந்த பகுதிகளும் அந்தக் காலங்களில் கொங்கு நாடு என அழைக்கப்பட்டது. அங்கே தான் சத்தியமங்கலம் என்னும் ஊரில் தேசிகர் தன் மனைவி, பிள்ளை, சுதர்சன பட்டரின் இரு பிள்ளைகள் ஆகியோருடன் அடைக்கலம் பெற்றுத் தங்கி இருந்தார். கொங்கு நாடு அந்தக் காலத்தில் ஹொய்சளர்களின் ஆட்சிக்குக் கீழே இருந்து வந்தது. ஆகவே எவ்விதமான தொந்திரவும் இல்லாமல் தமது வாழ்க்கையை வேதாந்த தேசிகர் கழித்து வந்தார். தோத்திரங்கள், தத்துவ விளக்கங்கள் என எழுதிக் குவித்த அவர் இப்போது காவியங்களை இயற்ற ஆரம்பித்திருந்தார். அப்போது "யாதவாப் யுதயம்" என்னும் காவியத்தை இயற்றிக் கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு அரங்கன் மேல்கோட்டையில் அடைக்கலம் பெற்றுத் தங்கி இருக்கும் விஷயம் கேள்விப்பட்டார். உடனே அரங்கனைத் தரிசிக்கத் தன் பிள்ளையையும், சுதர்சன பட்டரின் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்தவர் தான் அன்று காலை மேல்கோட்டையின் வீதிகளில் சூரிய ஒளி புறப்பட்டு வந்தாற்போல் அனைவருக்கும் காட்சி கொடுத்தார்.

No comments: