எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, May 18, 2019

மீண்டும் மேல்கோட்டையில் அரங்கன்!

குலசேகரனின் பிரிவை எண்ணி எண்ணி வருந்திய வாசந்திகா ஒருவாறு சமாதானம் அடைந்தாள். இம்மாதிரிக் குலசேகரனைச் சந்திக்க நேர்ந்ததிலும் அவள் தனக்குச் சாதகமாக ஒன்றை அவனிடம் கேட்டுப் பெற்று விட்டாள். ஆகவே அவள் அதிலே சந்தோஷம் அடைந்திருந்ததால் குலசேகரன் உயிரோடும், உடலோடும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தாள். அவன் சடலத்தைத் தானே எரியூட்ட வேண்டும் என்பதையும் அவள் மறக்கவில்லை. உடலை மெதுவாக வெளியே கொண்டு வந்து ஈரமில்லாமல் மேடாக இருக்கும் பகுதியில் கிடத்தி அங்கே இங்கே சுற்றி அலைந்து தழைகளையும் ஓரளவு ஈரமில்லாமல் இருக்கும் மரக்கட்டைகளையும் கொண்டு வந்து அவன் உடல் மேல் அடுக்கினாள். ஓர் மாபெரும் வீரனுக்கு இத்தகையதொரு விடை கொடுப்பது கொடுமை தான். ஆனால் வேறென்ன செய்ய முடியும்! அரணிக்கட்டைகளைத் தேடி எடுத்து வந்து கடைந்து தீ மூட்டிக் குலசேகரன் உடலுக்குத் தீ வைத்தாள் வாசந்திகா.

இனி அரங்கனை மீண்டும் மேல்கோட்டையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு அவளுக்கு இருக்கிறது. ஆகவே மறுநாள் காலையில் குளித்து முடித்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு தன் மார்போடு அணைத்த வண்ணம் மீண்டும் சத்திய மங்கலம் நோக்கிச் சென்றாள். விதவைக் கோலத்தில் ஓர் பெண் கையில் ஓர் விக்ரஹத்தை ஏந்திச் சென்று கொண்டிருந்ததை அனைவரும் அதிசயமாகப் பார்த்தார்கள். வாசந்திகா தன் நிலைமையை எண்ணினாள். அவள் வாழ்க்கையில் முதல் முறை பார்த்த ஆண் மகன் குலசேகரன் தான். அவனை மணந்து நிம்மதியாய் இருக்கலாம் என்னும் அவள் எண்ணம் சீர் குலைந்தது. அதற்கேற்றாற்போல் அவள் சுல்தானியர்களால் சூறையாடப் பட்டாள். ஆனாலும் குலசேகரனிடம் அவள் கொண்ட காதல் மறைய வில்லை. ஆகவே குலசேகரன் அரங்கனைக் கண்டதும் புத்துணர்வு பெற்றிருந்த சமயத்தில் அவனிடம் தன் ஆசையைத் தெரிவித்தாள். முதலில் தயங்கிய குலசேகரன் பின்னர் அரங்கன் திருவுளம் இதுதான் என நினைத்து அவளை அரங்கன் திருமுன்னர் காந்தர்வ விவாஹம் செய்து கொண்டான். நாடு அமைதியான காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளை இப்போது கடைப்பிடிக்க இயலாது என்பதைக் குலசேகரன் அறிந்திருந்தான். ஆகவே வாசந்திகாவின் இந்த விருப்பம் நிறைவேறட்டும் என எண்ணித் திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவள் விரும்பிய வண்ணம் அவளோடு ஓர் கணவனாக இணையவும் செய்தான்.  அதன் அடையாளம் தன்னுள் ஓர் கருவாக வளரவேண்டுமே என அரங்கனைப் பிரார்த்தித்துக் கொண்டாள் வாசந்திகா.

சுல்தானியர்களை மதுரையை விட்டு விரட்டி அடிக்க ஹொய்சளர்கள் செய்த போர் தோல்வியில் முடிந்ததோடு அல்லாமல் வீரர்கள் நானா திசைகளிலும் சிதறி விட்டனர். ஒரு சில நம்பிக்கைக்குரிய ஊழியர்கள் உதவியுடன் கிருஷ்ணாயி தன் மகனுடன் தப்பித்துத் துளு நாட்டுக்கே சென்று விட்டாள். இங்கே மதுரையில் கொல்லப்பட்ட வீர வல்லாளரின் தோல் உரிக்கப்பட்டு வைக்கோலால் அடைக்கப்பட்டுப் பின்னர் மதுரைக்கோட்டையின் மேல் அதைத்தொங்க விடும்படி அப்போதைய மதுரை சுல்தான் ஆணை இட்டான். அதைப் பார்த்து மகிழவும் செய்தான். இது நடந்த காலகட்டத்தில் தான் மொரோக்கா நாட்டைச் சேர்ந்த இபின் பதூதா தன் சுற்றுப்பயணத்தின் போது தென்னாட்டுக்கு வந்து மதுரையில் இத்தகையதொரு கொடூரம் நடந்திருப்பதைப் பதிவு  செய்திருக்கிறார்.  ஆனால் இங்கே சுல்தானியர்களோ மேலும் மேலும் அக்கிரமங்களைச் செய்து கொண்டே இருந்தனர். பல கோயில்கள் இடிக்கப்பட்டு விக்ரஹங்கள் நொறுக்கப்பட்டன. மக்களை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர். மாற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர்.  இதை எல்லாம் நேரில் பார்த்த இபின் பதூதா இவற்றை நினைத்து மனம் வருந்தி எழுதி இருக்கிறார்.

அப்போது திடீரென மதுரையைக் கொள்ளை நோயான காலரா தாக்கியது. சுல்தானியர்கள் பலருக்கும் உணவுக் கட்டுப்பாடு இல்லாததால் நோய் தாக்கி இறக்க ஆரம்பித்தனர். நோய்க்குப் பயந்த பலரும் நகரை விட்டு ஓட்டம் பிடித்தனர். மதுரை நகரே சுடுகாடு போல் ஆகி விட்டது. சுல்தானின் குடும்பத்தையும் காலரா நோய் தாக்க சுல்தானின் மகனும், தாயும் முதலில் இறக்க பின் சுல்தானின் மனைவியும் இறந்தாள். கடைசியில் சுல்தான் கியாசுதீனே மரணம் அடைந்தான். இதை இபின் பதூதா இறைவன் கியாசுதீனுக்குக் கொடுத்த தண்டனை எனக் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  சுல்தான் அழிந்தாலும் பரம்பரையிலிருந்த மற்றவர்களால் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. வாசந்திகா அரங்கனை சத்தியமங்கலத்தில் கொண்டு சேர்த்து விட்டாள். அரங்கனை எடுத்துக்கொண்டு ஶ்ரீரங்கம் சென்றால் சுல்தானியர்கள் என்ன செய்வார்களோ என்னும் பயத்தில் மக்கள் அங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். அரங்கனுக்கு ஆபத்து வந்து விடுமோ எனப் பயந்த கொடவர்கள் வேதாந்த தேசிகரின் அனுமதி பெற்று அரங்கனை சத்தியமங்கலத்திலிருந்து மேல்கோட்டைக்கு எடுத்துச் சென்று விட்டனர்.

இப்போதைக்கு அரங்கன் மேல்கோட்டையில் இருக்கிறான். அரங்கனைத் திருவரங்கம் கொண்டு சேர்க்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு போராடிய மக்கள் அநேகம் பேர் அடியோடு அழிந்து விட்டனர். மேல்கோட்டையில் இருக்கும் அரங்கன் கதி இனி என்ன ஆகப் போகிறதோஎன்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

2 comments:

Padma said...


Your narration is awesome.Your take on Thiruarangan Ula is simply mesmerizing.
Sorry I am unable to reply in tamil. Do keep writing. I have developed some special bonding towards Vasanthika and Kulasekaran.

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி.